அருணாசலம் மகாதேவா

சேர் அருணாசலம் மகாதேவா (Arunachalam Mahadeva, 5 அக்டோபர் 1885 - 8 சூன் 1969) என்பவர் இலங்கையின் புகழ் பெற்ற சட்டவாக்க நிபுணரும், தூதுவரும் ஆவார். இவர் இலங்கை அரசாங்க சபையில் உட்துறை அமைச்சராகவும்[2] 1948 முதல் 1950 வரை இந்தியாவுக்கான இலங்கைத் தூதராகவும் பணியாற்றியவர்.

சேர்
அருணாசலம் மகாதேவா
இலங்கை அரசாங்க சபையின் உட்துறை அமைச்சர்
பதவியில்
1942–1946
முன்னவர் சேர் டொன் பாரன் ஜெயதிலக்கா
இலங்கை அரசாங்க சபையின் யாழ்ப்பாணத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1934–1947
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் ஜி. ஜி. பொன்னம்பலம்
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் மேற்கு மாகாண உறுப்பினர்
பதவியில்
1924–1931
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 5, 1885
மாத்தறை, பிரித்தானிய இலங்கை
இறப்பு சூன் 8, 1969(1969-06-08) (அகவை 83)
கொழும்பு, இலங்கை
தேசியம் இலங்கைத் தமிழர்
வாழ்க்கை துணைவர்(கள்) சிவகாமி
பிள்ளைகள் பாலகுமாரா மகாதேவா, சுவர்ணம் நடராஜா (இ: பெப்ரவரி 12, 2007[1])
பெற்றோர் சேர் பொன்னம்பலம் அருணாசலம், சுவர்ணம் நமசிவாயம்
படித்த கல்வி நிறுவனங்கள் றோயல் கல்லூரி, கொழும்பு
பணி அரசியல்வாதி, சட்டவாக்க நிபுணர்
சமயம் சைவ சமயம்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இலங்கையின் தேசியத் தலைவர்களில் ஒருவரான சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் மகனான மகாதேவா தந்தையைப் போலவே கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். 1918 இல் எம். மூத்ததம்பி என்பவரின் மகள் சிவகாமியை மணந்தார். இவர்களுக்கு பாலகுமாரா, சுவர்ணம் என இரண்டு பிள்ளைகள். பேராசிரியர் தம்பையா நடராசா இவரது மருமகனாவார். தந்தை பொன்னம்பலம் அருணாசலம் ஆரம்பித்த இலங்கை தேசிய காங்கிரஸ் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்து செயற்பட்டார் மகாதேவா.

அரசியலில் தொகு

இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு மேற்கு மாகாணப் பிரதிநிதியாக 1924 ஆம் ஆண்டிலும், யாழ்ப்பாணத் தொகுதிப் பிரதிநிதியாக இலங்கை அரசாங்க சபைக்கு 1934 இடைத்தேர்தலிலும், 1936இலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த தேர்தல் புறக்கணிப்பு காரணமாக 1931 அரசாங்க சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மகாதேவா ஐக்கிய தேசியக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். அதன் துணைத் தலைவர்களில் ஒருவராகவும், செயலாளராகவும் பணியாற்றினார். டி. எஸ். சேனநாயக்கா அவைத் தலைவராக இருந்த போது அவரது ஐக்கிய தேசியக் கட்சியில் மகாதேவா உட்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

1947 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஜி. ஜி. பொன்னம்பலத்திடம் தோற்றார். பொன்னம்பலத்திற்கு 14,324 வாக்குகளும் மகாதேவாவிற்கு 5,224 வாக்குகளும் கிடைத்தன. இந்தத் தேர்தல் தோல்வியை அடுத்து அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினார். அதன் பின்னர் அவர் இரண்டாண்டுகள் 1948 முதல் 1950 வரையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றினார். 1950 முதல் 1957 வரை பொது சேவை ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார்.

சமூகப் பணி தொகு

கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள பொன்னம்பலவாணேசுவரர் கோவிலின் மூத்த அறங்காவலராகவும், முகத்துவாரம் அருணாச்சலேசுவரர் கோவிலின் தலைமை அறங்காவலராகவும் இருந்து செய்ற்பட்டார். கொழும்பு விவேகானந்த சபை, யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, கொழும்பு வடக்கு இந்து பரிபலன சபை ஆகியவற்றின் புரவலராக இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாசலம்_மகாதேவா&oldid=3592735" இருந்து மீள்விக்கப்பட்டது