அலமாதி (Alamathi / Alamathy) தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், அலமாதி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம். அலமாதி கிராமம், சென்னை நகரத்திற்கு மேற்கே சுமார் 27 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதன் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் செங்குன்றம் நகரமும், மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் தாமரைப் பாக்கம் என்ற சிற்றூரும், தெற்கே, 14 கி.மீ. தொலைவில் ஆவடி நகரமும் அமைந்துள்ளது.

அலமாதி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அலமாதி கிராமம், பழைய அலமாதி, புதிய அலமாதி என இரண்டு பகுதிகளாக உள்ளது. இவ்வூர் பல நூற்றாண்டு பழமையானது. இவ்வூர் "அலர்மதீஈஸ்வரம்" என்று முன்னர் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், இதுவே மருவி, அலமாதி என்று வழங்கப்படுகிறது. இவ்வூர் "சோழவரம்" ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாகும்.

இயற்கை அமைப்பு தொகு

மிகக் கடினமான கிராவல் வகை மண் இப்பகுதியில் மிக அதிகமாக உள்ளது. இவ்வகை மண் விவசாயத்திற்கு ஏற்புடையதல்ல எனவே, இங்கு பெரும்பகுதி வரண்ட நிலமாகவே உள்ளது. எனினும், வறட்சி தாங்கி வளரும் "முந்திரி மரங்கள்" சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தது. அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்புகளும் இங்கு இருந்தது. தற்போது இந்த முந்திரி தோப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டு, சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.

விவசாயம் செய்ய தகுதியான ஒரு சில இடங்களும், குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுவிட்டது. எனினும் மிகச்சிறிய "அலமாதி" ஏரி இவ்வூரின் இயற்கை வளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

மக்கள் தொகு

சென்னை நகரதிற்கு அருகில் இவ்வூர் இருந்தாலும், புதிய குடியேற்றங்கள் ஏற்பட்டாலும், இன்றும் பெரும்பான்மையான மக்கள் பழமை சிந்தனையிலேயே இருப்பது மாற்றமடையும் என்றே காத்திருக்க வேண்டும். பழைய அலமாதி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களும், புதிய அலமாதி பகுதி வேறுஒரு சாதி மக்களும், இந்த இரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பெருமளவில் தலித் இன மக்களும் தத்தம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.மக்களில் பெரும்பான்மையானவர்கள் கூலி வேலை செய்பவர்கள்.

தொழில் வளர்ச்சி தொகு

இயற்கையாக அமைந்த நிலத்தடி நீர்வளம், இவ்வூரில் மிக அதிக அளவில் "குடிநீர்" வியாபாரம் பெருக வகை செய்துள்ளது. இவ்வூரில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட பெரிய குடிநீர் சுத்தீகரிப்பு ஆலைகளும் கணக்கில்லாத சிறிய ஆலைகளும் உள்ளது. இன்று சென்னை நகர மக்கள் பலரின் தாகத்தை அலமாதி தண்ணீர் தனித்துவருகின்றது.

மேலும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மிளகாய், வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளும், அவற்றை தரம் பிரிக்கும் தொழிலும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

வழிபாட்டுத் தலங்கள் தொகு

பழைய அலமாதியில் உள்ள "அலர்மதீஈஸ்வரம்" சிவன் கோயிலும், அதன் அருகில் உள்ள முருகன் கோயிலும் இப்பகுதியில் மிகப்பிரபலம்.

கல்வி நிலையங்கள் தொகு

பழைய அலமாதியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், புதிய அலமாதியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளி மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. மேலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தின், உணவு பதப்படுத்துதல் பயிற்சி கல்லூரியும் அலமாதியில் உள்ளது.

போக்குவரத்து தொகு

அலமாதி, செங்குன்றம்-திருவள்ளுர்-திருபெரும்பூதூர்-சிங்க பெருமாள் கோயில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செங்குன்றம் அருகில் உள்ள பெரிய நகரமாகும். அரசு போக்குவரத்து பேருந்துக்கள் மட்டுமல்லாது, அதிகமான ஷேர் ஆட்டோக்களும் அலமாதியை செங்குன்றத்தோடு இணைக்கின்றது.

பேருந்து வழித்தடம்

57D பூச்சி அத்திப்பேடு - அலமாதி (வழி) - செங்குன்றம் - பாரிமுனை

57M அலமாதி - செங்குன்றம் - பாரிமுனை

65H ஆவடி - திருநின்றவூர் - தாமரைப் பாக்கம் - அலமாதி (வழி) - செங்குன்றம்

505 செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளூர்

505P செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - வெங்கல் - பெரியபாளையம்

105 செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளூர்

73A கோயம்பேடு - செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - வெங்கல் - மெய்யூர்

111D கோயம்பேடு - செங்குன்றம் - அலமாதி (வழி) - தாமரைப் பாக்கம் - ஈக்காடு - திருவள்ளுர்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.



"https://ta.wikipedia.org/w/index.php?title=அலமாதி&oldid=3854579" இலிருந்து மீள்விக்கப்பட்டது