ஏரம்பு சுப்பையா

ஏரம்பு சுப்பையா (சனவரி 13, 1922 - சனவரி 11 1976) இலங்கையின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரும் ஆசிரியரும் ஆவார். கொக்குவில் கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர்.

ஏரம்பு சுப்பையா
கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா
பிறப்புசுப்பையா
சனவரி 13, 1922
இணுவில், யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 11, 1976(1976-01-11) (அகவை 53)
கொக்குவில், யாழ்ப்பாணம்
அறியப்படுவதுபரத நாட்டியக் கலைஞர், ஆசிரியர்
பெற்றோர்கதிர்காமர் ஏரம்பு
வாழ்க்கைத்
துணை
கந்தையா பூரணம்
பிள்ளைகள்சாந்தினி சிவனேசன், கிருத்திகாயினி ஜெகதீசுவரன், குமுதினி சிறீகாந்தன்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

ஏரம்பு சுப்பையாவின் தந்தை யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாகக் கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து இலங்கை முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். ஏரம்பு அவர்கள் தனது மகனான சுப்பையா அவர்களை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரதநாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய முறையில் கற்க வழி சமைத்தார்.

திரைப்படங்களில் நடனம் தொகு

இந்தியாவில் திரு. சுப்பையா அவர்கள் ஜெமினியின் சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களில் நடனமாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களின் நடனக் குழுவினர்களுடன் பல்வேறு இடங்களிலும் நடனமாடி நன்மதிப்புப் பெற்றார். பின்னர் இலங்கை திரும்பி கலைப்பணிகள் செய்வதில் காலடி எடுத்து வைத்தார்.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்கள் அரங்கில் ஆடக்கூடாது என்ற நிலமை. அதையெல்லாம் உடைத்து அந்த நேரத்தில் யாழ் நகரத்து பெரிய கல்விமான்கள், கலைஞர்களின் புதல்விகளுக்கு நடனக் கலையைக் கற்பித்து மேடையேற்றியதன் காரணமாக ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

நடனப் பள்ளி நிறுவல் தொகு

அரசாங்கப் பாடசாலை நடன ஆசிரியராக முதல் நியமனம் பெற்றவரும் சுப்பையா அவர்களே. நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலயத்தின் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய ஏரம்பு சுப்பையா, பின்னர் மண்டைதீவு மகா வித்தியாலயம், வேலணை மகா வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்டான்லி கல்லூரி), ஏழாலை மகா வித்தியாலயம், கொக்குவில் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் தனிப்பட்ட வகுப்புக்களை ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் திரு. இராசநாயகம் என்பவரால் அமைக்கப்பட்ட நடனப் பாடசாலையில் ஆரம்பித்தார். அந்நிறுவனத்தினூடாக பல மாணவர்களை உருவாக்கினார்.

திரு. சுப்பையா அவர்கள் 1949ல் கொக்குவிலைச் சேர்ந்த கந்தையா பூரணம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1956ல் கொக்குவிலில் கலா பவனம் என்ற கலைக்கோயிலை உருவாக்கி கலை உலகில் மாபெரும் சாதனையை நிலைநாட்டியதுடன் பலருக்கு அரங்கேற்றமும் செய்து வைத்தார். தனது கலைக்கு வாரிசாக புதல்வி சாந்தினியை தனது குருநாதர் குருகோபிநாத்திடமே கதகளியையும், பரதசூடாமணி அடையாறு லட்சுமணனிடம் பரத நாட்டியத்தையும் பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்து வைத்தார். அத்துடன் பல நடனப் போட்டிகளிலும் சுதந்திர தின விழாக்கள், விவசாய விழாக்கள் போன்ற விழாக்களிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கலையுலகில் பெருங்கொடி கட்டிப்பறந்தார்.

விருதுகளும் பட்டங்களும் தொகு

1960ல் யாழ் பிரதேச கலாமன்றம் இவருக்கு பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவித்தது. பின் கலைச்செல்வியினால் நடத்தப்பட்ட கலைவிழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு கலைச்செல்வன் என்ற பட்டமும் அளித்துக் கௌரவிக்கப்பட்டார். அபிநய அரசகேசரி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

மறைவு தொகு

கலைத் துறையிலே அரும்பெரும் சாதனைகளை ஆற்றிக் கலையுலகமே பெருமைப்படக் கூடியளவுக்கு வாழ்ந்த இவர் 11.01.1976ல் தனது 54 வது அகவையில் காலமானார். தந்தையால் கொக்குவிலில் ஆரம்பிக்கப்பட்ட கலாபவனத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றார் மூத்த பெண் திருமதி சாந்தினி சிவனேசன். இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ஆவார். தேசமான்ய விருது பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரம்பு_சுப்பையா&oldid=3490749" இலிருந்து மீள்விக்கப்பட்டது