கலசக்காடு ஆ மீட்டான் கல்வெட்டு

(கலசக்காடு கல்வெட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கலசக்காடு [1] என்னுமிடத்தில் தாமிழி எழுத்துக் கல்வெட்டு 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அந்தக் கல் இப்போது தஞ்சைப் பல்கலைக் கழத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. கண்டறிந்தவர் தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் தங்கதுரை. இந்தக் கல்வெட்டிலுள்ள வரிகளில் காணப்படும் எழுத்துக்களை ஆய்வாளர்கள் அடியில் காணுமாறு படிக்கின்றனர்.

  • 1. கோவெண் கட்டி[றை/ணை] நெதிரா
  • 2. நை தாலன் கோளூர் வல்லாகோட்
  • 3. ஆ சேர ஈதாது ஏ[வ] ஆதணி[ய] நாரு
  • 4. ஆ[சி]ரிக படை தாணையன் கண்ட‌
  • 5. குமாரன் கல் [2] [3]
ஆ மீட்டான் கல்வெட்டு

செய்திகள் தொகு

  • வெண்காடு என்னும் ஊரை ஆண்ட அரசன் கோ வெண்காட்டு இறை என்று குறிப்பிடப்படுகிறான். [4] [5] [6]
  • இவன் பெயர் தாலன் இது இந்தப் பெயருக்கு முன்னால் இருக்கும் எழுத்து சரியாகப் படிக்கப்படும்போது ஆலன் என்பது தெரியவரும்.
  • கோளூர் மன்னன் வல்லாகோள் [7] செய்தான்.
  • இதனை மீட்டவன் பெயர் குமாரன். இவனுக்கு இந்த நடுகல் நாட்டப்பட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குமாரன் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் இல்லை. குமரன் என்னும் சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் பயின்றுவருகின்றன. [8] [9]
  • இவன் வெண்காட்டிறை எனப்பட்ட அரசனின் படைதாணையன் [10]

ஆகோள் தொகு

சங்க இலக்கியங்களில் வெட்சித் திணை, கரந்தைத் திணை போன்ற திணைகள் ஆநிரை கவர்தல், ஆநீரை மீட்டல் போன்ற போர் முறைகளை கூறுகின்றன. இந்த இரண்டு போர்களிலும் வீர மரணம் அடைந்தவர்களைப் போற்றும் வகையில் நடுகற்கள் நடப்பட்டன. அவற்றுள் ஆகோள் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதிலும் அது காணப்படுவதால் இதில் குறிப்பிடப்படும் வீரன் வெட்சிப்போரிலோ கரந்தைப்போரிலோ இறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

வீரனும் காலமும் தொகு

இந்த ஆகோள் கல்வெட்டு "பொன் கொங்கர் வின்னக்கோன்" என்ற சங்ககால அரசனின் ஆட்சியின் கீழ் நடந்த ஆகோளின் போது இறந்த கானங்கி குமரன் என்ற அடவனாற்றுப் படை வீரனுக்காக எழுப்பப்பட்டது. இதன் எழுத்தமைதியை கொண்டு இது கிபி. இரண்டாம் நூற்றாண்டினது என்று தமிழக தொல்லியல் துறையினர் கணித்துள்ளனர். இந்த விண்ணக்கோன் என்ர அரசன் கோ வெண்கட்டி என்ர அரச்னுக்குப் பின் ஆண்டவன். அதனால் இந்த இரண்டு அரசர்களின் கால்ததை கணிப்பத்ற்கும் இக்கல்வெட்டு உதவியாய் அமைகிறது.

கல்லும் கோட்டையும் தொகு

இக்கல் 2 அடி நீளமும் 2 அடி உயரமும் 10 செமீ பருமனும் கொண்டுள்ளது. இது கி.பி. 2ஆம் நூற்றாண்டு தமிழ் பிராமி எழுத்துக்களால் எழுதப்படுளது. இக்கல் கண்டறியப்பட்ட இடம் தற்போது பொதுமக்கள் துணி துவைக்கும் இடமாக இருக்கிறது. இக்கல்லின் பக்கம் ஒரு கோட்டை இருக்கலாம் என்பதும் அக்கோட்டையின் ஆதிக்கம் 40 ஏக்கர் நிலப்பரப்பு பரந்திருக்கலாம் என்பதும் அதில் இக்கல்வெட்டு உள்ள பகுதியும் படை திரட்டும் இடமாக அமைந்திருக்கலாம் என்பதும் ஆராய்ச்சியாளர் கருத்து.

இதனையும் காண்க தொகு

மூலம் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. இந்த நடுகல் கலசம் போன்று உள்ளது. கலசம் போன்ற கல்லினை உடைய ஊர் பிற்காலத்தில் கலசக்காடு என்னும் பெயரினைப் பெற்றிருக்க வேண்டும்.
  2. கல்வெட்டைப் படித்தது கல்வெட்டறிஞர் இராஜகோபால் உள்ளிட்ட தொல்லியல் குழு
  3. 2013 ஜூலை இறுதியில் 'ஆவணம் ' இதழில் இறுதியான வாசகம் வெளியிடக் கூடும்
  4. வெண்காடு என்பது திருவெண்காடு.
  5. 'கோ' என்னும் சொல் அரசனைக் குறிக்கும்.
  6. "கோ ஆதன் செல்லிரும்பொறை" எனப் புகழூர்க் கல்வெட்டில் வருவதனை இவ்விடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்
  7. வன்முறையில் வெட்சிப் போரில் ஆனிரைகளைக் கவர்ந்தான்
  8. Index des mots de la literature tamoule ancienne, PUBLICATIONS DE L’INSTITUT FRANCAIS D’INDOLOGIE N0.37. PONDICHERY: INSTITUT FRAFRANCAIS D’INDOLOGIE. 1967. 
  9. எழூஉப்பன்றி நாகன் குமரனார், கூற்றங் குமரனார், கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சல்லியங்குமரனார், மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், வேம்பற்றூர்க் குமரனார் என்னும் புலவர் பெயர்களில் குமரனார் என்னும் பெயர் இணைந்துள்ளது. இந்தப் பெயர்கள் சங்கநூல்களைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை.
  10. படைத்தானையன், படைத்தலைவன்