சங்கரலிங்கம் ஜெகந்நாதன்

காந்தியவாதி

சங்கரலிங்கம் ஜெகந்நாதன் (Sankaralingam Jagannathan, 1914 - பெப்ரவரி 12, 2013)[1] இவர் ஒரு சமூக சேவகர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப்போராட்ட வீரர் [2]

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

தமிழகத்தில் உள்ள பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூருக்கு செல்லும் சாலையில் உள்ள செங்கற்பட்டை சிற்றூரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் முடித்து, கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு காந்தியடிகளின் ஆசிரமத்தில் சேரவிரும்பினார். அனுமதி மறுக்கப்படவே, திருப்பத்தூரில் உள்ள ஒரு கிருத்தவ ஆசிரமத்துக்குச் சென்று மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்கினார். பெங்களூரில் உள்ள சேரிப் பகுதிகளுக்குச் சென்று சேவை செய்தார். இச்சேரியில் 120 மாணவர்களைத் தங்கச் செய்து சேவை செய்யச் செய்தார். இளம் வயதில் சமூக சேவைகளில் முழு ஈடுபாட்டுடன் இருந்த போது 1950 இல் கிருஷ்ணம்மாள் எனும் சமூக ஆர்வலரை திருமணம் செய்துகொண்டார்.

சமூக சேவை தொகு

மகாத்மா காந்தியின் கொள்கைகளில் தீவிர பற்று கொண்டு, காந்திய வழியில் ஏழை கிராம மக்களுக்கு சேவை செய்வதை தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். வினோபா பாவேயின் பூமிதான இயக்கதின் போது நிலங்களை தானமாக பெற்று ஏழைகளுக்கு தானமாக வழங்கினார்.

போராட்டங்கள் தொகு

'வெள்ளயனே வெளியேறு' இயக்கத்தின்போது தடையை மீறி ஊர்வலம் சென்றதற்காக 15 மாதச் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையாகி வெளியே வந்தவுடன் அடுத்த போராட்டத்தில் குதித்தார். 1944இல் ஆங்கிலேய போலீசாரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி 500 பேருடன் சென்று, மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றினார். இதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியா விடுதலை அடைந்தபோது, அவர் மகிழ்ச்சியடையவில்லை. நிலமற்ற விவசாயிகள் அனைவருக்கும் நிலம் கிடைக்கும்போதுதான் உண்மையான விடுதலை கிடைத்ததாகப் பொருள் எனக் கருதினார். எனவே நிலப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள கள்ளஞ்சேரி என்ற இடத்தில் விவசாயம் செய்துவந்தவர்களைப் பணக்காரர்கள் சிலர் விரட்டியடித்தனர். இதையறிந்த ஜெகந்நாதன், அங்குச் சென்று போராடி நிலத்தை இழந்தவர்களுக்கு அதை மீட்டுக் கொடுத்தார். இதுவே அவரது முதல் நில மீட்பு போராட்டம்.

1952ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளன்று, பூதான இயக்கத்தைத் தொடங்கினார். அறப்போராட்டங்களின் மூலம் நிலங்களைத் தானம் பெற்று அவற்றை ஏழை விவசாய மகளிருக்கு அளிதாதார். அவ்வகையில் கீழத் தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று 10 ஆயிரம் ஏழை பெண்களுக்கு அளித்தார்.

நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் உருவெடுத்த இறால் பண்ணைகளை எதிர்த்து அறப்போராட்டங்களை நடத்தி ஓரளவிற்கு வெற்றிபெற்றார்.[3]

கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கீழ்வெண்மணிப் படுகொலைகள் துயர நிகழ்ச்சிக்குப்பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு கிடைக்க உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.[4]

விருதுகள் தொகு

காந்திய வழியில் சேவை ஆற்றிய இவருக்கு கிடைத்துள்ள விருதுகள்

  • சுவாமி பிரணவானந்தா அமைதி விருது (1987),
  • ஜமுனாலால் பஜாஜ் அமைதி விருது (1988),
  • பகவான் மகாவீரர் விருது (1996),
  • நோபல் பரிசுக்கு இணையான ரைட் லைவ்லி குட் விருது[5]

இறுதி காலம் தொகு

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கி இருந்த இவர் பெப்ரவரி 12 2013 அன்று காலமானார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு