சிரீ சிரீ இரவிசங்கர்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (பி. மே 13, 1956) ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர், வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

வாழ்க்கை வரலாறு தொகு

ஸ்ரீ ஸ்ரீ, வேங்கட ரத்னம் என்ற மொழி வல்லுனருக்கும் விசாலாட்சி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். அவர் ஆதி சங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் அவருக்கு சங்கர் என்று பெற்றோர் பெயரிட்டனர். நான்கு வயதிலேயே பகவத் கீதை என்கிற இந்து புனித நூலை ஒப்பிக்கத் தெரிந்து வைத்திருந்தார்.[சான்று தேவை] இளமைப் பருவத்திலேயே ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் வல்லமை பெற்றிருந்தார் என்று கருதப்படுகிறது. பதினேழு வயதில் முன்னிலை இயற்பியல் பட்டம் பெற்றார்.

இவர் மகரிஷி மகேஷ் யோகியிடம் சீடராக இருந்தார். அவரது தலைமையில் வேத விற்பன்னர்களை பயிற்றுவித்தார். அவரது அன்புள்ள சீடராகவும் விளங்கினார். பிற்காலத்தில் அவரது பெயரான ரவிசங்கருடன் ஸ்ரீ ஸ்ரீ என்கிற பெயரையும் சேர்த்துக்கொண்டார். ஏனெனில், ரவி சங்கர் என்கிற சித்தார் வல்லுநர் தனது பெயரால் குரு பயன் பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

1982 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவில் பத்ராநதிக்கரையில் 10 நாள்கள் தனிமை மௌனத்திற்குப் பிறகு இவர் "சுதர்ஷன் க்ரியா" என்கிற ஒரு தாள லயமுள்ள மூச்சுப் பயிற்சியை உணர்ந்தறிந்தார். ஒரு நேர் காணலில் அவர் இந்த பயிற்சி தனக்கு ஒரு "பாடல் அல்லது உத்வேகம்" போல் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். பிறகு அவர் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கத் தொடங்கினார். அவர் சொல்கிறார்: "ஒவ்வொரு உணர்வும் மூச்சின் ஒவ்வொரு லயத்துடன் தொடர்புடையது. எனவே மூச்சை சமன் செய்வது துன்பத்தைக் குறைக்க உதவும்"

சங்கர் 1982 ஆம் ஆண்டு "வாழும் கலை" நிறுவனத்தைத் தொடங்கினார். தலாய் லாமா மற்றும் வேறு சிலருடன் இணைந்து சர்வதேச மனித மதிப்புகள் கழகத்தை தொடங்கினார். இதன் நோக்கம் "மனித சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் மதிப்புகளை அறிவதும் வளர்ப்பதுவுமே" ஆகும்.

வாழ்க்கைத் தத்துவம் மற்றும் நடவடிக்கைகள் தொகு

சங்கர் மூச்சை உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ள ஒரு சாதனமாகக் கருதுகிறார். அவர் தியானம் செய்வதுடன் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுருத்துகிறார். அவருடைய நோக்கம் அறிவின் மூலம் மன உளைச்சலும் விரோதமும் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது. அவர் கருத்தின்படி "உண்மை என்பது நேரானதல்ல, உருண்டையானது, எனவே அது இரு எதிர் மாறான துருவங்களைக் கொண்டுள்ளது. எந்த உருண்டையான பொருளும் இரு துருவங்களை கொண்டிருக்கும்."

"9/11" அன்று நியூ யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நிகழ்ந்த பிறகு, அவரது நிறுவனம் அங்கு இலவசமாக மன உளைச்சலைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கொசோவோ போன்ற இடங்களிலும் நிவாரணத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக்கிலும் இதன் சேவைகள் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதன் சேவகர்கள் சுனாமி மற்றும் கத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி புரிந்தனர். இது சிறைக்கைதிகளுக்கும் கூட சில பயிற்சிகளை வடிவமைத்துள்ளது.

சுதர்ஷன் க்ரியா தொகு

சுதர்ஷன் க்ரியா என்பது வாழும் கலை நிறுவனப் பயிற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாகும். இது உடலில் ஆற்றலைப் புகுத்தி, உடல், மனம் மற்றும் உணர்வுகளின் இயற்கையான தாள லயங்களைச் சமன் செய்யக் கூடியதாகக் கருதப் படுகிறது. இதன் பலன்களைப் பற்றி பல்வேறு தனி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதைத் தவிர வாழும் கலை நிறுவனம் தியானம் மற்றும் குழு சார்ந்த பயிற்சிகளையும் அளிக்கிறது. ஏழ்மை மிக்க கிராம மற்றும் நகரப் பகுதிகளிலும், சிறைச் சாலைகளிலும் கூட சில பயிற்சிகளை இலவசமாக அளிக்கிறது.

வாழும் கலை நிறுவனம் பயிற்சிகள் அளிப்பதுடன், சேவைப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

விமரிசனங்கள் தொகு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமது சுதர்சன் கிரியா பயிற்சிக்குக் காப்புரிமை பெற்றுள்ளார்.ஆனால் பழமையான யோகா பயிற்சிகளை மூச்சுப் பயிற்சிகளுடன் இணைத்து ஓர் மாயவலை பின்னணியில் வணிகமாக்கியிருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.[1]

தன்னார்வலர்களுடன் அவர் நடத்தும் சமூக மாநாடுகளும் அவரது ஆசிரமத்திற்கு வணிகப் பலன் வேண்டியே நடத்தப்படுவதாகவும் விமரிசனம் உண்டு[2].

அவரது வலைத்தளங்களிலும் பதிப்புகளிலும் உள்ள பல தரவுகள் சான்றுகள் இல்லாமலும் சரிபார்க்க இயலாதும் உள்ளன.காட்டாக,கொடுக்கப்பட்ட ஓர் பிரசுரத்தில் இளைஞர் விழிப்புணர்ச்சி மாநாடு (Youth Empowerment Seminar) பத்து செருமானிய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனை ஆங்கில இதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் தம்போக்கில் ஐந்து பல்கலைக்கழகங்களில் சரிபார்த்தபோது, அவை கட்டாயமாக இல்லாமல் கல்வித்திட்டத்திலேயே இல்லாதிருந்தது தெரியவந்தது. டென்னிஸ்,உடற்பயிற்சி போன்ற மனமகிழ் செயல்பாடுகளில் ஒன்றாக விருப்பத் தேர்வாக இருந்தது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "எவ்வளவு உண்மையானது ?". Archived from the original on 2010-03-08. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21.
  2. அரசுசாரா அமைப்பு ஊழல்
  3. "நேருக்கு நேர் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரீ_சிரீ_இரவிசங்கர்&oldid=3554181" இலிருந்து மீள்விக்கப்பட்டது