சுப்பு ஆறுமுகம்

சுப்பு ஆறுமுகம் (Subbu Arumugam) (1928 – 10 அக்டோபர் 2022)[1] தமிழக வில்லிசைக் கலைஞர் ஆவார். மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் எளிமையாக வில்லுப்பாட்டின் வழியே கதையாகச் சொல்லி வந்தவர்.

சுப்பு ஆறுமுகம்
Subbu Arumugam
சுப்பு ஆறுமுகம்
பிறப்பு(1928-07-12)12 சூலை 1928
சத்திர புதுக்குளம், திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு10 அக்டோபர் 2022(2022-10-10) (அகவை 94)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிவில்லிசைக் கலைஞர்
விருதுகள்பத்மசிறீ (2021)
சங்கீத நாடக அகாதமி விருது, கலைமாமணி விருது (1975)

வாழ்க்கைக் குறிப்பு தொகு

1928 இல் சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் இராம அய்யர். உயர்பள்ளியில் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோரே இவரது தமிழார்வத்துக்கும், தமிழ் அறிவுக்கும் வித்திட்டவர்கள். சங்கீத அறிவு இவரது தந்தையாரிடமிருந்து பெற்றது.

தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. இவரை சென்னைக்கு அழைத்து வந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச்சொன்னார்.

சென்னையில் இயங்கும் தேசிய கிராமியக்கலை ஆதரவு மையத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டு பயிற்சி முகாம் அண்மையில் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் மிகவும் பயனடைந்த இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் ஆவார்.

கிடைத்த விருதுகள் தொகு

திரைப்படத்துறையில் தொகு

கலைவாணரது பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேசின் ஏறக்குறைய அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதிக்கொடுத்தார். இவர் எழுதிய சின்னஞ்சிறு உலகம் திரைப்படம் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் தயாரிக்கப்பட்டது.

மேடை, வானொலித்துறைகளில் தொகு

'மனிதர்கள் ஜாக்கிரதை' என்று ஒரு நாடகம் இவரால் எழுதப்பெற்று புத்தகமாக வெளியிடப்பெற்று பின் அதுவே நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. 'காப்பு கட்டி சத்திரம்' என்று ஒரு வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு கணிசமாக உண்டு.

வில்லுப்பாட்டில் தொகு

காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி செய்திருக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து ஆண்டுகளாக இல்லாத ஒன்றை செய்து காட்டினார். தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். இலங்கையிலும், சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார்.[2] ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்தனர்.

எழுதிய நூல்கள் தொகு

  • வில்லிசை மகாபாரதம்
  • வில்லிசை இராமாயணம்
  • நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்

இறப்பு தொகு

சுப்பு ஆறுமுகம் 2022 அக்டோபர் 10 அன்று சென்னையில் வயது முதிர்வு காரணமாக தனது 94 ஆவது அகவையில் காலமானார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் சென்னையில் காலமானார், tamil.oneindia, அக்டோபர் 10, 2022
  2. "பிரபல வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/oct/10/famous-willis-singer-subbu-arumugam-passed-away-3929880.html. பார்த்த நாள்: 10 October 2022. 
  3. "பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்". Dinamalar. 2022-10-10. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பு_ஆறுமுகம்&oldid=3675780" இலிருந்து மீள்விக்கப்பட்டது