நாட்டுப்புறத் தெய்வங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள் என்பவை நாட்டுப்புற மக்களான கிராம மக்கள் வழிபடுகின்ற தெய்வங்களாகும்.[1] இந்தத் தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் என்றும், சிறு தெய்வங்கள் என்றும் கூறுகின்றனர். இந்த நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாடு பெருந்தெய்வங்களின் வழிபாடுகளைப் போல் அல்லாமல் மாறுபட்டுள்ளது. இதனை சிறுதெய்வ வழிபாடு என்கின்றனர்.

நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் மொழி பேசுகின்றவர்களால் வழிபடப்படுகின்றன.

வகைப்பாடு தொகு

நாட்டுப்புறத் தெய்வங்களை கீழ்க்கண்ட ஐந்து வகையாக துளசி இராமசாமி வகைப்படுத்தி யுள்ளார்.

  1. ஊர்த்தெய்வம்,
  2. குலதெய்வம்
  3. இனத்தெய்வம்,
  4. மாலைத்தெய்வம்,
  5. சமாதி தெய்வம்

நாட்டுப்புறத் தெய்வங்களை மிஷல் மொஃபத்து கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தி யுள்ளார்.

  1. இஷ்ட தெய்வம்
  2. குலதெய்வம்
  3. கிராமதெய்வம்
  4. ஊர் தெய்வம்

நாட்டுப்புறத் தெய்வங்களை கீழ்க்கண்டவாறு ரைட் ரெவரேண்ட் கென்றி வகைப்படுத்தியுள்ளார்.

  1. ஆண் தெய்வங்கள்,
  2. பெண் தெய்வங்கள்,
  3. நடுகல்

நாட்டார் பெண் தெய்வங்கள் தொகு

நாட்டார் பெண் தெய்வங்கள் பொதுவாக இளம்வயதில் இறந்துபோன பெண்கள், இயற்கையாக இறக்காத பெண்கள், திருமணமாகாமல் இறந்த பெண்கள் ஆகியோரை தெய்வங்களாக மக்கள் வழிபடுகின்றனர். எண்ணற்ற பெண் தெய்வங்கள் சமூகத்தின் குற்ற உணர்ச்சியாலும், பரிதாப உணர்ச்சியாலும் வணங்கப்படுபவை.

இளம்வயதில் இறந்த பெண்களை கன்னிதெய்வம் என வணங்குகிறார்கள். இந்த கன்னி தெய்வங்களை வீட்டு தெய்வம் என வணங்குவதும் உண்டு. இந்த கன்னிதெய்வ வழிபாடு ஓரிரு தலைமுறைக்கு மட்டுமே நீடிக்கிறது.

வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை, விருப்பத்தோடு உடன்கட்டை ஏறுதல் போன்ற காரணங்களால் இறந்த பெண்களை அப்பெண்களின் உறவுகள் வணங்குகின்றனர். இந்த வழிபாடு பல தலைமுறைகளாக தொடர்கிறது.

பழிச்சொல், ஆணவக்கொலைகள் ஆகிய காரணங்களால் இறந்த பெண்களை கிராம மக்கள் குல தெய்வங்களாக வணங்குகின்றனர். இவ்வாறு பெண்களை தெய்வமாக வணங்குவதற்கு இறந்த பெண்களின் மீதான பாவ உணர்ச்சியும், வணங்குபவர்களின் குற்ற உணர்ச்சியும் காரணமாகின்றன அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தெய்வங்களின் தோற்றம் தொகு

 
ஆறு. இராமநாதனின் நாட்டுப்புறத் தெய்வங்கள் தோன்றிய விதத்தினைக் குறிப்பிடும் படம்

மனிதர்களின் அகால மரணத்திலிருந்து தோன்றுதல், வேள்விகளிலிருந்து தோன்றுதல், சிவபெருமான்- சக்தி உறவாலும், தேவர்கள் - அரக்கர்கள் தொடர்பாலும் தோன்றுதல் என மூன்று வகையான முறைகளில் நாட்டார் தெய்வங்கள் தோன்றுகின்றன. இவற்றில் மனிதர்களின் அகால மரணத்தில் தோன்றும் நாட்டுப்புறத் தெய்வங்கள், தற்கொலையிலிருந்து தோன்றுதல், கொலையிலிருந்து தோன்றுதல் என இரு வழிகளிலும், வேள்விகளிலிருந்து தோன்றும் நாட்டுப்புறத் தெய்வங்கள் சிவபெருமான் ஆணைப்படியும், மனிதர்கள் நடத்தும் வேள்வியிலிருந்தும் என இரு முறைகளில் உருவாகின்றார்கள். பிறவழிகளான உடலுறவிலிருந்து தோன்றுதல் சிவபெருமான் - சக்தி தம்பதிகளின் மூலமாகவோ, தேவர்- அசுரர்- முனிவர்களின் உடலுறவாலும் தோன்றுகின்றன.

நாட்டார் தெய்வ வழிபாடு தொகு

சிறுதெய்வ வழிபாடு என்பது நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு எனப் பல வகைகள் காணப்படுகின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்றன சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்றுத் தந்த முறைப்படியும் நடக்கிறது. [2]

நூல்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "2".
  2. "2".
  3. "Noolulagam » நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் – பேரா.சு.சண்முகசுந்தரம்". Archived from the original on 2017-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.