பங்கோர் உடன்படிக்கை 1874

பங்கோர் உடன்படிக்கை 1874 (ஆங்கிலம்: Pangkor Treaty of 1874; மலாய்: Perjanjian Pangkor) என்பது ஐக்கிய இராச்சியத்திற்கும் பேராக் சுல்தானுக்கும் இடையே 20 சனவரி 1874-இல் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையாகும். பேராக் கடற்கரையில், புளூட்டோ (Pluto) எனும் பிரித்தானிய நீராவிக் கப்பலில் அந்த உடன்படிக்கை கையெழுத்தானது.

மலாய் மாநிலங்களின் வரலாற்றில் இந்த உடன்படிக்கை குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கை மலாய் ஆட்சியாளர்களின் மீதான பிரித்தானியக் கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்கியது; மற்றும் மலாயாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு வழி வகுத்துக் கொடுத்து.

இந்த உடன்படிக்கைக்கு அப்போதைய நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் ஆண்ட்ரு கிளார்க் (Sir Andrew Clarke) என்பவர் ஏற்பாடு செய்தார். இந்த உடன்படிக்கை இரண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது: முதலாவது: லாருட் போர்கள்; இரண்டாவது பேராக் மாநிலத்தின் சுல்தானியத் தலைமைத்துவம்.[1]

பொது

தொகு
 
பேராக் சுல்தான் அப்துல்லா

19-ஆம் நூற்றாண்டில் பேராக் மாநிலம் ஒரு முக்கியமான ஈய உற்பத்தியாளராக இருந்தது. அதுவே பேராக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த நேரத்தில் பிரிட்டன் ஏற்கனவே பினாங்கு, மலாக்கா மற்றும் சிங்கப்பூர் மாநிலங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.

இருப்பினும், பேராக் மாநிலத்தில் அடிக்கடி உள்ளூர்த் தகராறுகள் ஏற்பட்டு வந்தன. பொதுவாக இந்தத் தகராறுகள், லாருட் போர்கள் (Larut Wars) (1861-1874) என்று அழைக்கப் படுகின்றன. இந்தப் போர்கள் பெரும்பாலும் உள்ளூர் மலாய்த் தலைவர்களுக்கு இடையே நடந்தவை. மேலும் சீனர் இரகசிய சங்கங்களுக்கு இடையே அடிக்கடி மோதல்களும் ஏற்பட்டு வந்தன. இவை அனைத்தும் பேராக் ஈயச் சுரங்கங்களின் ஈய உற்பத்தியைச் சீர்குலைத்தன.

சீன இரகசிய சங்கங்கள்

தொகு

1871-இல், பேராக் சுல்தான் அலி மரணம் அடைந்தார். இருப்பினும், அவரின் இறுதிச் சடங்கில் பேராக் முடியாட்சியின் வாரிசான ராஜா மூடா அப்துல்லா கலந்து கொள்ளவில்லை. ராஜா பெண்டகாரா சுல்தான் இசுமாயில் பேராக் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில், இரண்டு சீன இரகசிய சங்கங்களான, கீ கின் இரகசிய சங்கம் (Ghee Hin Secret Society) மற்றும் ஆய் சான் இரகசியச் சங்கம் (Hai San Secret Society); ஆகிய இரண்டு சங்கங்களும்; பேராக் மாநிலத்தின் ஈயச் சுரங்கங்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஒன்றுக்கொன்று தொடர்ந்து போரிட்டு வந்தன.

கீ கின் இரகசிய சங்கத்திற்கு சின் ஆ யாம் (Chin Ah Yam) என்பவர் தலைமை தாங்கினார். ஆய் சான் இரகசிய சங்கத்திற்கு சுங் கெங் குயி (Chung Keng Quee) என்பவர் தலைமை தாங்கினார்.

பிரித்தானியர் பாதுகாப்பு

தொகு

பின்னர் இந்த இரண்டு பிரச்சனைகள் குறித்து பிரித்தானியர்களிடம் ராஜா மூடா அப்துல்லா முறையிட்டார். அத்துடன் ராஜா மூடா அப்துல்லா சிங்கப்பூரில் இருந்த தன் நண்பர் டான் கிம் செங்கிடம் உதவி கேட்டார். டான் கிம் செங் சிங்கப்பூரில் ஒரு பிரபலமான தொழிலதிபர் ஆகும். டான் கிம் செங் சிங்கப்பூரில் உள்ள பிரித்தானிய வணிகருடன் சேர்ந்து ஆளுநர் சர் ஆண்ட்ரு கிளார்க்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். ராஜா மூடா அப்துல்லா அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டார். பேராக் மாநிலத்தைப் பிரித்தானியர் பாதுகாப்பில் ஒப்படைக்க ராஜா மூடா அப்துல்லா தம் விருப்பத்தை அந்தக் கடிதம் மூலமாக வெளிப்படுத்தினார்.[2]

1872 செப்டம்பர் 26-இல், பிரித்தானியர் தலையிட வேண்டும் எனும் கோரிக்கை மனு முன்வைக்கப்பட்டது. அதில் ஆய் சான் இரகசிய சங்கத்தின் தலைவர் சுங் கெங் குயி உடபட 44 சீனத் தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

தென்கிழக்கு ஆசியாவில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தவும், ஈய ஏற்றுமதியின் ஏகபோகத்தை வலுப்படுத்தவும்; இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என பிரித்தானியர் கருதினர். இதன் விளைவாக, பங்கோர் உடன்படிக்கை 1874 கையெழுத்தானது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Khoo Kay Kim, and Andrew Clarke, "The Pangkor Engagement of 1874." Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 47.1 (225) (1974): 1-12 online.
  2. International Magazine Kreol (2015). "The Story of Sultan Abdullah's Exile in the Seychelles and Malaysia's National Anthem". International Magazine Kreol (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  3. "The Golden Chersonese And The Way Thither". digital.library.upenn.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-07-20.
  4. Swettenham, Frank (1941). Footprints in Malaya. London, New York, Melbourne: Hutchinson & Co. p. 33.

மேலும் படிக்க

தொகு
  • Kim, Khoo Kay, and Andrew Clarke, "The Pangkor Engagement of 1874". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 47.1 (225) (1974): 1–12 online.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கோர்_உடன்படிக்கை_1874&oldid=3998829" இலிருந்து மீள்விக்கப்பட்டது