முத்தொள்ளாயிரம்
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |
முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை.
முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும் முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன என பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943 ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார். தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பன போன்று பல இருந்தன என்றும், இதனால் தொள்ளாயிரம் செய்யுள்களில் நூலியற்றுவது பழைய மரபுகளுள் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்[1].
ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார்.[2]
பல்லாண்டுகளுக்கு முன்னர் புறத்திரட்டு ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும் தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும்.
மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.
மூவேந்தரையும் வாழ்த்தும் மரபுதொகு
மூவேந்தரையும் வாழ்த்தும் மரபு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.[3] இந்த நூல் இந்த மரபினைப் பின்பற்றியுள்ளது.
பதிப்புகள்தொகு
முத்தொள்ளாயிரப் பாடல்களை முதன் முதலில் இரா. இராகவையங்கார் 1905 ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் பத்திரிகை மூலம் வெளியிட்டார்.. பின்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராயிருந்த எஸ். வையாபுரிப்பிள்ளை முத்தொள்ளாயிரப் பாடல்கள் அடங்கிய புறத்திரட்டை 1938 ஆம் ஆண்டில் பல்கலைக்ககழகப் பதிப்பாக வெளியிட்டார்[1].
முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய நடையில் உரையெழுதியவர் தமிழறிஞர் டி. கே. சிதம்பரநாதர். இவர் தமது பதிப்பில் ஒன்பது பாடல்களைப் பொருள் நன்கு புலப்படாதவை எனக் குறிப்பிட்டு உரை எழுதாமல் பின்னிணைப்பாக வெளியிட்டார்[1].
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 முத்தொள்ளாயிரம், இரட்டையர்கள், மறுமலர்ச்சி (இதழ்), சித்திரை 1948, யாழ்ப்பாணம்
- ↑ "Tamil Virtual University".
- ↑
- சோழனை வாழ்த்தியது
தீம் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்.- பாண்டியனை வாழ்த்தியது
பாடல்சால் முத்தம் பவழ உலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்- சேரனை வாழ்த்தியது
சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்:
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்:
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல். (சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை)