வ. ஐ. சுப்பிரமணியம்
வ. ஐ. சுப்பிரமணியம் என அறியப்படும் வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், (18 பெப்ரவரி 1926 - 29 சூன் 2009), தமிழ்நாட்டைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் ஆவார். இவர் 1981 முதல் 1986 வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றினார். குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் முதல் இணைவேந்தராகவும் விளங்கியவர்.
வ. ஐ. சுப்பிரமணியம் | |
---|---|
![]() | |
1-ஆவது துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | |
பதவியில் 19 செப்டம்பர் 1981 - 19 சூன் 1984 22 செப்டம்பர் 1984 - 31 சூலை 1986 | |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
பின்னவர் | ச. அகத்தியலிங்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நாகர்கோவில், திருவிதாங்கூர் அரசாட்சி, பிரித்தானிய இந்தியா (தற்போதைய அமைவிடம் - தமிழ்நாடு, இந்தியா) | 18 பெப்ரவரி 1926
இறப்பு | 29 சூன் 2009 திருவனந்தபுரம், கேரளம், இந்தியா | (அகவை 83)
பணி | தமிழ் அறிஞர், மொழியியலாளர் |
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
தொகுஇன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோயிலின் ஒரு பகுதியான வடசேரியில் 18 பெப்ரவரி 1926 அன்று பிறந்தார் சுப்பிரமணியன்.
வடசேரியில் தொடக்கக் கல்வி பயின்றபின் திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் சென்று மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
சில காலம் புது தில்லியில் அனைத்திந்திய வானொலியிலும் பணியாற்றினார். பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளையின் தொடர்பைப் பெற்றார். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.
தமிழ்ப்பணி
தொகுபுதுச்சேரியில் மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர்.
ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அதன் முதல் இணைவேந்தராகவும் விளங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்த உறுதுணையாக இருந்தவர்.
மொழியியல் ஆய்வு
தொகு"புறநானூற்றுச் சொல்லடைவுகள்" என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அண்மையில் இவரது "வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள்" 2 தொகுதிகளாக வந்துள்ளன. முறையே மொழியும் பண்பாடும், இலக்கணமும் ஆளுமைகளும் என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன. இவர் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. திராவிடமொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர். ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.
இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகியன முனைவர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தன.
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது
தொகுஇவர் எழுதிய “வ. ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் தொகுதி ஒன்று - மொழியும் பண்பாடும் இரண்டு - இலக்கணமும் ஆளுமைகளும் (இரண்டு தொகுதிகள்)” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
மறைவு
தொகுசுப்பிரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் 29 சூன் 2009 அன்று இ.சீ.நே. 8:00 மணிக்கு கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார்.[1]
பரவலர் பண்பாட்டில்
தொகுசுப்ரமணியத்தைக் நாயகனாகக் கொண்டு காகித மனிதர்கள் (1995) எனும் புதினத்தை எழுத்தாளர் பிரபஞ்சன் இயற்றியுள்ளார்.[2][3]
உசாத்துணை
தொகு- ↑ "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை எய்தினார்!". முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan. திங்கள், 29 ஜூன், 2009. Retrieved 2025-02-20.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்". www.muthukamalam.com. Retrieved 2025-02-22.
- ↑ நேர்காணல்: அறிவியலை தமிழால் சொல்ல முடியும் – பேரா. இராம.சுந்தரம், புத்தகம் பேசுது இதழ், 2010 செப்டம்பர் பார்த்த நாள் 2021
வெளி இணைப்புகள்
தொகு- நோக்குத் தெளிவிலும் ஆய்வுக் கனதியிலும் என்றுமே வளைந்து கொடுக்காத பேரறிஞன்[தொடர்பிழந்த இணைப்பு], கா. சிவத்தம்பி
- மென்மையான, மேன்மையான, நேர்மையான புலமையாளர் வ. அய். சுப்பிரமணியனார் பரணிடப்பட்டது 2016-03-07 at the வந்தவழி இயந்திரம், மறவன்புலவு சச்சிதானந்தன்
- மொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய.சுப்பிரமணியம் - முனைவர் இராம.சுந்தரம்