இரண்டாம் பிலிப்பின் கீழ் மக்கெடோனியாவின் விரிவாக்கம்

மக்கெடோனியா இராச்சியத்தின் எழுச்சி

இரண்டாம் பிலிப்பின் (கிமு 359-336) ஆட்சியின் கீழ், மக்கெடோனியா இராச்சியமானது, பண்டைய கிரேக்கத்தில் 25 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தியது. பெரும்பாலும் அதன் மன்னரின் ஆளுமை மற்றும் கொள்கைகளால் இது நிகழ்ந்தது. [1] அவரது அரசியல் நோக்கங்களை அடைய பயனுள்ள இராசதந்திரம் மற்றும் திருமணக் கூட்டணிகளைப் பயன்படுத்துவதோடு, பண்டைய மக்கெடோனியா இராணுவத்தை ஒரு பயனுள்ள போர்ப் படையாக சீர்திருத்துவதற்கு பிலிப் பொறுப்பேற்று செயல்படுத்தினார். அவரது இராணுவமும், பொறியாளர்களும் முற்றுகை இயந்திரங்களை மிகுதியாக பயன்படுத்தினர்.

இரண்டாம் பிலிப்பின் கீழ் மக்கெடோனியாவின் விரிவாக்கம்
Expansion of Macedonia under Philip II

கிமு 336 இல் மக்கெடோனிய இராச்சியம்
நாள் கிமு 359–336
இடம் திரேசு, இல்லீரியா, கிரேக்கம், அனத்தோலியா
பண்டைய கிரேக்கம் மற்றும் தெற்கு பால்கனில் ஆதிக்கம் செலுத்தி மாசிடோனியா விரிவடைகிறது
பிரிவினர்
மக்கெடோனியன் கிரேக்க நகர அரசுகள்
இல்லியர்கள்
திரேசியர்கள்
தளபதிகள், தலைவர்கள்
இரண்டாம் பிலிப்
பேரரசர் அலெக்சாந்தர்
பல்வேறு நபர்கள்

பிலிப்பின் ஆட்சியின் போது மக்கெடோனியா முதலில் சூறையாடும் இல்லியர்கள் மற்றும் திரேசியர்களின் போர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிலிப்பின் திரேசிய எதிரிகளில் முதன்மையானவர் அதன் ஆட்சியாளர் கெர்செப்லெப்டெஸ் ஆவார். அவர் ஏதென்சுடன் ஒரு தற்காலிக கூட்டணியை ஒருங்கிணைத்திருக்கலாம். கிமு 356 முதல் 340 வரையிலான தொடர்ச்சியான போர்த் தொடர்களினால் பிலிப் இறுதியில் கெர்செப்லெப்டெசை அடிபணியச் செய்தார். அப்போது திரேசின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். பிலிப் மக்கெடோனியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலிரியன் மன்னர் பார்டிலிசுக்கு எதிராகவும், இல்லீரியாவில் (நவீன அல்பேனியாவை மையமாகக் கொண்ட) இரண்டாம் கிராம்போஸ் மற்றும் புளூரடசுக்கு எதிராகவும் போராடினார். அவர் புதிதாக கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் பிலிப்பி, பிலிப்போபோலிஸ் (நவீன பிளோவ்டிவ், பல்காரியா ), ஹெராக்லியா சின்டிக், ஹெராக்லியா லின்கெஸ்டிஸ் (நவீன பிடோலா, வடக்கு மக்கெடோனியா ) போன்ற புதிய நகரங்களை நிறுவினார்.

பிலிப் இறுதியில் ஏதென்ஸ் நகர அரசுக்கும் ஏஜியன் பிராந்தியத்தில் உள்ள ஏதென்சின் கூட்டாளிகளுக்கு எதிராகவும், கிரேக்கத்தின் பிரதான நிலப்பரப்பில் தீப்சின் மேலாதிக்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தீப்சுக்கு எதிராகவும் போர்த்தொடர்களில் ஈடுபட்டார். தெல்பியின் ஆம்ஃபிக்டியோனிக் கூட்டணியின் பாதுகாப்பிலும், தெசலியன் கூட்டணியுடன் இணைந்து, மாசிடோனியா மூன்றாம் புனிதப் போரில் (கிமு 356-346) ஒரு முக்கிய பங்காற்றினார். கிமு 352 இல் குரோகஸ் ஃபீல்ட் போரில் ஓனோமார்க்கஸ் தலைமையிலான போசியன்களைத் தோற்கடித்தார். கி.மு. கிமு 346 இல் ஏதென்ஸ் மீது நேரடித் தாக்குதலைத் தொடங்கத் தயாராக இருந்தபோது, மாசிடோனிய மன்னர் ஏதெனியன் தூதர்களைச் சந்தித்தார். அதில் பிலோகிரேட்ஸ் அமைதி உடன்பாடு என்று அழைக்கப்படும் அமைதி ஒப்பந்தம் உருவானது. இதன் விளைவாக, மாசிடோனியாவும் ஏதென்சும் நட்பு நாடுகளாக மாறின. ஆனாலும் ஏதென்ஸ் ஆம்ப்பிபோலிஸ் நகரத்தின் (நவீன மத்திய மாசிடோனியாவில் ) மீதான தன் உரிமைகோரல்களை கைவிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

ஏதென்சுக்கும் மாசிடோனியாவுக்கும் இடையே பகை மூண்டதால், ஃபிலோக்ரேட்சின் அமைதி உடன்பாடு இறுதியில் உடைந்தது. அமைதி உடன்படிக்கையை செயல்பாடுகளுக்கு ஓரளவு பொறுப்பேற்றிருந்த ஏதெனிய அரசியல்வாதியான டெமோஸ்தனிஸ், பிலிப்பை எதிர்க்க தனது சக ஏதெனியர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ச்சியான உரைகளை நிகழ்த்தினார் . கிமு 338 இல் செரோனியா போரில் ஏதென்ஸ் மற்றும் தீப்ஸ் தலைமையிலான கிரேக்க கூட்டணி இராணுவத்தின் மீதான வெற்றியின் மூலம் கிரேக்கத்தின் மீதான மாசிடோனிய மேலாதிக்கம் பாதுகாக்கப்பட்டது. அதன் பின்னர் கொரிந்த்து கூட்டணி எனப்படும் கிரேக்க நாடுகளின் கூட்டாட்சி நிறுவப்பட்டது. இது மாசிடோனியாவின் முன்னாள் கிரேக்க எதிரிகளையும் மற்றவர்களையும் மாசிடோனியாவுடன் ஒரு முறையான கூட்டாட்சிக்குள் கொண்டு வந்தது. பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் மீது மேற்கொள்ளபட்ட திட்டமிடப்பட்ட படையெடுப்பிற்காக கொரிந்து கூட்டணி பிலிப்பை ஸ்ரடிகெசாக (அதாவது தளபதியாக ) தேர்ந்தெடுத்தது. இருப்பினும், பிலிப் போரைத் தொடங்குவதற்கு முன்பே படுகொலை செய்யப்பட்டார். அதனால் அவருக்குப் பதிலாக அவரது மகனும், வாரிசுமான பேரரசர் அலெக்சாந்தர் அப்பணியை முடித்தார்.

குறிப்புகள் தொகு