கூத்து என்பது நாடகம். கூத்தர் என்போர் நாடகம் ஆடுவோர். கூத்தர் பற்றிப் பண்டைய தமிழ்நூல்கள் தெரிவிக்கும் கருத்துகள் இவை.

புறவாழ்க்கையில் கூத்தர் பங்கு தொகு

கூத்தர் ஆங்காங்கே களம் அமைத்துக்கொண்டு கூத்தாடுவர். [1] கூத்தாடும் அவர்களது அவைக்கு ஒவ்வொருவராக வருவர். கூத்து முடிந்ததும் ஒரே நேரத்தில் அனைவரும் சென்றுவிடுவர். [2] செங்குட்டுவன் கனக விசயரை வென்றபோது அவர்களின் பக்கம் இருந்து போரிட்டவர்கள் பல வகையான வேடமிட்டுக்கொண்டு போர்க்களத்திலிருந்து தப்பித்து ஓடினர். அந்த வேடங்களில் ஒன்று ஆடும் கூத்தர் வேடம். [3] உயிர் உடலில் ஆடும் கூத்தர் போல் விளையாடிவிட்டுப் போய்விடும். [4] புறத்திணை ஆற்றுப்படை நூல்களில் ஆற்றுப்படுத்தப்படும் மாந்தராக வருவர். [5] மலைபடுகடாம் நூலைக் கூத்தர் ஆற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

அகவாழ்க்கையில் கூத்தர் பங்கு தொகு

கற்புநிலை ஒழுக்கத்தில் கூத்தரின் பங்கு இன்னதெனத் தொல்காப்பியம் தொகுத்துக் காட்டுகிறது. [6] தலைவன் வேறொரு நாட்டுக்குச் சென்றிருக்கும்போது அவன் எப்படி இருக்கிறான் என்பதைக் கண்டுவந்து தலைவிக்குக் கூறுவர். [7]

  • கூத்தர் அகத்திணை மாந்தர்களில் ஒரு சாரார். இவர்கள் திருமணத்துக்குப் பின்னர் வாழும் கற்பு ஒழுக்கத்தில் பரத்தையின்மாட்டுப் பிரிந்து வந்த தலைவன் சார்பாகத் தலைவியிடம் இவ்வாறெல்லாம் சொல்லி வாதாடுவர். [8]
  • முன்னோர் ஊடல் தணிந்த செய்திகளைக் கூறுவர்.
  • ஊடல் தணிந்து தலைவன் தரும் இன்பத்தைத் துய்க்கும்படி எடுத்துரைப்பர்.
  • ஊடல் மனைக்கிழத்தியர் செயலன்று என்று பலவகைகளில் விளக்குவர்.
  • ஊடல் தணிந்தால் இன்ன நன்மை விளையும் எனக் காட்டுவர்.
  • ஊடிக்கொண்டே இருந்தால் இன்ன துன்பம் விளையும் என விளக்குவர்.
  • ஊடிக் கெட்டவளை எடுத்துக்காட்டி ஊடல் தணிக என்பர்.
  • எதற்காகத் தலைவி ஊடல் தணியவேண்டும் என்று காரணம் காட்டி விளங்கவைப்பர்.
  • ஊடல் தணிவதுதான் மாதர்க்கு அணி எனத் தோதாகக் கூறுவர்.

அடிக்குறிப்புகள் தொகு

  1. புறநானூறு 28
  2. கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந்து அற்று. – திருக்குறள்
  3. சிலப்பதிகாரம் 26-228
  4. சிலப்பதிகாரம் 28-165
  5. தொல்காப்பியம் புறத்திணையியல் 30
  6. தொல்காப்பியம் கற்பியல் 27
  7. தொல்காப்பியம் கற்பியல் 28
  8. தொல்காப்பியம் கற்பியல் 27

காண்க தொகு

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தர்&oldid=3286036" இலிருந்து மீள்விக்கப்பட்டது