சிக்மண்ட் பிராய்ட்

சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்ததும், இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவற்றின் தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.

சிக்மண்ட் பிராய்ட்
சிக்மண்ட் பிராய்டின் நிழற்படம், 1938
பிறப்பு(1856-05-06)மே 6, 1856
பிரீபர்க், மோரேவியா, இப்போது செக் குடியரசில்
இறப்புசெப்டம்பர் 23, 1939(1939-09-23) (அகவை 83)
இலண்டன்
வாழிடம்ஆஸ்திரியா, (பின்னர்) இங்கிலாந்து
தேசியம்ஆஸ்திரியர்
துறைநரம்பியல், மெய்யியல், உளமருத்துவம், உளவியல், உளப்பிணிச் சிகிச்சை, உளப்பகுப்பாய்வு
பணியிடங்கள்வியன்னாப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னாப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஜான்-மார்ட்டின் சார்க்காட், (பின்னர்) ஜோசேப் புரூவர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஆல்பிரட் ஆட்லர், ஜான் பவுல்பி, விக்டர் பிராங்க், அன்னா பிராய்ட், ஏர்னஸ்ட் ஜான்ஸ், கார்ல் ஜங், மெலனி கிளீன், ஜாக் லாக்கான், பிரிட்ஸ் பேர்ள்ஸ், ஒட்டோ ராங்க், வில்ஹெல்ம் ரீச்
அறியப்படுவதுஉளப்பகுப்பாய்வு
விருதுகள்கேத் பரிசு

வரலாறு தொகு

இளமைக்காலம் தொகு

 
1872 இல், பிராய்ட் தனது 16 ஆவது வயதில், அவரது தாய் அமாலியா பிராய்ட் உடன் நின்று எடுத்துக்கொண்ட படம்[1]

சிக்மண்ட் பிராய்ட், 1856 ஆம் ஆண்டில், தற்போது செக் குடியரசில் உள்ளதும், முன்னர் ஆஸ்திரியப் பேரரசில் அடங்கியிருந்ததுமான, மொரேவியாவில் இருந்த பிரிபார் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கலீசிய யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர் பிறக்கும்போது இவரது தந்தையாருக்கு 41 வயது. அவரது முதல் மனைவி மூலம் ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இரண்டாம் மனைவிக்குப் பிறந்த 8 பிள்ளைகளுள் இவரே மூத்தவர். இவரது சுட்டித்தனமான அறிவினால் இவரது பெற்றோரிடம் ஏனைய பிள்ளைகளிலும் பார்க்க இவர்க்குக் கூடிய சலுகைகள் இருந்தன. குடும்பம் வறுமையில் இருந்தபோதும், சிக்மண்ட் பிராய்டின் கல்விக்காக அனைத்தும் செய்தனர். 1857 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியின் போது, பிராய்டின் தந்தையாரின் வணிகத்தில் இழப்பு ஏற்பட்டது. இதனால், அவர் குடும்பத்துடன் லீப்சிக்குக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வியன்னாவுக்குச் சென்று குடியேறினார். சிக்மண்ட் பிராய்ட் அங்கிருந்த முன்னணிப் பள்ளியொன்றில் சேர்ந்து கல்வி கற்றார். ஒரு சிறந்த மாணவனாக விளங்கிய அவர் 1873 ஆம் ஆண்டில் சிறப்புத் தகைமைகளுடன் இரண்டாம் நிலைக் கல்வியில் சித்தியடைந்து வெளியேறினார்.

சட்டத்துறையில் உயர்கல்வியைத் தொடர முதலில் விரும்பினாலும், பின்னர் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதற்காகச் சேர்ந்தார். இவர் டார்வினியப் பேராசிரியராகிய கார்ல் கிளாஸ் (Karl Claus) என்பவரின் கீழ் மருத்துவத்தைக் கற்றார்.

1874 ஆம் ஆண்டில் உள இயக்கவியல் என்னும் கருத்துருவை, ஜெர்மானிய உலற்கூற்றியலாளரான ஏர்ண்ஸ்ட் வில்ஹெல்ம் வொன் புரூக் (Ernst Wilhelm von Brücke) என்பவர் தனது உடற்கூற்றியல் விரிவுரைகள் என்னும் வெளியீட்டில் அறிமுகப்படுத்தினார். இவர் வெப்ப இயக்கவியலின் முதலாவது விதியை உருவாக்கியவர்களுள் ஒருவரான ஹேர்மன் வொன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் என்பவருடன் இணைந்து எல்லா உயிரினங்களுமே ஆற்றல் முறைமைகளே என்றும் அவையும் அதே விதிக்கு உட்பட்டவையே என்றும் கருத்து வெளியிட்டனர்.

பிரெஞ்சு தத்துவம் மற்றும் உளப்பகுப்பாய்வு துறையில் முக்கிய பங்காற்றிய யூங் மற்றும் லக்கான் ஆகிய இருவரும் தமக்கான அணுகுமுறைகளை சிக்மண்ட் பிராய்ட் இடமிருந்தே பெற்றுக் கொண்டார்கள். உளவியலில் பிராய்ட் இன் பாலியல் மட்டுமேயான மைய அணுகுமுறையை இருவருமே மறுத்தாலும் அவர்களது ஆய்வுச்செயற்பாடுகளுக்கு பிராய்டின் பிரதிகளே அடிப்படையாகும்.

ஜேர்மனியை மையமாகக் கொண்டியகும் மார்க்சியப்பள்ளியான ப்ராங்பேர்ட் பள்ளியின் தத்துவப்போக்கில் பிராய்டின் எழுத்துக்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பிராங்பேர்ட் பள்ளியின் முக்கியகர்த்தாக்களான எரிக் பிராம் போன்றவர்கள் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு முறையால் பெரிதும் தூண்டப்பட்டிருந்தனர்.

கண்டுபிடிப்புகள் தொகு

சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் சிக்மன்ட் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.

சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,

  1. உணர்வு மனம் (Conscious Mind)
  2. உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind)
  3. தொலை நோக்கு மனம்

கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் அதிகம் உண்டு என்று இவர் கண்டறிந்து கூறியதாலும் இவர் புகழ்பெற்றார். மேலும் மானிடரின் குண இயல்புகள் பின்வரும் மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்றும் கூறினார். அவை,

  1. உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
  2. முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
  3. மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)

இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.

உளப்பகுப்பாய்வின் வளர்ச்சி தொகு

1885 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிக்மண்ட் பிராய்டு இப்னாசிஸ் விஞ்ஞான ஆராய்ச்சியை நடத்திய புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரான ஜீன்-மார்டின் சார்கோட் உடன் படிப்பதற்காக பாரிசுக்கு சென்றார். அவர் பிறிதொரு சமயம் இந்த அனுபவத்தை, மருத்துவ உளவியல் சிகிச்சையை நடைமுறையில் பயன்படுத்தவும், நரம்பியல் ஆராய்ச்சியில் குறைவான நிதியில் தொழிலில் உறுதியான ஒரு எதிர்காலத்தைப் பெறுவதற்கும் விடாமுயற்சி மேற்கொள்ள என்னைத் துாண்டிய தருணம் என நினைவுகூர்கிறார்.[2] சார்கோட் உளக்கூறு நோயாளிகளிடம் காணப்படும் விகாரமான உடல் வெளிப்பாடு (இஸ்டீரியா) பற்றிய ஆய்வு மற்றும் அறிதுயில் நிலையை ஏற்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார், இது அவர் பார்வையாளர்களின் முன்னால் மேடையில் அடிக்கடி நோயாளிகளுடன் நடத்திய செயல்முறை விளக்கங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

1886 ஆம் ஆண்டில் தனது மருத்துவமனையில் அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தம் முறையை பயன்படுத்தத் தொடங்கினார். அவர் தனது நண்பர் மற்றும் கூட்டுப்பணியாளரான ஜோசப் புருவரின் அணுகுமுறையைப் பயன்படுத்தினார். அவர் ஹிப்னாஸிஸ் பயன்பாடு பற்றி தான் அறிந்திருந்த பிரஞ்சு முறைகளில் இருந்து வேறுபட்டார். பிரஞ்சு அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தும் முறைகளில் ஆலோசனை கூறுதல் நடைமுறைியல் இல்லை. புருவரின் ஒரு குறிப்பிட்ட நோயாளியின் சிகிச்சை பிராய்டின் மருத்துவ நடைமுறைக்கு மாற்றாக நிரூபிக்கப்பட்டது. அன்னா ஓ. எனக் குறிப்பிடப்பட்டவர் அறிதுயில் நிலையில் உள்ள போது தனது நோய்க்குறிகளைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். (தனக்கான சிகிச்சை முறையை "பேசுதல் மூலம் குணப்படுத்துதல்" என்ற சொல்லாக்கத்தை உருவாக்கினார்). இந்த முறையின் படி பேசும் போது நோய்க்குறிகள் தீவிரத்தன்மையிலிருந்து குறைய ஆரம்பித்தது. மேலும், அதிர்ச்சிகரமான சம்பவங்களோடு தொடர்புடைய நினைவுகளையெல்லாம் மீட்டுக்கொணரப்பட்டது. பிராய்டின் மருத்துவப் பரிசோதனைகள் அறிதுயில் நிலை சிகிச்சையுடன் ஒப்பிடும் போது, நோயாளியை எந்தவிதமான தணிக்கையோ, தடுப்போ இல்லாமல், தனது நினைவில் தோன்றக்கூடிய எண்ணங்களைப் பற்றியெல்லாம் சுதந்திரமாகப் பேசுவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் நோய்க்குறிகளில் இருந்து மேம்பட்ட நிவாரணம் கிடைக்கிறது என்ற முடிவிற்கு அழைத்துச் சென்றன எனலாம். இந்த செயல்முறையோடு, பிராய்டினால் "கட்டற்ற இணைப்பு" என்று அழைக்கப்படும் நோயாளிகளின் கனவுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, அவற்றிலிருந்து நனவிலி மனத்தின் சிக்கலான கட்டமைப்பை பகுப்பாய்வு செய்ய இயலும் முறையொன்றையும் இணைத்துப் பயன்படுத்தினார். அவர் மனித மனத்தின் உளவியல் செயல்பாடான அடக்குமுறை நோய்க்குறிகளை உருவாக்குவதற்கான அடிப்படையான காரணமாகக்கூட இருக்கலாம் என்பதையும் விளக்கினார். 1896 ஆம் ஆண்டில், “அறிதுயில் நிலை“ என்பதை பிராய்டு கைவிட்டார். மேலும், தனது 1896 ஆம் ஆண்டில், அறிதுயில் நிலை என்பதை பிராய்டு கைவிட்டார். மேலும், தனது புதிய மருத்துவ முறை மற்றும் அதற்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளை குறிக்க "உளப்பகுப்பாய்வு" என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.[3] 1896 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மரணத்தோடு அவர் தொடர்பு படுத்திய நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாக இதயத்தில் ஒழுங்கற்ற தன்மை, மனச்சோர்வு மற்றும் தொல்லையளிக்கும் கனவுகள் ஆகியவற்றை அனுபவித்த காலகட்டத்தில் பிராய்டிடம் இந்த புதிய கருத்தியலானது உருவாகத் தொடங்கியது.[4] மேலும் அவர் தனது கனவுகள் மற்றும் குழந்தைப் பருவ நினைவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுய பகுப்பாய்வை துாண்டி விட்டார். தனது தாயார், தந்தையிடம் காட்டிய அன்பே அவர் தந்தையின் மீது ஒரு விரோத மனப்பான்மையுடன் கூடிய பொறாமை மற்றும் பகைமை போன்ற அவரது உணர்வுளுக்கான காரணம் என்பதைக் கண்டறிய இந்த சுயபகுப்பாய்வு உதவியது. இந்தப் புரிதல் மேலோட்டமான உள நோய்களுக்கான மூலம் எது என்பது பற்றிய தனது அடிப்படைக் கொள்கைகளை மாற்றியமைக்க உதவியது.பிராய்டின் ஆரம்ப கால மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் நனவிலி மனத்தின் நினைவுகளில் இருந்த தொடக்க கால குழந்தைப் பருவத்து பாலியல் தொல்லைகள் உளவழி நரம்பு நோயின் (psychoneuroses) (உளக்கூறு நோயாளிகளிடம் காணப்படும் விகாரமான உடல் வெளிப்பாடு (hysteria) மற்றும் பித்து நரம்பியல் (obsessional neurosis)) முன் நிபந்தனையாக இருக்கலாம் என்று தனது தவறிழைக்கத் துாண்டப்படுதல் சார்ந்த கொள்கையின் (Freud's seduction theory) கோட்பாடாக முன்வைத்தார்.[5] அவரது சுய பகுப்பாய்வின் விளைவான தெளிவில் பிராய்டு ஒவ்வொரு உளவழி நரம்பு நோயின் காரணத்தையும் தேடி பின் சென்றால் குழந்தைப் பருவத்தில் பாலியல்ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டமை காரணமாக இருக்கும் என்ற கருத்தை கைவிட்டார். இப்பொழுதும் கூட குழந்தைப் பருவ பாலியல் அத்துமீறல்கள் உளப்பிறழ்ச்சி நோய்க்கான காரணங்களில் ஒன்றாக இருந்தாலும் அவை உண்மையானவையா? கற்பனையாக உருவாக்கப்பட்டவையா என்பது அவை அடக்கப்பட்ட அல்லது அழுத்தப்பட்ட நினைவுகளாக மாறியுள்ளனவா? என்பதைப் பொறுத்தே நோய் விளைவிக்கின்ற காரணியா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்ய இயலும் என்ற கருத்துக்கு வந்தார்.[6] அனைத்து உளப்பிறழ்ச்சி நரம்பியல் நோய்களுக்கும் மூலமாக குழந்தைப் பருவத்து அதிர்ச்சி தரக்கூடிய பாலியல் அத்துமீறல்கள் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தியலிலிருந்து தன்னிச்சையான குழந்தைப் பருவ பாலியல் கருத்தறிவு இருப்பதாகக் கருதப்படும் கருத்தியல் நிலைக்கான மாற்றமானது பிராய்டின் ஈடிபசு சிக்கல் (மகன் தாயின் மீது கொள்ளும் ஒரு வித பாலியல் மோகம்) தொடர்பான புதிய கருத்தியல் உருவாக அடிப்படையாக இருந்தது.[7]

கருத்துகள் தொகு

  1. சிக்மண்ட் பிராய்ட்,’மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்’ என்று கருதினார்.
  2. பிராய்டு முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது என்று விளக்கினார்.[8]

புற இணைப்புகள் தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. Peter Gay (1995), Freud: A Life for Our Time: picture caption "his adored mother"
  2. Joseph Aguayo. "Joseph Aguayo Charcot and Freud: Some Implications of Late 19th-century French Psychiatry and Politics for the Origins of Psychoanalysis (1986). Psychoanalysis and Contemporary Thought, 9:223–260". Pep-web.org. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.
  3. Gay 2006, pp. 64–71
  4. "jewishvirtuallibrary Sigmund Freud (1856–1939)". jewishvirtuallibrary.org. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.
  5. Freud 1896c, pp. 203, 211, 219; Eissler 2005, p. 96
  6. J. Forrester The Seductions of Psychoanalysis Cambridge University Press 1990, pp. 75–76
  7. Gay 2006, pp. 88–96
  8. Hothersall, D. 2004. "History of Psychology", 4th ed., Mcgraw-Hill:NY p. 290
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்மண்ட்_பிராய்ட்&oldid=3173671" இலிருந்து மீள்விக்கப்பட்டது