சிவகங்கைச் சீமை

தமிழக மறவர் சமஸ்தானம்

சிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் (இன்றைய சிவகங்கையில்) அமைந்திருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த முத்துவடுகநாத தேவர் வேலுநாச்சியார் சிவகங்கையைத் தலைநராகக் கொண்டு ஆட்சி செய்தார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றுமுள்ளது.

சிவகங்கை அரண்மனை

வரலாறு தொகு

17-ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுர சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதுதான் அன்றைய ராமநாதபுர சமஸ்தானமாகும். 1674 முதல் 1710 வரை ராமநாதபுர சமஸ்தானத்தின் 7-வது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்குப் பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8-வது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை என்ற சிற்றூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த பெரியஉடையார்தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரியஉடையார்தேவர் மகன் சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்து சுமார் 1000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான பிரான்மலை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்பாலைக்குடி,திருப்புவனம் போன்ற பகுதிகளை சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார். விஜய ரகுநாத சேதுபதிக்குப் பின் சுந்தரேசுவர சேதுபதி 9-வது மன்னரானார். அவரை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் சிறைபடுத்தி 10-வது மன்னராக தனக்குத்தானே முடிசூடிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார். பின்னர் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார். ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் அங்கு மாறுவேடத்தில் சென்று அந்த புலியைக் கொன்று தன் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து 1730-இல் உறையூர் போரில் பவானிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டு கட்டயத்தேவர் மன்னரானார்.

சிவகங்கைச் சீமையின் முதலாம் மன்னர் - சசிவர்ணத்தேவர் தொகு

உறையூர் போரில் வென்றபின் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாய் பிரித்து அதில் இரண்டு பகுதிகளை சசிவர்ணத் தேவர்க்கு அளித்து ராஜா முத்துவிஜயரகுநாத பெரியஉடையத்தேவர் என்று பெயர் சூட்டி சிவகங்கைச்சீமையின் மன்னராக்கினர்.

சிவகங்கைச் சீமையின் இரண்டாம் மன்னர் - முத்துவடுகத்தேவர் தொகு

சசிவர்ணத்தேவர் 1750 ஆம் ஆண்டு மரணமடந்தார். அவருக்கு பின் முத்துவடுகத்தேவர் சிவங்கங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரானார். 1746 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்த வேலு நாச்சியாரை மணமுடித்தார். இவருடைய ஆட்சியின் போது இவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை டச்சுக்காரரிடம் அளித்திருந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு, வரியை ஆங்கிலேயே அரசுக்கோ அல்லது ஆற்காட்டு நவாப்புக்கோ செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தது. ஆனால் முத்துவடுகத்தேவர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜோசப் ஸ்மித் என்பவர் கிழக்கிலிருந்தும், பெஞ்ச்மௌர் என்பவர் மேற்கிலிருந்தும் சிவங்கங்கைச் சீமையின் மீது படை எடுத்தனர். அன்றைய சிவகங்கைச் சீமை முழுதும் காடுகள் நிறைந்த பகுதிகளும் சிறு சிறு கிராமங்களை கொண்ட ஒரு திருநாடாகும். ஆங்கிலேயரின் படைகளை சிவகங்கைச் சீமையின் புறப்பகுதியிலேயே தடுக்க ஆங்காங்கு பல இடையூர்களை முத்துவடுகத்தேவர் ஏற்படுத்தினர். ஆயினும் 21 ஜூன் 1772 அன்று சிவகங்கையை கைப்பற்றினர் ஆங்கிலேயர். பின்னர் காளையார்கோவில், சோழபுரம் போன்ற பகுதிகளை 25 ஜூன் 1772 அன்று கைப்பற்றி சிவகங்கை முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நடந்த கடும் போரில் முத்துவடுகத்தேவர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

வீரத்தளவாய் தாண்டவராய பிள்ளை(1700-1773) தொகு

சிவகங்கை சீமையின் தளவாயாக இருந்தவர் தாண்டவராய பிள்ளை ஆவார், வெள்ளை மருது & சின்ன மருதுக்கு வேத குருவாய் விளங்கியவர் சிவகெங்கையின் முதல் பாளையக்காரர் சசிவர்ண தேவர் முதல் வேலுநாச்சியார் வரை(1730-1773) தளவாயாக செயல்பட்டவர், இவரது சிலை சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோவில்லில் உள்ளது.

உதயபெருமாள் கவுண்டர் (துப்பாக்கி கவுண்டர்) தொகு

இவர் சிவகங்கையின் துப்பாக்கி படைப்பிரிவின் நிறுவனர் மற்றும் தளபதி ஆவார். இவரின் இயற்பெயர் உதயப்பெருமாள் கவுண்டர் என்பதே ஆகும். இவரின் துப்பாக்கி சுடும் திறமையை பார்த்து இவரது நண்பர்கள் இவரை துப்பாக்கி கவுண்டர் என்று அழைக்கதொடங்கினர்[சான்று தேவை].

சிவகங்கைச் சீமை மீட்பு - மூன்றாம் மன்னர் - ராணி வேலுநாச்சியார் தொகு

முத்துவடுகத்தேவரின் மறைவுக்கு பின் சில காலம் பதுங்கி இருந்த வேலுநாச்சியார் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் ஆதரவோடு திண்டுக்கல் மலைக்கோட்டையில் மறைந்திருந்தார். பின்னர் அதை கேள்வி பட்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரையும் அவர் மகள் வெள்ளச்சிநாச்சியாரையும் தன் பாதுகாப்பில் சில காலம் வைத்திருந்தார். வேலுநாச்சியாரோடு மருது சகோதரர்கள் திண்டுக்கலில் பதுங்கி இருந்தனர். சுமார் 8 வருடங்களுக்கு பிறகு 1780 சிவகங்கை மீட்க ஒரு திட்டம் வகுத்தார். அதற்கு பக்கபலமாக ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். பின்னர் போர்ப்படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாள் காளிக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டி போர் நடந்தது. வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் போரில் தோற்கடித்தார்.

மருது சகோதரர்கள் தொகு

 
காளையார்கோயில் காளீஸ்வரர்கோயிலின் வெளித்தோற்றம்

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் தான் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டி என்ற பெயரிட்டனர் பெற்றோர். பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது, சின்ன மருது பாண்டி என்று பெயரிட்டனர். சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக இருந்த மருது சகோதரர்கள் தங்களது போர்த் திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். வீரமங்கை வேலுநாச்சியாரின் மறைவுக்கு பின்னர் 1780 ஆம் ஆண்டு முதல் 1801 வரை மருது சகோதரர்கள் சிவகங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர்[சான்று தேவை].

இக்காலத்தில் பல கோவில்களுக்கு திருப்பணிகளும், கோவில் சீரமைப்பு களையும் மேற்கொண்டனர். தீவிர சிவ பக்தர்கள் ஆன இவர்கள் காளையார்கோவில் கோபுரத்தை கட்டி முடித்து கும்பாபிஷேகத்தை நடத்தினர். கோவிலுக்கு தேர் ஒன்றும் அர்ப்பணித்தனர். இவர்களின் ஆட்சி காலம் சிவகங்கையின் பொற்காலமாக கருதப்படுகிறது.

பிறகு தென்னிந்தியாவில் வீர சங்கத்தை கட்டியெழுப்பி ஆங்கிலேயருக்கு எதிராக போரைத் தொடங்கினர்.

இறுதிப்போரில் ஆங்கிலேயர்கள் புதுக்கோட்டை தொண்டைமான் திருவாங்கூர் மன்னர் ஆகியோரின் உதவியுடன் மருது பாண்டியர்களை தோற்கடித்தனர்.


தீவிர சிவ பக்தர்கள் ஆன இவர்கள் காளையார்கோவில் கோபுரத்தைக் கட்டி முடித்து கும்பாபிஷேகத்தை மேற்கொண்டனர்.

மூன்று மாத கடுமையான போருக்குப்பின் ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களை 24-10-1801 அன்று தூக்கில் போட்டனர். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது தலையை காளீசுவரர் கோவில் முன்பு புதைக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கையில் அடுத்த மன்னராக படமாத்தூர் உடையணத்தேவர் நியமிக்கப்பட்டார்.1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

சான்றாவணம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கைச்_சீமை&oldid=3729503" இலிருந்து மீள்விக்கப்பட்டது