வேலு நாச்சியார்
இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
இராணி வேலு நாச்சியார் | |
---|---|
ஆட்சி | கி.பி 1780- கி.பி 1783 |
முடிசூட்டு விழா | கி.பி 1780 |
முன்னிருந்தவர் | முத்து வடுகநாதர் |
பின்வந்தவர் | வெள்ளச்சி நாச்சியார் |
துணைவர் | முத்து வடுகநாதர் |
தந்தை | செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி |
தாய் | முத்தாத்தாள் நாச்சியார் |
இளமை
1730-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார் வேலுநாச்சியார். ஆண் வாரிசு போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746-இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.[1]
ஆங்கிலேயர் படையெடுப்பு
1772-இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுக்க காத்திருந்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஐதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஐதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.[2] 8 ஆண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஓர் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.[3] வேலு நாச்சியார் திருப்பத்தூர் படைக்கு நன்னியம்பலம் மற்றும் சேதுபதி அம்பலம் என்ற கள்ளர் தலைவர்களை தலைமை ஏற்கச் செய்தும், காளையார் கோவில் படைப்பிரிவிற்கு மருது சகோதரர்களைத் தலைமை ஏற்கச் செய்தார்.[4][5] நன்னியம்பலம் தலைமையில் மூவாயிரம் படை வீரர்கள் எட்டுப் பீரங்கிகளுடன் திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றினர்.[6] வேலு நாச்சியாரை மீண்டும் ஆட்சியில் அமர இவர்கள் முக்கிய பங்காற்றினார்.
படை திரட்டல்
சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளை ராணி வேலு நாச்சியாருக்காக ஐதர் அலி அவர்களுக்கு 08.12.1772 தேதியிட்டு அனுப்பிய கடிதத்தில் ஆற்காடு நவாப், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரு தன்னரசுகளையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்தி வருகிறார். அங்கிருந்து தப்பி வந்த நான் கள்ளர் தலைவர்களுடன் காடுகளில் தங்கி கிளர்ச்சியை தொடர்ந்து வருகிறேன். இந்த முயற்சியில் எனக்கு யார் உதவி செய்தாலும் இன்னும் சிறந்த சாதனைகளை இயற்றமுடியும் ஆகையால், தாங்கள் ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால், அவர்களது படிச் செலவை நான் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் இணைந்து இந்த இரு சமஸ்தானங்களையும் மீண்டும் கைப்பற்ற இயலும், அத்துடன் மதுரைக்கும் படைகளை அனுப்பி வைத்து அந்த சீமை முழுவதும் எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கி வைக்கவும் இயலும். அங்குள்ள பாளையக்காரர்களும் நமக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.[7] 1780- ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை வைகை ஆற்றின் வழியில் சோழவந்தானையும், பிறகு சிலைமானையும், அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல், நகரங்களை வென்ற பிறகு, கடைசி யுத்தமாக மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அந்நிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர்.
அதன் பிறகு இராணியின் தோரணையோடு, இராணி வேலுநாச்சியார் படைவீரர்கள் புடை சூழ விழாக்கோலம் பூண்ட வேலு நாச்சியார், அதன் பிறகு சிவகங்கை சீமையின் முதல் இராணியாக முடிசூட்டப்பட்டார்.
இறுதி நாட்கள்
1793-இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்குத் துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.
வேலுநாச்சியார் மணிமண்டபம்
சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 18. சூலை 2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார[8][9][10]
அருங்காட்சியகம்
வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
நினைவு தபால்தலை
ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.
சிவகங்கைச் சீமை வாரிசுகள்
1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1790 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1790 - 1793 - வெள்ளச்சி நாச்சியார் வேலு நாச்சியார் மகள்
5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையனத் தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் கணவர்
5. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
9. 1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
12. 1878 - 1883 - துரைசிங்கராஜா
13. 1883 - 1898 - து. உடையணராஜா
1892-ஆம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார்.
1910-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் பகுதி ராமநாடு என அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் 1985-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "11. வேலு நாச்சியார்". Dinamani.
- ↑ ஜூன் 26, பதிவு செய்த நாள்:; 2019 13:15. "வீரமங்கை வேலுநாச்சியார்!". Dinamalar.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Tamil Newspaper, Tamilnadu News, World news, Latest Tamil News, Tamilnadu Politics, Tamil News". DailyThanthi.com.
- ↑ "விடுதலைப் போரின் விடிவெள்ளிகள்". சுரா பதிப்பகம்.
- ↑ "விடுதலை வேள்வியில் தமிழகம்".
- ↑ "வேலு நாச்சியார்".
- ↑ "சீர்மிகு சிவகங்கைச் சீமை/விருபாட்சியில் வேலு நாச்சியார்".
- ↑ Correspondent, Vikatan. "வேலூநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவு சின்னம்: ஜெயலலிதா திறப்பு!". www.vikatan.com.
- ↑ "வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் திறப்பு". Dinamalar. 19 July 2014.
- ↑ http://www.thinaboomi.com/news/2014/07/20/35262.html?page=6