ச. அகத்தியலிங்கம்

ச. அகத்தியலிங்கம் (ஆகத்து 19, 1929 - ஆகத்து 4, 2008) தமிழ்நாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞரும் ஆவார்.

ச. அகத்தியலிங்கம்
பிறப்பு19 ஆகத்து 1929
இறப்பு4 ஆகத்து 2008 (அகவை 78)

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் பிறந்தவர். பெற்றோர் சண்முகம் பிள்ளை, அருணாசலவடிவு. நாகர் கோயில் இந்துக் கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இங்கு பயிலும்பொழுது குமரி அனந்தன் இவருக்கு நெருங்கிய நண்பரானார்.

கேரளா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார். இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக அளவில் உள்ளனர். இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் நல்ல புலமைபெற்றவர்.

அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ்விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1968 முதல் 1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும் பணிபுரிந்தவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1986 திசம்பர் 1ஆம் நாள் முதல் 1989 நவம்பர் 30ஆம் நாள் வரை மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு உரியவர். அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர். இதன் வழியாக தரமான தமிழ் மொழியியல் ஆய்வுகள் வெளிப்பட்டன. பல ஆய்வாளர்கள் உருவானார்கள்.

ஆய்வுகள், நூல்கள் தொகு

அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த பெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவரது தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.

அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர். இவரின் மொழியியல் பணிகள் ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க காரணமாயின. அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர். பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இல்லத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச் செய்துவந்தார். உலக நாடுகள் இவரை அழைத்துப்பெருமை கொண்டன. அவ்வகையில் அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி மீண்டுள்ளார்.

மறைவு தொகு

முனைவர் ச.அகத்தியலிங்கம் புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழுந்து விபத்தில் ஆகத்து 4, 2008 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாளும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர். அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி இலதா பிரியா(அகவை 22) மருத்துவமனையில் சேர்க்கப்பெற்றார்கள்.

மறைந்த துணைவேந்தர் அவர்களுக்கு சண்முகசுந்தரி, அருணாசலவடிவு (சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்) ஆகிய இரண்டு பெண்மக்கள் உள்ளனர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._அகத்தியலிங்கம்&oldid=3784967" இலிருந்து மீள்விக்கப்பட்டது