திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் என்னும் தலைப்பின் கீழ், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2013, மார்ச்சு 13ஆம் நாள் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான், இத்தாலி மற்றும் வெளிநாடுகளுக்குத் திருப்பயணியாகச் சென்று, தமது சமயப்பணியை ஆற்றிட மேற்கொண்ட முக்கிய பயணங்கள் தரப்படுகின்றன.

திருத்தந்தை பிரான்சிசின் திருத்தூது பயண நாடுகள்

பயணப் பட்டியல் தொகு

பயணம் சென்ற நாடு/நகர் பயண நாள் பயண ஆண்டு நிகழ்ச்சி/விவரங்கள்
1 உரோமை/புனித மரியா பெருங்கோவில் மார்ச்சு 14 2013 திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற மறுநாள் அன்னை மரியாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
2 வத்திக்கான்/புனித அன்னா கோவில் மார்ச்சு 17 2013 வத்திக்கானின் பங்குக் கோவில் - திருப்பலி நிறைவேற்றினார்.
3 உரோமை/கசால் தெல் மார்மோ சிறைச்சாலை மார்ச்சு 28 2013 பெரிய வியாழன். திருத்தந்தை பிரான்சிசு, சிறைப்பட்ட இளையோரின் காலடிகளைக் கழுவினார்.
4 இத்தாலி/லாம்பெடூசா தீவு சூலை 8 2013 உரோமைக்கு வெளியே முதல் அலுவல்சார் பயணம். அடைக்கலம் தேடி நாடுபெயர்ந்த பலர் கடலில் லாம்பெடூசா தீவு அருகே உயிர் இழந்ததற்கு இரங்கல் தெரிவித்தார்.
5 பிரேசில் சூலை 22-28 2013 உலக இளையோர் நாள் 2013
6 உரோமை/புனித இஞ்ஞாசியார் கோவில் சூலை 31 2013 இயேசு சபை உறுப்பினரான திருத்தந்தை பிரான்சிசு அச்சபை நிறுவுனரான புனித இஞ்ஞாசியாரின் திருவிழாவின்போது திருப்பலி நிறைவேற்றினார்.
7 இத்தாலியா/சார்தீனியா செப்டம்பர் 22 2013 நலம் வழங்கும் அன்னை மரியா கோவிலைச் சந்தித்து, திருப்பலி நிறைவேற்றினார்.
8 இத்தாலியா/அசிசி அக்டோபர் 4 2013 புனித அசிசியின் பிரான்சிசு திருவிழாவின்போது திருத்தந்தை பிரான்சிசு திருப்பயணம் சென்று, அப்புனிதரின் வாழ்வு, பணி, சாவு தொடர்பான அனைத்து இடங்களையும் சந்தித்து, இறைவேண்டல் நிகழ்த்தி, அறிவுரை நல்கினார். உடல்-உள ஊனமுற்றோரைச் சந்தித்து, ஒருவர் ஒருவராக அரவணைத்தார். ஏழைகளோடு அமர்ந்து உணவு உண்டார். தூய பிரான்சிசு தாம் உடுத்தியிருந்த ஆடையையும் களைந்துவிட்டு, அனைத்தையும் துறந்து இயேசுவைப் பின்சென்ற நிகழ்ச்சி நடந்த இடத்தில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிசு, கிறித்தவர்கள் ஏழைகள் மட்டில் கரிசனம் கொண்டிருக்கவேண்டும் என்று உரைத்தார்.
9 கொரியா ஆகத்து 13-18 2014 இது திருத்தந்தை பிரான்சிசின் முதல் ஆசியப் பயணம். திருத்தந்தை பிரான்சிசு, தென் கொரியாவின்சியோல் நகரில் நிகழ்கின்ற 6ஆம் ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக் சியோல் விண்படைத் தளத்தில் வந்து இறங்கினார். அவரை வரவேற்க தென் கொரிய அதிபர் பார்க் குவென்-கை வந்திருந்தார். 2014, ஏப்பிரல் 16ஆம் தேதி நடந்த படகு விபத்தில் இறந்துபோன 300க்கும் அதிகமான மக்களின் குடும்பத்தினரைச் சந்தித்து திருத்தந்தை பிரான்சிசு ஆறுதல் கூறினார். பின் அவர் பேருரை நிகழ்த்தினார். இதுவே திருத்தந்தை ஆங்கில மொழியில் முதன்முதலாக ஆற்றிய உரை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் கூறியது: “கொரியா தீபகற்பத்தில் (மூவலந்தீவு) அமைதியும் நல்லிணக்க உறவும் ஏற்பட வேண்டும் என்னும் நோக்கத்திற்காக நான் இங்கு வந்துள்ளேன்.”

ஆகத்து 15ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு சியோலின் தேசியோன் உலகக் கோப்பை அரங்கத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார். அந்த மறை நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். அப்போது ஆற்றிய உரையில் அவர் கூறியது: “மனித நலனைக் கருத்தில் கொள்ளாமல், மக்களிடையே வறுமையைப் புதுமுறைகளில் உருவாக்கிவிடுவதோடு, தொழிலாளர்களின் உரிமைகளையும் புறக்கணிக்கின்றவையான பொருளுதார அமைப்புகளை நீங்கள் ஒதுக்கிவிடுங்கள்.”

ஆகத்து 16ஆம் நாள்: 18-19 நூற்றாண்டுகளில் கொரியாவில் கிறித்தவர்கள் பலர் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டு, மறைசாட்சிகளாக இறந்தார்கள். அந்த மறைசாட்சிகளுள் 128 பேருக்கு திருத்தந்தை பிரான்சிசு “அருளாளர்” பட்டம் வழங்குகிறார். வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நல்லுறவுகள் வளர்வதற்காகத் திருத்தந்தை இறைவேண்டல் செய்கிறார்.[1]

10 அல்பேனியா செப்டம்பர் 21 2014 அல்பேனியா நாட்டு ஆட்சியாளர்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர், அல்பேனியா நாட்டுத் தலைநகரான டிரானா நகரில் அமைந்துள்ள “அன்னை தெரேசா சதுக்கத்தில்” திருப்பலி நிகழ்த்துகிறார். அதன் பிறகு, நண்பகலில் மூவேளை செபத்தை மக்களோடு சேர்ந்து ஒப்புக்கொடுக்கிறார். “நல்லாலோசனை அன்னை மரியா” பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிசு, பிற கிறித்தவ சபைத் தலைவர்களையும், பிற சமயத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார். மாலை வேளையில் டிரானா நகரின் பெருங்கோவிலில் குருக்கள், துறவியர், குரு மாணவர்கள், பொதுநிலைத் தலைவர்கள் ஆகியோருக்கு உரையாற்றி, அவர்களோடு சேர்ந்து மாலை வழிபாடு நிகழ்த்துகிறார். பெத்தானியா மையம் என்ற நிறுவனத்தில், சிறுவர் சிறுமியரை சந்தித்து உரையாடுகிறார். அப்போது, அல்பேனியா திருச்சபையின் வேறு பல பிறரன்பு மையங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வர்.[2]

80% முசுலிம்களும் 10% கத்தோலிக்க கிறித்தவர்களும், 10% மரபுவழி கிறித்தவர்களும் வாழ்கின்ற அல்பேனியா நாட்டில் சமய சுதந்திரம் நிலவுவதைத் திருத்தந்தை பிரான்சிசு பாராட்டினார். நாட்டு அதிபர் பூஜார் நிஷானி திருத்தந்தையை வரவேற்றார். அப்போது ஆற்றிய உரையில் பிரான்சிசு கூறியது: “சமயத்தின் பெயரால் வன்முறையிலும் பிற அட்டூழியங்களிலும் ஈடுபடுவோர் சமயத்தின் உண்மைப் பொருளை அறியாதவர்கள். அவர்கள் சமயத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர். சமயங்கள் மனித உரிமைகளை ஆதரிக்க வேண்டும். சமய சுதந்திரத்தை மீறுவது மனித உரிமையை மீறுவதற்கு சமம்.”[3]

11 துருக்கி நவம்பர் 28-30 2014 2014, நவம்பர் 28-30இல் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி நாட்டுப் பயணம் நிகழ்த்தினார். முதலில் அவர் துருக்கி நாட்டுத் தலைநகரான அங்காரா சென்று சேர்ந்து அங்கு துருக்கி நாட்டு அதிபராலும், முதலமைச்சராலும் பிற அதிகாரிகளாலும் வரவேற்கப்பட்டார். நவம்பர் 28ஆம் நாள் வெள்ளிக் கிழமை அவர் சமய நல்லிணக்கம் பற்றி உரையாற்றினார். நாட்டு அதிபர் ரெசெப் தயீப் எர்தோகான் அரண்மனையில் பேசிய அவர் கூறியது: “சமயங்களின் பெயரால் தீவிர வாதத்தையும் அடிப்படை வாதத்தையும் அர்த்தமற்ற அச்சங்களையும் புரிதலின்மைகளையும் வேறுபடுத்தி ஒதுக்குதலையும் கடைப்பிடிப்பது முறையற்றது. சமய நபர்கள் சமய நல்லிணக்கத்திற்கான உரையாடலிலும் நட்புறவை வளர்ப்பதிலும் ஈடுபட வேண்டும். தீவிர வாதத்தையும் அடிப்படை வாதத்தையும் இராணுவ நடவடிக்கையால் மட்டுமே முறியடித்துவிட முடியாது. மாறாக, சமய நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.”

இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு என்ற பெயரில் இசுலாமிய ஆட்சியைத் திணிக்க முயல்கின்ற தீவிரவாதக் குழு மேற்கொண்டுள்ள போர்ச்செயல்களின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் அகதிகளாக துருக்கிநாட்டு எல்லையில் குவிந்துள்ளனர். இவ்வாறு அடைக்கலம் தேடிவந்துள்ள 1.6 மில்லியன் குர்து இன யசீதி மக்கள், கிறித்தவர்கள் போன்றவர்களை ஏற்று அவர்களுக்கு உதவி செய்ததற்காகத் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி நாட்டைப் பாராட்டினார். மேலும் இந்த அகதிகளுக்கு மேலதிக உதவிசெய்திட பன்னாட்டு அரசுகள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சமய நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் ஈடுபட வேண்டும்.

இசுலாம் சமயத்தைக் கண்டு அஞ்சுவதும் அதை வெறுப்பதும் மேற்கு நாடுகளில் ஆங்காங்கே உள்ளது என்று சுட்டிக்காட்டிய துருக்கி அதிபர் எர்தோகான், சமய நல்லிணக்க உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிசு, நவீன துருக்கி நாட்டின் தந்தையாகக் கருதப்படுகின்ற முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் என்பவரின் நினைவிடம் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நவம்பர் 28ஆம் நாள் சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிசு இசுதான்புல் நகருக்குச் சென்றார். காண்ஸ்டாண்டிநோபுள் என்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இந்நகரத்தில் கிறித்தவ சமயமும் கலாச்சாரமும் ஆழ வேரூன்றி இருந்தன. இன்று அந்நகரத்தில் இசுலாமியக் கலாச்சாரம் பரவலாக உள்ளது. அந்நகரில் உள்ள ஹேகியா சோபியா என்ற எழில்மிகு கலைக்கூடத்திற்கு அவர் சென்றார். இன்று கலைக்கூடமாக உள்ள இந்தக் கட்டடம் வரலாற்றுப்புகழ் மிக்கது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கிறித்தவப் பெருங்கோவிலாகக் கட்டப்பட்ட இந்த வழிபாட்டிடம் 1453 வரை கீழை மரபுக் கிறித்தவத்தின் மையமாகவும் கிறித்தவக் கலாச்சாரத்தின் உச்சமாகவும் விளங்கியது. ”கடவுளின் புனித ஞானம்” என்று பெயர்பெற்ற இப்பெருங்கோவிலை சுல்தான் இரண்டாம் மெகமத் என்பவரின் தலைமையில் துருக்கியர் 1453இல் கைப்பற்றி அதை இசுலாமியத் தொழுகையிடமான மசூதியாக மாற்றினார்கள். 1935இல் இது ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டது. இவ்வாறு வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றை உள்ளடக்கிய இவ்விடத்தைத் திருத்தந்தை பிரான்சிசு சந்தித்தார். அங்கு பொன்னேட்டில் பிரான்சிசு முதலில் “கடவுளின் புனித ஞானம்” என்று கிரேக்க மொழியில் (“Αγία Σοφία του Θεού”) எழுதினார். அதன் கீழே ”ஆண்டவரே, உமது உறைவிடம் எத்துணை அருமையானது” என்ற விவிலிய வசனத்தை எழுதினார் (திருப்பாடல்கள் 84:1). கீழே கையெழுத்திட்டார்.[4]

அதற்கு முன்னர் திருத்தந்தை பிரான்சிசு ”நீல மசூதி” என்றும் ”சுல்தான் அகமத் மசூதி” (Sultan Ahmed Mosque) என்றும் அழைக்கப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இசுலாமிய வழிபாட்டிடம் சென்றார். மசூதியின் பகுதிகளைப் பார்வையிட துருக்கிய இசுலாமியப் பெருந்தலைவர் (Grand Mufti) ராமி யாரான் பிரான்சிசோடு சென்றார். பின்னர் இசுலாமிய வழிபாட்டின்போது அங்கு நின்று ராமி யாரானோடு நின்றுகொண்டு, மெக்கா திசை நோக்கி, திருத்தந்தை பிரான்சிசு தலைகுனிந்து, கைகளை இணைத்து அமைதியாக இறைவேண்டலில் தியானம் செய்தார். இரு நிமிடங்கள் இவ்வாறு தொழுததும் ராமி யாரான், “இறைவன் இந்த வேண்டுதலை ஏற்பாராக” என்று கூறி முடித்தார்.[5]

சுமார் 75 மில்லியன் மக்கள் தொகை கொண்ட துருக்கி நாட்டில் 98% பேர் இசுலாமியர். எஞ்சியோரில் கத்தோலிக்கரும், மரபுவழிக் கிறித்தவர்களும், புரட்டஸ்டாண்டு கிறித்தவர்களும் உட்பட 120,000 பேர் மட்டுமே கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள் (0.2%). இலத்தீன் கத்தோலிக்கர் 35,000 பேர். இவ்வாறு மிகச் சிறிய கிறித்தவக் குழுவே உள்ள துருக்கி நாட்டில் திருத்தந்தை பிரான்சிசு தூய ஆவி பெருங்கோவிலில் நவம்பர் 29ஆம் நாள் சனிக்கிழமை கீழைத் திருச்சபைகளால் பெரிதும் போற்றப்படுகின்ற புனித அந்திரேயா திருவிழாவை முன்னிட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்.

மரபுவழிக் கீழைத் திருச்சபைகளின் தலைவரான மறைமுதுவரான முதலாம் பர்த்தலமேயுவோடு சேர்ந்து, திருத்தந்தை பிரான்சிசு “கிறித்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில்” கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி இசுதான்புல் நகரில் உள்ள மரபுவழிக் கிறித்தவப் பெருங்கோவிலான புனித ஜோர்ஜ் ஆலயத்தில் நிகழ்ந்தது. அங்குதான் மறைமுதுவரின் ஆட்சிப்பீடம் உள்ளது. கிறித்தவ ஒன்றிப்பு நிகழ்ச்சியின்போது திருத்தந்தை பிரான்சிசு மறைமுதல்வரை அணுகி, அவருக்குமுன் தலைகுனிந்து நின்று தம்மையும் உரோமைத் திருச்சபையையும் ஆசிர்வதிக்க கேட்டார். மறைமுதல்வரும் பிரான்சிசின் தலையில் முத்தமிட்டு இறை ஆசியை வேண்டினார். உலகெங்கிலும் உள்ள சுமார் 1.2 பில்லியன் கத்தோலிக்க கிறித்தவர்களுக்குத் தலைவரான திருத்தந்தை பிரான்சிசு, சுமார் 300 மில்லியன் மரபுவழிக் கிறித்தவர்களுக்குத் தலைவரான மறைமுதல்வர் பர்த்தலமேயுவை சந்தித்த நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இரு சபைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இச்சந்திப்பு உதவும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.[6]

உலகத்தில் நிலவுகின்ற இரு பெரும் கிறித்தவத் திருச்சபைகளின் தலைவர்களான திருத்தந்தை பிரான்சிசும் (கத்தோலிக்க கிறித்தவ சபை), முதலாம் பர்த்தலமேயு (கீழை மரபுவழி திருச்சபை) இணைந்து முக்கியமானதோர் கூட்டறிக்கை விடுத்தனர். அந்த அறிக்கையில் கூறப்படும் சில கருத்துக்கள்: 1) உலகத்தில் பல பிரிவுகளாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற கிறித்தவ சபைகள் ஒற்றுமை கொணர உழைக்க வேண்டும். குறிப்பாக, கத்தோலிக்க கிறித்தவ சபையும், மரபுவழி சபையும் இந்த ஒற்றுமை முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். 2) நடு ஆசியாவில், குறிப்பாக ஈராக், சிரியா நாடுகளில் நிலவுகின்ற வன்முறைகள் ஒழிய வேண்டும். அங்கு 2000 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த கிறித்தவ சமூகங்களைத் துன்புறுத்தி வெளியேற்றுகின்ற செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும். 3) எல்லா சமயத்தவரும் நல்லிணக்கத்தோடு வாழ்கின்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். 4) இசுலாம் பெயரால் வன்முறையில் ஈடுபடுகின்ற ISIS போன்ற அமைப்புகளைத் தடுத்துநிறுத்துவது தேவை. அதே நேரத்தில் அவற்றோடு உரையாடலில் ஈடுபடுவதும் முக்கியம். உலகளாவிய இசுலாமியத் தலைவர்கள் தீவிரவாத இயக்கங்களைக் கண்டிக்க வேண்டும்.[7]

துருக்கி நாட்டுக்கு இதுவரை நான்கு திருத்தந்தையர்கள் பயணமாகச் சென்றுள்ளனர். 1967இல் திருத்தந்தை ஆறாம் பவுல், 1979இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், 2006இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 2014இல் திருத்தந்தை பிரான்சிசு ஆகியோர் துருக்கி சென்றுள்ளனர்.[8]

12 இலங்கை சனவரி 13-15 2015 பயண நிகழ்வுகள்: சனவரி 12 மாலை: உரோமையிலிருந்து புறப்படுகிறார். சனவரி 13: காலையில் கொழும்பு பன்னாட்டு விமான நிலையம் வந்தடைகிறார். வரவேற்பு நிகழ்ச்சி, உரை. பிற்பகல்: இலங்கையின் கத்தோலிக்க ஆயர்களுக்கு உரையாற்றுகிறார். மாலை: இலங்கை அதிபரை சந்தித்தல்; பல்சமய நல்லிணக்கக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகிறார். சனவரி 14: கொழும்பு நகரில் அருளாளர் யோசேப்பு வாஸ் என்பவருக்குத் திருத்தந்தை பிரான்சிசு புனிதர் பட்டம் வழங்குகிறார்; மறையுரை ஆற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு உலங்கு வானூர்தியில் கொழும்பிலிருந்து புறப்பட்டு இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள புகழ்மிக்க மடு அன்னை மரியா திருத்தலத்திற்குச் சென்று அங்கே 3:30 மணியளவில் மரியன்னையின் மன்றாட்டினை நிகழ்த்துகிறார். உரையாற்றுகிறார். பின்னர் உலங்கு வானூர்தியில் கொழும்பு வருகிறார். சனவரி 15: பொலவலானாவில் இலங்கையின் அரசி என்று போற்றப்படுகின்ற அன்னை மரியாவின் திருத்தலத்திற்குச் சென்று வேண்டுதல் நிகழ்த்துகிறார். கொழும்பிலிருந்து புறப்பட்டு பிலிப்பீன்சு நாடு செல்கிறார்.
13 பிலிப்பீன்சு சனவரி 15-19 2015 வியாழன், சனவரி 15: கொழும்பிலிருந்து சிறீலங்கா ஏர்லைன்சு விமானத்தில் மணி்லாவின் வில்லாமோர் விமானப் படைத்தளம் வந்தடைகிறார். அதிகாரப்பூர்வ வரவேற்பு. வெள்ளி, சனவரி 16: அதிபர் மாளிகையில் வரவேற்பு; திருத்தந்தை பிரான்சிசு பிலிப்பீன்சு நாட்டு அதிபர் பெனிக்னோ அக்கீனோ III என்பவரை சந்தித்துப் பேசுகிறார். மணிலா மறைமாவட்டக் கோவிலில் ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியரோடு திருப்பலி நிறைவேற்றுகிறார். குடும்பங்களை சந்திக்கிறார். சனிக்கிழமை, சனவரி 17: 2013ஆம் ஆண்டில் கடும் புயலால் பாதிக்கப்பட்ட தாக்லபான் நகருக்குச் சென்று திருப்பலி ஆற்றுகிறார். மக்களைச் சந்திக்கிறார். சனவரி 18: ஞாயிறு: கிறித்தவ மற்றும் பிற மதத் தலைவர்களை மணிலாவின் புனித தோமா பல்கலைக்கழகத்தில் சந்தித்து உரையாற்றுகிறார். இளையோரை சந்திக்கிறார். பிற்பகல் 3:30 மணிக்கு மணிலாவில் மாபெரும் ரிசால் வெளியரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். அதில் பல இலட்சம் மக்கள் பங்கேற்பர். சனவரி 19: திங்கள்: திருத்தந்தைக்குப் பிரியாவிடை அளிக்கப்படுகிறது. (மேலதிகத் தகவல்கள் கீழே காண்க).
14 கியூபா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் செப்டம்பர் 19-28 2015 திருத்தந்தை பிரான்சிசு கியூபா நாட்டில்:

செப்டம்பர் 19, 2015 - சனி - கியூபாவின் தலைநகரான அவானா நகரில் வந்திறங்குகிறார். வரவேற்பு - திருத்தந்தையின் உரை.

செப்டம்பர் 20, ஞாயிறு - காலை 9 மணி - அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுகிறார். மூவேளை மன்றாட்டு நிகழ்த்துகிறார். மாலை 4 மணி - திருத்தந்தை கியூபாவின் அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை புரட்சி மாளிகையில் அலுவல் முறையில் சந்திக்கிறார். மாலை 5:15 மணி - திருத்தந்தை பிரான்சிசு, கியூபா நாட்டு குருக்கள், துறவியர், குருமாணவர் ஆகியோரோடு அவானா மறைமாவட்டப் பேராலயத்தில் மாலை வழிபாடு நிகழ்த்துகிறார். மறையுரை ஆற்றுகிறார். மாலை 6:30 மணி - திருத்தந்தை பிரான்சிசு கியூபாவின் இளையோரை அவானாவில் சந்தித்து உரையாற்றுகிறார்.

செப்டம்பர் 21, திங்கள்: திருத்தந்தை பிரான்சிசு, கியூபாவின் ஓல்கின் நகர் சென்று, திருப்பலி நிகழ்த்தி, மறையுரை ஆற்றுகிறார். நகருக்கு ஆசி வழங்கியபின் சந்தியாகு நகருக்குப் பயணமாகிறார். கியூபாவின் சந்தியாகு நகரில் திருத்தந்தை, கியூபாவின் ஆயர்களை சந்தித்துப் பேசுகிறார். கியூபா நாட்டின் பாதுகாவலரான அன்பின் அன்னை மரியா கோவிலில் அன்னையின் திருவுருவத்தின் முன் வேண்டுதல் நிகழ்த்துகிறார்.

செப்டம்பர் 22, செவ்வாய் - அன்பின் அன்னை மரியா கோவிலில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிகழ்த்துகிறார். சந்தியாகு நகரில் குடும்பங்களை சந்திக்கிறார். நண்பகலில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாசிங்டனுக்குப் புறப்படுகிறார்.

திருத்தந்தை பிரான்சிசு ஐக்கிய அமெரிக்க நாடுகளில்:

செப்டம்பர் 22, செவ்வாய் - மாலை 4 மணி - திருத்தந்தை பிரான்சிசு வாசிங்டன் வந்து சேர்கிறார். அலுவல் முறை வரவேற்பு.

செப்டம்பர் 23, புதன் - காலை 9:15 மணி - திருத்தந்தை பிரான்சிசு அமெரிக்க அதிபர் ஒபாமை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். காலை 11:30 மணி - வாசிங்டன் நகர் புனித மத்தேயு பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிசு அமெரிக்க ஆயர்களை சந்தித்துப் பேசுகிறார். மாலை 4:15 மணி - வாசிங்டன் நகரில் அமைந்துள்ள தேசிய திருத்தலமான அமலோற்பவ அன்னை பெருங்கோவிலில் அருளாளர் ஜுனீப்பெரோ செர்ரா என்பவருக்குப் புனிதர் பட்டம் வழங்கல். திருப்பலி. ஜுனீப்பெரோ செர்ரா என்பவர் எசுப்பானிய நாட்டிலிருந்து அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிக்கு வந்து, அங்கு அமெரிக்க முதற்குடி மக்களிடையே பணிபுரிந்து அவர்களுள் பலரை கத்தோலிக்க மதத்தில் சேர்த்தார். அவர் ஏற்படுத்திய மறைத்தளங்கள் அம்மக்களுக்குப் புகலிடமாகவும், அவர்கள் தொழில் புரியும் தளங்களாகவும் செயல்பட்டன.

செப்டம்பர் 24, வியாழன்: காலை 9:20 - அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவைகளின் கூட்டு அமர்வின்போது திருத்தந்தை பிரான்சிசு உரையாற்றுகின்றார். இவ்வாறு கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினருக்கு உரையாற்றுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. காலை 11:15 மணி - வாசிங்டன் மறைமாவட்ட கத்தோலிக்க சமூக அன்புச் சேவை நிறுவனம் நடத்துகின்ற சேவைத் தளத்திற்குத் திருத்தந்தை பிரான்சிசு செல்கிறார். அங்கு ஏழை மக்களை சந்திக்கிறார். மாலை 4 மணிக்கு வாசிங்டனிலிருந்து புறப்பட்டு, 5 மணிக்கு நியூயார்க் ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார் திருத்தந்தை பிரான்சிசு. மாலை 6:45 - திருத்தந்தை பிரான்சிசு நியூயார்க் மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலான புனித பாட்ரிக் கோவிலில் மாலை வழிபாடு நிகழ்த்துகிறார்.

செப்டம்பர் 25, வெள்ளி: காலை 8:30 மணி - திருத்தந்தை பிரான்சிசு ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையில் பேருரை ஆற்றுகின்றார். ஐக்கிய நாடுகளின் 70ஆம் ஆண்டு நிகழ்வு. இந்த உரையின்போது, உலக நாடுகள் சுற்றுச்சூழல் மாசுறாமல் பாதுகாப்பதிலும், புவி வெப்பம் ஏற்பட்டு கடல் நீர் உயர்ந்து நாடுகள் அழிவுறாமல் தவிர்ப்பதிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி, உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11:30 மணி - நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் சென்று, அங்குள்ள நினைவு காட்சியகத்தில் பல்சமய வழிபாடு நிகழ்த்துகிறார் திருத்தந்தை பிரான்சிசு. இத்தளத்தில் தான் 2001, செப்டம்பர் 11ஆம் நாள் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். மாலை 4 மணி: நியூயார்க்கின் ஹார்லம் பகுதிக்குச் சென்று அங்கு வானதூதரின் அன்னை மரியா கல்விக்கூடத்தைச் சந்திக்கிறார். கடந்த 120 ஆண்டுகளாகச் செயல்படுகின்ற அப்பள்ளிக் கூடத்தின் பெரும்பான்மை மாணவர்கள் எசுப்பானிய, மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்க பின்னணியைச் சார்ந்தவர்கள். மாலை 5 மணி: திருத்தந்தை பிரான்சிசு, நியூயார்க் நகரின் முக்கிய பூங்காவான “மத்திய பூங்கா” (Central Park) பகுதியில் ஊர்தியில் செல்கிறார். அங்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அவரை வரவேற்பர். மாலை 6 மணி: நியூயார்க்கின் மாடிசன் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிகழ்த்துகிறார். அப்போது சுமார் 20,000 மக்கள் பங்கேற்பர்.

செப்டம்பர் 26, சனி: காலை 8:40 மணி - திருத்தந்தை பிரான்சிசு, ஜான் எப். கென்னடி வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்டு பிலடெல்பியா நகர் செல்கிறார். காலை 9:30 - திருத்தந்தை பிரான்சிசு, பிலடெல்பியா நகர் வந்தடைகிறார். காலை 10:30 - பிலடெல்பியா மறைமாவட்டப் பேராலயமான தூய பேதுரு மற்றும் பவுல் கோவிலில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிகழ்த்துகிறார். மாலை 4:45 மணி - திருத்தந்தை பிரான்சிசு, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிறப்பிட்மாகக் கருதப்படுகின்ற பிலடெல்பியாவின் “சுதந்திர வளாகம்” (Independence Mall) பகுதிக்குச் செல்கிறார். இங்குதான் அமெரிக்காவின் சுதந்திர அறிக்கையும், அரசியல் சாசனமும் கையெழுத்திடப் பட்டன. மேலும் “விடுதலை மணி” (Liberty Bell) என்னும் கீறலுற்ற மணியும் இங்குதான் உள்ளது. அங்கு, ஆபிரகாம் லிங்கன் “கெட்டிஸ்பெர்க் உரை” என்னும் பேருரையை வழங்கிய உரை மேடை உள்ளது. அந்த மேடையிலிருந்து திருத்தந்தை பிரான்சிசு சுமார் 50,000 மக்கள் அடங்கிய பெருங்கூட்டத்தினருக்கு உரையாற்றுகிறார். அகதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்று குடியேறுவோருக்கும் எதிரான சட்டங்களை அகற்றிவிட்டு, அவர்களை வரவேற்றுக் குடியமர்த்த வேண்டும் என்று திருத்தந்தை வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 7:30 மணி - திருத்தந்தை பிரான்சிசு, குடும்பங்களின் விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். உரையாற்றுகிறார். இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்.

செப்டம்பர் 27, ஞாயிறு: காலை 9:15 மணி - பிலடெல்பியாவின் புனித சார்லசு பொரோமெயோ குருத்துவக் கல்லூரியின் புனித மார்ட்டின் ஆலயத்தில், திருத்தந்தை பிரான்சிசு, குடும்பங்களின் உலக மாநாடு தொடர்பான ஆயர்களை சந்தித்து உரையாற்றுகிறார். காலை 11 மணி - திருத்தந்தை பிரான்சிசு, பிலடெல்பியாவின் சிறைக்கூடங்களில் ஒன்றாகிய கரன்-ப்ரம்கோல்ட் சிறைக்கூடத்திற்குச் சென்று, அங்கு சிறைக் கைதிகள் சிலரையும், அவர்களுடைய குடும்பத்தாரையும், சிறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகிறார். மாலை 4 மணி - திருத்தந்தை பிரான்சிசு, குடும்பங்களின் உலக மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திருப்பலி நிறைவேற்றி, மறையுரை ஆற்றுகிறார். மாலை 7 மணி - பிலடெல்பியாவின் வானூர்தி நிலையத்தில் குடும்பங்களின் உலக மாநாடு தொடர்பான நன்கொடையாளர்கள், பணி ஆர்வலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்றோரை சந்தித்து உரையாற்றுகிறார். மாலை 8 மணி - கியூபா நாட்டிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் தமது 9 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரியாவிடை பெற்று, திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகருக்குப் பயணமாகிறார் (மேலதிகத் தகவல்கள் கீழே)

15 கென்யா, உகாண்டா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நவம்பர் 25-30 2015 திருத்தந்தை பிரான்சிசு கென்யா நாட்டில்:

நவம்பர் 25, 2015 - புதன் - திருத்தந்தை பிரான்சிசு கென்யாவின் நைரோபி நகரில் ஜோமா கென்யாட்டா விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அவரை கென்யாவின் குடியரசுத் தலைவர் உகுரு கென்யாட்டா வரவேற்கிறார். நாட்டு அதிகாரிகளையும் அரசுத் தூதுவர்களையும் திருத்தந்தை சந்திக்கிறார். திருத்தந்தையின் உரை.[9]

நவம்பர் 26, வியாழன் - பல்சமயத் தலைவர்களோடு திருத்தந்தை உரையாடுகிறார். நைரோபி பல்கலைக்கழகப் பெருவளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றுகிறார். கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 200 ஆயிரம் மக்கள் திருப்பலியில் பாடல்களோடும் நடன ஆட்டத்தோடும் கலந்துகொள்கின்றனர். மக்களுக்கு மறையுரை ஆற்றிய திருத்தந்தை கூறியது: “இன்றைய உலகத்தில் மதத்தின் பெயரால் சிலர் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இது ஒரு மாபெரும் தவறு. எந்தவொரு மதமும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது. சமய நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் உலகத்தில் அமைதி, நல்லிணக்கம் உருவாகிட உழைக்க வேண்டும். ஏழை மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கின்ற சுற்றுச் சூழல் சீரழிவை அவர்கள் தடுத்து நிறுத்தக் கடமைப் பட்டுள்ளார்கள். சமூக மற்றும் அரசியல் துறைகளில் ஊழல் கோலோச்சாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அனைவருடைய கடமை ஆகும்.”

பிற்பகலில் திருத்தந்தை குருக்கள், ஆண் துறவியர், பெண் துறவியர், குருமாணவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார்.

மாலையில் திருத்தந்தை நைரோபியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பிரதேச அலுவலகலத்தில் உரையாற்றினார்.

நவம்பர் 27, வெள்ளி: திருத்தந்தை பிரான்சிசு நைரோபி நகரின் ஏழைமக்கள் குடியிருப்பான “கங்கேமி” என்ற பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்திக்கிறார்.

கென்யாவின் இளையோரை சந்திக்கிறார்; உரையாற்றுகிறார்.

கென்யாவின் ஆயர்களை சந்தித்து உரையாற்றுகிறார்.

உகாண்டா நாட்டுக்குப் பயணமாகிறார். மாலையில் உகாண்டாவின் எண்டேபே விமான நிலையம் சென்றடைகிறார். அரசு தரப்பில் வரவேற்பு – திருத்தந்தை பிரான்சிசு அரசு அதிகாரிகளுக்கும் அரசுத் தூதுவர்களுக்கும் உரையாற்றுகிறார். பின்னர் ஆசிரியர்களுக்கும் மறைக்கல்வி புகட்டுநர்களுக்கும் உரையாற்றுகிறார்.

நவம்பர் 28, சனி: உகாண்டா நாட்டின் நமுகோங்கோ நகரில் அமைந்துள்ள “உகாண்டா ஆங்கிலிக்கன் மறைசாட்சியர் திருத்தலம்” சென்று சந்திக்கிறார். பின்னர் “உகாண்டா கத்தோலிக்க மறைசாட்சியர் திருத்தலம்” செல்கிறார். அங்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றுகிறார்.

இளையோரை சந்திக்கிறார். அன்பு இல்லம் செல்கிறார். உகாண்டா நாட்டு ஆயர்களைப் பேராயர் இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார். மறைமாவட்டப் பேராலயத்தில் குருக்கள், துறவியர், குருமாணவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாற்றுகிறார்.

நவம்பர் 29, ஞாயிறு: உகாண்டா நகரின் எண்டேபே விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிசுக்குப் பிரியாவிடை வழங்கப்படுகிறது. திருத்தந்தை, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரான பாங்குயி நகர் விமான நிலையத்தில் வந்து சேர்கிறார். நாட்டுத் தலைவர்களை சந்திக்கிறார். நற்செய்திசார் சபையினரை சந்திக்கிறார். கத்தோலிக்க குருக்கள், துறவியர், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இளையோரை சந்தித்து உரையாற்றுகிறார். ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கேற்கிறார்.

நவம்பர் 30: திங்கள்: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் முசுலீம் தலைவர்களை சந்தித்து உரையாடுகிறார். திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பயணத்தை நிறைவுசெய்து உரோமை நகருக்குத் திரும்புகிறார். (திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம் குறித்த மேலதிகத் தகவல்கள் கீழே)

16 கியூபா, மெக்சிகோ பெப்ருவரி 12-17 2016 பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரும்பான்மைக் கத்தோலிக்கர் வாழும் நாடு மெக்சிகோ. அந்நாட்டின் 92% பேர் கத்தோலிக்கர். அவர்களது எண்ணிக்கை 109 மில்லியன்.

மெக்சிகோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிசின் பயண நிகழ்ச்சிகள்:[10]

2016 பெப்ருவரி 12, வெள்ளி - திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டுக்குத் திருப்பயணமாகச் செல்கின்ற வழியில், கியூபா நாட்டுத் தலைநகர் அவானா விமானத் தளத்தில், கிறித்தவ ஒன்றிப்பை வலுப்படுத்தும் வகையில், உருசிய மரபுவழி திருச்சபையின் பெருந்தலைவர் மறைமுதுவர் கிரில் என்பவரை சந்தித்து உரையாடினார். சுமார் ஆயிரம் ஆண்டளவாகத் தொடர்பின்றி இருந்த இரு சபைகளும் (கத்தோலிக்கம், உருசிய மரபுவழி சபை) இணைந்து செயல்படுவதற்கான நல்ல தருணம் பிறந்துள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். அந்த உறவு குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அறிக்கையையும் வெளியிட்டனர்.[11]

2016 பெப்ருவரி 12, வெள்ளி – உரோமையிலிருந்து புறப்பட்டு விமானத்தில் மெக்சிகோ நகர் வந்திறங்கினார். விமானத்தளத்தில் திருத்தந்தையை மெக்சிகோ நாட்டு அதிபர் என்றிக்கே பேஞா நியேட்டோ, அவர்தம் துணைவியார் அன்யேலிகா ரிவியேரா, திருச்சபைத் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இசை, நடன ஆட்டங்களோடு வரவேற்றனர். மெக்சிகோ நாட்டு இசையான மரியாச்சி இனிமையாக ஒலித்தது.

பெப்ருவரி 13, சனி – மெக்சிகோ நாட்டு அதிபர் இல்லத்தில் வரவேற்பு; அரசியல் தூதர்களுக்கு உரையாற்றினார். அப்போது, “ மெக்சிகோ நாட்டில் ஒருசில வலிமைமிக்கோர் வளர்ந்துகொண்டே போகின்றனர், எண்ணிறந்த மக்கள் வறுமையில் வாடுகின்றனர். போதைப் பொருள் கடத்தல் மலிந்துபோய் இளையோர் வாழ்க்கை சீரழிகின்றது. வன்முறை கோலோச்சுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க நாட்டுத் தலைவர்கள் அயராது உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதுபோலவே, மெக்சிகோ நாட்டின் ஆயர்களை மறைமாவட்ட பெருங்கோவிலில் சந்தித்து உரையாற்றிய போதும், திருத்தந்தை பிரான்சிசு ஆயர்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தி, சமூகத் தீங்குகளைக் கண்டிக்க அவர்கள் துணிச்சலோடு முன்வரவேண்டும் என்று கூறினார். பின்னர் மெக்சிகோவின் பாதுகாவலும், அமெரிக்க கண்டங்களின் பாதுகாவலுமான குவாதலுப்பே அன்னைப் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார். குவாதலுப்பே அன்னை மரியாவின் சிறப்புமிகு ஒவியத்தின் முன் சுமார் அரைமணிநேரம் தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரோடு ஆயர்கள், குருக்கள், பொதுமக்கள் அமைதிகாத்து இறைவேண்டல் செய்தனர்.[12]

பெப்ருவரி 14, ஞாயிறு – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நகரின் புறப்பகுதிகளுள் ஒன்றான எக்காட்டெப்பெக் (Ecatepec) பகுதிக்குச் சென்று வெளி மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் மூன்று இலட்சத்திற்கு மேலான மக்கள் கலந்துகொண்டு இறைவேண்டல் நிகழ்த்தினர். ஏழை மக்கள் நிறைந்த அந்த சேரிப்பகுதிக்குச் சென்று அவர்களுக்கு நம்பிக்கை மிக்கதொரு செய்தியை வழங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு முடிவுசெய்தார். மேலும், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரைத் தேடிச் செல்வது திருச்சபையின் பொறுப்பு என்ற அடிப்படையில் திருத்தந்தை பிரான்சிசு கருத்தாழம் மிக்கதொரு மறையுரை நிகழ்த்தினார். அப்போது, மெக்சிகோவின் சாபக் கேடாக விளங்குகின்ற போதைப் பொருள் வியாபாரம், கொலை கொள்ளை, ஆட்களைக் கடத்தல், ஊழல் சமுதாயம் போன்ற சீர்கேடுகளுக்கு வழியாகிறது என்றும், ஏழை மக்கள் இந்த அநீதிகளால் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் பிரான்சிசு கூறினார். நலமானதொரு சமுதாயத்தை உருவாக்கினால் மெக்சிகோ மக்கள் வேலை தேடி புலம்பெயர வேண்டிய தேவை எழாது என்றும், சமத்துவ சமுதாயம் உருவாக்க மெக்சிகோ அரசும் மக்களும் முனைந்து உழைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி, இவ்வாறு உண்மையிலேயே கடவுள் விரும்புகின்ற நீதிமிக்க சமுதாயம் ஏற்பட வழியாகும் என்றும் கூறினார்.[13]

மாலையில் மெக்சிகோ நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவ மனைக்கு திருத்தந்தை பிரான்சிசு சென்று, அங்கு நோயுற்ற குழந்தைகளையும் அவர்களுடைய பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு ஆசி வழங்கினார். குழந்தைகள், திருத்தந்தை பிரான்சிசுக்கு தாங்கள் வரைந்த படங்கள் கடிதங்கள் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்தனர். ஒரு சிறுமி “ஆவே மரியா” என்ற இலத்தீன் பாடலை சூபெர்ட் (Schubert) இசையமைப்பில் இனிமையாகப் பாடி, திருத்தந்தை பிரான்சிசுக்கு மரியாதை செலுத்தினார்.

பெப்ருவரி 15, வெள்ளி – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சாப்பாசு பிரதேசம் சென்றார். அங்கு மெக்சிகோவின் முதல்குடி மக்கள் பெருமளவில் உள்ளனர். அவர்கள் செல்ட்டால் (Tzeltal), சோட்சில் (Tzotzil) போன்ற பழங்கால மொழிகளைப் பேசுகின்றனர். பொருளாதார வளர்ச்சியோ கலாச்சார வளர்ச்சியோ மிகக் குறைவு. போதைப் பொருள் பரிமாற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், குண்டர்கள் நடமாட்டம் போன்ற பல சமூகத் தீமைகள் அப்பகுதியில் நிறைந்துள்ளதால் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

திருத்தந்தை பிரான்சிசு இத்தகைய பகுதிக்குச் சென்று, முதல்குடி மக்களின் கலாச்சாரத்தை உயர்த்திப் பேசினார். அவர் சான் கிறிஸ்தோபார் தெலாஸ் காசாஸ் என்ற நகரில், நகரவை விளையாட்டரங்கில் திருப்பலி நிறைவேற்றினார். முதல்குடி மக்கள் பெருமளவில் பங்கேற்ற அத்திருப்பலியின்போது முதல்குடி மக்களின் இசை அவர்களது நடனங்கள் இடம்பெற்றன. மக்கள் தங்களது பாரம்பரிய முறை உடைகளை அணிந்துவந்திருந்தனர். சுமார் 25 ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக முதல்குடி மக்களின் மொழிகளாகிய செல்ட்டால், சோட்சில் ஆகிய இரு மொழிகளிலும் பெயர்க்கப்பட்ட விவிலிய நூல் படிகள் திருத்தந்தைக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டன.

முதல்குடி மக்களின் தலைவர்களோடு திருத்தந்தை உணவு அருந்தினார். பின்னர் மறைமாவட்டப் பெருங்கோவிலுக்குச் சென்று அங்கு முன்னாள் ஆயர் சாமுவேல் ரூயிசு என்பவரின் கல்லறையை சந்தித்து வேண்டல் நிகழ்த்தினார். ஆயர் ரூயிசு, முதல்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அயராது உழைத்தவர். 1994இல் முதல்குடி மக்களின் உரிமைகளைக் கோரி நடந்த “சப்பாட்டா போராட்டம்” (Zapatista Rebellion) தொடர்பாக அரசு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆயர் ரூயிசு சிறந்த பணியாற்றினார். ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்க திருச்சபையும் அரசும் முன்வர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு, ஆயர் ரூயிசின் கல்லறைக்குச் சென்று வேண்டியது, ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.[14]

பிற்பகலில் திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டுக் குடும்பங்களை சந்தித்து உரையாடி, உரையாற்றினார். ஊனமுற்றோரை சந்தித்து, பரிவோடு அரவணைத்தார்.[15]

பெப்ருவரி 16, செவ்வாய் – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டின் மிச்சோக்கான் பிரதேசத்திற்குச் சென்றார். இப்பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் அதிகம். போதைப்பொருள் கடத்தல் வழியாகவும் ஆயுத விற்பனை மூலமாகவும் பணம் சம்பாதிக்க முனைகின்ற குண்டர்கள் குழுக்களின் வன்முறையால் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். போதைப்பொருள் வியாபாரத்தைக் கண்டித்த குருக்கள் கொலைசெய்யப்படுவது சாதாரண நிகழ்வு. மிச்சோக்கான் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களது முன்னேற்றத்தில் அரசு அக்கறை காட்டத் தயங்குவதோடு, காவல்துறையும் ஆட்சித்துறையும் குண்டர்களோடு கூட்டு சேர்ந்து ஊழலில் ஈடுபடுவதும் நிலவுகிறது. இப்பின்னணியில் திருத்தந்தை பிரான்சிசு இப்பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது. வன்முறைக்கும், ஊழலுக்கும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோரில் ஒருவர் மொரேலியா நகர் ஆயர் சுவாரசு இண்டா என்பவர். அவரைத் திருத்தந்தை பிரான்சிசு கர்தினால் 2015இல் நிலைக்கு உயர்த்தினார்

மொரேலியா நகரில் திருத்தந்தை குருக்கள், துறவியர், அர்ப்பணிக்கப்பட்டோர், குருமாணவர்கள் ஆகியோருக்குத் திருப்பலி நிறைவேற்றி உரையாற்றினார். மறையுரையின் போது அவர் சமூக அநீதிகளை எதிர்த்து நின்று, மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க திருச்சபைத் தலைவர்கள் துணிச்சலோடு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், அநீதியான சூழ்நிலைகளை மாற்றுவது கடினம் என்று கருதி, செயலிழந்த நிலைக்கு அடிமைகளாகி விடல் ஆகாது என்று வலியுறுத்தினார்.[16] பின்னர் மறைமாவட்டப் பெருங்கோவில் மக்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து மெக்சிகோவின் இளையோரை சந்தித்து உரையாற்றினார். இளையோர் சொகுசு வாழ்க்கை அமைவதற்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க எண்ணுதல் தவறு என்றும், போதைப்பொருள் வியாபரம், கள்ளக்கடத்தல் போன்ற வழிகளில் செல்லாமல் நேர்மையாக உழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.[17]

பெப்ருவரி 17, புதன் – குவாரெஸ் நகர் செல்கிறார். அங்கு ஒரு சிறைச்சாலைக்குச் சென்று சந்திப்பு நிகழ்த்துகிறார். தொழிலாளர்களோடு சந்திப்பு. திருப்பலி. உரோமைக்குத் திரும்புகிறார். ((திருத்தந்தையின் மெக்சிகோ பயணம் குறித்த மேலதிகத் தகவல்கள் கீழே)

17 கிரீசு ஏப்பிரல் 16 2016 திருத்தந்தை பிரான்சிசு கிரேக்க நாட்டின் லெசுபோசு தீவில் மித்திலினி நகருக்குச் சென்றார். அங்கே, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் நடைபெறுகின்ற போர்கள் காரணமாக இடம்விட்டு இடம் பெயர்ந்த அகதிகள் சேர்க்கப்பட்டிருந்த முகாம்களுக்குச் சென்று, அவர்களது துயரக் கதைகளுக்குச் செவிமடுத்து ஆறுதல் கூறினார். அவரோடு இணைந்து சென்றவர்களுள் கீழைத் திருச்சபைத் தலைவர், காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதல்வர் முதலாம் பர்த்தலமேயு, மற்றும் ஏதன்சு நகர் ஆயர் இரண்டாம் எரோணிமுசு ஆகியோரும் இருந்தனர்.

அகதிகள் முகாமை விட்டுத் திரும்பியபோது திருத்தந்தை பிரான்சிசு தம்மோடு 12 அகதிகளைத் தம் வானூர்தியில் ஏற்றி, வத்திக்கான் நகருக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்குப் புகலிடம் அளித்தார். அந்த அகதிகளுள் மூன்று குடும்பங்களைச் சார்ந்த பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். அனைவரும் இசுலாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[18]

18 அர்மீனியா ஜூன் 24-26 2016 திருத்தந்தை பிரான்சிசு அர்மீனியா நாட்டுக்கு வருகை தரவேண்டும் என்ற அழைப்பினை 2015இல் முதலில் அனுப்பியவர் அர்மீனிய நாட்டு அதிபர் செர்ஷ் சார்க்சியான் (Serzh Sargsyan) என்பவர். அந்த அழைப்பினை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு அர்மீனிய நாட்டுக்கு 2016, ஜூன் 24ஆம் நாள் சென்றார்.

1915ஆம் ஆண்டு, ஒட்டமான் பேரரசும் அதன் பகுதியாக இருந்த துருக்கியும் பல்லாயிரக் கணக்கான அர்மீனிய மக்களைக் கொன்று குவித்தனர். இது இருபதாம் நூற்றாண்டின் “முதல் இனப் படுகொலை” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் படுகொலையில் உயிரிழந்தோரின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவகத்திற்கு திருத்தந்தை பிரான்சிசு சென்று, இறைவேண்டல் நிகழ்த்தினார்.

படுகொலை நிகழ்ந்த காலத்தில் அர்மீனியாவிலிருந்து தப்பியோடியவர்களுக்கு அக்காலத் திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் வத்திக்கானில் புகலிடம் அளித்துப் பாதுகாத்தார்.

அர்மீனியா நாடுதான் வரலாற்றில் முதன்முறையாக, கி.பி. 301ஆம் ஆண்டில் கிறித்தவ சமயத்தைத் தன் அதிகாரப்பூர்வமான சமயமாக ஏற்றது. இன்று அர்மீனிய மக்கள் பெரும்பான்மையினர் “அர்மீனிய மறைத்தூது திருச்சபை” உறுப்பினராக உள்ளனர். திருத்தந்தை பிரான்சிசு அர்மீனிய திருச்சபையின் தலைவரை சந்தித்து அவரோடு இணைந்து கிறித்தவ ஒன்றிப்பு வழிபாட்டினை நிகழ்த்தினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிசு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் உரை நிகழ்த்தினார். “அர்மீனிய நாட்டு மக்களும் துருக்கி நாட்டு மக்களும் தங்கள் வேறுபாடுகளை மறந்துவிட்டு நல்லிணக்க உணர்வுகளை வளர்க்க வேண்டும். இளையோரே, நீங்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து நலமானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நட்பும் உறவும் நிறைந்த வருங்காலத்தை உருவாக்க வேண்டும்.” திருத்தந்தை ஆற்றிய உரையின்போது, கிறித்தவ ஒன்றிப்புக்காகப் பாடுபட்ட இரு பெரும் புனிதர்களை நினைவுகூர்ந்து, அவர்களது முன்மாதிரியை இன்றைய கிறித்தவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டார். அப்புனிதர்களுள் ஒருவர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நான்காம் நெர்சசு என்பவர். மற்றொரு புனிதர் 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புனித நாரெக் கிரகோரி என்பவர். இவருக்கு ”மறைவல்லுநர்” என்னும் பட்டத்தை திருத்தந்தை பிரான்சிசு 2015இல் வழங்கினார்.

19 எகிப்து ஏப்பிரல் 28-29 2017 திருத்தந்தை பிரான்சிசு எகிப்து நாட்டுக்கு வருகை தரவேண்டும் என்ற அழைப்பினை 2014இல் முதலில் அனுப்பியவர் எகிப்து நாட்டு அதிபர் ஆவார். அந்த அழைப்பினை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு எகிப்து நாட்டுக்கு 2017, ஏப்பிரல் 28-29 நாள்களில் செல்லவிருப்பதாக அறிவித்தார்.

ஏப்பிரல் 28, 2017, வெள்ளி நிகழ்ச்சிகள்:

உரோமை நகரிலிருந்து எகிப்தின் கெய்ரோ நகருக்கு விமானத்தில் செல்கிறார். எகிப்து அதிபரின் இல்லத்தில் வரவேற்போடு, அதிபர் அகமத் ஃபட்டா அல்-சிசி திருத்தந்தையை சந்தித்தலும் நிகழ்கிறது.

கெய்ரோவின் பழம்பெரும் அல்-அசார் இசுலாமியப் பல்கலைக்கழகத்தில் இசுலாமியப் பேரறிஞர் இமாம் ஷேக் அகமத் அல்-தயப் என்பவரை சந்திக்கிறார்.

திருத்தந்தை பிரான்சிசு எகிப்தின் அரசியல் மற்றும் குடிமை சமூக அதிகாரிகளை சந்தித்து உரையாடுகிறார்.

திருத்தந்தை பிரான்சிசு, எகிப்தின் கோப்து மரபுவழித் திருச்சபையின் பெருந்தலைவரான திருத்தந்தை இரண்டாம் தவாத்ரோசு என்பவரை சந்தித்து உரையாடுகிறார்.

ஏப்பிரல் 29, 2017, சனி நிகழ்ச்சிகள்:

திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணம் (சனவரி 13-15, 2015) பற்றி சில தகவல்கள் தொகு

2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் மக்களை நேரில் சந்தித்து உரையாட அவர் பல பயணங்களை மேற்கொண்டார். 2013-2014 ஆண்டுகளில் அவர் பன்னாட்டுப் பயணம் சென்ற நாடுகளுள் கீழ்வருவன அடங்கும்: பிரேசில், நடு ஆசியா (இசுரயேல், யோர்தான், பாலத்தீனம்), தென் கொரியா, அல்பேனியா, பிரான்சு, துருக்கி.

2015ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட முதல் பன்னாட்டுப் பயணம் இலங்கை, பிலிப்பீன்சு ஆகிய இரு ஆசிய நாடுகளுக்கு ஆகும். இந்த ஆசியப் பயணத்தில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பது சிறப்பு.

திருத்தந்தை ஒருவர் இலங்கைக்குப் பயணமாகச் செல்வது இது மூன்றாவது தடவை ஆகும். முதலில் திருத்தந்தை ஆறாம் பவுல் 1970இல் இலங்கை சென்றார். அப்போது அங்கே அவர் தங்கியது இரண்டு மணி நேரமே மட்டுமே. 1995இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இலங்கை சென்றார். அவ்வமயம் அவர் அங்கே ஒரு நாள் முழுதும் செலவிட்டார். ஆனால் இப்போது திருப்பயணியாக இலங்கை செல்கின்ற திருத்தந்தை பிரான்சிசு அங்கே மூன்று நாள்கள் (சனவரி 13-15, 2015) தங்குவது சிறப்பு.

இலங்கையில் கிறித்தவம் தொகு

21 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் 72% மக்கள் பவுத்தமதத்தைச் சார்ந்தவர்கள். 12% இந்துக்கள்; 9% முசுலிம்கள்; சுமார் 7% கிறித்தவர்கள் (சுமார் 6.1% கத்தோலிக்கர்; 1.3% பிற கிறித்தவர்கள்). 1.2 மில்லியன் கத்தோலிக்க மக்கள் 12 மறைமாவட்டங்களில் ஆயர்களின் ஆளுகைக்குள் அமைவர். கொழும்பு மட்டுமே உயர் மறைமாவட்டம். அதன் தலைவர் கர்தினால் மால்கம் ரஞ்சித். கத்தோலிக்கர் எண்ணிக்கை கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு, மன்னார், திருக்கோணமலை போன்ற மறைமாவட்டங்களில் கணிசமாக உள்ளது.

கத்தோலிக்கர் நடுவே பல இன்னல்களுக்கு நடுவே உழைத்தவர்களுள் தலைசிறந்தவராகக் கருதப்படுபவர் அருளாளர் யோசேப்பு வாஸ் என்னும் குரு. இவர் இந்தியாவின் கோவாவிலிருந்து இலங்கை சென்று, தமிழ் மக்கள் நடுவிலும் சிங்கள மக்கள் நடுவிலும் பணிபுரிந்தார். 17ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கால்வினிய சபை சார்ந்த டச்சு நாட்டவர் குடியேற்ற ஆதிக்க ஆட்சி நடத்திய காலத்தில் கத்தோலிக்கர் துன்புற்றனர். அவர்களுக்குப் பணிசெய்வதில் யோசேப்பு வாஸ் (1651-1711) ஈடுபட்டார். அவருடைய பக்தி வாழ்வையும் பணியையும் போற்றும் வகையில் அவருக்கு அருளாளர் பட்டத்தைத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1995இல் தமது இலங்கைப் பயணத்தின் போது வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பின், இலங்கைக்குப் பயணமாக வருகின்ற திருத்தந்தை பிரான்சிசு யோசேப்பு வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகிறார் (சனவரி 14, 2015).

விமான நிலையத்தில் வரவேற்பு தொகு

திருத்தந்தை பிரான்சிசுக்கு கொழும்பு பன்னாட்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் மகிந்த ராஜபக்சே ஆட்சி முடிவுற்று புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பதவியேற்ற சில நாள்களில் திருத்தந்தையின் வருகை நிகழ்ந்ததால் அவரை வரவேற்க புதிய அதிபர் சிறீசேனா விமான நிலையம் வந்திருந்தார். மேள தாளம் முழங்க, நடனக்காரர்கள் அசைய, வண்ணங்கள் நிறைந்த கம்பளிகளால் அலங்கரிக்கப்பட்ட 40 யானைகள் எழிலுற அணிவகுத்து நிற்க, திருத்தந்தை பிரான்சிசுகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர்கள் பாடல் குழு ஆங்கிலம், இத்தாலியம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வரவேற்புப் பாடல் எழுப்பியது. இராணுவ மரியாதை அளிக்கும் வகையில் 21 வேட்டுகள் வெடிக்கப்பட்டன.

ஊர்வலம் தொகு

வழக்கமான குண்டுதுளைக்காத வாகனம் தமக்கு வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிசு கூறிவிட்டதால் அவர் திறந்த வாகனத்திலேயே பயணம் செய்து ஊர்வலமாக வந்தார். மக்கள் கூட்டம் வழிநெடுக வெள்ளையும் மஞ்சளும் இணைந்த வத்திக்கான் கொடிகளையும் இலங்கைக் கொடிகளையும் அசைத்தவாறு அவருக்கு வரவேற்பு அளித்தனர். 20 கிலோமீட்டர் தொலை இவ்வாறே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருத்தந்தை பயணம் சென்றார்.

அமைதித் தூது தொகு

விமான நிலையத்தில் இறங்கிய நேரத்திலிருந்தே திருத்தந்தை பிரான்சிசு தமது பயணத்தின் குறிக்கோள்களை எடுத்துக் கூறினார். தாம் இலங்கை நாட்டுக்கு அமைதியின் தூதுவனாக வருவதாக அவர் கூறினார். இந்தியப் பெருங்கடலின் முத்துப் போல விளங்குகின்றது இலங்கைத் தீவு என்று அவர் புகழ்ந்தார். “ஒரு பயங்கரவாதப் போராட்டத்தை முறியடித்தபிறகு எமது அரசு எல்லா மக்களிடையேயும் அமைதியையும் நட்பையும் வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது” என்று அதிபர் சிறீசேனா கூறினார்.

திருத்தந்தை வழங்கிய வாழ்த்துரை தொகு

ஆங்கிலத்தில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிசு கூறியது கீழே தமிழில் தரப்படுகிறது:

“எழில்மிகு இலங்கைத் தீவு இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அறியப்படுகிறது. அதைவிடவும் மேலாக இங்கு வாழ்கின்ற மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். கலாச்சார, சமயச் செல்வங்கள் இங்கு ஏராளமாகவே உள்ளன. இங்கு நான் ஒரு திருப்பணியாளனாக வருகிறேன். கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய தலைவர் என்ற முறையில் இங்கு வாழ்கின்ற கத்தோலிக்க மக்களை சந்தித்து அவர்களுக்கு ஊக்கமூட்ட வருகிறேன். எனது பயணத்தின் ஒரு சிறப்பு நிகழ்வு அருளாளர் யோசேப்பு வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகின்ற கொண்டாட்டம் ஆகும். அவர் கிறித்தவ நற்பண்புகள் கொண்டவராக, சமய இன வேறுபாடு பாராட்டாமல் எல்லா மனிதரையும் சமமாக ஏற்று மதித்தார். அவர் காட்டிய முன்மாதிரிகை நமக்கு இன்றும் பொருந்தும். மேலும் கத்தோலிக்க திருச்சபை, இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்கள் மட்டிலும் அன்பும் மரியாதையும் கொண்டுள்ளது என்பதற்கும் எனது வருகை ஓர் அடையாளமாக உள்ளது. இலங்கை நாட்டு சமூகத்தில் கத்தோலிக்க திருச்சபையும் பங்கேற்க விரும்புவதையும் காட்டுகிறது.”

“நாம் வாழும் உலகில் எத்தனையோ மக்கள் குழுக்கள் தமக்குள்ளேயே போர்ச்செயல்களில் ஈடுபட்டுள்ளன என்பது துயரமான ஓர் உண்மை. கடந்தகால, சமகால வேறுபாடுகளையும் கருத்து வேற்றுமைகளையும் களைந்து, தமக்குள்ளே நல்லுறவுகளை ஏற்படுத்த இயலாத நிலையில் இனம், சமயம் சார்ந்த இழுபறி நிலைகள் ஏற்பட்டு, சில வேளைகளில் வன்முறை மோதல்களும் நிகழ்ந்துவிடுகின்றன. இலங்கையில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்தது. அதன்பிறகு அமைதியை மீண்டும் கொணர்வதற்கும், போரினால் விளைந்த காயங்களைக் குணப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கால அநீதிகளையும் போரின் விளைவாக எழுந்த பகைமை, வெறுப்பு போன்றவற்றையும் களைந்துவிடுவது எளிதன்று. நன்மை செய்வதன் வழியாக(காண்க: உரோமையர் 12:21), அமைதி, நல்லுறவு, ஒத்துழைப்பு ஆகிய நற்பண்புகளைச் செயல்படுத்துவதன் வழியாக மட்டுமே இது சாத்தியமாகும்.”

“நல்லிணக்கமும் நல்லுறவும் உருவாக வேண்டும் என்றால் உண்மையை அறிகின்ற முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் பழைய காயங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொருளாகாது, மாறாக உண்மை வெளிவந்தால் மட்டுமே உண்மையான நீதியும், ஒன்றிப்பும், நலமும் மீண்டும் நிலைபெறும்.”

“அன்பு நண்பர்களே, இலங்கையில் நடைபெறுகின்ற நல்லிணக்க உருவாக்க முயற்சியிலும், அமைதிநிலவும் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியிலும் பல மதங்கள் ஈடுபட்டுள்ளன. அவை தம் பணிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்றால் எல்லாரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். அனைவரின் குரலும் கேட்க வேண்டும். அனைவரும் தங்கள் விருப்புகள், கவலைகள், தேவைகள், பயங்கள் போன்றவற்றை எடுத்துக் கூற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். முக்கியமாக, அவர்கள் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலை பெற வேண்டும். தமக்குள்ளே நிலவுகின்ற நியாயமான வேறுபாடுளை மதிக்க வேண்டும். இவ்வாறு ஒரே குடும்பமாக வாழ்ந்திடக் கற்றுக்கொள்ள வேண்டும். பணிவோடும் திறந்த மனத்தோடும் ஒருவர் ஒருவருக்குச் செவிமடுக்கும்போது அவர்களது பொது எதிர்பார்ப்புகளும் மதிப்பீடுகளும் இன்னும் அதிகத் தெளிவாகத் துலங்கும். வேற்றுமை என்பது அஞ்சத்தக்கதாகத் தோன்றாது, மாறாக, அனைவரின் வளர்ச்சிக்கும் ஒரு தூண்டுகோலாக அமையும். இவ்வாறு, நீதி, ஒன்றிப்பு, சமூக நல்லுறவு ஆகியவற்றை அடைகின்ற வழிமுறையும் தெளிவாகத் தெரியும்.”

“இந்த நாட்டில் நிகழ்கின்ற மறுசீரமைப்பு மக்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்ற கட்டுமானப் பணிகள், உடல்சார் தேவைகள் ஆகியவற்றை மட்டுமே சார்ந்ததன்று. அதற்கும் மேலாக, மனித மாண்பை மேம்படுத்தல், மனித உரிமைகளை மதித்தல், ஒவ்வொருவரையும் சமூகத்தில் முழுமையாகச் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவை செயலாக்கம் பெற வேண்டும். இலங்கையின் அரசியல், சமய, கலாச்சார அமைப்புகளும் தலைவர்களும் தமது சொற்களாலும் செயல்களாலும் இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் நன்மை விளையவும் நலம் ஏற்படவும் உழைப்பதாக இருந்தால் இங்கு பொருள்வளம் மட்டுமன்று, அருள்வளமும் பெருகிப் பலுகும்.”

“அதிபர் அவர்களே, நண்பர்களே, நீங்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு மீண்டும் நன்றுகூறுகிறேன். உங்களோடு நான் செலவிடப்போகின்ற இந்நாட்கள் நம்மிடைய நட்பையும் உரையாடலையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். இலங்கை நாட்டின்மீது இறை ஆசி நிறைவாகப் பொழியப்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்தியப் பெருங்கடலின் முத்தாக விளங்குகின்ற இந்த எழில்மிகு நாடு மக்களுக்கு வளமையையும் அமைதியையும் கொணர வேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.”[19]

அருளாளர் யோசேப் வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல் தொகு

2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிசு கொழும்பில் காலிமுகத் திடலில் (Galle Face Green) வைத்து அருளாளர் யோசேப் வாசைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.[20]

யோசேப் வாசு 1651, ஏப்ரல் 21ஆம் நாள் இந்தியாவின் கோவாவில் பக்திநிறைந்த கத்தோலிக்கப் பெற்றோருக்குக் குழந்தையாகப் பிறந்தார். அப்போது கோவா போர்த்துகீசியரின் குடியேற்ற ஆதிக்கத்தில் இருந்தது. யோசேப் வாசு கோவா மறைமாவட்டத்தின் குருவாக 1676இல் திருநிலைப்படுத்தப்பட்டார். கோவாவில் “புனித பிலிப்பு நேரியின் மன்றாட்டுக் குழு” (Oratory of St. Philip Neri) என்னும் குழுமத்தை உருவாக்கி, கிறித்துவின் நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு அறிவிக்கத் தொடங்கினார். இலங்கையில் கத்தோலிக்க மக்கள் கால்வினிய புரட்டஸ்தாந்து குழுவைச் சார்ந்த குடியேற்ற ஆதிக்கத்தவரான டச்சுக்காரர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஆன்மிக உதவி தேவைப்படுகிறது என்றும் அறிந்த யோசேப் வாசு உடனேயே கோவாவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டார். ஆனால் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்ததால் யோசேப் வாசு ஓர் ஏழைத் தொழிலாளியாகத் தம்மை மாற்றிக்கொண்டு அந்த வேடத்தில் இலங்கைக்குள் நுழைந்து, அங்கு தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் நடுவே கத்தோலிக்க நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். அவர் நோயாளருக்குச் செய்த சேவையைப் பாராட்டி, கண்டி அரசர் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்தார். சுமார் 24 ஆண்டுகள் இலங்கையில் பணிபுரிந்த யோசேப் வாசு தமிழிலும் சிங்களத்திலும் பல கத்தோலிக்க மன்றாட்டு நூல்களை எழுதினார். மக்கள் பணியிலும் இறைவன் பணியிலும் தம் வாழ்க்கையைச் செலவிட்ட யோசேப் வாசு கண்டியில் 1711, சனவரி 16ஆம் நாள் உயிர் நீத்தார்.

அவருக்குத் திருத்தந்தை யோவான் பவுல் தமது இலங்கைப் பயணத்தின்போது 1995, சனவரி 21ஆம் நாள் அருளாளர் பட்டம் வழங்கினார்.

புனிதர் பட்ட நிகழ்ச்சி தொகு

திருத்தந்தை பிரான்சிசு அருளாளர் யோசேப்பு வாசுக்குப் புனிதர் பட்டம் அளித்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சிக்காக காலிமுகத் திடலில் கூடியிருந்தனர். திருத்தந்தை பிரான்சிசு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குத் திறந்த ஊர்தியில் வந்தார். வழியில் அவ்வப்போது குழந்தைகளை ஆசிர்வதித்தார். ஊர்தியிலிருந்து கீழே இறங்கி, சக்கர வண்டிகளில் இருந்த ஊனமுற்றோரைத் தொட்டு ஆசிர்வதித்தார். ஒரு வயதுமுதிர்ந்த பெண்மணி அவருடைய கையில் ஒரு சிறிய தாளைத் திணித்தார். அதைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை அதைத் தம் துணைவர் ஒருவரிடம் கொடுத்தார்.

திருத்தந்தை வருகைதந்த வேளையில் வரவேற்புப் பாடலும் நடனமும் தமிழிலும் சிங்களத்திலும் நிகழ்ந்தது. பின்னர் திருப்பலி தொடங்கியது. திருத்தந்தை ஆங்கிலத்திலும் இலத்தீனிலுமாக திருப்பலி செபங்களை மொழிந்தார். அவருடைய மறையுரை ஆங்கிலத்தில் வழங்கப்பட்டாலும், அதன் மொழிபெயர்ப்பு சிங்களத்திலும் தமிழிலும் வழங்கப்பட்டன.

திருப்பலியின் தொடக்கத்தில் ”தூய ஆவியே எழுந்தருளி வாரும்” என்ற பாடலும், தொடர்ந்து புனிதர் பிரார்த்தனையில் இலத்தீன் மொழியில் பாடப்பட்டன. பின் திருத்தந்தை பிரான்சிசு, யோசேப் வாஸ் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தி, புனிதர் வரிசையில் சேர்ப்பதாக அறிவித்தார். உடனே கோவில் மணிகள் முழங்கின. “என்னையே முழுவதும் உன்னிடம் தருகின்றேன்” என்ற தமிழ்ப் பாடல் காணிக்கைப் பாடலாக, பல்லிசை அமைப்பில் இசைக்கப்பட்டது.

திருத்தந்தை ஆற்றிய மறையுரை தொகு

திருத்தந்தை ஆற்றிய மறையுரையின் சில பகுதிகள்:

”அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, இன்று நாம் ஜோசப் வாஸ் அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வை, பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். உலகின் எல்லைவரை வெளிப்படும் தமது அன்பையும், இரக்கத்தையும் பற்றிய இறைவிருப்பத்தை, இந்தத் திருப்பலி வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. தாம் அனுப்பிய திருமகனும், நம் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து, நற்செய்தியை அனைத்துலகிற்கும் அறிவிக்க தேர்ந்தெடுத்தத் திருத்தூதர்கள் வழியாக, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற மறைபரப்புப் பணியாளர்கள் வழியாக, இறைவன் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

இலங்கை மக்கள்பால் இறைவன் கொண்டுள்ள அன்பின் வல்லமைமிக்க அடையாளத்தை புனித ஜோசப் வாஸ் அவர்களில் நாம் காண்கிறோம். அத்துடன், நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருக்கவும், புனிதத்துவத்தில் வளர்ந்திடவும், மன்னிப்பு, இரக்கம், நட்புறவு எனும் கிறிஸ்துவின் செய்திக்கு சாட்சிகளாய் திகழவும் கிடைத்த ஓர் அழைப்பாகவும் காண்கிறோம்.

புனித ஜோசப் வாஸ் அவர்கள், நமக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கின்றார். மூன்று காரணங்களை இவண் குறிப்பிடலாம்:

முதலாவதாக, அவர் ஓர் எடுத்துக்காட்டான குருவாகத் திகழ்ந்தார். இறைவனுக்கும், அயலவருக்குமான பணிக்கு அர்ப்பணிப்பு என்பதன் பொருளை புனித ஜோசப் வாஸ் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார். அவரைப் போல நாமும் இறைவேண்டலில் ஈடுபடுகின்ற மக்களாக, அனைவருக்கும் கிறித்துவை அறிவித்து அவர்களை அன்புசெய்வோராக மாறிடவேண்டும். அவர் நற்செய்திக்காகத் துன்புற்றார்; மனமுவந்து மறைபணி ஆற்றினார்; மக்கள்பால் அன்பும் பரிவும் காட்டினர். இவ்வாறு அவர் நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.

இரண்டாவதாக, பிறர் எந்த இனத்தவர், சமயத்தவர், சமூக நிலையினர் என்று வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதை புனித ஜோசப் வாஸ் நமக்குக் காட்டுகிறார். இன்றும் கூட, புனிதரின் எடுத்துக்காட்டானது இலங்கைத் திருச்சபையின் கல்வி, சுகாதார நிறுவனங்கள் மற்றும் இரக்கச் செயல்பாடுகள் வழியே தொடர்கின்றது. அனைத்து மக்களும் உண்மையை அறிந்திடவும், வெளிப்படையாக தமது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும் சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். நம் இறைவழிபாடு உண்மையில் ஊன்றியிருக்கும்போது, அது இனப் பாகுபாடு, வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை விளைவிக்காது, மாறாக, மனித உயிரின் புனிதத் தன்மை, மற்றவரின் மாண்பு, சுதந்திரம் மட்டில் மரியாதை, பொது நலனிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அது விளைவிக்கும் என்பதை புனித ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லித்தருகிறது.

இறுதியாக, புனித ஜோசப் வாஸ் அவர்கள், கிறித்தவ நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்துகொள்கின்ற ஆர்வத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். பல்வேறு மதச் சூழலில், அர்ப்பணிப்பு, தளரா முயற்சி மற்றும் தாழ்ச்சியுடன், நற்செய்தியின் உண்மையையும், அழகையும் எவ்வாறு எடுத்துரைப்பது என்பதை அவர் அறிந்திருந்தார். இத்தகைய அணுகுமுறை, இயேசுவின் இந்நாள் சீடர்களுக்கும் பொருந்தும்.

புனித ஜோசப் வாஸ் அவரக்ளைப் பின்பற்றி, இந்நாட்டின் கிறிஸ்தவ மக்கள் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்படவும், இலங்கை சமூகத்திலே சமாதானம், நீதி மற்றும் ஒப்புரவுக்காக தங்கள் மேலான பங்களிப்பை வழங்கிடவும் நான் இறைவனை வேண்டுகிறேன். உங்கள் அனைவரையும் எமது புதிய புனிதரின் வேண்டுதல்களுக்குக் கையளிக்கும் அதேவேளையில், எனக்காக மன்றாடும்படி உங்களை வேண்டி நிற்கின்றேன்.”

சமய சுதந்திரம் பற்றிய வரலாற்று ஏடு தொகு

திருப்பலியின் இறுதியில், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் எழுபதாயிரம் டாலரை, திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கென அவரிடம் கொடுத்தார். எங்கள் நாடு ஏழை நாடு, ஆயினும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கு உதவ விரும்புகிறோம் என்று சொல்லி, அந்த அன்பளிப்பை வழங்கினார்.

திருத்தந்தையும், 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே, இலங்கைத் திருச்சபைக்கு வழங்கிய ஆவணத்தின் பிரதியை இலங்கைத் தலத்திருச்சபைக்குப் பரிசாகக் கொடுத்தார். பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களாக விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கும் அந்த ஆவணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.[21]

திருத்தந்தை பிரான்சிசு மடுமாதா கோவிலைச் சந்தித்தல் தொகு

திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணத்தின் ஒரு முக்கிய கட்டம் அவர் மன்னார் மறைமாவட்டத்தில், காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புகழ்மிக்க மடுமாதா கோவிலுக்குச் சென்று, மக்களை சந்தித்து அன்னை மரியாவிடம் வேண்டுதல் நடத்திய நிகழ்ச்சி ஆகும்.[22]

2015, சனவரி 14ஆம் நாள் பிற்பகுதியில் திருத்தந்தை பிரான்சிசு மடு நகரில் தூய செபமாலை அன்னை ஆலயத்திற்குப் பவனியாக வந்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்தப் பவனியின்போது அவர் திறந்த ஊர்தியில் வந்துகொண்டிருக்க, மேள தாளம் ஒலிக்க, நாதசுரம் தமிழ்ப் பாணியில் இசைக்கப்பட்டது. சக்கர வண்டியில் அமர்ந்திருந்தோரை சந்தித்தார். வழியில் மக்களோடு கலந்து நடந்தார். கோவில் படிகளை வந்தடைந்ததும் அவர் குத்துவிளக்கு ஏற்றினார். அமைதியின் அடையாளமாக ஒரு புறாவைப் பறக்கவிட்டார். மன்னார் மறைமாவட்ட ஆயர் யோசேப்பு இராயப்பு, திருத்தந்தையை வரவேற்று உரை ஆற்றினார். அதன் தமிழாக்கம்:

பெருமதிப்புக்குரிய திருத்தந்தையே, இன்று இங்கு கூடியுள்ள ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் சார்பாக பிள்ளைகளுக்குரிய வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். உண்மை, நீதி, ஒப்புரவு ஆகிய இவற்றில் அடிப்படையைக் கொண்ட அமைதியின் தூதுவராக தாங்கள் எங்களின் இலங்கை நாட்டுக்கு வந்துள்ளீர்கள். நம் ஆண்டவர் மற்றும் புனித அசிசி பிரான்சிசின் அடிச்சுவடுகளில் ஏழைகள் மற்றும் துன்புறுவோர்மீது தாங்கள் கொண்டுள்ள வியத்தகு அன்புக்கு நன்றி. ஆசியாவில் முதல் கிறிஸ்தவ மறைசாட்சிகளைக் கொண்டிருக்கும் இடமாக மன்னார் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வட பகுதியிலிருந்த யாழ்ப்பாண மன்னரால் 1544ம் ஆண்டில் 600 மன்னார் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மன்னார் மறைசாட்சிக் கிறிஸ்தவர்களின் இரத்தம் வடக்கு மற்றும் இலங்கை முழுவதன் விசுவாசத்தின் வித்தாக மாறியுள்ளது. கடுமையான காட்டுப் பகுதியில் 400 ஆண்டுகளாக இருக்கும் மடு திருத்தலமும் வளமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. செபமாலை அன்னை திருத்தலமாகிய இங்கு மக்கள் விசுவாசத்தில் ஆழப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்னையின் விண்ணேற்பு விழாவன்று 6 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வருகின்றனர். திருத்தந்தையே தங்களின் இப்பயணமும், செபங்களும் எம் தாய் நாட்டுக்கு அமைதியையும் வளமையையும் கொண்டு வருவதாக. இந்நேரத்தில் நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்குரிய அன்பையும் பணிவையும் மதிப்பையும் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். திருஅவையையும் பரந்த உலகையும் தூண்டி வழிநடத்தும் தங்களின் மேய்ப்புப்பணிகளில் கடவுள் தங்களை ஆசீர்வதிப்பாரக. அன்னை மரியா தங்களை அவருக்கு நெருக்கமாக வைத்திருப்பாராக.”[23]

தொடர்ந்து அன்னை மரியா வணக்கம் தொடர்பான வேண்டுதல்கள் நிகழ்ந்தன. “ஓ, பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவே, நான் உம்மை ஆராதனை செய்கின்றேன்” என்ற பாடல் தமிழில் பாடப்பட்டது. மத்தேயு நற்செய்தியிலிருந்து கீழ்வரும் பகுதி வாசிக்கப்பட்டது: “துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது” (மத்தேயு 5:4,9-10).

மடுத்திருத்தலத்தில் திருத்தந்தையின் உரை தொகு

திருத்தந்தை, அங்கு அன்னை கன்னி மரியா திருவழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி நாட்டில் அமைதிக்காகச் செபித்தார். திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

”அன்புமிக்க சகோதர, சகோதரிகளே, நாம் நம் அன்னையின் இல்லத்தில் இருக்கின்றோம், மருதமடு அன்னையின் இத்திருத்தலத்தில் ஒவ்வொரு திருப்பயணியும் தன் சொந்த வீட்டில் இருப்பதைப் போல உணர முடியும். ஏனெனில், இங்குதான் மரியாள், தமது திருமகன் இயேசுவின் பிரசன்னத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றார். தமிழர்களும், சிங்களவர்களும் இலங்கையராக, ஒரே குடும்பத்தின் உறுப்பினராக, இங்கு வருகை தருகின்றனர். தமது இன்ப, துன்பங்களையும், எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர்.

இலங்கை நாட்டின் இதயத்தையே பிளந்த நீண்ட காலப் போரினால் துன்பப்பட்ட குடும்பங்கள் இன்று இங்கே பிரசன்னமாக இருக்கின்றன. பயங்கர வன்முறை மற்றும் இரத்தக்களரிகளின் ஆண்டுகளில், வடக்கிலும் தெற்கிலுமாக எத்தனையோ மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்திருத்தலத்தோடு சம்பந்தப்பட்ட துயர நிகழ்வுகளை எந்தவோர் இலங்கையரும் மறக்கவே முடியாது. இலங்கையில் ஆரம்பக் கிறிஸ்தவர்களின் வருகையோடு தொடர்புடைய, வணக்கத்துக்குரிய மரியாவின் திருஉருவம் அவரின் திருத்தலத்திலிருந்து (பாதுகாப்பு கருதி) எடுத்துச் செல்லப்பட்ட அந்தச் சோகமான நாளையும் மறக்கவே முடியாது.

ஆனாலும்கூட நம் அன்னை உங்களோடு எப்போதும் உடனிருந்தார். ஒவ்வோர் இல்லத்திற்கும், காயம்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அமைதியான வாழ்வுக்குத் திரும்ப விரும்பும் அனைவருக்கும் அவர் அன்னையாக இருக்கிறார். இலங்கை வாழ் மக்களை, கடந்த கால மற்றும் நிகழ் காலத்தின் அனைத்து ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி வருவதற்காக இன்று நன்றி கூறுகிறோம்.

நம் அன்னையின் பிரசன்னத்திற்காக இன்று நாம் அவருக்கு நன்றி கூற விழைகின்றோம். காயங்களைக் குணமாக்கி, உடைந்த உள்ளங்களில் அமைதியை மீண்டும் தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் இயேசு மட்டுமே. அவரை நமக்குத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் அன்னைக்கு நன்றி கூறுகின்றோம். மேலும், இறை இரக்கத்தின் அருளை நம்மேல் பொழிந்திட வேண்டுகிறோம். அத்துடன் நமது பாவங்கள், மற்றும் இந்நாடு எதிர்கொண்ட அனைத்துத் தீமைகளுக்கும் பரிகாரம் செய்ய, தேவையான அருளை வேண்டுகிறோம்.

இதனைச் செய்வது, இலகுவானதல்ல. ஆனாலும் கூட, ஒருவரையொருவர் உண்மையான மனஸ்தாபத்துடன் அணுகவும், உண்மையான மன்னிப்பைக் கொடுக்கவும் அதனை நாடவும், இவ்வாறாக, நாம் இறை அருளைப் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிக்கவும், மற்றும் சமாதானத்தை அடைவதற்குமான கடினமான இந்த முயற்சியிலே, அன்னை மரியா இங்கிருந்து நம்மை ஊக்கமூட்டுகிறார், வழி நடத்துகிறார், அழைத்துச் செல்கிறார்.

தமிழ், சிங்கள மொழி பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள், இழந்துவிட்ட ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புகின்ற முயற்சியில் அன்னை மரியாள் தன் பரிந்துரைகள் வழியாக, துணை நிற்க வேண்டுவோம். போரின் முடிவில் அன்னையின் திருச் சுரூபம் மடுத் திருத்தலத்திற்கு மீண்டும் வந்ததுபோல், அன்னையவரின் அனைத்து இலங்கை மக்களும் ஒப்புரவு மற்றும் தோழமையைப் புதுப்பிக்கும் உணர்வுடன் இறைவனிடம் திரும்பி வந்துசேர மன்றாடுவோம்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, நாம் ஒருவர், ஒருவருக்காக மன்றாடுவோம். இந்தத் திருத்தலமானது, செபத்தின் இல்லமாக, அமைதியின் இருப்பிடமாகத் திகழ வேண்டுவோம். மருதமடு அன்னையின் பரிந்துரையால், ஒப்புரவு, நீதி, சமாதானம் நிறைந்த எதிர்காலம் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதாக. ஆமென்.”[24]

பொது மன்றாட்டு தமிழில் இசையமைப்பிலும், சிங்களத்திலும் எடுத்துரைக்கப்பட்டன. இலங்கையில் நீதி, அமைதி, சம உரிமை நிலவிட மன்றாட்டுகள் எழுப்பப்பட்டன. திருத்தந்தை சிறப்பு ஆசி வழங்கியபோது மக்கள் செபமாலை, சிறு சுரூபங்கள் மற்றும் படங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தனர். “சர்வேசுரா சுவாமி, இரக்கமாக எங்களைப் பாரும். கன்னி மரியாயே, மருதமடுமாதாவே, எங்களுக்காக இயேசுவை மன்றாடும்” ஆகிய மன்றாட்டுகளை மக்கள் எல்லாரும் சேர்ந்து பாடினார்கள். மடுமாதா சுருபத்தைக் கைகளில் வாங்கிக்கொண்டு, அதைக்கொண்டு மக்களுக்குத் திருத்தந்தை ஆசி வழங்கினார். திருத்தந்தைக்கு மரத்தில் செதுக்கப்பட்ட மடு அன்னையின் சுரூபம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அதைப் பெற்று முத்தம் அளித்த பிரான்சிசு, அதை இறுதிவரைத் தம் கைகளில் தாங்கிக்கொண்டிருந்தார். அப்போது “எங்கள் ஞானத் தந்தையர்க்கு இறைவனே ஆசி அளித்திடுவீர்” என்ற கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரான்சிசு மடுமாதா சுரூபத்திற்கு ஒரு செபமாலையை அணியாகச் சூட்டினார்.

திருத்தந்தையின் பிலிப்பீன்சு பயணம் பற்றிய சில தகவல்கள் தொகு

திருத்தந்தையின் பிலிப்பீன்சு பயணம் அவருடைய ஆசியப் பயணத்தின் இரண்டாம் கட்டம் ஆகும். இலங்கையில் பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக அவர் பிலிப்பீன்சு வந்தார். ஆசியாவில் கத்தோலிக்கர் மிகப் பெரும்பான்மையராக உள்ள நாடு இது. சுமார் 100 மில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் சுமார் 80 மில்லியன் பேர் கத்தோலிக்கர்.

1521இல் இங்கு எசுப்பானியக் குடியேற்ற ஆதிக்கம் தொடங்கியது. அதோடு கத்தோலிக்கமும் பரவியது.

பிலிப்பீன்சு மக்களின் கத்தோலிக்க நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், அந்நாட்டில் வாழ்கின்ற எண்ணிறந்த ஏழைமக்களுக்கு வளமான வாழ்வு அமைக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதும், 2013இல் கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதும் தமது பயணத்தின் நோக்கங்கள் என்று திருத்தந்தை கூறினார்.

பிலிப்பீன்ஸ், தென்கிழக்கு ஆசியாவில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் 7,107 தீவுகளைக் கொண்டுள்ள ஒரு நாடு. இந்நாடு, பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும், நில நடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும், நிலநடுக்கங்களும் கடும் புயல்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. இந்த இயற்கையின் சீற்றத்தைத் திருத்தந்தையின் பயணத்தின்போது உணர முடிந்தது. பிலிப்பீன்சில் பயணம் செய்யும் திருத்தந்தை பிரான்சிசு சனிக்கிழமை, சனவரி 17ஆம் நாள் உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு மனிலாவிலிருந்து விமானத்தில் லெய்ட்டே (Leyte) தீவுக்குச் சென்றார். 650 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து அத்தீவின் முக்கிய நகரங்களில் ஒன்றான தக்லோபான் அடைந்தார். ஆனால் அந்நாட்டு வானிலை அறிக்கையின்படி இன்று இத்தீவில் கடும் புயல் அடிக்கும் என விமான ஓட்டுனர்கள் எச்சரித்தனர். அதிலும் மதியம் ஒரு மணிக்குமேல் புயலின் வேகம் அதிகரிக்கும், விமானப் பயணம் கடினம் என்று கூறியதால் இந்நகரில் திருப்பலியை நிறைவேற்றிய பின்னர் பிற்பகலில் மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிசு.

திருத்தந்தை பிரான்சிசின் பயண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான மக்களாலும் அங்கு செல்ல இயலவில்லை. இச்சனிக்கிழமையன்று கன மழையுடன் மெக்கால (Mekkhala) புயல் வீசிய இதே லெய்ட்டே (Leyte) தீவும், தக்லோபான் நகரமும்தான் 2013ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஹையான் கடும் புயலால் கடுமையாய்த் தாக்கப்பட்டன. ஏழு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி கடும் சேதத்தை விளைவித்தன. இப்பகுதியில் இதுவரை இடம்பெற்ற கடும் புயல் இது என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஹையான் கடும் புயலில் தக்லோபான் நகரின் ஏறக்குறைய 90 விழுக்காடு அழிந்தது. லெய்ட்டே தீவின் ஆறு மாநிலங்கள் மற்றும் 44 மாவட்டங்களில் ஒரு கோடியே 45 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டனர். ஏறக்குறைய பத்து இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.

ஹையான் கடும் புயல் வீசி 14 மாதங்கள் கழித்து, பிலிப்பீன்ஸ்க்கு மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிசு ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த மக்களை நேரில் கண்டு தனது அன்பைத் தெரிவிப்பதற்கு மிகவும் ஆவல்கொண்டு தனது பயணத் திட்டங்களில் முக்கியமானதாக தக்லோபான் செல்வதைக் குறித்திருந்தார். அத்திட்டத்தின்படி சனவரி 17, சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்குத் திருப்பலி நிகழ்த்தினார். ஆனால் மோசமான வானிலை காரணமாக திருப்பலியை வேகமாக முடிக்க வேண்டியிருந்தது. கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் மஞ்சள் நிறத்தில் மழைப்பாகையை அணிந்துகொண்டு திருப்பலியில் பக்தியோடு பங்கெடுத்தனர். திருத்தந்தையும் மஞ்சள் நிறத்தில் மழைப்பாகை அணிந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலிக்கென ஏற்கனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த மறையுரையை வழங்காமல் எசுப்பானிய மொழியில் சுருக்கமாக தனது உள்ளத்துணர்வுகளை மக்களோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. அவர் இஸ்பானிய மொழியில் சொல்லச் சொல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் நடைபெற்றது.

தக்லோபான் நகரில் நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், அம்மக்களுக்காகச் செபித்து ஆசீர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கன மழையையும் பொருட்படுத்தாது பல்லாயிரக் கணக்கில் இத்திருப்பலியில் மக்கள் கலந்துகொண்டனர். இத்திருப்பலிக்குப் பின்னர், அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாலோ பேராயர் இல்லத்தில் ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த 30 குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துவதாகப் பயணத் திட்டத்தில் இருந்தது. கன மழை புயல் காரணமாக இந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது. இம்மக்களுக்கு பாலோவில் வத்திக்கானின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிசு மையத்தைத் திருத்தந்தை ஆசீர்வதிக்கவேண்டியிருந்தது. அந்நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டது. மாலை 3.30 மணிக்கு பாலோ பேராலயத்தில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் ஹையான் புயலில் பாதிப்படைந்த குடும்பத்தினரைத் திருத்தந்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிகழ்வை இத்திருப்பலிக்குப் பின் சுருக்கமாக நடத்தினார் திருத்தந்தை. பாலோ பேராலயத்தில் அனைவரையும் ஆசீர்வதித்து, பாதுகாப்பாக மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிசு.

பிரான்சிசு ஆற்றிய மறையுரை தொகு

"எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உரோமையில் இந்த ஹையான் புயலின் கடும் சேதங்களைப் பார்த்தபோது நான் இங்கு இருப்பதற்கு விரும்பினேன். அந்த நாள்களிலே இங்கு நான் வர விரும்பினேன். சிறிது தாமதமாக வந்தாலும் நான் இப்போது உங்களோடு இருக்கிறேன். இயேசுவே ஆண்டவர் என்பதைச் சொல்வதற்காக இங்கு வந்துள்ளேன். அவர் ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார், நம்மை விழத்தாட்டமாட்டார். ஆனால் தந்தையே, எனது வீடு, வாழ்வாதாரங்கள் என பல பொருள்களை நான் இழந்துவிட்டேன், அதனால் மனம் சோர்ந்துள்ளேன் என்று நீங்கள் சொல்லலாம். இப்படி நீங்கள் சொன்னால் அது உண்மையே, உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆயினும் சிலுவையில் அறையுண்ட இயேசு இங்கிருக்கிறார். இதிலிருந்து அவர் நம்மை சோர்வுறவிடமாட்டார். நாம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களையும் அவர் அனுபவித்துள்ளார். இயேசுவே ஆண்டவர். நம் வாழ்வின் இன்னல் நிறைந்த நேரங்களில் நம்மோடு கண்ணீர் சிந்தி நம்மோடு நடக்கும் ஆண்டவரை நாம் கொண்டிருக்கிறோம்."

"உங்களில் பலர் எல்லாவற்றையும் இழந்துள்ளீர்கள். என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்பதை இயேசு அறிந்திருக்கிறார். உங்களில் பலர் உங்கள் குடும்பங்களில் ஒரு பகுதியினரை இழந்துள்ளீர்கள். அமைதியாக இருந்து எனது அமைதியான இதயத்துடன் உங்களோடு இருப்பதை மட்டுமே என்னால் செய்ய முடியும். ஆண்டவரே, இத்துன்பம் ஏன் என உங்களில் பலர் கேட்கலாம். உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திடமும், கிறிஸ்து சிலுவையிலிருந்து தம் இதயத்தோடு பதில் சொல்கிறார். இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிறிஸ்துவை நோக்குவோம். அவர் ஆண்டவர்."

"அவரது சிலுவையருகில் அவரின் தாய் நிற்கிறார். நாம் அதிகத் துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில் சிறு குழந்தைகள்போல் நாம் இருக்கிறோம். அச்சமயங்களில் நாம் எதையும் புரிந்துகொள்வதில்லை. “மம்மி” என்று தாயின் கரங்களை மட்டுமே நாம் பிடித்துக்கொண்டிருக்க முடியும். குழந்தை பயப்படும்போது மம்மி என்று சொல்கிறது. நம் துன்ப நேரங்களில் “மம்மி” என்ற வார்த்தையை மட்டுமே நம்மால் சொல்ல முடியும். சிலுவையடியில் மௌனமாக நின்ற தாயை உற்று நோக்குவோம். சிறு குழந்தை போல, அத்தாயிடம், அம்மா எனச் சொல்வோம். நமக்கு ஒரு தாய் இருக்கிறார். மாபெரும் சகோதரர் இயேசு இருக்கிறார். நாம் தனியாக இல்லை. பேரிடர் துன்ப நேரங்களில் பல சகோதரர்கள் உதவி செய்வதற்கு வந்தார்கள். ஏனெனில் நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாக உணருகிறோம்."

"இதுவே எனது இதயத்தில் தோன்றியவை. வேறு எதுவும் சொல்லாமல் விட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இயேசு ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார் என்பதை தயவுகூர்ந்து அறிந்திருங்கள். அன்னைமரியாவின் கனிவு உங்களைச் சோர்வுறவிடாது என்பதையும் அறிந்திருங்கள். அன்னைமரியாவையும், இயேசுவையும் பற்றிக்கொண்டு சகோதர சகோதரிகளாக ஆண்டவரில் ஒன்றிணைந்து நடப்போம்."

கியூபா, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான பயணம் - செப்டம்பர் 19-28, 2015 தொகு

கியூபாவில் சமய சுதந்திரம் வளர வேண்டும் என்னும் கோரிக்கை தொகு

திருத்தந்தை பிரான்சிசு, கியூபா நாட்டைச் சென்று சேர்ந்த உடனேயே, அலுவல்முறையில் இறைநம்பிக்கை இல்லா நாடு என்று தன்னை அறிமுகப்படுத்துகின்ற கியூபா நாட்டில் சமய சுதந்திரத்திற்குப் போதிய இடம், விரிவு, வகைமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பிரான்சிசு கேட்டுக் கொண்டார். கியூபா நாட்டு அதிபர் ராவுல் காஸ்ட்ரோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கியூபாவில் அமைத்துள்ள குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் தளத்தை உடனே மூட வேண்டும் என்று கேட்டார். மேலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு இன்றைய புவியுலகை மாசுறச் செய்கிறது என்றும் அந்நிலை மாற வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் கியூபா நாட்டிற்கும் இடையே நல்லுறவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த நல்லுறவை ஏற்படுத்துவதில் திருத்தந்தை பிரான்சிசு முக்கிய பங்காற்றுகிறார் என்பதும் தெரிகிறது. பிரான்சிசு தம் உரையில், “கியூபா நாட்டிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது உலகம் முழுவதற்கும் நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படுவதற்கு ஒரு சீரிய முன்னுதாரணமாக அமையட்டும்” என்று குறிப்பிட்டார்.[25]

பிரான்சிசு கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார் தொகு

திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணத்தின் ஒரு உச்சக்கட்டம் அவர் பிடெல் காஸ்ட்ரோவை சந்தித்தது ஆகும்.[26] இரு தலைவர்களும் உலக நடப்புப் பற்றியும், சுற்றுச் சூழல் சீரழிவு பற்றியும் பொதுவாக உரையாடியதாகத் தெரிகிறது. இரு தலைவர்களும் சில நூல்களைப் பரிசாகப் பரிமாறிக்கொண்டார்கள். பிரான்சிசு தாம் எழுதிய இரு சுற்றுமடல்களை (”மகிழ்ச்சிதரும் நற்செய்தி”, “சுற்றுச் சூழல் பாதுகாப்பு”) பரிசாகக் கொடுத்தார். மேலும் ஆன்மிக வாழ்வு பற்றிய ஒரு நூலையும் கொடுத்தார். பிடெல் காஸ்ட்ரோவுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பின் கியூபா பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவியபோது நாடுகடத்தப்பட்ட அமாந்தோ யொரேந்தே (Amando Llorente) என்ற இயேசு சபைக் குரு எழுதிய நூலையும் திருத்தந்தை பிரான்சிசு, பிடெல் காஸ்ட்ரோவுக்குப் பரிசாகக் கொடுத்தார்.[27]

பிடெல் காஸ்ட்ரோ தாம் எழுதிய “பிடெலும் சமயமும்” (“Fidel and Religion”) என்ற நூலை பிரான்சிசுக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்நூல், பிடெல் காஸ்ட்ரோ, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டை சந்தித்ததின் சுருக்கம் ஆகும். அந்நூலின் முகப்புப் பக்கத்தில் “திருத்தந்தை பிரான்சிசுக்கு, கியூபா நாட்டிற்கு ஒரு சகோதரரைப் போன்று அவர் வருகை தந்ததை முன்னிட்டு, கியூபா மக்களின் பாசமிகு வாழ்த்துகளோடு, பிடெல் வழங்கும் அன்புப் பரிசு” (“For Pope Francis, on the occasion of your fraternal visit to Cuba, with the admiration and respect of the Cuban people. Fidel.”)

அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றினார். 200,000 மக்கள் குழுமியிருந்த வளாகத்தில் மறையுரை ஆற்றியபோது, ஏழை எளியோருக்கும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்கும் ஆதரவு அளிப்பது தான் உண்மையான சமய நம்பிக்கை என்று பிரான்சிசு கூறினார். இளையோருக்கு உரையாற்றுகையில், “அன்புமிக்க இளையோரே, நீங்கள் ஒளிமயமானதோர் உலகம் உருவாகும் என்று கனவு காண வேண்டும்” என்று கூறினார். மேலும், “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநன்மையை முன்னிறுத்தி அனைவரும் ஒத்துழைக்க முடியும், ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ”பண ஆசைக்கு அடிமைகள் ஆகிவிடாமலும், எளியோரை உதறித் தள்ளாமலும் நாம் செயல்பட வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார்.[28]

திருத்தந்தை பிரான்சிசின் ஐக்கிய அமெரிக்க நாடுகள் பயணம் தொகு

கியூபாவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து நேரடியாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாசிங்டனுக்குத் திருத்தந்தை பிரான்சிசு வருவதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எதிரிகள் போல செயல்பட்டுவந்த இந்த இரண்டு நாடுகளும் பகைமை அகற்றி நல்லுறவுகள் ஏற்படுத்திட திருத்தந்தை பிரான்சிசு உழைத்தார். இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கூடி வந்து பேச்சு வார்த்தை நடத்த அவரே ஏற்பாடு செய்தார். எனவே, ஒரு விதத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவைக் கொணர்வதில் பிரான்சிசு ஒரு பாலமாக அமைகின்றார்.

அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்கிறார் தொகு

செப்டம்பர் 23, புதன் காலை 9 மணியளவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் வரவேற்றார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஆதரவு அளிப்பதிலும், சுற்றுச் சூழல் மாசுறுவதைத் தடுத்து புவியுலகத்தை உலக மக்கள் அனைவரும் வாழ உகந்த இல்லமாக மாற்றுவதிலும், சமயச் சுதந்திரத்தை ஆதரிப்பதிலும் திருத்தந்தை தலைசிறந்த விதத்தில் உழைத்து வருகிறார் என்று தம் வரவேற்புரையில் கூறிய அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை அமெரிக்க மக்கள் பெயரால் வரவேற்றார். தமது ஏற்புரையின் போது, திருத்தந்தை இரு முக்கிய கருத்துக்களை வலியுறுத்தினார். அமெரிக்க நாடு வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்களின் ஒத்துழைப்பால் உருவானது என்றும், இந்நாட்டில் குடியேற விரும்பும் மக்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதுபோலவே, சுற்றுச் சூழல் மற்றும் புவியுலகு பாதுகாப்பில் அமெரிக்கா எடுக்கின்ற முயற்சிகளைப் பாராட்டிய பிரான்சிசு, அம்முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கூறினார்.[29]

புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருவோரை வரவேற்றல் வேண்டும் தொகு

திருத்தந்தை தமது பயணத்தின்போது வலியுறுத்திய ஒரு முக்கிய கருத்து, புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருகின்ற மக்களை வரவேற்றல் வேண்டும் என்பதாகும். அவர் வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் ஆற்றிய உரையின்போது, “நானும் புலம்பெயர்ந்து குடியேறிய ஓர் குடும்பத்தில் பிறந்தவன் தான்” என்றார். திருத்தந்தையின் பெற்றோர் இத்தாலி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அர்ஜெண்டீனா நாட்டில் குடியேறினார். அங்குதான் பிரான்சிசு பிறந்தார். எசுப்பானிய மொழி பேசுகின்ற கத்தோலிக்கர் பெருமளவில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்களுள் சிலர் குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் உள்ளனர். அவர்களை மீண்டும் அவர்களுடைய நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றொரு கருத்தை சிலர் முன்வைக்கின்ற வேளையில் திருத்தந்தை பிரான்சிசு புலம்பெயர்வோரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிரியா, லிபியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா செல்ல முயல்கின்ற பின்னணியில் அவருடைய வேண்டுகோள் பலமாகவே ஒலிக்கின்றது.[30]

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிசு உரையாற்றுகின்றார் தொகு

அரசியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற இந்த உரையின்போது திருத்தந்தை அமெரிக்கா என்பது ஒரு பெருநிலம். அதில் வடக்கு நோக்கிச் சென்று வேலை வாய்ப்புத் தேடுவோரை, புலம்பெயர்ந்து வருவோரை கைவிரித்து ஏற்கவேண்டும் என்றார் திருத்தந்தை.

அமெரிக்க வரலாற்றில் சிறப்பு மிக்க மனிதர்களாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லுத்தர் கிங், டோரதி டே, தாமஸ் மெர்ட்டன் ஆகிய நால்வரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிசு, அந்த வரலாற்று உணர்வோடு ஐக்கிய அமெரிக்க நாட்டு மக்கள் செயல்படுவது உலக அமைதிக்கும், புவியுலகப் பாதுகாப்புக்கும் தேவை என்றார். ஆபிரகாம் லிங்கன் அடிமைமுறையை ஒழிக்க பாடுபட்டார். மார்ட்டின் லுத்தர் கிங் கருப்பு இன மக்களின் சம உரிமைக்காக உழைத்தார். டோரதி டே என்பவர் சமூக நீதிக்காகவும் உழைப்பாளர் வளர்ச்சிக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார். தாமஸ் மெர்ட்டன் என்பவர் வன்முறை களைந்து, பல்சமய உரையாடல் வழி மக்களிடையே நல்லிணக்கம் வளர வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய பெருமனிதர்களின் வழிவருகின்ற ஐக்கிய அமெரிக்க நாட்டு மக்கள் தங்கள் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்தினார்.[31]

ஹஜ் திருப்பயண நிகழ்வில் இறந்தோருக்கு இரங்கல் தொகு

செப்டம்பர் 24, வியாழக்கிழமை மாலையில் திருத்தந்தை பிரான்சிசு நியூயார்க் நகரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட புனித பாட்ரிக் பெருங்கோவில் வழிபாடு நடத்தினார். அப்போது தம் உரையைத் தொடங்குமுன், அவர் வியாழன் காலையில் மெக்காவில் ஹஜ் பயணம் சென்ற முஸ்லிம்களும் சுமார் 700 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தற்கு இரங்கல் தெரிவித்தார். அவர் பின்வருமாறு கூறினார்: “இசுலாமியருக்குப் புனித நாளான தியாகத் திருநாளான இன்று அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், இன்று மெக்காவில் உயிரிழந்தோரை நினைத்து இரங்கல் தெரிவிக்கின்றேன். இத்துயரத்தில் நானும் பங்கேற்கின்றேன். இறைவனை நோக்கி மன்றாட்டுகளை எழுப்புகின்றேன்.” [32]

ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையில் திருத்தந்தை பிரான்சிசின் உரை தொகு

ஐக்கிய நாடுகள் அவை 70ஆம் ஆண்டினைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில் திருத்தந்தை ஐ.நா. பொதுப்பேரவையில் உரையாற்றினார். செப்டம்பர் 25, வெள்ளி காலை 9 மணியளவில் வழங்கப்பட்ட உரைக்கு முன், பொதுச்செயலர் பான் கி மூன் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தை ஐ.நா. அவை அலுவலர்களுக்கு உரையாற்றி, அவர்களது பொறுப்பை வலியுறுத்தினார். ஐ.நா. தரப்பில் உலகின் பல பகுதிகளில் அமைதிக் குழு, மக்கள் நல முன்னேற்றக் குழு போன்ற பணிகளை ஆற்றியபோது வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்த ஐ.நா. உழைப்பாளர்களின் நினைவகத்தின் முன் சிறிது நேரம் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார்.

193 உலக நாடுகளை முழுநிலை உறுப்பினர்களாகவும், வத்திக்கான் (திருப்பீடம்) போன்ற சில பார்வைநிலை உறுப்பினர்களையும் கொண்ட மாபெரும் உலக நிறுவனமாகிய ஐ.நா. அவையின் பொதுப்பேரவை அமர்வுக்குத் தொடக்கவுரை ஆற்றும் பணி்யை ஒரு திருத்தந்தை ஆற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிசு ஐ.நா. அவையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்: தொகு

1. சுற்றுச் சூழல் பேணுதல் பற்றி:

”சுற்றுச் சூழலுக்கு நாம் ஊறு இழைக்கும் போதெல்லாம், மனித குலத்திற்கே ஊறு விளைவிக்கின்றோம்.”

2. புவி வெப்பநிலை மாற்றம் வறுமைக்குக் காரணமாதல் பற்றி:

”சுற்றுச் சூழலுக்கு ஊறு இழைப்பதால் ஏற்படுகின்ற விளைவுள் ஏழைமக்களை மிகக் கடுமையாக பாதிக்கின்றன. இதற்கான காரணங்கள் மூன்று: ஏழைகள் சமுதாயத்தால் ஒதுக்கப்படுகிறார்கள்; ஒதுக்கிக் கழிக்கப்படுபவையே ஏழைகளின் வாழ்வு ஆதாரம் ஆகிறது; சுற்றுச் சூழல் சீரழிப்பினால் அநியாயமான விதத்தில் துன்புற நேரிடுகிறது. இன்று சமுதாயத்தில் மெதுவாக, ஆனால் பரவலாகப் பரவி வருகின்ற ‘கழிவுமுறைக் கலாச்சாரத்தின்’ பிடியில் ஏழைகள் சிக்கி அவதிப்படுகிறார்கள்.”

3. உலக நாடுகளின் தலைவர்கள் என்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றி:

”உலக நாடுகளின் தலைவர்கள், எந்தவொரு மனிதரோ மக்கள் குழுவோ, சமுதாயத்தாலோ பொருளாதார அமைப்பில் பங்கேற்பதிலிருந்தோ அநீதியாக ஒதுக்கப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமுதாய மற்றும் பொருளாதார ஒதுக்குமுறை நிகழ்கின்ற இடங்களில் பலவிதமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, மனிதர்களை விலைக்கு வாங்கி விற்கின்ற கொடுமை, மனித உடலுறுப்புகளையும் திசுக்களையும் விலைபேசுகின்ற கொடுமை, சிறுவர்களையும் சிறுமியரையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்ற கொடுமை, மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் கொடுமை, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கொடுமை, போதைப்பொருள்களையும் போர்க்கருவிகளையும் கடத்தி விற்கும் கொடுமை, பயங்கர வாத நடவடிக்கை, பன்னாட்டளவில் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்ற கொடுங்குற்றங்கள் போன்ற கொடுமைகள் எல்லாம் மேற்கூறிய சமுதாய மற்றும் பொருளாதார ஒதுக்குமுறையின் விளைவுகளே.”

4. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெரும் பொறுப்புப் பற்றி:

”ஐக்கிய நாடுகள் அமைப்பு மனித குலத்திற்கு மாபெரும் பணி ஆற்றிட கடமைப்பட்டுள்ளது. நாம் வகுக்கின்ற திட்டங்களும் சரி, கொள்கைச் செயல்பாடுகளும் சரி, அவை எல்லாம் வெறும் திட்ட வகையாக நின்றுவிடக்கூடாது. மாறாக, ஒவ்வொரு நாளும் வறுமையில் உழன்று, உரிமைகள் இழந்து, வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எண்ணிறந்த மனிதர் உண்மையிலேயே முன்னேற்றம் பெறும் வகையில் திட்டங்களும் செயல்பாடுகளும் அமைய வேண்டும். அரசியல் மட்டத்திலும் பொருளாதார மட்டத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற செயல்பாடுகள் நீதியை மையமாகக் கொண்டு அமைய வேண்டும். நடைமுறையில் மக்களுக்கு, குறிப்பாக எளியோருக்கு, பயன் நல்குகின்றனவாக அமைய வேண்டும்.”

5. உலகளாவிய வறுமை நிலையை ஒழிக்க மக்களால் முடியும் என்பது பற்றி:

”உலக மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் மாண்பும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் இவற்றை மக்கள் மேல் வலிந்து திணிப்பது முறையாகாது. ஒவ்வொரு தனி மனிதரும், குடும்பமும், பிறரோடு இணைந்து, சமுதாயத்தின் பல்வேறு நிலை உறவுகளைப் பேணி அவற்றின் வழியாக மட்டுமே நல வாழ்வு அடைய முடியும். இத்தகைய உறவு நிலைகளை உருவாக்குவதில் நண்பர்கள், சிறு குழுக்கள், ஊர்கள், நகரங்கள், கல்விக்கூடங்கள், வர்த்தக அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், மாநிலங்கள், நாடுகள் முதலியவை ஆக்கப்பூர்வமான விதத்தில் ஈடுபட முடியும், ஈடுபடவும் வேண்டும்.”

6. அடிப்படை உரிமைகள் பற்றி:

”ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை உரிமைகளாக அமைபவை இவை: தங்கியிருக்க வீடு, திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு, தேவைக்கான சொத்து (lodging, labor and land).”

7. ஐ.நா. அமைப்பின் “சீரான வளர்ச்சிக்கு 2030 திட்டத்தொகுப்பு” (2030 Agenda for Sustainable Development) பற்றி:

”சீரான வளர்ச்சிக்கு ஐ.நா. அமைப்பு வகுத்துள்ள திட்டத்தொகுப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும். மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்சார்ந்த மற்றும் அருள்சார்ந்த நலன்கள் எல்லா மக்களுக்கும் தங்குதடையின்றி, நடைமுறையில் கிடைப்பதே அந்த வெற்றிக்கு அடையாளம். இத்தகைய நலன்களுள் கீழ்வருவன அடங்கும்: வீட்டு வசதி, போதிய ஊதியம் தருகின்ற வேலை வாய்ப்பு, போதிய உணவு, குடிநீர், சமயச் சுதந்திரம், மற்றும் பொதுவாக கல்வி போன்றவை.”

8. மனித மாண்பு பற்றி:

”நாம் வாழ்கின்ற உலகம் எல்லா மனிதருக்கும் உரித்தான ஒரு பொது இல்லம், வீடு ஆகும். உலகில் வாழ்கின்ற அனைத்து மனிதருமே ஒருவர் ஒருவருக்கு உடன்பிறப்புகள் என்ற உணர்வு வளர வேண்டும். மனித உயிர் மாண்புமிக்கது என்ற உறுதிப்பாடு நிலைபெறவேண்டும். எல்லா உயிர்களுமே போற்றப்பட வேண்டும். இத்தகைய அடிப்படைகள் ஏற்கப்படும்போது, ஆண் அல்லது பெண் என்ற வேறுபாட்டிற்கு அங்கு இடமில்லை. ஏழைகளானாலும், குழந்தைகள் ஆனாலும், முதியோர் ஆனாலும், வலுவற்றோர் ஆனாலும், கருவில் உருவாகும் உயிரானும், வேலைவாய்ப்பின்றித் தவிப்போரானாலும், கைவிடப்பட்டோர் ஆனாலும், ஒன்றுக்கும் உதவாதோர் என்று ஒதுக்கப்படுவோர் ஆனாலும் அனைவருக்குமே பொதுவான இல்லமாக, வீடாக நமது உலகம் உள்ளது என்பதே உண்மை.”[33]

திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம் (கென்யா, உகாண்டா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு) பற்றிய சில தகவல்கள் தொகு

திருத்தந்தை 2015 நவம்பர் 25-30 நாட்களில் முதன்முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் திருப்பயணமாகச் சென்றார். அப்பயணத்தின்போது அவரை சந்திக்கவும் அவருடைய ஆசியைப் பெறவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் பிறரும் பல்லாயிரக் கணக்காகக் கூடிவந்தனர். அவர் ஆற்றிய உரைகள் வழியாகவும், அவர் சந்தித்த மக்கள் வழியாகவும், அவருடைய செயல்கள் வழியாகவும் அவர் வழங்கிய செய்தி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

  • ஆப்பிரிக்க கண்டத்தில் வசதி படைத்தவர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே மாபெரும் இடைவெளி நிலவுகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார். இந்த அநீதியை ஒழிப்பதற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் தலைவர்கள் தவறிவிட்டார்கள் என்று அவர் கூறினார்.
  • கென்யா நாட்டின் நைரோபி நகரில் செல்வம் செழிக்கும் பகுதிகளும் உண்டு, வறுமை வாட்டி வதைக்கின்ற சேரிகளும் உண்டு. அத்தகைய சேரி ஒன்றில் (”கங்கேமி”) வாழ்கின்ற மக்களைச் சந்திக்க பிரான்சிசு போனார். அங்கு நிலவிய வறுமையையும், சுகாதாரக் கேடான சூழ்நிலைகளையும் கண்டு அவர் பெரிதும் மனம் நொந்தார். பெரிய நகரங்களின் வளமையைக் கண்டு போற்றுபவர்கள் அந்த நகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள சேரிகளின் சீர்கேட்டைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் திருத்தந்தை பிரான்சிசு, சேரிகளில் நிலவுகின்ற வறுமையையும் சீர்கேட்டையும் உலகறியச் செய்தார்.
  • திருத்தந்தை பிரான்சிசு, போர்நிகழ்கின்ற பகுதிகளுக்குச் சென்று, அப்போரில் ஈடுபட்டிருப்போரை சந்தித்து, சமாதான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவேண்டும் என்று கேட்டார். சமயங்கள் தமக்குள்ளே “சகிப்புத்தன்மை” மட்டும் கொண்டிருந்தால் போதாது, மாறாக ஒவ்வொரு சமயமும் பிற சமயங்களோடு இணைந்து மக்களின் பொதுநன்மைக்காக “ஒத்துழைப்பு” நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
  • வறுமை நிலவும் நாடுகளையும், போர் நிலவுகின்ற பகுதிகளையும், சமயத்தின் பெயரால் சண்டை சச்சரவு நிலவும் இடங்களையும் சென்று சந்தித்த உடனேயே நிலமை சரியாகிவிடும் என்று திருத்தந்தை நினைக்கவில்லை. ஆனால், இன்றைய உலகின் நிலவுகின்ற அநீதி, போர், ஆகியவற்றை அழிப்பதற்கான முயற்சியில் அனைத்து மக்களும் ஈடுபட முடியும், ஈடுபடவும் வேண்டும் என்ற செய்தியைத் திருத்தந்தை பிரான்சிசு மிக அழுத்தமாக எடுத்துரைத்தார்.
  • அவர் சென்ற இடங்களுக்கு எந்த ஒரு தலைவரும் மனமுவந்து சென்றிருக்க மாட்டார். ஆனால் தங்களைத் தேடி ஒரு சமயத் தலைவர் வந்தார் என்ற எண்ணமே மக்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது.
  • திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்திய இன்னொரு கருத்து, ஆப்பிரிக்க கண்டத்தில் மாபெரும் செல்வம் உள்ளது என்பதாகும். இயற்கை வளங்களும் தாது வளங்களும் நிலத்தடி வளங்களும் மிகப்பெரும் அளவில் ஆப்பிரிக்காவில் உள்ளன, ஆனால் அங்கு வாழ்கின்ற மக்களின் நட்பு, விருந்தோம்பும் பண்பு, குடும்ப உணர்வு போன்றவை மிகவும் போற்றற்குரியவை என்று திருத்தந்தை கூறினார். ஆப்பிரிக்காவின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆப்பிரிக்கத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் பெரும் பொறுப்பு உண்டு என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
  • ஆப்பிரிக்காவில் மலிந்துகிடக்கின்ற ஊழல், அரசியல் தலைவர்கள் நாட்டின் செல்வத்தைச் சூறையாடுகின்ற இழிநிலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சுற்றுச் சூழல் சீர்கேடு, இன அடிப்படையிலும் குல அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் நிகழ்கின்ற போர்கள், அதனால் மக்கள் உயிரிழப்பதோடு அகதிகளாகப் பலர் துன்புறுகின்ற நிலை - இவை போன்ற எண்ணிறந்த அநீதிகளுக்குத் தீர்வுகாண ஆப்பிரிக்கர்களும் பிறரும் முன்வர வேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
  • மக்களது செல்வத்தைச் சூறையாடி சொகுசாக வாழ்கின்ற அரசியல் தலைவர்களையும் திருத்தந்தை கடிந்துகொண்டார். கென்யா நாட்டில் அவர் சென்று சேர்ந்ததும், அவரை அரசு இல்லத்திற்குக் கொண்டுவர அரசு தரப்பில் சொகுசு வண்டிகளுக்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால் திருத்தந்தையோ மிக சாதாரணமான ஒரு சிறு உந்து தமக்குப் போதும் என்று கூறிவிட்டார். இது நாட்டு மக்களிடையே ஒரு விவாதத்தையே கிளப்பிவிட்டிருக்கிறது. மக்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்க, அரசியல் தலைவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்துவது முறையல்ல என்றும், நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது நிற்கவேண்டும் என்றும் மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
  • திருத்தந்தை பிரான்சிசு மக்களுக்குப் பொன்னும் வெள்ளியும் கொண்டு செல்லவில்லை. ஆனால் அவர் மக்களுடைய இதயத்தைத் தொட்டுப் பேசினார் என்றும், மக்கள் தம் நிலையை மாற்றமுடியும் என்ற உறுதிப்பாட்டை அளித்தார் என்றும் நாளேடுகள் கருத்துத் தெரிவிக்கின்றன.[34]
  • ஆப்பிரிக்க நாடுகளிலும் பிற நாடுகளிலும் மக்கள் சமய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்று திருத்தந்தை உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, அவர் சந்திக்கச் சென்ற மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு என்னும் நாட்டில் கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் கடுமையாக மோதிக்கொண்டு வந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிசு அந்த போர்ப்பகுதிகளுக்குச் சென்று அகதிகள் முகாம்களைச் சந்தித்து அங்கிருந்தோரிடம் உரையாடினார். அவர்களுடைய இழிநிலையை நேரடியாகக் கண்டுணர்ந்தார். “கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் போர்ச்செயல்களிலும் வன்முறையிலும், பழிவாங்கள் செயல்களிலும் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்னும் உணர்வோடு செயல்பட வேண்டும்” என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.[35]

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. திருத்தந்தையின் கொரியா பயணம்
  2. திருத்தந்தை பிரான்சிசு அல்பேனியா நாட்டுக்குத் திருப்பயணமாகச் செல்கிறார்
  3. சமய சுதந்திரத்திற்கு ஆதரவு
  4. ""கடவுளின் புனித ஞானம்" பெருங்கோவில் சந்திப்பு". Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  5. மசூதியில் தொழுகை
  6. "கிறித்தவ ஒன்றிப்பு முயற்சியில் பிரான்சிசும் பர்த்தலமேயுவும்". Archived from the original on 2014-12-02. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
  7. "திருத்தந்தை பிரான்சிசும் மறைமுதல்வர் பர்த்தலமேயுவும் விடுத்த கூட்டறிக்கை". Archived from the original on 2014-12-02. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  8. திருத்தந்தை பிரான்சிசின் துருக்கிப் பயணம் நிறைவு
  9. திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம்
  10. திருத்தந்தை பிரான்சிசின் மெக்சிகோ பயண நிகழ்ச்சிகள்
  11. திருத்தந்தை பிரான்சிசு – மறைமுதுவர் கிரில் பொது அறிக்கை
  12. மெக்சிகோவில் திருத்தந்தை - முதல்நாள்
  13. சமுதாய சீர்திருத்தம் தேவை – திருத்தந்தை பிரான்சிசு உரை
  14. மெக்சிகோவின் சாப்பாசு பகுதியில் திருத்தந்தை பிரான்சிசு
  15. திருத்தந்தை மெக்சிகோ குடும்பங்களோடு உரையாடல்
  16. "சமூக அநீதிகளை எதிர்க்க அறைகூவல்". Archived from the original on 2016-02-17. பார்க்கப்பட்ட நாள் 2016-02-17.
  17. இளையோருக்கு அறிவுரை
  18. "திருத்தந்தை பிரான்சிசு, கிரீசு நாட்டில் அகதிகளை சந்திக்கிறார்". Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.
  19. "இலங்கை விமான நிலையத்தில் திருத்தந்தையின் ஏற்புரை". Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-01-14.
  20. திருத்தந்தை பிரான்சிசு யோசேப் வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகின்ற காணொளிக் காட்சி
  21. சமய சுதந்திர ஆவணம்
  22. மடுமாதா கோவிலில் பிரான்சிசு
  23. மடுமாதா கோவிலில் திருத்தந்தை பிரான்சிசுக்கு வரவேற்புரை
  24. மடுத்திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிசின் உரை
  25. திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணம் பற்றி பிபிசி செய்தி
  26. திருத்தந்தை பிரான்சிசு - பிடெல் காஸ்ட்ரோ சந்திப்பு
  27. திருத்தந்தை பிரான்சிசும் பிடெல் காஸ்ட்ரோவும் பரிசுகள் பரிமாறல்
  28. திருத்தந்தை இளையோருக்கு உரையாற்றுகிறார்
  29. அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்றல்
  30. புலம்பெயர்ந்து குடியேறுவோரை வரவேற்றல் பற்றி திருத்தந்தை பிரான்சிசு
  31. ஐக்கிய அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் பிரான்சிசு உரை
  32. இசுலாமியரின் தியாகத் திருநாளன்று உயிரிழந்தோரை நினைந்து பிரான்சிசு இரங்கற் செய்தி
  33. திருத்தந்தை பிரான்சிசு ஐ.நா. அமைப்பின் பொது அவைக்கு ஆற்றிய உரை - செப்டம்பர் 25, 2015
  34. திருத்தந்தை பிரான்சிசின் ஆப்பிரிக்கப் பயணத்தின் தாக்கம்
  35. ”கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் சகோதரர்கள்” - திருத்தந்தை பிரான்சிசு - பிபிசி செய்தி