பயங்கரவாத எதிர்ப்புப் படை (தமிழ்நாடு)

பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terrorism Squad (Tamilnadu), தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களைத் கண்காணித்து, தடுக்கும் நோக்கில் 21 நவம்பர் 2023ல் நிறுவ தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் செயல்படும் உளவுத் துறையின் தலைவரான துணை காவல்துறை இயக்குநர் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்புப் படை செயல்படும். இப்படைக்கு துணை காவல்துறை தலைவர் தலைமைப் பொறுப்பு வகிப்பார். இப்பிரிவில் காவல்துறை கண்காணிப்பாளரகள், துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 193 பேர் பணிபுரிவர். இந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் எனவும் தமிழக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.[1][2][3][4]

நோக்கம் தொகு

தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதச் செயல்கள், நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிகள் மற்றும் இந்திய இறையான்மைக்கு எதிரான செயல்களை கண்காணித்து தடுக்கும் நோக்கில் இந்த பயங்கரவாத எதிர்ப்புப் படை நிறுவப்படுகிறது. இந்திய உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு போன்ற உளவு அமைப்புகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல். பிற மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்பு படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல். போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தலைக் கண்டறிதல்

பின்னணி தொகு

2022ம் ஆண்டில் கோயம்புத்தூர் நகரத்தின் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் எதிரில் ஜமேஷா முபின் என்பவர் காரில் எரிவாயு உருளை ஏற்றி வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தார். மேலும் அவரது வீட்டில் வெடிபொருட்கள் தயாரிக்கும் வெடிமருந்துகள் மற்றும் தீவிரவாத அமைப்பு வாசகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்தே “தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்படும் அறிவிப்பு வெளியானது.

2023ம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் 380க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு ரூபாய்.57.51 கோடி செலவில் “தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.[5][6]

அமைப்பு தொகு

தமிழக பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவானது, தமிழக உளவுத் துறையின் கட்டிப்பாட்டில் செயல்படும். இப்படைப்பிரிவுக்கு காவல்துறை துணைத் தலைவர் தலைமை வகிப்பர். இப்படையில் 3 கண்காணிப்பாளர்கள், 4 உதவி கண்காணிப்பாளர்கள், 9 துணை கண்காணிப்பாளர்கள், 16 ஆய்வாளர்கள், 48 உதவி ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் (தொழினுட்பம்), 45 தலைமைக் காவலர்கள், 22 காவலர்கள், 33 வாகன ஓட்டுநர்கள் ஆகிய 193 பேர் இடம் பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு