மந்தாகினி (கதைமாந்தர்)

(மந்தாகினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மந்தாகினி சுந்தர சோழரின் காதலியாகவும், வீரபாண்டியனின் மனைவியாகவும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் கதாப்பாத்திரமாகும். மந்தாகினியை தொடக்கத்திலேயே பூங்குழலியின் அத்தையாக அறிந்தாலும், சேந்தன் அமுதனின் பெரியம்மாவாகவும் நந்தினிதேவி, மதுராந்தகன் தாயாகவும் இறுதிக்கட்டத்தில்தான் அறியமுடிகிறது.

மந்தாகினி
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
250
மந்தாகினியின் ஓவியம்: ஓவியர் மணியம்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பிற பெயர்ஈழத்து ராணி, ஊமைப் பெண்
தலைப்புபொன்னியின் செல்வன் நாவலின் கற்பனை கதாபாத்திரம்
குடும்பம்நந்தினி, மதுராந்தகன்

கதாப்பாத்திரத்தின் இயல்பு தொகு

மந்தாகினியை ஊமைப் பெண்ணாகவும், செவிட்டுப் பெண்ணாகவும் அறிமுகம் செய்கிறார் புதினத்தின் ஆசிரியர். பல இடங்களில் ஊமைப்பெண் என்றே குறிப்பிடுகிறார். சைகை பாசை பேசி இளவரசர் அருள்மொழிவர்மனுக்கு வரும் ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுளாக மந்தாகினி தேவி வருகிறார். எளிய உடை அணிவதிலும், மக்கள் இல்லாத இடங்களிலும் இருக்க ஆசை கொள்கிறாள். மந்தாகினியின் முகத்தோற்றம் பழுவூர் இளையராணி நந்தினிதேவின் முகதோற்றத்தினை ஒத்திருப்பதால் பலர் குழம்பிவிடுகின்றனர். இறுதியாக சுந்தர சோழருக்கு வரும் ஆபத்திலிருந்து அவரை காத்து தான் மடியும் வரை சோழரின் குடும்பத்தின் மீதான பாசத்தினை வெளிக்காட்டும் அபலைப் பெண்ணாகவே மந்தாகினி வாழ்ந்து மடிகிறார்.

அருள்மொழிதேவனைக் காக்கும் தெய்வம் தொகு

சோழ இளவரசர் அருள்மொழிதேவனின் சிறுவயதிலிருந்தே, அவரின் உயிருக்கு வருகின்ற ஆபத்துகளையெல்லாம் தடுத்து ரட்சிக்கும் கடவுளாக மந்தாகினி வருகிறார். சிறுபிராயத்தில் அருள்மொழிவர்மன், குந்தவை (கதைமாந்தர்) நாச்சியார், ஆதித்த கரிகாலன் (கதைமாந்தர்), இவர்களது தந்தை சுந்தர சோழர் மற்றும் தாய் மலையமான் குமாரி ஆகியோர் காவிரி நதியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கையி்ல் அருள்மொழிவர்மன் படகிலிருந்து தவறி விழுந்துவிடுகிறார். அவரைக் காப்பாற்றி மீண்டும் படகில் சேர்த்தவரை யாருமே அறிந்திருக்கவில்லை. அருள்மொழி தேவருக்கு மட்டும் அந்த மங்கையின் திருவுருவம் கண்களிலேயே இருக்கிறது. மற்றவர்கள் இளவரசரைக் காப்பாற்றியது பொன்னி நதிதான் என்று முடிவுக்கு வருகிறார்கள். அன்றைய தினத்திலிருந்து இளவரசரைப் பொன்னியின் செல்வன் என்றே அழைக்கின்றார்கள்.

இளவரசருக்குத் தன்னைக் காப்பற்றியது பொன்னி நதியல்ல என்ற எண்ணம் வலுப் பெறுகிறது. தன்னைக் காத்த மங்கையைத் தேடித் தேடி நகரெங்கும் செல்கிறார். ஆனால் ஈழத்தில் போர்தொடுக்க வரும்போதுதான் அந்த மங்கையைப் பார்க்கிறார். அவள் ஊமைப் பெண் எனவும், அவளுக்குத் தன் பெயரில் இருக்கும் பாசத்தினைக் கண்டும் திகைக்கின்றார். ஈழத்தில் பொன்னியின் செல்வனைச் சந்தித்த ஊமைப் பெண்ணான மந்தாகினி, இளவரசரை விரைவில் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேறச் சொல்கிறார். குளிர்க் காய்ச்சல் வீரர்களையும், இளவரசரையும் தாக்கலாம் என்றும் கூறுகிறாள். இளவரசர் காலதாமதம் செய்யாமல் அங்கிருந்து தன் படைகளுடன் கிளம்புகிறார்.

நீண்ட நாள்கள் கழித்து, வந்தியத்தேவனும், அருள்மொழிவர்மனும், ஆழ்வார்க்கடியான் நம்பியும் ஈழத்தீவில் நடந்து செல்கையில் மந்தாகினி தோன்றி எச்சரிக்கை செய்கிறாள். அவளுடைய எச்சரிக்கைப்படியே அவர்கள் சாலையோரம் நடந்த வந்தபோது, வீட்டின் சுவர் இடிந்துவிழுகிறது. அதிலிருந்து அனைவரும் தப்பிப் பிழைக்கின்றார்கள்.

சுந்தர சோழரின் காதலி தொகு

தனித்தீவில் வாழ்ந்துவந்த ஊமைப் பெண்ணைச் சுந்தர சோழர் தன் இளவயதில் காதலித்து வந்தாகக் குந்தவை தேவியிடம் கூறுகிறார். நாடு ஆபத்திலிருப்பதை உணர்ந்து அவளைப் பிரிந்து வந்ததாகவும், அவள் கனவில் தினம் வந்து துன்பம் தருவதாகவும், அதனாலேயே தன் மனம் காயமடைந்து உடல்நிலை பாழ்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கின்றார்.

புதினத்தின் இறுதியில் பழுவூர் இளையராணி நந்தினியின் தாய்தான் மந்தாகினி என்று அறிந்து கொள்கிறாள். வீரபாண்டியனின் இரு குழந்தைகளை அரண்மனையில் பெற்றெடுக்கின்றாள். ஆண் பிள்ளையை பாண்டிய இளவரசர் என்று அறியாமல் செம்பியன் மாதேவி வளர்க்கிறார். பெண் பிள்ளையை ஆழ்வார்க்கடியான் வளர்க்கின்றார். தன்னுடைய பிள்ளைகள் மீது கவனம் வைக்காமல் சுந்தர சோழர் பிள்ளையான அருள்மொழிவர்மனையே பிள்ளையாக எண்ணுகிறார்.

முதல் மந்திரி சுந்தர சோழரிடம் மந்தாகினி உயிரோடு இருப்பதை நிரூபிக்க அழைத்து வருகிறார். அவளுடைய தோற்றத்தினைக் கண்டு பயந்துவிடுகின்ற சுந்தர சோழரைச் சமாதானம் செய்ய, மந்தாகினியை அலங்கரித்து அழைத்துவருகிறார்கள். மந்தாகினி இறந்துவிட்டதை உண்மையென நம்பிய சுந்தர சோழர் அதன் பின் மாற்றமுறுகிறார். பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவனான சோமன் சாம்பவன் சுந்தர சோழரைக் கொல்ல எறியும் வேலை தடுத்துத் மந்தாகினி மரணம் அடைகின்றார்.

நூல்கள் தொகு

மந்தாகினியைக் கதைப்பாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

திரைப்படம் தொகு

மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திலூம், 2023 இல் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் மந்தாகினி மற்றும் நந்தினி கதாப்பாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். [1]

இவற்றையும் பார்க்கவும் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தாகினி_(கதைமாந்தர்)&oldid=3707656" இலிருந்து மீள்விக்கப்பட்டது