இளைய சைரஸ்

அகாமனிசியப் பேரரசின் இளவரசர்

இளைய சைரஸ் (Cyrus the Younger, கிரேக்கம்: Κῦρος Kyros ; கிமு 401 இல் இறந்தார்) என்பவர் அகாமனிசிய இளவரசரும் தளபதியும் ஆவார். இவர் கிமு 408 முதல் 401 வரை லிடியா மற்றும் ஐயோனியாவின் ஆளுநராக இருந்து ஆட்சி செய்தார். சைரஸ் இரண்டாம் டேரியஸ் மற்றும் பாரிசாடிஸ் ஆகியோரின் மகனாவார். இவர் கிமு 401 இல் பாரசீக அரியாசத்திலிருந்து தன் அண்ணனான இரண்டாம் அர்த்தசெராக்சை அகற்றி அதைக் கைப்பற்ற குனக்சா சமரில் ஈடுபட்டு இறந்தார்.

இளைய சைரஸ்
𐎤𐎢𐎽𐎢𐏁
இளைய சைரசின் காலத்தில், ஆசியா மைனர் மாகாணத்தில் அநாமதேய உருவப்படம். 478-387 கிமு 478-387 இல் அயோனியா, போகாயா நாணயத்திலிருந்து.
லிடியா
ஆட்சிக்காலம்கிமு 408–401
முன்னையவர்திசாபெர்ன்ஸ்
பின்னையவர்திசாபெர்ன்ஸ்
பிறப்புகிமு 423 இக்கு பிறகு
இறப்புகிமு 3 செப்டம்பர், 401
அரசமரபுஅகாமனிசியப் பேரரசு
தந்தைஇரண்டாம் டேரியஸ்
தாய்பரிசதிஸ்
மதம்சரதுசம்

சைரசின் வரலாறு, அவரது கிரேக்க கூலிப்படையினர் பின்வாங்கிய வரலாறு ஆகியவை குறித்து செனபோன் தனது அனபாசிஸ் என்ற நூலில் கூறியுள்ளார். மற்றொரு தரவு, அனேகமாக ஸ்டிம்பாலசின் சோபெனெட்டஸிலிருந்து, கிரேக்க வரலாற்றாளர் எபோரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] மேலும் இவர் குறித்த தகவல்களானது இரண்டாம் ஆர்டாக்செர்க்சசின் மருத்துவர் செட்சியாஸ் போடியஸ் மூலம் எடுக்கப்பட்ட குறிப்புகளில் கூடுதல் தகவல்கள் உள்ளன; புளூட்டாக்கின் லைவ்ஸ் ஆஃப் அர்டாக்செர்க்ஸ் II மற்றும் லைசாந்தர்; மற்றும் துசிடிடீசின் இஸ்ட்ரி ஆப் பெலோபொன்னேசியன் வார்[2] போன்றவை இளைய சைரஸ் பற்றிய தகவல்களின் துவக்க ஆதாரங்களாக உள்ளன.

வாழ்க்கை

தொகு
 
பெர்செபோலிசில் உள்ள நக்ஸ்-இ ரோஸ்டமில் கல்லறையில் இரண்டாம் அர்த்தசெக்சை சித்தரிக்கும் சிற்பம்.

செனோபோனின் கூற்றுப்படி, இளைய சைரஸ் கிமு 424 இல் அவரது தந்தை பதவி ஏற்ற பிறகு பிறந்தார். [1] இவருக்கு ஆர்சிகாஸ் (அவர் அரியணை ஏறியபோது அவரது பெயர் இரண்டாம் அர்டாக்செர்க்ஸஸ் என மாற்றப்பட்டது) ஒரு அண்ணனும், ஓஸ்டானெஸ் மற்றும் ஆக்சத்ரெஸ் என்ற இரண்டு தம்பிகளும் இருந்தனர். சைரசின் குழந்தைப் பருவத்தைப் பற்றி, புளூடார்க் எழுதியுள்ளார். அதில் "சைரஸ், தனது இளமை பருவத்திலிருந்தே, தலைசிறந்தவராகவும், வேகம் மிக்க தன்மையினராகவும் இருந்தார்; மறுபுறம், அர்டாக்செர்க்சஸ், எல்லாவற்றிலும் மென்மையானவராகவும், தன் செயலில் மிகுதியாக வளைந்து கொடுக்கும் தன்மையவராக இருந்தார்." [3] குழந்தைப் பருவத்தில் இருந்த சைரசின் சிறப்பைப் பற்றி செனோபோன் மிகவும் உயர்வாகக் குறிப்பிட்டார்:

அரசவைப் பயிற்சியில் சைரஸ் இரண்டுவிதமான நற்பெயரைப் பெற்றார்; முதலில் அவர் தன் சக மனிதரிடையே அடக்கத்திற்கான முன்னுதாரணமாக கருதப்பட்டார். தன்னைவிட மூத்தவர்களிடம் கீழ்ப்படிதலுடன் நடந்துகொண்டார்; அடுத்து குதிரையேற்றத்தில் கொண்ட திறமைக்காகவும், விலங்கின் மீது அன்பு பாராட்டுபவராகவும் இருந்தார். போர் பயிற்சியின்போது வில், ஈட்டி போன்றவற்றை பயன்படுத்துவதில், பொதுவாக பயிறிசி மேற்கொள்ளும் வீரர்களில் சிறந்தவராகவும், ஆர்வமுள்ள பயிற்சியாளராகவும் கருதப்பட்டார். குறிப்பிட்ட வயது வந்த உடனேயே, காட்டு விலங்குகளை எதிர்கொள்ளும் அபாயகரமான சாகசத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஒருமுறை ஒரு கரடி அவரை ஆவேசத்துடன் நெருங்கியது, அவர் அதனுடன் சண்டையிட்டார். அப்போது அவருடைய குதிரையிலிருந்து இழுக்கப்பட்டு, காயமுற்றார். அதன் வடுக்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் காணப்பட்டன. இறுதியில் அவர் அந்த விலங்கைக் கொன்றார். முதலில் அவரின் உதவிக்கு வந்தவரை அவர் மறக்கவில்லை, ஆனால் பலரின் பார்வையில் அவரை பொறாமைப்பட வைத்தார்.[4]

ஆசியா மைனரின் ஆளுநர் (கிமு 408-401) மற்றும் எசுபார்த்தாவிற்கு ஆதரவு

தொகு
 
சர்திசில் இளைய சைரஸ் மற்றும் எசுபார்த்தன் தளபதி லைசாந்தருக்கும் இடையிலான சந்திப்பு. இந்த சந்திப்பு செனபோனுடன் தொடர்புடையது.[5] பிரான்செஸ்கோ அன்டோனியோ க்ரூ (1618–1673) வரைந்தது.

கிமு 408 இல், ஏதென்சின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்த அல்சிபியாடிசின் வெற்றிகளுக்குப் பிறகு, இரண்டாம் டேரியஸ் ஏதென்சுக்கு எதிரான போரைத் தொடரவும் எசுபார்த்தன்களுக்கு வலுவான ஆதரவை வழங்கவும் முடிவு செய்தார். அவர் இளைய சைரசை ஆசிய மைனருக்கு லிடியா மற்றும் பிரிஜியா மேஜரின் ஆளுநராக (சாட்ராப்) கப்படோசியாவுக்கு அனுப்பினார். மேலும் பாரசீக படைகளின் தளபதியாகவும், அதாவது அனத்தோலியா பிராந்தியத்தின் இராணுவத் தளபதியாகவும் இருந்தார். அங்கு, சைரஸ் எசுபார்த்தன் தளபதியான லைசாந்தரை சந்தித்தார். பாரசீக இளவரசரின் உதவியுடன் கிரேக்கத்தின் முழுமையான ஆட்சியாளராக வருவதற்கு லைசாந்தர் இவரை நம்பியதைப் போலவே, சைரஸ் தான் அரசனாவதற்கு உதவ அணியமாக இருந்த ஒரு மனிதரைக் கண்டறிந்தார். இதன்பிறகு, சைரஸ் பெலோபொன்னேசியப் போரில் லைசாந்தருக்கு எல்லா வகைகளிலும் உதவினார். [1] சைரசை அவரது தந்தை டேரியஸ் சூசாவுக்கு திரும்ப அழைத்தபோது, இவர் ஆசியா மைனரின் அனைத்து நகரங்களிலிருந்து வரும் வருவாயை லைசாந்தரின் பொறுப்பில் விட்டார்.[6]

அந்த நேரத்தில், டேரியஸ் நோய்வாய்ப்பட்டு, மரணப் படுக்கையில் இருந்ததால் தன் மகனை அழைத்தார்;[7] சைரஸ் லைசாந்தரிடம் நிதி வருவாயை அளித்துவிட்டு சூசாவுக்குச் சென்றார்.[8] சைரசின் தாயார் பாரிசாடிஸ் இவருக்கு ஆதரவாக இருந்ததாகவும், இவரை அரியணையில் அமர்த்த விரும்பியதாகவும் புளூடார்க் எழுதினார், "இவரது தந்தை டேரியஸ் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், இவர் கடல்சார் மாகாணத்திலிருந்து அரசவைக்கு அழைக்கப்பட்டதால், முழு நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டார். இவர் இராச்சியத்தின் வாரிசாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் மூத்த மகன் அர்சிகாஸ் அரசராக அறிவிக்கப்பட்டார். அவனது பெயர் அர்டாக்செர்க்ஸ் என மாற்றப்பட்டது; மேலும் சைரஸ் லிடியாவின் துணைத் தலைவராகவும், கடல்சார் மாகாணங்களின் தளபதியாகவும் இருந்தார்." [3]

டேரியஸ் இறந்த உடனேயே, கிமு 404 இல் இரண்டாம் அர்டாக்செர்க்ஸஸ் பதவி ஏற்ற நேரத்தில், ( [9] ) சைரஸின் தனது சகோதரனைக் கொல்லும் திட்டத்தைக் டிசாபர்னஸ் கண்டித்தார். சைரஸ் பிடிபட்டார், ஆனால் பாரிசாட்டிசின் பரிந்துரையால், சைரஸ் அவர் ஆளுநராக உள்ள பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். புளூடார்க்கின் கூற்றுப்படி, "[அவரது கைது] மீதான அவரது மனக்கசப்பு அவரை முன்பை விட இராச்சியத்தின் அரியணை மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது." [3]

கிமு 405 இல், லைசாந்தர் ஈகோஸ்பொட்டாமி போரில் வென்றார். அதன் பிறகு எசுபார்த்தா கிரேக்க உலகில் அதிக செல்வாக்கு பெற்றதாக ஆனது. [10]

இரண்டாம் அர்டாக்செர்க்சசுக்கு எதிரான போர்ப் பயணம் (கிமு 401)

தொகு
 
ஜீன்-அட்ரியன் கிக்னெட், எபிசோட் இன் தி ரிட்ரீட் ஆஃப் த டென் தௌசண்ட் (1842). சைரசின் கிரேக்க கூலிப்படையினர் (" பத்தாயிரம் ") சுற்றி வளைக்கப்பட்டதைக் காட்டுகிறது.

ஐயோனியன் நகரங்களுக்காக காரியாவின் ஆளுநரான திசாபெர்னசுடன் சண்டையைத் தொடங்கயதன் மூலம் சைரஸ் ஒரு பெரிய படையைத் திரட்டினார். இவர் பேரரசுக்கு எப்போதும் கீழ்ப்படியாத தாரசில் உள்ள மலைவாழ் பழங்குடியினரான பிசிடியன்களுக்கு எதிராக ஒரு போர்ப் பயணத்துக்கு தயாராவதாக நடித்தார். [10]

கிமு 401 வசந்த காலத்தில், சைரஸ் தனது முழு படைகளையும் கிரேக்க கூலிப்படையான "பத்தாயிரம்" உட்பட ஒரு பெரிய இராணுவமாக ஒருங்கிணைத்தார். மேலும் தனது போர்ப் பயணத்தின் நோக்கத்தை அறிவிக்காமல் சர்திசிலிருந்து முன்னேறினார். [1] சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதென்சுக்கு எதிரான பெலோபொன்னேசியப் போரில் எசுபார்த்தாவுக்கு இவர் அளித்த ஆதரவைக் குறிப்பிடும் வகையில், "ஏதென்சுக்கு எதிரான அவர்களின் போரின்போது அவர்களுக்கு ஆதரவாக இருந்ததைப் போல அவர்களும் இவருக்கு நல்ல நண்பராக இருக்குமாறு " கேட்டுக்கொண்ட பின்னர், இளைய சைரஸ் எசுபார்த்தன்களின் ஆதரவைப் பெற்றார்.[11]

மன்னர் கடைசி நேரத்தில் திஸ்சபெர்னசால் எச்சரிக்கப்பட்டார். மேலும் அவசரமாக ஒரு படையைத் திரட்டினார்; சைரஸ் எதிரியை சந்திக்காமலேயே பாபிலோனியாவிற்கு முன்னேறினார். கிமு 401 அக்டோபரில் , குனாக்சா சமர் நடந்தது. சைரசிடம் 10,400 கிரேக்க ஹாப்லைட்டுகள் (குடிமக்கள்-சிப்பாய்கள்), 2,500 பெல்டாஸ்ட்கள் (இலகு காலாட்படை), மற்றும் ஏரியசின் தலைமையின் கீழ் சுமார் 10,000 ஆசியப் படைகள் இருந்தன. [10]

செனோபோனின் கூற்றுப்படி, போரின் முடிவானது அரசனின் தலைவிதியைப் பொறுத்தது என்பதை சைரஸ் உணர்ந்தார். ஆகவே, கிரேக்கர்களின் தளபதியான கிளியர்ச்சஸ் அர்தக்செர்க்சுக்கு எதிரான மையத்தை நோக்கி இருக்கவேண்டும் என்று விரும்பினார். இராணுவத்தின் சுற்றிவளைப்புக்கு அஞ்சிய கிளியர்கஸ், அதற்கு கீழ்ப்படியாமல் பக்கவாட்டில் நிலைகொண்டார். இதன் விளைவாக, திசாபெர்னசின் தலைமையிலான பாரசீகர்களின் இடது படைகள் சைரசின் மற்ற படைகளுடன் மோத வசதியாக இருந்தன; மையத்தில் இருந்த சைரஸ் அர்டாக்செர்க்சை தன்கைய்யால் கொல்லவேண்டி சென்றார். ஆனால் சைரஸ் கொல்லப்பட்டார். திசாபெர்னஸ் இளைய சைரசைக் கொன்றதாக அறிவித்தார். பின்னர் இராஜமாதா பரிசாடிஸ் தன் விருப்பமான மகனான இளைய சைரசைக் கொன்ற திசாபெர்னசை பழிவாங்கினார் என்பது தனிக்கதை. [10]

புளூட்டாக்கின் லைஃப் ஆஃப் ஆர்டாக்செர்க்ல் உள்ள படி, மித்ரிடேட்ஸ் என்ற இளம் பாரசீக வீரர், குனாக்சா சமரின்போது இளைய சைரஸ் என்பதை அறியாமல் தாக்கினார், சைரஸ் தனது குதிரையிலிருந்து விழுந்து, திகைத்துப் போனார். சில அமைச்சர்கள் சைரசைக் கண்டுபிடித்து அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் மன்னரின் முகாமைச் சேர்ந்தவர்களில் ஒரு வீரன் அவரது முழங்காலுக்குப் பின்னால் ஒரு ஈட்டிபோன்ற ஆயுதமான டார்ட் மூலம் தாக்கினார். பின்னர் அவரை ஒரு கல்லைக் கொண்டு தலையில் தாக்கினார். அதன் பிறகு சைரஸ் இறந்தார். புத்திசாலித்தனமாக, அரசவையில் சைரசைக் கொன்றதாக மித்ரிடேட்ஸ் பெருமையடித்துக்கொண்டார், அதை மனதில் வைத்த சைரசின் தாய் பாரிசாடிஸ் அவருக்கு பின்னர் மரணதண்டனை விதிக்க வைத்தார். சைரசின் கையையும் தலையையும் வெட்டிய அரசனின் மந்திரவாதியான மசாபேட்சையும் பழிவாங்கினாள். அதற்காக அவள் தன் மகன் அர்டாக்செர்க்சிடம் பகடை விளையாட்டில் அவனை பணையப் பொருளாக வாங்கி அவனை உயிருடன் உரித்துக் கொன்றாள்.[3]

பாரசீக துருப்புக்கள், கிரேக்கர்களை நேரடியாக தாக்குவதற்குப் பதிலாக, அவர்களை டைக்ரிசுக்கு அப்பால் உள்ள உட்பகுதியில் அவர்களை ஏமாற்றி, பின்னர் தந்திரத்தின் மூலம் தாக்கினர். அவர்களின் தளபதிகளை சிறைபிடித்தனர். பின்னர் கிரேக்கர்களை கருங்கடலுக்குச் செல்லலுமாறு கட்டாயப்படுத்தினர். [10]

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Meyer 1911.
  2. Strassler, R.B. (1996). The Landmark Thucydides: A Comprehensive Guide to the Peloponnesian War. Free Press New York. pp. 128, 549. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-82790-5.
  3. 3.0 3.1 3.2 3.3 Plutarch. "Artaxerxes". In A. H. Clough (ed.). Plutarch's Lives (1996 ed.).
  4. Xenophon. "I.IX". Anabasis.
  5. Rollin, Charles (1851). The Ancient History of the Egyptians, Carthaginians, Assyrians, Babylonians, Medes and Persians, Grecians, and Macedonians (in ஆங்கிலம்). W. Tegg and Company. p. 110.
  6. Xenophon (1906). Hellenica.
  7. Xenophon. "I.I". Anabasis.
  8. Plutarch. "Lysander". Plutarch's Lives.
  9. Revolt and Resistance in the Ancient Classical World and the Near East : In the Crucible of Empire. Collins, John J. (John Joseph), 1946-, Manning, Joseph Gilbert. Leiden. 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-33017-7. இணையக் கணினி நூலக மைய எண் 951955827.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 Meyer 1911, ப. 708.
  11. Xenophon. "I-2-22". Anabasis (1918 ed.). Cambridge, Massachusetts: Harvard University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைய_சைரஸ்&oldid=3990900" இலிருந்து மீள்விக்கப்பட்டது