மு. வரதராசன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
(மு.வரதராசர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் முனைவர்
மு. வரதராசன்
மு. வரதராசன்
மு. வரதராசன்
பிறப்புதிருவேங்கடம்
25 ஏப்ரல் 1912
வேலம்,
வட ஆற்காடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா,
(தற்போது
இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு10 அக்டோபர் 1974(1974-10-10) (அகவை 62)
மதராசு,
(தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர்மு.வ.
தொழில்தமிழ்ப் பேராசிரியர்
எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
கல்விMOL, MLit,Ph.D
காலம்1938 முதல் 1974 வரை
வகைஆய்வுக் கட்டுரைகள்
புதினங்கள்
கருப்பொருள்தமிழிலக்கியம்
வரலாறு
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்ய அகாதெமி
துணைவர்இராதா
பிள்ளைகள்அரசு, பாரி, நம்பி

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

மு.வரதராசனார், அன்றைய வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி - அம்மாக்கண்ணு தம்பதிக்குப் பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

மு.வ. வின் கல்வி,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928-ஆம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.

எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காகக் கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.

1931-இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935-இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார்.

1935-ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்குத் திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-இல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.

பேராசிரியராகப் பணி தொகு

1939-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக்கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944-இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.

1948-இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் முதல் முதலாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.

1939-இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945-இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே 1948-ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

பின்னர் 1971-இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, 1974 வரை சிறப்புற பணியாற்றினார்.

மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.

சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப் பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக் குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ்க் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

மாணவர்களுக்கு உதவி தொகு

மாணவர்களுக்குத் தேடிச் சென்று உதவும் குணம் கொண்டவர். கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் கட்ட இயலாத மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவியையும் செய்தவர். நோயுற்ற போதும் உதவுவார். இவர் செய்யும் உதவிகள் இவர் தம் துணைவியாருக்குக் கூடத் தெரியாது. மேலும் உதவி பெறும் மாணவரது நண்பர்களும் அறியாவண்ணம் உதவிபெறும் மாணவருக்குத் தடைவிதித்து விடுவார்.[1]

கல்வித்துறை ஆய்வு மாநாடுகள் தொகு

சோவியத் நாடு, பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலான பல நாடுகளின் கல்வித்துறை ஆய்வு மாநாடுகளில் பங்கு பெற்றவர்.[1]

தாக்கங்கள் தொகு

மு.வரதராசனார் காந்தியடிகள், திரு.வி.க., தாயுமானவர், இராம தீர்த்தர், இராமலிங்க சுவாமிகள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், நம்மாழ்வார், கவிஞர் தாகூர், வி. ச. காண்டேகர், பெர்னாட்ஷா, சாமர்செட் மாம் ஆகியோரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.

ஈர்க்கப்பட்டோர் தொகு

இவரால் ம. ரா. போ. குருசாமி, முனைவர் ந. சஞ்சீவி, முனைவர் சி. பாலசுப்பிரமணியன், ஈ. ச. விசுவநாதன் முதலானோர் ஈர்க்கப்பட்டனர்.

எழுத்துப் பணி தொகு

நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார்.

கால அடிப்படையில் பொருள் அடிப்படையில்
1939
1 குழந்தைப் பாடல்கள்
2 இளைஞருக்கான இரு சிறுகதைகள்
3 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 1
4 கழகத் தமிழ் இலக்கணம் 1
5 கழகத் தமிழ் இலக்கணம் 2

1940
6 படியாதவர் படும்பாடு
7 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள்-2
8 கழகச் சிறுகதைகள் 1
9 கழகச் சிறுகதைகள் 2
10 கழகச் சிறுகதைகள் 3

1941
11 கழகத் தமிழ் இலக்கணம் 3

1945
12 கண்ணுடைய வாழ்வு

1946
13 செந்தாமரை
14 ஓவச் செய்தி

1947
15 கள்ளோ? காவியமோ?
16 கி.பி. 2000
17 தமிழ் நெஞ்சம்
18 மொழி நூல்

1948
19 பாவை
20 அந்த நாள்
21 விடுதலையா?
22 அன்னைக்கு
23 அறிஞர் பெர்னாட்ஷா
24 காந்தியண்ணல்
25 மணல் வீடு
26 திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்
27 அறமும் அரசியலும்
28 அரசியல் அலைகள்

1949
29 கவிஞர் தாகூர்
30 திருக்குறள் தெளிவுரை
1950
31 மலர்விழி
32 கண்ணகி
33 மாதவி
1951
34 பெற்ற மனம்
35 பச்சையப்பர்

1952
36 அல்லி
37 குறட்டை ஒலி
38 மனச்சான்று
39 முல்லைத் திணை
40 மொழியின் கதை
41 எழுத்தின் கதை
42 சொல்லின் கதை

1953
43 கரித்துண்டு
44 தம்பிக்கு
45 தங்கைக்கு
46 இலக்கிய ஆராய்ச்சி
47 நற்றிணை விருந்து

1954
48 ஓவச் செய்தி
49 காதல் எங்கே?
50 நண்பர்க்கு
51 யான் கண்ட இலங்கை
52 நெடுந்தொகை விருந்து
53 நெடுந்தொகைச் செல்வம்
54 குழந்தை
55 மொழி வரலாறு
56 மொழியியற் கட்டுரைகள்

1955
57 பழியும் பாவமும்
58 குறுந்தொகைச் செல்வம்

1956
59 கயமை
60 நெஞ்சில் ஒரு முள்
61 குறுந்தொகை விருந்து
62 நடைவண்டி
63 கொங்குதேர் வாழ்க்கை
64 கல்வி
65 நாட்டுப் பற்று

1957
66 The Treatment of Nature in Sangam Literature

1958
67 அகல்விளக்கு
68 நற்றிணைச் செல்வம்
69 குருவிப்போர்

1959
70 மூன்று நாடகங்கள்
71 இலக்கியத் திறன்
72 மொழிப்பற்று
73 பெண்மை வாழ்க
74 உலகப் பேரேடு

1960
75 வாடாமலர்
76 இலக்கிய மரபு
77 இளங்கோ அடிகள்

1961
78 மண்குடிசை
79 மண்ணின் மதிப்பு

1962
80 திரு.வி.க.
81 இலக்கியக் காட்சிகள்

1967
82 Ilango Adigal
1968
83 குறள் காட்டும் காதலர்

1972
84 தமிழ் இலக்கிய வரலாறு

1973
85 நல்வாழ்வு

1975
86 டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள்

1977
87 டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்

1983
88 தாயுமானவர்

2012
89 மு.வ.வின் முன்னுரைகள்
90 மு.வ.வின் கட்டுரைகள் 1
91 மு.வ.வின்கட்டுரைகள் 2
சிறுவர்க்கான இலக்கியங்கள்
1 குழந்தைப் பாடல்கள்
2 இளைஞருக்கான இரு சிறுகதைகள்
3 படியாதவர் படும்பாடு
4 கண்ணுடைய வாழ்வு

தழுவல் மொழிபெயர்ப்புகள்
5 கழகச் சிறுகதைகள் 1
6 கழகச் சிறுகதைகள் 2
7 கழகச் சிறுகதைகள் 3

மொழிபெயர்ப்புகள்
8 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 1
9 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 2

இலக்கணம்
10 கழகத் தமிழ் இலக்கணம் 1
11 கழகத் தமிழ் இலக்கணம் 2
12 கழகத் தமிழ் இலக்கணம் 3

நெடுங்கதை
13 செந்தாமரை
14 கள்ளோ? காவியமோ?
15 கி.பி. 2000
16 பாவை
17 அந்த நாள்
18 மலர்விழி
19 பெற்ற மனம்
20 அல்லி
21 கரித்துண்டு
22 கயமை
23 நெஞ்சில் ஒரு முள்
24 அகல்விளக்கு
25 மண்குடிசை
26 வாடா மலர்

சிறுகதை
27 விடுதலையா?
28 குறட்டை ஒலி
29 பழியும் பாவமும்

நாடகம்
30 பச்சையப்பர்
31 மூன்று நாடகங்கள்
32 காதல் எங்கே?
33 மனச்சான்று

கடித இலக்கியம்
34 அன்னைக்கு
35 தம்பிக்கு
36 தங்கைக்கு
37 நண்பர்க்கு
38 டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்

பயண இலக்கியம்
39 யான் கண்ட இலங்கை

வாழ்க்கை வரலாறு
40 அறிஞர் பெர்னாட்ஷா
41 காந்தியண்ணல்
42 கவிஞர் தாகூர்
43 திரு.வி.க

திறனாய்வு
44 இலக்கிய ஆராய்ச்சி
45 இலக்கியத் திறன்
46 இலக்கிய மரபு
47 இலக்கியக் காட்சிகள்


இலக்கிய ஆய்வு
48 ஓவச் செய்தி
49 தமிழ் நெஞ்சம்
50 மணல்வீடு
51 திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்
52 கண்ணகி
53 மாதவி
54 முல்லைத்திணை
55 நற்றிணைவிருந்து
56 நற்றிணைச் செல்வம்
57 குறுந்தொகை விருந்து
58 குறுந்தொகைச் செல்வம்
59 நெடுந்தொகை விருந்து
60 நெடுந்தொகைச் செல்வம்
61 நடைவண்டி
62 கொங்குதேர் வாழ்க்கை
63 புலவர் கண்ணீர்
64 இளங்கோ அடிகள்
65 குறள் காட்டும் காதலர்
66 தாயுமானவர்
67 மு.வ.வின் கட்டுரைகள் பகுதி1
68 மு.வ.வின் கட்டுரைகள் பகுதி2

உரை
69 திருக்குறள் தெளிவுரை

இலக்கிய வரலாறு
70 தமிழ் இலக்கிய வரலாறு

சிந்தனைக் கட்டுரைகள்
71 அறமும் அரசியலும்
72 அரசியல் அலைகள்
73 குழந்தை
74கல்வி
75 மொழிப்பற்று
76 நாட்டுப்பற்று
77குருவிப்போர்
78 பெண்மை வாழ்க
79 உலகப்பேரேடு
80 மண்ணின் மதிப்பு
81 நல்வாழ்வு

மொழியியல்
82 மொழிநூல்
83 மொழியின் கதை
84 எழுத்தின் கதை
85 சொல்லின் கதை
86 மொழி வரலாறு
87 மொழியியற் கட்டுரைகள்

முன்னுரைகள்
88 மு.வ.வின் முன்னுரைகள்

மேற்கோள்கள்
89 டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள்

ஆங்கில நூல்கள்
90 The Treatment of Nature in Sangam Literature
91 Ilango Adigal

இவரது திருக்குறள் தெளிவுரையை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

மு.வ., தான் எழுதிய நூல்களுள் பெரும்பாலானவற்றை தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டின் வழியாக வெளியிட்டார். அவற்றின் விற்பனை உரிமையைப் பாரி நிலையத்திற்கு வழங்கினார்.

மு.வ.எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படமான மு.வரதராசனின் கதைகள் தொகு

விருதுகள் தொகு

மு.வ.வின் அகல் விளக்கு எனும் புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மு.வ.வைப் பற்றிய நூல்கள் தொகு

  1. மு.வ.வின் நாவல்கள், முனைவர் இரா.மோகன்
  2. மு.வ. களஞ்சியம், முனைவர் இரா. மோகன்
  3. மு.வ. நினைவுமலர், மதுரை பல்கலைக் கழகம், மதுரை.
  4. மு.வ. ஆய்வடங்கல், மதுரை பல்கலைக் கழகம், மதுரை.
  5. மு.வ.வின் கடிதங்கள், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.
  6. மு.வ. கருந்தரங்கக் கட்டுரைகள், மதுரை பல்கலைக் கழகம், மதுரை.
  7. பேராசிரியர் மு.வ. பேராசிரியர் அ.மு.ப. கருத்தரங்கக் கட்டுரைகள்
  8. மு.வ. முப்பால், ம. ரா. போ. குருசாமி
  9. பெருந்தகை மு.வ., முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
  10. வணக்கத்திற்குரிய வரதராசனார், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
  11. பேராசான் மு.வ., முனைவர் மறைமலை இலக்குவனார்
  12. மூவா நினைவுகள், ம. ரா. போ. குருசாமி

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஏப்ரல் 2012; பக்கம் 32;33

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._வரதராசன்&oldid=3651305" இலிருந்து மீள்விக்கப்பட்டது