வைணு பாப்பு வானாய்வகம்

ஏலகிரிக்கு அருகே

வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்துள்ளது. இது, இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும். இந்தியாவின் பெரிய வானியல் தொலைநோக்கிகளில் ஒன்று இங்கு இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது. இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது. இந்திய இயற்பியலாளர், இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது[1].

வைணு பாப்பு வானியல் ஆய்வு மையம்,காவலூர்
நிறுவனம் இந்திய வான் இயற்பியல் ஆய்வகம்
அமைவிடம் காவலூர், திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அச்சுத்தூரங்கள் 12°34′0″N 78°50′0″E / 12.56667°N 78.83333°E / 12.56667; 78.83333
கடல்மட்ட உயரம் 700 m (2,297 ft)
குத்துயரம் 700 m (2,297 ft)
வலைப்பக்கம் [2] பரணிடப்பட்டது 2005-09-05 at the வந்தவழி இயந்திரம்
வைணு பாப்பு தொலைநோக்கி 2.34 மீட்டர் எதிரொளிப்பான்
தொலைநோக்கிகள்
காரல் சீயஸ் ஏஜி தொலைநோக்கி 1 மீட்டர் எதிரொளிப்பான்
கேசகிரேன் தொலைநோக்கி 75 செ.மீ எதிரொளிப்பான்
சிமிட் தொலைநோக்கி 45 செ.மீ தொலைநோக்கி
ஒளி அளவியல் தொலைநோக்கி 34 செ.மீ எதிரொளிப்பான்
பிற கருவிகள்
எஃப் பீ ஐ பேப்ரி-பெராட் குறுக்கீட்டுமானி
93-அங்குல தொலைநோக்கி
40-அங்குல தொலைநோக்கி

வரலாறு தொகு

1960 ஆம் ஆண்டில் வைணு பாப்பு கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். வானில் உள்ள விண்வெளிப் பொருட்களை உற்று கவனிக்க ஏற்ற இடமாக ஜவ்வாது மலையில் உள்ள சிறிய கிராமமான காவலூரை இவரே கண்டறிந்தார். காவலூரில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட காரணத்தினால் இது காவலூர் வானியல் ஆய்வகம் என்று பெயர் பெற்றது. பின்னர் இது நிறுவனமாக தன்னாட்சி பெற்று இதன் தலைமையிடம் பெங்களூருக்கு மாற்றப்பட்டு புதிய இந்திய வான் இயற்பியல் மையமாக உருவானது.

1968ஆம் ஆண்டு 38 செ.மீ. விட்டமுடைய ஒரு தொலைநோக்கியுடன் காவலூர் தொலைநோக்கியகம் துவக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு வியாழன் கோளின் பரப்பில் ஏற்படும் மாறுபாடுகளைப் பற்றி ஆராய 61செ.மீ. விட்டமுள்ள எதிரொளிக்கும் தொலைநோக்கி நிறுவப்பட்டது. இவ்விரு தொலைநோக்கிகளும் வானியல் கழகத்தின் பணிமனையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். 1972ஆம் ஆண்டு மிகப்பெரிய 100 செ.மீ. விட்டமுடைய தொலைநோக்கி நிறுவப்பட்டது. இது மிகவும் நுட்பமான ஒளியியல், மின்னணுவியல் சாதனங்களைக் கொண்ட தொலைநோக்கியாகும். இத்தொலைநோக்கியில் மிக கூடுதல் அளவு நிறம்பிரிக்கச் செய்யும் மேக நிறமானியும், ஒற்றை ஒளி பிரிப்புச் சாதனமும் அமைக்கப்பட்டிருந்தது. இது பொருட்கள் வெளியிடும் நிறமாலையை ஆய்வு செய்ய உதவும். 1985 ஆம் ஆண்டு 234 செ.மீ. விட்டமுள்ள தொலைநோக்கி நிறுவப்பட்டது. இதன் மூலம் உலகின் பெரிய தொலை நோக்கிகள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்தது.

1786 ஆம் ஆண்டு வில்லியம் பெட்ரி என்பவர் சென்னை எழும்பூரில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில், அவரது தனிப்பட்ட ஆய்வுக்காக அமைத்த ஆய்வகத்தில் இருந்து இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தின் தோற்றம் தொடங்குகிறது. இந்த ஆய்வகம் மெட்ராஸ் வானியல் ஆய்வகம் என்றழைக்கப்பட்டது. பின்னர் 1899 ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வகம் கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வகமாக செயற்படத் தொடங்கியது.

அமைவிடம் தொகு

தொலைநோக்கி நிறுவுவதற்கு தேர்வு செய்யப்படும் இடம் சில முக்கிய பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். சிறிது உயரமான இடமாகவும், வருடத்துக்கு பல நாட்கள் மேகமூட்டமில்லாமலும், நகர வெளிச்சத்தால் பாதிக்கப்படாமலும் அவ்விடம் இருக்க வேண்டும். இப்பண்புகள் அமையப்பெற்றிருக்கும் இடமாக வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. காவலூர் வானியல் ஆய்வு மையம் நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

தமிழக வனப்பகுதியில் பரவியிருக்கும் இவ்வெப்ப மண்டலப் பகுதியில் மான், பாம்பு மற்றும் தேள் போன்ற சில வன உயிரினங்களும் அவ்வப்போது தோற்றம் கொண்ட சில மருத்துவத் தாவரங்களும் காணப்படுகின்றன. தவிர பல வகைப் பறவைகள் இவ்வளாகத்தில் காணப்படுகின்றன. இந்த ஆய்வகம் கடல்மட்டத்தில் இருந்து 725 மீட்டர் உயரத்தில் உள்ளது. தீர்க்கரேகையாக 78 ° 49.6 கிழக்கும் 'அட்சரேகையாக 12 ° 34.6 வடக்கும் இந்த ஆய்வகத்தின் அமைவிடமாக உள்ளது. தவிர இந்த ஆய்வகம் நகர விளக்குகள் மற்றும் தொழில்துறை பகுதிகளில் இருந்து நியாயமான தொலைவில் விலகி இருக்கிறது.

நகர விளக்குகள் மற்றும் தொழில்துறை பகுதிகளில் இருந்து போதுமான தொலைவில் காவலூர் விலகி இருக்கிறது என்பதோடு இவ்விடம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாகவும் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு அரைவட்டங்களையும் சமமாக கவனிக்க இயலும் என்ற காரணத்தாலேயே இவ்விடம் தேர்வு செய்யப்பட்டது. கூடுதலாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இவ்விடத்தின் தீர்க்கரேகை செல்வதால் இங்கிருந்து தெற்கு வான்பொருட்களை கவனிக்கும் வானியல் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காவலூர் தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு வடமேற்கில் 200 கி.மீ தூரத்தில் வாணியம்பாடிக்கு அருகிலும் பெங்களூருக்கு வடகிழக்கில் 175 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. வானியல் ஆய்வு மையம் உள்ள இவ்வூர் தொலைநோக்கி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வானியல் ஆய்வு மையத்திற்கு 29 கி.மீ அருகில் வாணியம்பாடி தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது.

கண்டுபிடிப்புகள் தொகு

(ஒரு மீட்டர்) 1 மீ தொலைநோக்கியின் உதவியுடன் தொகு

45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன் தொகு

1988 பெப்ருவரி 17 அன்று ஒரு சிறுகோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த இருபதாம் நூற்றாண்டின் முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது [கணித மேதை ராமானுஜனினின் நினைவாக.[3][4]

பிற கண்டுபிடிப்புகள் தொகு

  • 1984 - சனி கோளைச் சுற்றி ஒரு மெல்லிய கோள்வெளி வளையம் உள்ளது காவலூரிலிருந்து முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் பார்வையிடுதல் தொகு

ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும்; வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ பார்வையாளர் தொலைநோக்கி மூலம் இரவு வானம் காட்டப்படும்.

வைணு பாப்பு தொலைநோக்கி 7-வது முறையாக அலுமினியம் பூசப்படுதல் தொகு

2009 நவம்பர் 4 முதல் 6 வரை 2.34 மீ முதன்மை ஆடிக்கு அலுமினியம் பூச்சேற்றப்பட்டது. இவ்வாடியின் நிறை 3.5 டன்கள் ஆகும்.

உசாத்துணை தொகு

  • காவலூரில் தொலைநோக்கியகம்,கட்டுரை, துளிர் இதழ், ஜூலை, 1991

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைணு_பாப்பு_வானாய்வகம்&oldid=3848553" இலிருந்து மீள்விக்கப்பட்டது