அவந்தி நாடு

பண்டைய பரத கண்ட நாடுகளுள் ஒன்று

அவந்தி நாடு (Avanti Kingdom) பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். தற்கால மால்வா, மேற்கு நிமோர் மாவட்டம் மற்றும் கிழக்கு நிமோர் மாவட்டப் பகுதிகளே அவந்தி நாடாகும். அவந்தி நாடு குறித்து மகாபாரத காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவந்தி நாடு பேட்வா ஆற்றால் வடக்கு அவந்தி மற்றும் தெற்கு அவந்தி என இரண்டாக பிரிந்துள்ளது. தெற்கு அவந்தி பகுதிக்கு மகிழ்மதி நகரம் தலைநகராகவும்; வடக்கு அவந்தி பகுதிக்கு சப்த மோட்ச புரிகளில் ஒன்றான உஜ்ஜைன் நகரம் தலைநகராக விளங்கியது.

பண்டைய அவந்தி நாடு

மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் காலத்தில் ஒன்று பட்ட அவந்தி நாட்டிற்கு உஜ்ஜைன் நகரம் தலைநகராக இருந்தது. அவந்தி நாட்டின் மன்னர் நந்திவர்தனன், மகத நாட்டின் சிசுநாகனை வென்றவர். பின்னர் அவந்தி, மகதப் பேரரசில் இணைக்கப்பட்டது. மௌரியப் பேரரசர் அசோகர் இளைமையில் அவந்தி நாட்டின் ஆளுநராக இருந்தவர்.

மகாபாரதக் குறிப்புகள் தொகு

பண்டைய பாரத நாடுகளில் அவந்தி தொகு

மகாபாரத காவியத்தில் பண்டைய பரத கண்டத்து நாடுகளையும், பல்வேறு இன மக்களை குறிப்பிடும் இடத்தில், அவந்தி நாட்டுடன் குந்தி நாடு, விதர்ப்ப நாடு, சௌராட்டிர நாடு, சேதி, அஸ்மகர்கள், கரூசகர்கள், கோப இராஷ்டிரர்கள், மகத நாடு, மல்ல அரசுகளும் குறிக்கப்பட்டுள்ளது.[1] அவந்தி நாடு கல்வியிலும், செல்வத்திலும் செழிப்பு மிக்க நாடாக விளங்கியது என மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது.[2] பரத கண்டத்தின் தெற்கில் உள்ள விதர்ப்ப நாடு, வடக்கின் மகத நாடு, கிழக்கின் துவாரகை போன்ற நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அவந்தி நாடு வழியாகச் சென்றதால், அவந்தி மத்திய இந்தியாவின் பெரும் கல்வி மையமாகவும்; வணிக மையமாகவும் திகழ்ந்தது.[3]

இராசசூய வேள்வியில் அவந்தி அரசன் தொகு

இந்திரப்பிரஸ்தத்தில் தருமன் நடத்திய இராசசூய வேள்வியில், பரத கண்டத்தின் பல நாட்டு மன்னர்களுடன் அவந்தி நாட்டு மன்னரும் வருகை வந்து, தருமனுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.[4]

குருச்சேத்திரப் போரில் தொகு

குருச்சேத்திரப் போரில் அவந்தி நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியின் மன்னர்களும்; சகோதரர்களுமான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர், ஆளுக்கு ஒரு அக்குரோணி படைகளுடன், கௌரவர் அணி சார்பாக, பாண்டவர் அணிக்கு எதிராகப் போரிட்டனர். (மகாபாரதம், பீஷ்ம பருவம், அத்தியாயம் 19) (5:19)

பீஷ்மரின் தலைமையிலான கௌரவர் அணியின் படைத்தலைவர்களாக, அவந்தி நாட்டின் விந்தனும், அனுவிந்தனும் போரிட்டனர். பீஷ்மருக்குப் பின்ன்னர் துரோணரின் தலைமையிலும் அவந்தி நாட்டு மன்னர்கள் படைத்தலைவர்களாக போரிட்டனர். அவந்தி நாட்டு மன்னர்களான விந்தனையும், அனுவிந்தனையும் அருச்சுனன் போரில் கொன்றார்.[5]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. (மகாபாரதம் பீஷ்ம பருவம் அத்தியாயம் 9, (6,9)
  2. மகாபாரதம் விராட பருவம், அத்தியாயம் 1) (4:1)
  3. (மகாபாரதம் வன பருவம், அத்தியாயம் 3) (3: 61)
  4. துரியோதனன் விவரித்த காணிக்கைப் பட்டியல் - சபாபர்வம் பகுதி 50
  5. விந்தானுவிந்தர்களைக் கொன்ற அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 098
  • Kisari Mohan Ganguli, The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose, 1883-1896.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அவந்தி_நாடு&oldid=3328626" இலிருந்து மீள்விக்கப்பட்டது