உஜ்ஜைன்
உச்சைன் மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை உஞ்சேனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் உஞ்சை எனத் தமிழ்ப்படுத்திப் பெருங்கதை என்னும் நூல் வழங்குகிறது.[3] இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது உச்சைன் மாவட்டத்தினதும், உச்சைன் பிரிவினதும் நிர்வாக மையமாகும்.
உச்சைன் | |
— நகரம் — | |
அமைவிடம் | 23°10′58″N 75°46′38″E / 23.182778°N 75.777222°E |
நாடு | ![]() |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | உச்சைன் |
ஆளுநர் | ஓம் பிரகாஷ் கோலி, மங்குபாய் சாகன்பாய் படேல்[1] |
முதலமைச்சர் | சிவ்ராஜ் சிங் சௌஃகான்[2] |
மக்கள் தொகை | 429,933 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 491 மீட்டர்கள் (1,611 அடி) |
முற்காலத்தில் இது உச்சயினி என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உச்சயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உச்சைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவனுடைய 12 சோதிர்லிங்கங்களில் ஒன்றான உச்சைன் மகாகாலேசுவரர் கோயில் இங்கேயே உள்ளது.
உச்சைன் நகரம் முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ஒன்றாக உள்ளது.
வரலாறு தொகு
உஜ்ஜையினி என்னும் பெயரில் இந்நகரம் பற்றிய குறிப்பு புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவந்தி நாட்டின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான அசோகர் மௌரியப் பேரரசின் மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் சுங்கர்களும், சாதவாகனர்களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், மேற்கு சத்ரபதிகள் மற்றும் சாகர்களும் இந்நகருக்காகப் போட்டியிட்டனர். சாதவாகன மரபு முடிவுக்கு வந்தபின்னர் கிபி 2-4 ஆம் நூற்றாண்டுகள் வரை இந் நகர் சாகர்களிடம் இருந்தது. குப்தர்கள் சாகர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னர் இது குப்தப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றானது. விக்கிரமாதித்தன் எனப்பட்ட இரண்டாம் சந்திரகுப்தனின் மரபு வழித் தலைநகரமாக இது கருதப்பட்டது. இவனது அரசவையிலேயே சமஸ்கிருத இலக்கியத்தின் ஒன்பது மணிகள் என்று கொள்ளத்தக்க புலவர்கள் ஒன்பதின்மர் இருந்ததாக அறியப்படுகிறது.
பெருங்கதை என்னும் நூலில் பிரச்சோதனன் என்னும் அரசன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[4]
உஜ்ஜைன் அடையாளம் தொகு
தொல்லியலாளர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் பொறுத்தமட்டில், ‘உஜ்ஜைன் அடையாளம்‘ (Ujjain symbol) என்ற ஒரு சொற்றொடர், இன்றும் பாவனையில் இருந்து வருகிறது. இந்தக் குறிப்பிட்ட அடையாளமானது உஜ்ஜைன் என்ற, இந்த இடத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட பெருமெண்ணிக்கையிலான நாணயங்களில் இடப்பட்டுக் காணப்பட்டதால், அதற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ என்று பெயரிட்டனர். இந்த அடையாளமானது இரண்டு சம அளவான நேர்கோடுகள் சமச்சீராக இருக்கும் விதத்தில் ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக வைக்கப்பட்டு, அவற்றின் முனைகளில் சம அளவுகளிலான முழுமையான வட்டங்களோ, அல்லது வளையங்களோ வைக்கப்பட்ட அடையாளமாகும். இந்த அடையாளத்திற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ எனப் பெயரிட்டவர் ஆய்வாளரான A. Cunningham ஆகும். இந்த அடையாளமானது இந்தியாவின் பல்வேறு வகையான நாணயங்களில் பல்வேறு அடையாளங்களுடன் இடப்பட்டுக் காணப்படுகிறது. இது எதனை அடையாளப்படுத்துகிறது என்பது பற்றி, பல்வேறுபட்ட முரண்பட்ட கருத்துக்களையே ஆய்வாளர்கள் தெரிவித்து வந்துள்ளனர். இன்றும் இந்த அடையாளம் எதனை அடையாளப்படுத்துகிறது என்பதைத் தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் சரியாக அறியதுமுடியாதுதான் இருந்து வருகின்றனர்.
இதனையும் காண்க தொகு
ஆதாரங்கள் தொகு
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ உஞ்சைக் காண்டம் - கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.
- ↑ கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்