ஈழப் புரட்சி அமைப்பு

இலங்கையில் செயல்படும் புரட்சிகர இடதுசாரி இயக்கம். முன்னாள் ஆயுத போராட்ட குழு
(ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈரோஸ் (EROS) எனும் சுருக்கப் பெயரால் அறியப்படும் ஈழப்புரட்சி அமைப்பு[1] (Eelam Revolutionary Organisation, சிங்களம்: ඊළම් විප්ලවවාදී සංවිධානය) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் இடதுசாரி ஈழ இயக்கமாகும். இது ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students) எனவும் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. மார்க்சிய, லெனினிச சிந்தனைகளை வழிகாட்டியாக கொண்ட இவ்வமைப்பு பருத்தித்துறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டக்களப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஈழம் எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை, பாலஸ்தீனம், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த அமைப்பின் போராளிகள் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தனர். பன்னாட்டு ரீதியாக அரசியற் தொடர்பாடற் கட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்தது.

ஈழப்புரட்சி அமைப்பு
Eelam Revolutionary Organization
சுருக்கக்குறிஈரோஸ்
தலைவர்கூட்டுத்தலைமை
பொதுச் செயலாளர்வே. பாலகுமாரன்
நிறுவனர்இ. இரத்தினசபாபதி, வே. பாலகுமாரன், சங்கர் ராஜி, பாலநடராஜ ஐயர், அருள்பிரகாசம்
குறிக்கோளுரைநாம் ஈழவர் - நமது மொழி தமிழ் - நமது தேசம் ஈழம்
தொடக்கம்3 சனவரி 1975 (1975-01-03)
இணைந்ததுதமிழீழ விடுதலைப் புலிகள்
தலைமையகம்திருக்கோணமலை
செய்தி ஏடுதர்க்கீகம், பொதுமை, ஈழம்
மதியுரையகம்ஈழவர் இடர்தீர
மாணவர் அமைப்புஈழமாணவர் பொதுமன்றம் (GUES)
இளைஞர் அமைப்புமாணவர் இளைஞர் பொதுமன்றம் (GUYS)
அரசியல் பிரிவுஈழவர் சனநாயக முன்னணி
ஆய்வு பிரிவுஈழ ஆய்வு நிறுவனம்
கொள்கைபொதுவுடைமை, மார்க்சியம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
தேசியக் கூட்டணிஈழ தேசிய விடுதலை முன்னணி
பன்னாட்டுத் தொடர்புபலஸ்தீன விடுதலை இயக்கம்
பண்உன்னுள் இருக்கும்! ஓங்கார மாசக்தி ஓங்கி வளரட்டும் விடுதலை தாங்கி அருளட்டும்!
இலட்சியம்மன்னார் முதல் மட்டக்களப்பு வரை, பருத்தித்துறை முதல் பதுளை வரை,பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவ சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தல்
இணையதளம்
www.eros.lk

இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் ஈழப் புரட்சி அமைப்பு தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியற் கட்சி ஒன்றினை இலங்கையில் பதிவு செய்திருந்தது. 1989 பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 13 இருக்கைகளைக் கைப்பற்றியது.

1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல், இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துகள், வளங்கள் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.[2]. பெருமளவிலான உறுப்பினர்கள் வே.பாலக்குமாரின் தலைமையில் விடுதலைபுலிகளுடன் இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்தது.

வரலாறு தொகு

தோற்றமும் வளர்ச்சியும் தொகு

1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3ஆம் திகதி லண்டன் நகரில் இ. இரத்தினசபாபதி என்பவரால் ஈரோஸ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது[3] அமைப்பின் நிறுவனப் பணிகளில் இரத்தினசபாபதியுடன், வே. பாலகுமாரன், சங்கர் ராஜி, பாலநடராஜ ஐயர், அருட்பிரகாசம் ஆகியோரும் பங்கெடுத்தனர்.

அரசியல் நடவடிக்கைகள் தொகு

ஆரம்பகாலகட்டத்தில் பலத்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஈரோஸ் அமைப்பு, அவ்வியக்கத்திடம் இராணுவப் பயிற்சி பெற சிலரை லெபனானிற்கு அனுப்பி வைத்தது.

இலங்கையில் குறிப்பிடத்தக்க முதல் அரசியல் நடவடிக்கையாக, 1976 ஆம் ஆண்டு வவுனியாவில் கண்ணாதிட்டி என்ற இடத்தில் கண்ணாத்திட்டி விவசாய கூட்டுப்பண்ணை எனும் பண்ணையை ஆரம்பித்தது. இப்பண்ணையில் ஈரோஸ் அமைப்பு பின்பற்றி மார்க்சிய பொருளாதார சித்தாந்தங்களை பரீட்சித்து பார்த்தது. பலத்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் நாடு திரும்பி, இந்த பண்ணையில் ஆயுதப் பயிற்சிகளைத் தொடர்ந்ததோடு மேலும் பலருக்கு ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கினர். இப்பண்ணையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் ஆயுதப் பயிற்சி பெற்றார்.[4] 1978 ஆம் இப்பண்ணையில் இலங்கை இராணுவத்தினர் சோதனை நடாத்தி 12 பேரை கைது செய்தனர்.

ஈரோஸ் அமைப்பு தமிழர் பகுதிகளில் மேலும் பல பண்ணைகளை உருவாக்கி அமைப்பு உறுப்பினர்களின் சீவனப்பாட்டை ஈடுசெய்ததுடன், அரசியல் வகுப்புக்களை நடாத்தி உறுப்பினர்களை பயிற்றுவித்தது.[சான்று தேவை]

ஈரோசின் ஆய்வு பிரிவான ஈழ ஆய்வு நிறுவனம் மூலம் பல வௌியீடுகளை செய்தும், கருத்தரங்குகளை நடாத்தியும், திட்டப் பிரகடன மாநாடுகளை நடத்தியும், அமைப்பின் பத்திரிக்கை மூலமும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஈழப்போரட்டத்தில் ஈடுப்பட்ட பிரதான இயக்கங்களில் ஒன்றாக ஈரோஸ் அமைப்பு வளர்ச்சியடைந்தது. வடக்கு, கிழக்கு, மலையகம் பிரதேசங்களில் செயற்பட்ட ஈரோஸ் அமைப்பு இப்பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஈழவர் என்று பகர்ந்ததோடு, அவர்கள் வாழும் பிரதேசம் அவர்களின் உடைமைப்பாடு என்றும்,அதனை உடைமையாக்கிட போராடுவதாகவும் அறிவித்தது. ஈழ விடுதலையானது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையாக வென்றெடுக்கப்பட வேண்டும் என்றும், ஈழப்போராட்டத்தின் முதன்மை அணி மலையகம் வாழ் தமிழ்பேசும் தொழிலாளர்களே என்றும் ஈரோஸ் அமைப்பு அறிவித்தது.[5].

1980களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஈரோசின் இளைஞர் அமைப்பைச் சேர்ந்த பலர் வெளியேறி கந்தசாமி பத்மநாபா தலைமையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை அமைத்தனர். பத்மநாபாவுடன் பிரிந்து சென்றவர்களில் டக்ளஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அ. வரதராஜப் பெருமாள் ஆகியோரும் அடங்கியிருந்தனர். இதே காலப்பகுதியில் ஈரோசின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அருளரும் கருத்து முரண்பாடு காரணமாக அமைப்பிலிருந்து விலகினார்.

மலையகத்தில் அரசியல் பணிகளை மேற்கொண்ட ஈரோஸ் அமைப்பு அட்டன் மல்லிகைப்பு சந்தியில் அலுவலகம் ஒன்றையும் திறந்திருந்தது. 1984 ஆம் ஆண்டு மலையக மக்களின் வரலாறை எடுத்துரைக்கும் “இருபத்தோறாம் நூற்றாண்டின் நவீனஅடிமைத்தனம்” எனும் நூலை, அமைப்பின் ஆய்வு பிரிவான ஈழ ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.[6]

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட நவம்பர் 15 ஐ நாடற்றவர் நாளாக ஈரோஸ் நினைவுகூர்ந்தது. 1885 ஆம் ஆண்டு இது தொடர்பான சுவரொட்டி ஒன்று இந்தியாவிலும், மலையகத்திலும், [யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலும்]] ஈரோஸ் அமைப்பினரால் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதினால் மலையகத்தில் 60 இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.[7]

1985 ஆம் ஆண்டு ஈரோஸ் உறுப்பினர்கள் இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றனர்.[8] இவ்வாறு பயிற்சிப் பெற்ற அணியைக் கொண்டு இலங்கை அரசின் மீதும் அரச காவல் படை மீதும் தாக்குதல்களை நடத்தியது.

1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தைகளில் ஒரு அமைப்பாக ஈரோஸ் அமைப்பு பங்குபற்றியதுடன், இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரினதும் குடியுரிமை உறுதி செய்யப்பட்டு, மலையகத் தமிழரை நாடற்றவராக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது .

1989 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை அணியாகப் போட்டியிட்ட ஈரோஸ் அமைப்பு 13 இடங்களைப் பெற்றது. அன்றைய அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசாவுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இலங்கை அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து அமர்வுகளில் பங்குபற்றினர். இத்தேர்தலில் ஈரோஸ் அமைப்பிற்கு கிடைத்த தேசியப் பட்டியல் இருக்கை மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மயில்சாமி இராமலிங்கம் என்பவருக்கு வழங்கப்பட்டது. எனினும் 1990 இல் ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்டதை அடுத்து, அதன் உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தார்கள்.

1989 ஆம் ஈரோஸ் ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்தது. 1990 ஆம் ஆண்டு மே மாதம் அமைப்பு கலைக்கப்படுவதாகவும், ஆயுதங்களும் சொத்துக்களும் புலிகளுடன் ஒப்படைக்கப்படுவதாகவும், அமைப்பின் உறுப்பினர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் எனவும் பொது செயலாளர் பாலகுமார் யாழ்ப்பாணத்தில் ஊடக மாநாட்டை நடத்தி அறிவித்தார். பெரும்பாலானவர்கள் பாலகுமார் தலைமையில் புலிகளுடன் இணைந்தார்கள். ஏனையவர்களில் சிலர் உள்ளுரிலும், வெளிநாடுகளிலும் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பினர். இன்னுமொரு சிறிய பிரிவினர் பதிவு நீக்கப்படாதிருந்த ஈழவர் சனநாயக முன்னணியின் பெயரில் கொழும்பிலிருந்து செயற்பட்டனர்.

2009 ஆம் ஆண்டுக்கு பின் குடும்பவாழ்விற்கு திரும்பியிருந்த உறுப்பினர்களும், புலிகளுடன் சேர்ந்திருந்து இயங்கிய உறுப்பினர்களும், ஈழவர் சனநாயக முன்னணியாக இயங்கிய உறுப்பினர்களும் இணைந்து ஈரோஸ் அமைப்பை மீள கட்டியெழுப்பி வருகின்றனர்.[சான்று தேவை]

வெளீயீடுகள் தொகு

  • தர்க்கீகம் - ஈரோஸ் அமைப்பின் தத்துவார்த்த பத்திரிக்கையாக இதழ் 1986 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டது.
  • ஈழம் - ஈரோஸ் அமைப்பின் பிரச்சார சஞ்சிகையாக வெளிவந்தது.
  • பொதுமை இதழ் இந்தியாவிலிருந்து ஈரோசின் இதழாக வெளிவந்தது.
  • பாலம் ஈரோசின் துணை அமைப்பான ஈழ நட்புறவுக்கழகத்தினால் வெளியிடப்பட்டது.
  • மாணவர்குரல் - ஈரோசின் மாணவர் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • நாங்கள், GUYS Magazine - ஈரோசின் இளைஞர் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • ஈரோசின் ஆய்வு பிரிவு ஈழவர் இடர்தீர, யாவரும் கேளீரென, லங்காராணி,ஈழவராய் இணைவோம், இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்,ஈழவர் இன்னல் உருபெற்ற விதம் ஆகிய நூல்களை வெளியிட்டது.

குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்". pp. 9. http://noolaham.net/project/142/14116/14116.pdf. பார்த்த நாள்: 6 January 2016. 
  2. "1990-08-16 பத்திரிக்கை செய்திகள்". http://padippakam.com/document/general/Notes/1039.pdf. பார்த்த நாள்: 6 January 2016. 
  3. "ஈழவர் இடர்தீர - ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூல்". http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf. பார்த்த நாள்: 6 January 2016. 
  4. "Pirapaharan, Chapter 8-First Military Operation". தமிழ்சங்கம் இணையம். http://www.sangam.org/Sabaratnam/PirapaharanChap8.htm. பார்த்த நாள்: 2016-01-07. 
  5. "ஈழவர் இடர்தீர - ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூல்". http://padippakam.com/document/eros/books/elavaredr.pdf. பார்த்த நாள்: 6 January 2016. 
  6. "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்". http://noolaham.net/project/142/14116/14116.pdf. பார்த்த நாள்: 6 January 2016. 
  7. "மக்கள் மறுவாழ்வு 1985 டிசம்பர் - மார்கழி வெளியீடு மலர் 4 இதழ் 3". pp. 2. http://noolaham.net/project/71/7048/7048.pdf. பார்த்த நாள்: 6 January 2016. 
  8. "Pirapaharan, Chapter 31 - First Military Operation". தமிழ்சங்கம் இணையம். http://www.sangam.org/articles/view2/?uid=819. பார்த்த நாள்: 2016-01-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழப்_புரட்சி_அமைப்பு&oldid=3743265" இலிருந்து மீள்விக்கப்பட்டது