ஏ. எஸ். ராகவன்

ஏ. எஸ். ராகவன் (1928 - சூலை 8, 2012[1]) தமிழக எழுத்தாளர். 1960கள்-70களில் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி உள்ளிட்ட இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், குறும்புதினங்கள் எழுதியவர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

திருச்சி அருகில் அமராவதி நதி ஓடும் கரூர் இவர் பிறந்த ஊர். இவரின் தந்தையின் சொந்த ஊர் கரூர் அருகில் உள்ள புதுப்பாளையம். சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்தவர். இவர் எழுத்தாளர்கள் சைலஜா, ராஜரிஷி, மற்றும் நாராயணன் ஆகியோரின் தந்தையும், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனின் பெரியப்பாவும் ஆவார்.

எழுத்துலகில் தொகு

தம் எழுத்துலக வாழ்வை 1950களில் தொடங்கிய இராகவனின் முதல் சிறுகதை "சலீமா பேகம்" ஆனந்த விகடனில் வெளி வந்தது[2]. அதன்பின் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள் பல எழுதினார். கல்கி, கலைமகள், தினமணி கதிர் எனப் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார். தினமணி நிறுவனத்தின் மாத வெளியீடாக வெளிவந்து கொண்டிருந்த "கதைக்கதிர்" இதழில் மாத நாவல்களும் எழுதினார். புகழ்பெற்ற இவரது "மனிதன்" என்ற புதினம் முழுக்க முழுக்க இவரது சொந்த ஊர் பற்றியது.

திருச்சி ரெயில்வேயில் பணி புரிந்த ஏ. எஸ். ராகவன் திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

15 நாவல்கள், சுமார் 250 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்கள், மூன்று மேடை நாடகங்கள் எனத் தற்கால இலக்கியத்திற்கான இவருடைய பங்களிப்பு அதிகம். "மலர்ந்த மனம்", "உயிர் நோன்பு" போன்ற நாவல்களும், "அன்பின் வழி", "உணர்வின் விழிப்பு" போன்ற சிறுகதைத் தொகுதிகளும் வாசகர்களால் மறக்க முடியாதவை.”யாத்திரை” என்ற நாவல் கல்கி இதழில் தொடர்கதையாக வெளிவந்துள்ளது.

எழுதிய நூல்கள் சில தொகு

  • சாவை வென்ற வீரர், வாழ்க்கை வரலாறு (1965)
  • தீர்த்தக் கரையினிலே
  • உயிர் நோன்பு (புதினம், 1962)
  • சுயம்வரம்
  • மலர்ந்த மனம் (புதினம்)
  • அன்பின் வழி (சிறுகதைகள்)
  • உணர்வின் விழிப்பு (சிறுகதைகள்)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._ராகவன்&oldid=3855614" இலிருந்து மீள்விக்கப்பட்டது