சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாணயக்காரத் தெருவில் அமைந்துள்ள தனியார் நூலகமாகும். இந்நூலகத்தில் தற்போது சுமார் 25,000 நூல்கள் இருக்கின்றன.

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்

வரலாறு தொகு

21.5.1958இல் இந்நூலகத்திற்கான அடிக்கல் பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களால் நாட்டப்பட்டு, 9.1.1959இல் தமிழகவேள் சர்.பி.டி.ராஜன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 10,000 நூல்கள் சேர்க்கப்பட்ட விழாவும் 12ஆம் ஆண்டு விழாவும் 23.5.1971இல் நடத்தப்பெற்றது. [1]

பொன் விழா தொகு

இந்நூலகத்தின் 50ஆவது ஆண்டு விழா பிப்ரவரி 2010இல் நடைபெற்றது. [2] நூலக நிறுவனர் சுவாமிநாத செட்டியாரின் நூற்றாண்டு விழா அக்டோபர் 2017இல் நடைபெற்றது. [3]

புத்தகப் பட்டியல் தொகு

முதற்புத்தகப் பட்டியலின் விரிவான பதிப்பில் புராணம், தல புராணம், சாத்திரம், தோத்திரம், திருமுறை, சமயம், சங்க நூல், பிரபந்தம், அகவல், அந்தாதி, உலா, கலம்பகம், குறவஞ்சி, குறவை, சதகம், தூது, பரணி, பிள்ளைத்தமிழ், மாலை, வெண்பா, கீதை, இதிகாசம்,வைணவம், நீதி நூல், அகராதி, இலக்கணம், நிகண்டு, கணிதம், சங்கீதம், புதுமைக்கவி, மொழிபெயர்ப்பு, கல்வெட்டுகள், சிற்ப நூல், உலக வரலாறு, யாத்திரை, வாழ்க்கை வரலாறு, உயிர் நூல், உடற்பயிற்சி, வைத்தியம், மாந்தரீகம், சோதிடம், கட்டுரை, மன நூல், வரலாறு எனப்படுகின்ற 44 தலைப்புகளில் 5000 நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்நூலில் பிற்சேர்க்கையும், திருத்தமும் இணைக்கப்பட்டுள்ளது.[1]

இரண்டாவது புத்தகப் பட்டியலின்படி அரசியல், விஞ்ஞானம், விவசாயம், முகம்மதிய நூல், கிறிஸ்தவ நூல், நாடகம், நாவல் ஆகிய துறைகளில் 5000 நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்நூலில் சில நூல்கள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு சேர்க்கையும் தரப்பட்டுள்ளது. [1]

வாசிப்பு முறை தொகு

பல்துறை நூல்கள் என்ற தலைப்பில் இரு நூற்பட்டியலும், பத்திரிக்கைகள் என்ற தலைப்பில் இரு சிறிய பதிவேடுகளும், ஆங்கிலப்புத்தகப் பட்டியலைக் குறிக்கும் ஒரு சிறிய பதிவேடும் உள்ளன. இவற்றில் நூலின் விவரங்கள் பதியப்பட்டுள்ளன. இந்த நூல் பட்டியல்களைப் பார்த்து அதிலுள்ள எண்ணைக் குறித்துத் தந்தால் அவர்கள் நூலினைத் தந்து அருகிலுள்ள கரும்பலகையில் எழுதிவிடுகின்றனர். வாசகர்களுக்கு ஒரு முறைக்கு இரு நூல்கள் தரப்படுகின்றன.வாசிக்கவும், குறிப்பு எடுக்கவும் உதவியாக மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நூலகம் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் 8 வரையும் செயல்படுகிறது. வியாழக்கிழமை விடுமுறை நாளாகும்.

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு