ப. சதாசிவம்

40வது இந்தியத் தலைமை நீதிபதி

ப. சதாசிவம் அல்லது பி. சதாசிவம் முன்னாள் கேரள ஆளுநராவார். முன்னதாக இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.[1][2] இவர் இந்தியாவின் 40வது தலைமை நீதிபதியாகச் சூலை 19, 2013 முதல் ஏப்ரல் 25, 2014 வரை கடமையாற்றினார்.[3][4] தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இந்தியத் தலைமை நீதிபதியாகக் கடமையாற்றியது இது இரண்டாவது முறையாகும். 1951 முதல் 1954 வரை திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரை சேர்ந்த நீதிபதி பதஞ்ஜலி சாஸ்திரி இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.ஆகத்து , 2014இல் கேரள மாநில ஆளுநராக இருந்த சீலா தீக்‌சித் தமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து , அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.[5] இந்திய வரலாற்றில் , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை .[6]

ப. சதாசிவம்
கேரள ஆளுநர்
பதவியில்
31 ஆகத்து 2014 – 05 செப்டம்பர் 2019
நியமித்தவர் பிரணப் முகர்ஜி
இந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னவர் சீலா தீக்‌சித்
பின்வந்தவர் ஆரிப் முகமது கான்
இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
19 சூலை 2013 – 26 ஏப்ரல் 2014
நியமித்தவர் பிரணப் முகர்ஜி
இந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னவர் அல்தமஸ் கபீர்
பின்வந்தவர் ஆர். எம். லோதா
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பதவியில்
20 ஏப்ரல் 2007 – 8 செப்டம்பர் 2007
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 27, 1949 (1949-04-27) (அகவை 74)
காடப்பநல்லூர், பவானி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

இளமைப் பருவம் மற்றும் கல்வி தொகு

இவர் ஈரோடு மாவட்டம், பவானி, காடப்பநல்லூர் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் பழனிச்சாமி, தாயார் பெயர் நாச்சியம்மாள்[7].சிங்கம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற இவர் சட்டப்படிப்பை சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் முடித்தார்.[8]

தொழில் தொகு

சனவரி 8, 1996ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்பிரல் 20, 2007 பஞ்சாப் & அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 21, 2007 உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் எந்த உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கவில்லை.[3]

இவர் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் வழக்கிலும், ஒரியாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிக்கப்பட்ட வழக்கிலும், பாகித்தானிய அறிவியலாளர் முகமது கலில் செஸ்டி தண்டிக்கப்பட்ட வழக்கிலும், ரிலையன்ஸ் கேஸ் வழக்கிலும் நீதிபதியாக இருந்து உள்ளார்.[3] பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ஆவார்.[9]

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதலில் ஈடுபட்ட அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள்குறித்து விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்தால் அமைக்கட்ட ஓர் ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டவர்.

வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் தொகு

  • பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.
  • ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நமது நாட்டில் உள்ள சொத்துகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானது, அதை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாதெனத் தீர்ப்பளித்தது.
  • ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியது.
  • உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றபிறகு, தேங்கியுள்ள வழக்குகளைக் குறைக்க நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடத்தி லட்சக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாமென வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தலைமை நீதிபதி சதாசிவம் உள்பட 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. காடப்பநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம் பரணிடப்பட்டது 2013-07-01 at the வந்தவழி இயந்திரம், தினகரன் நாளிதழ்
  2. தலைமை நீதிபதியாக சதாசிவம் நியமனம்: கருணாநிதி வாழ்த்து, தினமணி நாளிதழ்
  3. 3.0 3.1 3.2 Justice P Sathasivam to be 40th Chief Justice of India; first CJI from Tamilnadu
  4. மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: தலைமை நீதிபதி சதாசிவம், தினமணி
  5. "கேரள மாநில ஆளுநராக பி.சதாசிவம் நியமனம்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 4 செப்டம்பர் 2014. http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77687. பார்த்த நாள்: 4 செப்டம்பர் 2014. 
  6. Venkatesan, J. (30 Aug 2014). "Former CJI Sathasivam to be Kerala Governor". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/former-cji-sathasivam-to-be-kerala-governor/article6365390.ece. பார்த்த நாள்: 31 Aug 2014. 
  7. "விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம்". http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=53918. 
  8. "P. Sathasivam to be New Chief Justice of India". news.outlookindia.com. http://news.outlookindia.com/items.aspx?artid=802270. பார்த்த நாள்: 2013-07-01. 
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://news.vikatan.com/article.php?module=news&aid=24678. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சதாசிவம்&oldid=3713837" இருந்து மீள்விக்கப்பட்டது