திராங்கானு சுல்தானகம்

திராங்கானு மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர்

திராங்கானு சுல்தானகம் (மலாய்: Kesultanan Terengganu; ஆங்கிலம்: Sultanate of Terengganu ஜாவி: سلطنة ترينجانو) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில் 1725-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட ஒரு சுல்தானகம் ஆகும்.

திராங்கானு சுல்தானகம்
سلطان ترڠڬانو
Sultan of Terengganu
தற்போது
மிசான் சைனல் ஆபிதீன்

15 மே 1998 முதல்
Typeபாரம்பரிய மன்னராட்சி
வாழுமிடம்சியர்கியா அரண்மன், கோலா திராங்கானு
உருவாக்கம்1725
முதலாமவர்சைனல் அபிதீன் I
(1725 – 1733)
இறுதியாகமுக்தாபி பில்லா ஷா
(1979 – 1998)

திராங்கானு சுல்தான் (மலாய்: Sultan Terengganu; ஆங்கிலம்: Sultan of Terengganu ஜாவி: سلطان ترڠڬانو) என்பவர் திராங்கானு சுல்தானகத்தின் தலைவர் ஆவார். தற்போதைய திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன், திராங்கானு சுல்தானகத்தின் 18-ஆவது சுல்தானாகப் பதவி வகிக்கிறார்.

மிசான் சைனல் ஆபிதீன், 2006-ஆம் ஆண்டு தொடங்கி 2011-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் 13-ஆவது பேரரசராக ஆட்சிப் பீடத்தில் இருந்தவர். திராங்கானு மாநிலத்தின் இசுலாமிய மதத்தின் தலைவர்; மற்றும் திராங்கானு மாநிலத்தின் அனைத்து விருதுகளுக்குள், மரியாதைகளுக்கும் தலைவராகவும் விளங்குகின்றார்.

சுல்தான்களின் பட்டியல் தொகு

  1. 1725–1733: சைனல் அபிதீன் I
  2. 1733–1793: மன்சூர் சா I
  3. 1793–1808: சைனல் அபிதீன் II
  4. 1808–1830: அகமது சா I
  5. 1830–1831: அப்துல் ரகுமான்
  6. 1831–1831: உமர் ரியாத் சா
  7. 1831–1837: மன்சூர் சா II
  8. 1837–1839: முகம்மது சா I
  9. 1839–1876: ஒமார் ரியாத் சா
  10. 1876-1877: மகமூத் முசுதபா சா
  11. 1876–1881: அகமது சா II
  12. 1881–1918: சைனல் அபிடின் III
  13. 1918–1920: முகம்மது சா II
  14. 1920–1942: பத்ருல் ஆலாம் சா
  15. 1942–1945: அலி சா
  16. 1945–1979: இசுமாயில் நசிருதீன் சா
  17. 1979–1998: முக்தாபி பில்லா சா
  18. 1998– தற்போது: மிசான் சைனல் ஆபிதீன்

வரலாறு தொகு

தென் சீனக் கடல் கரைப் பகுதியில் திராங்கானுவின் அமைவிடம் உள்ளது. அதனால் பழங்காலத்தில் இருந்தே அங்கு வர்த்தகப் பாதைகள் இருந்து உள்ளன. இப்போது திராங்கானு இருக்கும் பகுதியில், 6-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீன வணிகர்கள் மற்றும் கடலோடிகளால் எழுதப்பட்ட அறிக்கைகள் கிடைத்து உள்ளன.

மற்ற மலாய் மாநிலங்களைப் போலவே, இசுலாம் வருவதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திராங்கானுவில் இந்து - பௌத்தக் கலாசாரம் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஆன்மவாதப் பாரம்பரிய நம்பிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீ விஜய பேரரசின் செல்வாக்கின் கீழ், திராங்கானு அரசு, மஜபாகித் பேரரசு, கெமர் பேரரசு மற்றும் குறிப்பாக சீனர்களுடன் விரிவான அளவில் வர்த்தகம் செய்து வந்து உள்ளது.[1]

சீன வரலாற்று மூலங்கள் தொகு

திராங்கானு பற்றிய குறிப்புக்கள் காணப்படும் மிகப் பழைய மூலங்களுள் சீன வரலாற்று மூலங்களும் அடங்கும். சுயி அரச மரபு (Sui dynasty) காலத்தைச் சேர்ந்த சீன எழுத்தாளர் ஒருவரின் குறிப்பு; தான்-தான் (Tan-Tan) என்னும் அரசு; சீனாவுக்குத் திறை செலுத்தியதாகக் கூறுகிறது.[2][3] இந்தத் தான்-தான் அரசு திராங்கானு நிலப்பகுதிக்கு உட்பட்ட ஓர் இடத்தில் அமைந்து இருந்ததாகவும் கூறப் படுகிறது.[4]

சீனாவின் சுயி அரசமரபு வீழ்ச்சி அடைந்த பின்னர், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் இருந்த அந்தத் தான்-தான் அரசு; அந்தக் காலக் கட்டத்தில் சீனாவை ஆட்சி செய்த தாங் அரச மரபுக்குத் (Tang dynasty) திறை செலுத்தியது.[2] எனினும் 7-ஆம் நூற்றாண்டில் தான்-தான் அரசு ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. அதன் பின்னர் சீனாவுக்குத் திறை செலுத்துவதை நிறுத்திக் கொண்டது.

  • கி.பி. 1178-இல் சூ குபெய் (ஆங்கிலம்: Zhou Qufei; சீனம்: 周去非) என்பவர் எழுதிய லிங்-வாய்-டாய்-டா (ஆங்கிலம்: Lingwai Daida; சீனம்: 嶺外代答) எனும் நூல்;
  • 1226-இல் சாவோ ருகுவா (Zhao Rugua) எழுதிய சூ பான் சி (San-fo-ts’i) எனும் நூல்;

ஆகிய இரண்டு நூல்களும் திராங்கானுவை டெங்-யா-நு (Teng-ya-nu) அல்லது டெங்-யா-நுங் (Teng-ya-nung) என்று குறிப்பிடுகின்றன. ஸ்ரீ விஜயப் பேரரசை சான் போசி (San-fo-ts’i) என்று குறிப்பிடுகின்றன. திராங்கானுவை ஸ்ரீ விஜயப் பேரரசின் சிற்றரசு எனவும் குறிப்பிடுகின்றன.

மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் திராங்கானு தொகு

 
கோலா திராங்கானுவில் ஜாலான் பங்கோல்
 
1882-ஆம் ஆன்டில் தீயினால் அழிந்து போன பழைய அரண்மனைக்குப் பதிலாக மசியா அரண்மனை கட்டப்பட்டது.

13-ஆம் நூற்றாண்டில் சிறீவிசயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மஜபாகித் பேரரசின் செல்வாக்கின் கீழ் திராங்கானு கண்காணிக்கப்பட்டது.15-ஆம் நூற்றாண்டில் மஜபாகித் அரசு, மலாயா தீபகற்பத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அயூத்தியா இராச்சியம் (Ayutthaya Kingdom), மலாக்கா சுல்தானகம் (Malacca Sultanate) ஆகிய இரு அரசுகளுடன் போட்டி போட்டது.[5]

அந்தப் போட்டியில் மலாக்கா வெற்றி பெற்றது. அதன் பின்னர் திராங்கானு நிலப்பகுதி, மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1511ல் மலாக்கா போர்த்துக்கீசியயரால் தோற்கடிக்கப் பட்டதும்; புதிதாக உருவான ஜொகூர் சுல்தானகம் (Sultanate of Johor), திரங்கானு உள்ளிட்ட முன்னைய மலாக்கா சுல்தானகத்தின் பல ஆட்சிப் பகுதிகளைத் தன் செல்வாக்கிற்குள் கொண்டு வந்தது.[6]

அந்த வகையில் 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சில காலம் திராங்கானு, அச்சே சுல்தானகத்தின் (Aceh Sultanate) கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனாலும், அதே அந்த 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜொகூர் சுல்தானகம் மீண்டும் திராங்கானு மீது தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டது.

திரங்கானு சுல்தானகம் தொகு

தற்போதைய திராங்கானு சுல்தானகம் 1708-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.இதன் முதலாவது சுல்தான்: முதலாவது சைனல் ஆப்தீன் (Sultan Zainal Abidin I) தன்னுடைய ஆட்சிப் பீடத்தை கோலா பேராங்கில் நிறுவினார். பின்னர் சில தடவைகள் தன் ஆட்சிப் பீட இடங்களை மாற்றினார். பின்னர், இறுதியாக கோலா திராங்கானுவில் உள்ள புக்கிட் கிளேடாங் (Bukit Keledang) எனும் இடத்திற்கு அருகில் நிறுவினார்.

18-ஆம் நூற்றாண்டில் கோலா திராங்கானு ஒரு சிறிய நகரமாக இருந்தது. அந்த நகரத்தைச் சுற்றி ஆயிரம் வீடுகள் பரவி இருந்தன எனச் சொல்லப்பட்டது. அக்காலத்தில் ஏற்கனவே சீனர்கள் கோலா திராங்கானுவில் காணப் பட்டனர். அந்தக் கட்டத்தில் கோலா திராங்கானு நகரின் மக்கள் தொகையில் அரைப் பங்கினர் சீனர்கள். அவர்கள் வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபட்டு இருந்தனர்.[7][8]

1831-ஆம் ஆண்டில் சுல்தான் தாவூத் (Sultan Daud) இறந்த பின்னர் தெங்கு மன்சூர் (Tengku Mansur), தெங்கு ஓமார் (Tengku Omar) ஆகியோரிடையே வாரிசுரிமைப் போட்டி ஏற்பட்டு உள்நாட்டுப் போராக வெடித்தது.

சுல்தான் ஓமார் தொகு

அப்போது தெங்கு ஓமார் புக்கிட் புத்திரி (Bukit Puteri) எனும் இடத்தில் இருந்தார். தெங்கு மன்சூர் பாலிக் புக்கிட் (Balik Bukit) எனும் இடத்தில் இருந்தார். இறுதியில் தெங்கு ஓமார் தோல்வியுற்று கோலா திரங்கானுவை விட்டுத் தப்பியோடினார்.

தெங்கு மன்சூர், சுல்தான் இரண்டாவது மன்சூர் (Sultan Mansur II) என்னும் பெயரில் அடுத்த சுல்தானானார். 1837-ஆம் ஆண்டில் சுல்தான் மன்சூர் இறக்கவே அவரின் மகன் சுல்தான் முகமத் என்னும் பெயரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

1839-ஆம் ஆண்டில் படையுடன் திராங்கானுவுக்குத் திரும்பிய தெங்கு ஓமார், சுல்தான் முகமத்தைத் தோற்கடித்து சுல்தான் ஓமார் என்னும் பெயரில் முடி சூடிக் கொண்டார்.

திராங்கானு கல்வெட்டு தொகு

 
1908-இல் ஒரு திராங்கானு பெண்மணி

உலு திராங்கானு மாவட்டத்தின் தலைநகரான கோலா பேராங்கில் (Kuala Berang) ஓர் அரேபியக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு திராங்கானு கல்வெட்டு (Terengganu Inscription Stone) என்று பெயர். 1303-ஆம் ஆண்டு கல்வெட்டு.[9]

அந்தக் கல்வெட்டின் சான்றுகளின்படி, இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றிய முதல் மலாய் மாநிலம் திராங்கானு என அறியப்படுகிறது. திராங்கானு ஒரு காலக் கட்டத்தில் மலாக்காவின் ஆளுமை மாநிலமாக இருந்தது. ஜொகூர் சுல்தானகத்தின் தோற்றத்திற்குப் பின்னர், திரங்கானு தன் சுயாட்சியைக் கணிசமான அளவிற்குத் தக்க வைத்துக் கொண்டது.

திராங்கானுவின் முதல் சுல்தான் துன் சைனல் ஆபிதீன் தொகு

1724-இல் திராங்கானு ஒரு சுதந்திரமான சுல்தானாகமாக உருவெடுத்தது. முதல் சுல்தான் துன் சைனல் ஆபிதீன். இவர் முன்னாள் ஜொகூர் சுல்தானின் இளைய சகோதரர். 18-ஆம் நூற்றாண்டில் திராங்கானு அரசியலில் ஜொகூர் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது.

19-ஆம் நூற்றாண்டில், தாய்லாந்தின் இரத்தனகோசின் இராச்சியத்தின் (Rattanakosin Kingdom) ஓர் அடிமை மாநிலமாக திராங்கானு மாறியது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் பூங்கா மாஸ் என்று அழைக்கப்படும் கப்பம் கட்டியது.

சுல்தான் உமார் ரியாத் ஷாவின் சிறப்பான ஆட்சி தொகு

 
கோலா திராங்கானுவில் சைனா டவுன்
 
கெமாமான் மருத்துவமனை

இது சுல்தான் உமார் ரியாத் ஷாவின் (Sultan Omar Riayat Shah) ஆட்சியின் கீழ் நிகழ்ந்தது. இருப்பினும் இவர் திராங்கானுவில் வர்த்தகம் மற்றும் நிலையான அரசாங்கத்தை மேம்படுத்திய ஒரு பக்தியுள்ள ஆட்சியாளர் என நினைவு கூரப்படுகிறார். தாய்லாந்து ஆட்சியின் கீழ், திராங்கானு செழித்து வளர்ந்தது.[10]

1909-ஆம் ஆண்டின் ஆங்கிலோ - சயாமிய உடன்படிக்கையின்படி திராங்கானு மீதான அதிகாரம் சயாமில் இருந்து பெரும் பிரித்தானியாவுக்கு மாற்றப்பட்டது. 1919-இல் திராங்கானு சுல்தானுக்கு ஒரு பிரித்தானிய ஆலோசகர் நியமிக்கப்பட்டார்.

மேலும் திராங்கானு கூட்டாட்சி இல்லாத மலாய் மாநிலங்களில் ஒன்றாகவும் மாறியது. இந்த நடவடிக்கை உள்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. அதனால் மக்கலிடையே அதிருப்தி. 1928-இல் மக்கள் எழுச்சியை ஒடுக்க ஆங்கிலேயர்கள் இராணுவ பலத்தைப் பயன்படுத்தினார்கள்.

இரண்டாம் உலகப் போரிப் போது திராங்கானு தொகு

1939-ஆம் ஆண்டில் சயாம் நாடு என்பது தாய்லாந்து நாடு என மறுபெயரிடப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் திராங்கானுவை ஆக்கிரமித்தது. அடுத்தக் கட்டமாக, கிளாந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களுடன் திராங்கானுவும் சயாம் ஆட்சிக்கு மாற்றம் செய்யப் பட்டது.

இரண்டாம் உலகப் போரில், ஜப்பானின் தோல்விக்குப் பிறகு, மலாய் மாநிலங்களின் மீதான பிரித்தானிய கட்டுப்பாடு மீண்டும் நிறுவப்பட்டது. 1948-ஆம் ஆண்டில் திராங்கானு மலாயா கூட்டமைப்பில் உறுப்பியம் பெற்றது.

பின்னர் 1957-ஆம் ஆண்டில் மலாயாவின் ஒரு மாநிலமானது. 1963-ஆம் ஆண்டில் மலாயா என்பது மலேசியா என உருவகம் பெற்றது. தற்சமயம் மலேசியா கூட்டமைப்பில் ஓர் உறுப்பினராக உள்ளது.

காட்சியகம் தொகு

மேற்கோள் தொகு

  1. "Terengganu at the East Coast - Like other Malay states, Terengganu practised a Hindu–Buddhist culture combined with animist traditional beliefs for hundreds of years before the arrival of Islam". www.malaysiasite.nl. பார்க்கப்பட்ட நாள் 13 April 2022.
  2. 2.0 2.1 Nazarudin Zainun; Nasha Rodziadi Khaw; Tarmiji Masron; Zulkifli Jaafar (2009). "Hubungan Ufti Tan-Tan dan P'an-P'an dengan China pada Zaman Dinasti Sui dan Tang: Satu Analisis Ekonomi" (PDF) (in Malay). Beijing Foreign Studies University, University of Malaya. பார்க்கப்பட்ட நாள் 7 April 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Paul Wheatley (1980). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula Before A.D. 1500. University Malaya. https://books.google.com/books?id=2T0NngEACAAJ. 
  4. George Cœdès (1968). The Indianized States of South-East Asia. University of Hawaii Press. பக். 52–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. https://books.google.com/books?id=iDyJBFTdiwoC&pg=PA52. 
  5. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. 1992. https://books.google.com/books?id=nlcaAQAAIAAJ. 
  6. Encyclopaedia Britannica, Inc. (1 March 2009). Britannica Guide to the Islamic World. Encyclopaedia Britannica, Inc.. பக். 380–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59339-849-1. https://books.google.com/books?id=tbicAAAAQBAJ&pg=PA380. 
  7. Maznah Mohamad (1996). The Malay Handloom Weavers: A Study of the Rise and Decline of Traditional Manufacture. Institute of Southeast Asian Studies. பக். 89–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-3016-99-6. https://books.google.com/books?id=5Te9LWyzQvYC&pg=PA89. 
  8. Yow Cheun Hoe (26 June 2013). Guangdong and Chinese Diaspora: The Changing Landscape of Qiaoxiang. Routledge. பக். 44–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-17119-2. https://books.google.com/books?id=OyM5wjE1Ak0C&pg=PA44. 
  9. Nicholas Tarling, தொகுப்பாசிரியர் (25 January 1993). The Cambridge History of SouthEast Asia, Volume 1. Cambridge University Press. பக். 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0521355056. https://books.google.com/books?id=rOw8AAAAIAAJ&pg=PA514. 
  10. Andaya, Barbara Watson (1982). A history of Malaysia. Martin's Press. பக். 121. https://archive.org/details/historyofmalaysi0000anda. 

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திராங்கானு_சுல்தானகம்&oldid=3925230" இலிருந்து மீள்விக்கப்பட்டது