பொ. பூலோகசிங்கம்

ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர்

பொன். பூலோகசிங்கம் (ஏப்ரல் 1, 1936 - செப்டம்பர் 19, 2019)[1] ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, சமயம், வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.[2] இரு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர்.

பொன். பூலோகசிங்கம்
பிறப்புபொன்னையா பூலோகசிங்கம்
(1936-04-01)1 ஏப்ரல் 1936
செட்டிக்குளம், வவுனியா, இலங்கை
இறப்புசெப்டம்பர் 19, 2019(2019-09-19) (அகவை 83)
சிட்னி, ஆத்திரேலியா
தேசியம்இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர்
கல்விமுனைவர் (ஒக்சுபோர்டு, 1965)

இளங்கலை (தமிழ்) (பேராதனை, 1961)
யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி

செட்டிக்குளம் அரசினர் தமிழ் வித்தியாலயம்
பணிபேராசிரியர்
அறியப்படுவதுதமிழ் வரலாற்று ஆய்வாளர்
பட்டம்கலா கீர்த்தி
சமயம்இந்து
பெற்றோர்(கள்)பொன்னையா உடையார், சோதிரத்தினம்
வாழ்க்கைத்
துணை
தனபாலதேவி

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

இலங்கையின் வட மாகாணத்தில், வவுனியாவில் செட்டிக்குளம் என்ற ஊரில் பொன்னையா உடையார், சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியைச் செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கற்றுச் சித்திபெற்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று 1961-ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், சு. வித்தியானந்தன் ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று 1963 முதல் 1965 வரை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியலறிஞர் பேராசிரியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாகக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது. எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எஸ். பிற்கோடர் உடன் இரண்டாம் மொழி கற்பித்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.[3]

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1965-இல் சேர்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 1997 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997-ஆம் ஆண்டு தனது பேராசிரியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியா சென்று சிட்னி நகரில் வசித்து வந்தார்.

எழுத்துப் பணிகள்

தொகு

ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை (1886) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத் தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலாக உருவாகியுள்ளன. இவற்றைவிட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதிலும் முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவராவார். ஈழத்து இலக்கிய வரலாற்றும் பாடநெறி உருவாக்கத்திலும் கணிசமான பங்களிப்பைச் செலுத்தினார்.

வெளிவந்த நூல்கள்

தொகு
தளத்தில்
பொ. பூலோகசிங்கம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • 261 அறிஞர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் (1969)
  • தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் (கட்டுரைத் தொகுப்பு, 1970, இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்றது)
  • இந்துக் கலைக்களஞ்சியம் (முதற் தொகுதி, கொழும்பு, 1990)
  • ஈழம் தந்த நாவலர் (கட்டுரைத் தொகுதி, 1997, இலங்கை அரசின் விருது பெற்றது)
  • நாவலர் பண்பாடு (கட்டுரைத் தொகுதி, 2000)
  • சிலப்பதிகார யாத்திரை (கட்டுரைத் தொகுதி, 2002)
  • Poet Thambimuthu – a profile
  • பாவலர் சரித்திர தீபகம். பகுதி 1. அ.சதாசிவம்பிள்ளை (மூல ஆசிரியர்), பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்புத் தமிழ்ச்சங்கம், மீள் பதிப்பு, சனவரி 1975
  • தமிழ் ஆய்வுச் சிந்தனைகள் (2017)

நூல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும்.

விருதுகள்

தொகு
  • 1993-ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலா கீர்த்தி' பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. பேராசிரியர் பொன் பூலோகசிங்கம், தமிழ் முரசு, 22 செப்டம்பர் 2019
  2. 2.0 2.1 முருகபூபதி, லெ. "அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்". பதிவுகள். Archived from the original on 2016-07-22. Retrieved 19 சூன் 2016.
  3. "மறக்கமுடியாத பூலோகசிங்கம்", வீரகேசரி, 26 செப்டம்பர் 2019 {{citation}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._பூலோகசிங்கம்&oldid=4272173" இலிருந்து மீள்விக்கப்பட்டது