முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
மகேந்திரவர்மன் (கி.பி. 600 முதல் 630 வரை) தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவான். இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய சிம்மவிட்டுணுவின் மகனாவான். இவனது ஆட்சிக்காலத்தில்தான் சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்தான். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைன்யம் தோற்கடிக்கப்பட்டது. இவன் கி.பி 630 வரை ஆட்சியிலிருந்தான் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டு எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை கி.பி 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
தொகு |

பட்டப்பெயர்கள்
மத்தவிலாசன்
சித்திரகார புலி
சங்கீரண கதி
சத்ருமல்லன்
அவனிபாஜன்
பரிவாதனி என்ற வீணை வாசிப்பில் சிறந்தவன்.
மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்தில் காணலாம்.
மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான். இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.
மகேந்திரவர்மன் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம்.[1]
மகேந்திரவர்மனையடுத்து பல்லவ அரசர்களில் மிகப்புகழ்பெற்றவனும் மகேந்திரவர்மனின் மகனுமான நரசிம்மவர்மன் அரியணையேறினான்.