மாடர்ன் தியேட்டர்ஸ்

(மோடேர்ன் தியேட்டர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் (Modern Theaters Ltd) 1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது . மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.

மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்
முன்னைய வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிலைமூடப்பட்டது
நிறுவுகை1935
நிறுவனர்(கள்)டி. ஆர். சுந்தரம்
செயலற்றது1982
தலைமையகம்ஏற்காடு சாலை, சேலம் - 636 008, தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
முதன்மை நபர்கள்டி. ஆர். சுந்தரம்
தொழில்துறைதிரைப்படங்கள்
உற்பத்திகள்திரைப்படங்கள்

வரலாறு தொகு

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபரான டி.ஆர்.சுந்தரம், சேலம் மாவட்டம், திருச்செங்கோட்டில் 1907 சூலை 16 ஆம் தியதி பிறந்தார். இவருடைய தந்தை நூற்பாலைகளில் இருந்து நூலை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்த வி.வி.சி. ராமலிங்க முதலியார் ஆவார். தாயார் பெயர் கணபதி அம்மாள். இவர்களுக்கு ஐந்தாவது மகனாக டி.ஆர்.சுந்தரம் பிறந்தார். தனது தொடக்கக் கல்வியை சேலத்தில் கற்ற சுந்தரம், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு சுந்தரம் இங்கிலாந்து சென்றார். ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். நூல்களுக்கு வண்ணம் சேர்க்கும் தொழில் நுட்பத்தை கற்றறிந்தார். அங்கு படித்த போது லண்டனில் டி.ஆர்.சுந்தரத்துக்கும், 'கிளாடிஸ்' என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

ஜவுளித் தொழிலில் உயர் படிப்பு படித்திருந்த சுந்தரத்துக்கு, தனது குடும்பத் தொழிலின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. திரைப்படத் துறை இவரது கவனத்தை ஈர்த்தது. இந்தத் துறையில் காலடி வைக்க ஒரு துணை வேண்டியிருந்தது. லண்டனில் இருந்து அவர் சேலம் திரும்பியபோது (1933_ல்) சேலத்தில் "ஏஞ்சல் பிலிம்ஸ்" என்ற நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. திரைப்படத் தொழிலில் ஆர்வம் கொண்ட டி.ஆர்.சுந்தரம், ஏஞ்சல் பிலிம்ஸ் அதிபர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து திரைப்படங்கள் தயாரித்தார்.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான 'திரௌபதி வஸ்திராபரணம்'(1934), 'துருவன்'(1935), 'நல்ல தங்காள்'(1935) ஆகிய படங்களில் பணி புரிந்தார். அக்காலத்தில் தமிழ்ப் படங்களுக்கு மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. டி.ஆர். சுந்தரம் குழுவினரும் கொல்கத்தா நகரம் சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களும் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்தன. ஒவ்வொரு முறையும் கொல்கத்தா செல்ல வேண்டுமா என நினைத்த சுந்தரம், சேலத்தில் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எண்ணினார். சேலம் ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை சுந்தரம் வாங்கினார். வளாகத்தினுள் நுழைந்தால், அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும்" என்று நினைத்தார். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தை போட்டுப்பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 இல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனம் உருவானது.

கொள்கைகள் தொகு

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் ஒரு தொழிற்சாலையைப் போல நடத்தலானார். திரைப்படம் மூலமாகப் பிரச்சாரம் செய்வது, சமூக சீர்திருத்தம் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏதுமின்றி மக்கள் விரும்பிப் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்குப் படங்களைத் தரமாகக் கொடுக்க வேண்டுமென்பது தான் இவரின் நோக்கமாக இருந்தது. திரைப்படம் என்பது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு சாதனம், அதில் பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும்தான் இருக்க வேண்டும், தேவையில்லாத மற்ற பிரச்சினைகள் அதற்குள் தலையிடாமல் இருக்க வேண்டுமென விழிப்புடன் டி.ஆர்.சுந்தரம் தனது கொள்கைகளை நிறைவேற்றி வந்தார். நகைச்சுவை நடிகர்கள் 'காளி என்.ரத்தினம்', 'டி.எஸ்.துரைராஜ்', 'வி.எம்.ஏழுமலை', 'ஏ.கருணாநிதி' ஆகியோர், இங்கு மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தனர். படப்பிடிப்பு குறிப்பிட்ட தியதியில் தொடங்கி, குறிப்பிட்ட தியதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்.

பணியாளர்கள் தொகு

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல் படுத்தினார். நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள். நடிகர், நடிகைகள் ஒப்பந்த முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அங்கு சேர்ந்து அறிமுகமாகி, புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர்களில் எம்.ஆர்.ராதா, எஸ். வி. ரங்கராவ், அஞ்சலி தேவி இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

புதுமைகள் தொகு

தன்னுடைய படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். ஜெர்மனியில் இருந்து 'வாக்கர்', 'பேய்ஸ்' என்ற இரண்டு ஒளிப்பதிவளர்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யு.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகியோர், பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர். படத்தில் நடிகர்_நடிகைகளின் பெயர்களையும், கலைஞர்களின் பெயர்களையும் காண்பிக்கும் முகப்புக் காட்சியில் படத்துக்குப்படம் புதுமையை சுந்தரம் புகுத்தினார். அதற்காக பெரும் பணம் செலவழித்தார்.அமெரிக்க இயக்குனரான எல்லிஸ் ஆர்.டங்கன், இவரது படங்களுக்கு இயக்குநராக அமைந்தார். ஆங்கிலம் பேசும் ஒரு அமெரிக்கர் தமிழில் படம் இயக்கியது அக்காலத்தில் ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. டி.ஆர்.எஸ். தயாரிப்பில், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை வைத்து எல்லிஸ் ஆர்.டங்கன் 1950 இல் இயக்கிய படம் 'மந்திரி குமாரி'. அதில் எம்.ஜி.ராமச்சந்திரனின் வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் புதுமை, வேகம்,விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது. 'உலக அழகி கிளியோபட்ரா' என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்காக ஒரு நடிகை கழுதைப்பாலில் குளித்தாராம். டி. ஆர். சுந்தரம் அந்த காட்சியை தமிழ் திரைப்படத்தில் எடுப்பதற்காக 1000 கழுதைகளை மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கொண்டு வந்து, பால் கரந்து அதில் ஒருவரை குளிக்க வைத்து படம் எடுத்திருக்கிறார். அதே போல யானை, குதிரை போன்ற உண்மை விலங்குகளை வைத்து படம் எடுத்தார்.

தயாரிப்புகள் தொகு

படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கிய சுந்தரம் தனது முதல் தயாரிப்பாக "சதி அகல்யா" என்ற படத்தை தயாரித்தார். பிற்காலத்தில் "கவர்ச்சிக் கன்னி"யாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் தவமணிதேவி தான் இந்தப்படத்தின் கதாநாயகியாவார்.1937-இல் வெளிவந்த இப்படம் நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து, "பத்மஜோதி" என்ற படத்தையும் "புரந்தரதாஸ்" என்ற கன்னடப் படத்தையும் தயாரித்தார். 1938இல், "பாலன்" என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தார். மலையாள மொழியின் முதல் பேசும் படம் இதுதான். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. பின்னர் சுந்தரம் தயாரித்த படம் "நாம தேவர்." இது, தமிழில் வெளியான 100_வது படம் என்ற பெருமையைப் பெற்றது. 1938_ம் ஆண்டில் "மாயா மாயவன்" என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் இப்படத்தை இயக்கினார்.

1944-இல் பர்மா ராணி, 1946-இல் சுலோச்சனா,1948-இல் ஆதித்தன் கனவு,1949-இல் மாயாவதி,1950-இல் எம். என். நம்பியார் நடித்து வெளியான துப்பறியும் கதை திகம்பர சாமியார்,1951-இல் சர்வாதிகாரி,1952-ல் வளையாபதி, 1960-இல் பாக்தாத் திருடன், போன்ற பல வெற்றிப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் எடுத்தனர்.இந்நிறுவனம் எடுத்த முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும்.

இவர் எடுத்த சில படங்கள் விவரம் வருமாறு: தட்ச யக்ஞம், கம்பர், தாயுமானவர், மாணிக்கவாசகர், உத்தமபுத்திரன், பக்த கெளரி, தயாளன், மனோன்மணி, செளசெள, பர்மா ராணி, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆதித்தன் கனவு, திகம்பர சாமியார், மந்திரி குமாரி, பொன்முடி, சர்வாதிகாரி, தாய் உள்ளம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே?, கதாநாயகி, மகேஸ்வரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாசவலை, ஆரவல்லி, பெற்ற மகளை விற்ற அன்னை, தலைகொடுத்தான் தம்பி, வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், குமுதம், கொஞ்சும் குமரி, அம்மா எங்கே?, வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா, நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி.சங்கர், ஜஸ்டிஸ் விஸ்வநாதன், கருந்தேள் கண்ணாயிரம் இப்படிப் பல படங்கள் உண்டு.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தைச் சித்தரிக்கும் பர்மா ராணி, தமிழிலக்கியத்தில் புகழ்பெற்ற வளையாபதி, இவற்றோடு சிறுவர்களுக்கான கதை அலிபாபா இவற்றை மிகவும் சுவைபட படம் எடுத்தனர். ஆர்.எஸ்.மனோகரை வைத்து கைதி கண்ணாயிரம் போன்ற படங்களையும் எடுத்தனர் . ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான துப்பறியும் படங்களையும் எடுத்திருக்கிறார். இவர்கள் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த நிறுவனத்தின் வாயிலில் பெரிய விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் தொகு

  • மாடர்ன் தியேட்டர்ஸ் தான் தமிழ் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.
  • முதல் மலையாளப் படத்தை எடுத்த நிறுவனம்
  • முதல் சிங்களப் படத்தை எடுத்த நிறுவனம்
  • தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம்: மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள் என்ற பெயரில் தயாரித்தனர்.[1][2]
  • 1940இல் பி. யூ. சின்னப்பா நடித்த உத்தமப் புத்திரன் திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடம் அறிமுகமானது. அலெக்சாண்டர் டமாஸ் என்பவரின் “The Man in the Iron Mask” ஐத் தழுவி எடுக்கப்பட்டது.
  • 1942ஆம் ஆண்டில் பி. யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடித்து வெளியான "மனோன்மணி" என்ற திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
  • தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம் (கேவா கலர்) 1956ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆகும். இதை மலையாளத்தில் ”கண்டம் வெச்ச கொட்டு” என்ற பெயரிலும் தயாரித்தார்.[3]
  • 1961ஆம் ஆண்டு கண்டம் வெச்ச கொட்டு என்ற மலையாளத் திரைப்படம் அம்மொழியில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் ஆகும்.[4]
  • 1938ஆம் ஆண்டு நோடானி இயக்கிய பாலன் என்ற திரைப்படமே முதல் மலையாள பேசும் திரைப்படமாக அமைந்தது.[4]
  • மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படம் "சந்தனத்தேவன்". ஆங்கிலக் கதையான "ராபின்ஹுட்"டைத் தழுவி, இப்படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஜி.எம். பஷீர். படம் வெற்றி பெற்றது.
  • புகழ்பெற்ற நகைச்சுவை நடிகை மனோரமா கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1963ஆம் ஆண்டில் வெளியான கொஞ்சும் குமரி டி.ஆர். சுந்தரத்தின் 97ஆவது திரைப்படமாக அமைந்தது.
  • மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் திரைப்படம்: சௌ சௌ. மூன்று கதைகள்: கலிகால மைனர், ஸ்கூல் டிராமா மற்றும் சூரப்புலி
  • தொலை அணுக்கவில்லை கண்டறியாத காலத்திலேயே அத்தகைய ஓர் உணர்வை உருவாக்கிய பொன்முடி பட காமெராமேனுக்கு பிரெஞ்சு அரசு விருதளித்துப் பாராட்டியது.
  • இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களை தனது சம்பளப் பட்டியலில் கொண்டிருந்த தனிப்பெருமை கொண்ட நிறுவனம்.
  • தனது திரைப்படங்களில் தரமான தயாரிப்பு அமைய அடிக்கடி வெளியிலிருந்து இயக்குனர்களை, எல்லிசு ஆர். டங்கன், மணி லால் டண்டன், பொம்மன் டி.இரானி போன்றவர்களை, பயன்படுத்தியது.
  • கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தொடக்க காலத்தில் இங்குதான் தங்கி பாடல்கள் எழுதிவந்தனர்.

மறைவு தொகு

1963 இல் டி. ஆர். சுந்தரம் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாறியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரங்கின் நுழைவு வாயில் மட்டும் தற்போது நிலைபெற்றிருக்கிறது. இன்றைக்கும் சில படப்பிடிப்புக் குழுவினர் சேலம் மாடர்ன் தியேட்டர் வளாகத்தில் தனது முதல் படப்பிடிப்பைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

படிமம் தொகு

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Archived copy". Archived from the original on 12 சூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2008.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 10 பெப்பிரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2008.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-01-18. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-12. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடர்ன்_தியேட்டர்ஸ்&oldid=3850022" இலிருந்து மீள்விக்கப்பட்டது