சங்க இலக்கியம் தொகுப்புப் பாடல்

(வாய்பாட்டுப் பாடல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் நூல்களை நினைவுக்குக் கொண்டுவர வாய்ப்பாட்டுப் பாடல்கள் [1] உதவுகின்றன. இவை பெரும்பாலும் வெண்பா யாப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் எளிதாக இடைச்செருகலைப் பாடலுக்குள் செய்ய இயலாது.[2]

பத்துப்பாட்டு வாய்ப்பாடு தொகு

  • நூல் தொகை
முருகு பொருநாறு பாணிரண்டு [3] [4] முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப் [5] பட்டினப்
பாலை [6] கடாத்தொடும் [7] பத்து
முருகாறு செவ்வேள், பொருநாறு பாலை
கரிகாலன், நெடுஞ்செழியன் காஞ்சி - இருபாணும்
நல்லியக் கோடன் இளந்திரையன், நன்னன் கடாம்
கல்வித் தலைவர் கருது.
  • பாடியவர்
முருகு நல் வாடையும் கீரன், முடத்தாமக் கண்ணி பொருந்
மருவு பாண், பாலை உருத்திரங் கண்ணன், மகிழ் சிறுபாண்
புரியும் நத்தத்தன், மருதன் காஞ்சி, நப்பூதன் முல்லை,
வருமெங் கபிலன் குறிஞ்சி, மலைகடாம் கௌசிகனே. [8]

எட்டுத்தொகை வாய்ப்பாடு தொகு

  • நூல் தொகை
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

அகநானூறு திணை காட்டும் பாடல் எண் தொகு

  • 1, 3, 5, 7. 9 எண்கொண்டு முடியும் பாடல்கள் - பாலை
  • 4 எண்கொண்டு முடியும் பாடல்கள் - முல்லை
  • 2, 8 எண்கொண்டு முடியும் பாடல்கள் - குறிஞ்சி
  • 6 எண்கொண்டு முடியும் பாடல்கள் - மருதம்
  • 10-ன் அடுக்கு எண்கொண்டு முடியும் பாடல்கள் - நெய்தல்

இந்தச் செய்திகளைக் காட்டும் பாடல்கள்

1

வியமெல்லாம் வெண்டேர் இயக்கம், கயம் மலர்ந்த
தாமரை ஆறு ஆகத், தகை பெறீஇக் காமர்
நறு முல்லை நான்கு ஆக, நாட்டி வெறி மாண்ட
எட்டும் இரண்டும் குறிஞ்சியாக், குட்டத்து
இவர்திரை பத்தா, இயற்பட யாத்தான்
தொகையின் அடியதனைத் தோலாச் செவியான்
வகையின் நெடியதனை வைப்பு.

2

ஒன்று மூன்று ஐந்து ஏழ் ஒன்பான் பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறி முல்லை - அன்றியே
ஆறாம் மருதம், அணி நெய்தல் ஐயிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூற்று.

3

பாலை வியமெல்லாம், பத்தாம் பனி நெய்தல்,
நாலு நனி முல்லை, நாடுங்கால் - மேலையோர்
தேறும் இரண்டு எட்டு இவை குறிஞ்சி செயதமிழின்
ஆறு மருதம் அகம்.

ஐங்குறுநூறு பாடியோர் தொகு

மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலை ஓதலாந்தை, பனி முல்லை பேயனே
நூலை ஓது ஐங்குறு நூறு.

கலித்தொகை பாடியோர் தொகு

பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம் - அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை, நல்லந்துவன் நெய்தல்
கல்வி வலார் கண்ட கலி

பரிபாடல் அமைதி தொகு

  • பரிபாடல் நூலில் 70 பாடல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. அவை திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, காடுகாளுக்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4 என அமைந்திருந்தன. இன்று கிடைத்துள்ள பரிபாடல்கள் திருமாலுக்கு 6, செவ்வேளுக்கு 8, வையைக்கு 8, என்னும் 22 பாடல்கள் மட்டுமே. மற்றும் பரிபாடல் எனக் கொள்ளத்தக்க 11 பாடல்கள் பரிபாடல் திரட்டு என்னும் தலைப்பின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. அவை திருமாலுக்கு 1, வையைக்கு 4, மதுரைக்கு 6 என்னும் எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளன.
திருமாற்கு இருநான்கு, செவ்வேட்கு முப்பத்
திரு பாட்டுக், காடுகாட்கு ஒன்று - மருவினிய
வையைக்கு இருபத்தாறு, மாமதுரை நான்கு என்ப
செய்ய பரிபாடல் திறம்.

பதினெண்கீழ்க்கணக்கு வாய்ப்பாடு தொகு

நாலடி நான்மணி நால்நாற்பது [9] [10] [11] [12] ஐந்திணை [13] [14] [15] [16] முப்
பால் [17] கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு [18] ஏலாதி என்பவே,
கைந்நிலைய [19] வாம்கீழ்க் கணக்கு

அகத்திணை வாய்ப்பாடு தொகு

போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கம் அளி ஊடல் அணி மருதம் - நோக்கு ஒன்றி
இல் இருத்தல் முல்லை, இரங்கிய போக்கு ஏர் நெய்தல்
புல்லும் கவிமுறைக்கு ஒப்பு.

புறத்திணை வாய்ப்பாடு தொகு

வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.

கருவிநூல் தொகு

  • அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967)

அடிக்குறிப்புகள் தொகு

  1. இவை வாயில் பதிந்த பாடல்கள். இதனை நினைவுத் தொகைப் பாடல்கள் memory poems எனவும் கொள்ளலாம். கைகால் பயிற்சியால் 'கார்' ஓட்டுவது போலவும், கைவிரல் பயிற்சியால் கருதியதை எழுதுவது போலவும், வாய்ப் பயிற்சி வாய்பாட்டால் கணக்குப் போடுவது போலவும், வாய்பாட்டுப் பாடல்களின் பயிற்சியால் தமிழ் இலக்கியங்களின் தொகுப்பையும் அவற்றைப் பற்றிய செய்திகளையும் நினைவுபடுத்திக்கொள்கின்றனர்.
  2. இக்கட்டுரையில் பாடல்கள் பயன் கருதிப் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்து தரப்பட்டுள்ளன.
  3. சிறுபாணாற்றுப்படை
  4. பெரும்பாணாற்றுப்படை
  5. குறிஞ்சிப்பாட்டு
  6. பட்டினப்பாலை
  7. மலைபடுகடாம்
  8. இது கட்டளைக் கலித்துறைப் பாடல்
  9. இன்னா நாற்பது
  10. இனியவை நாற்பது
  11. கார் நாற்பது
  12. களவழி நாற்பது
  13. ஐந்திணை ஐம்பது
  14. ஐந்திணை எழுபது
  15. திணைமொழி ஐம்பது
  16. திணைமாலை நூற்றைம்பது
  17. திருக்குறள்
  18. முதுமொழிக்காஞ்சி
  19. கைந்நிலை