சம்சுத்தீன் இல்த்துத்மிசு
சம்சுத்தீன் இல்த்துத்மிசு (ஆங்கிலம்: Shams ud-Din Iltutmish,[a] 1192-30 ஏப்ரல் 1236) வட இந்தியாவில் முந்தைய கோரி நிலப்பரப்புகளை ஆட்சி செய்த மம்லூக் மன்னர்களில் மூன்றாவது மன்னர் ஆவார். தில்லியில் இருந்து ஆட்சி செய்த இறையாண்மையுள்ள முதல் முசுலிம் ஆட்சியாளர் இவராவார். இவ்வாறாக தில்லி சுல்தானகத்தை செயல் முறையில் நிறுவியவராக இவர் கருதப்படுகிறார்.
சம்சுத்தீன் இல்த்துத்மிசு | |
---|---|
'சுல்தான்' | |
![]() குதுப் மினார் வளாகத்தில் இல்த்துத்மிசுவின் சமாதி | |
3ஆம் தில்லி சுல்தான் | |
ஆட்சிக்காலம் | சூன் 1211 – 30 ஏப்ரல் 1236 |
முன்னையவர் | ஆராம் ஷா |
பின்னையவர் | உருக்னுதீன் பிரோசு |
பிறப்பு | தெரியவில்லை நடு ஆசியா[1] |
இறப்பு | 30 ஏப்ரல் 1236 தில்லி, தில்லி சுல்தானகம் |
புதைத்த இடம் | |
வாழ்க்கைத் துணைகள் | துர்கன் கதுன், குத்புத்தீன் ஐபக்கின் மகள் (பட்டத்து இராணி)[2][முதன்மையற்ற ஆதாரம் தேவை]
ஷா துர்கன் மலிகா-இ-சகான்[2][முதன்மையற்ற ஆதாரம் தேவை] |
குழந்தைகளின் பெயர்கள் | நசிருத்தீன் மகுமூது இரசியா சுல்தானா முயீசுத்தீன் பக்ரம் உருக்னுத்தீன் பிரூசு நசிருத்தீன் மகுமூது ஷா (ஒரு பேரனாக ஒரு வேளை இருந்திருக்கலாம்[3][4]) கியாசுத்தீன் முகம்மது ஷா[5] சலாலுத்தீன் மசூது ஷா[6] சிகாபுத்தீன் முகம்மது [7] குத்புத்தீன் முகம்மது [5] பெயரிடப்படாத ஒரு மகள்[8] சசியா பேகம் [9] [முதன்மையற்ற ஆதாரம் தேவை] |
தந்தை | இலாம் கான் |
மதம் | சன்னி இசுலாம் |
ஒரு சிறுவனாக இவர் அடிமையாக விற்கப்பட்டார். தன்னுடைய தொடக்க கால வாழ்வைப் பல்வேறு எசமானர்களுக்குக் கீழ் புகாரா மற்றும் காசுனியில் இல்த்துத்மிசு செலவழித்தார். 1190களின் பிந்தைய காலத்தில் கோரியின் அடிமை-தளபதி குத்புத்தீன் ஐபக் இவரைத் தில்லியில் விலைக்கு வாங்கினார். இவ்வாறாக இவர் ஓர் அடிமையின் அடிமையாவார். ஐபக்கின் சேவையில் இல்த்துத்மிசு முக்கியமான நிலைக்கு உயர்ந்தார். பதாவுனின் முக்கியமான இக்தாவானது இவருக்கு வழங்கப்பட்டது. 1205-1206இல் கோகர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இவரது இராணுவ நடவடிக்கைகள் கோரி ஆட்சியாளரான கோரின் முகம்மதுவின் கவனத்தை ஈர்த்தது. இவரது எசமானர் ஐபக் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னரே கோரின் முகம்மது இல்த்துத்மிசை விடுதலை செய்தார்.
1206இல் கோரின் முகம்மதுவின் அரசியல் கொலைக்குப் பிறகு இந்தியாவிலிருந்த கோரி நிலப்பரப்புகளின் நடைமுறை ரீதியிலான சுதந்திரமான ஆட்சியாளராக ஐபக் உருவானார். இவரது தலைமையகம் இலாகூரில் அமைந்திருந்தது. ஐபக்கின் இறப்பிற்குப் பிறகு ஐபக்கிற்குப் பின் வந்த பிரபலமற்ற ஆட்சியாளரான ஆராம் ஷாவை 1211ஆம் ஆண்டு இல்த்துத்மிசு அரியணையில் இருந்து இறக்கினார். தன்னுடைய தலைநகரைத் தில்லியில் அமைத்தார். ஏராளமான எதிர்ப்பாளர்களை அடிபணிய வைத்ததன் மூலம் இல்த்துத்மிசு தன்னுடைய ஆட்சியை நிலைப்படுத்தினார். தாஜல்தீன் இல்திசு மற்றும் நசிரதீன் கபாச்சா போன்ற கோரின் முகம்மதுவின் பிற முன்னாள் அடிமைகளுடன் சண்டையிட்டார். 1225-1227இல் கிழக்கு இந்தியாவில் லக்னௌதி என்ற இடத்தில் தலைமையகத்தைக் கொண்டிருந்த ஒரு சுதந்திரமான இராச்சியத்தை உருவாக்கியிருந்த ஐபக்கின் முன்னாள் உதவியாளர்களை இவர் அடிபணிய வைத்தார். இரந்தம்பூர் (1226) மற்றும் மண்டூர் (1227) ஆகியவற்றின் மீதும் இவர் தனது அதிகாரத்தை நிலை நாட்டினார். அப்பகுதிகளின் இந்துத் தலைவர்கள் ஐபக்கின் இறப்புக்குப் பிறகு சுதந்திரத்தை அறிவித்திருந்தனர்.
1220களின் தொடக்கத்தில் சிந்து சமவெளிப் பகுதியில் இருந்து இல்த்துத்மிசு பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தார். கபாச்சா, குவாரசமிய அரசமரபு மற்றும் மங்கோலியர்களுக்கு இடையிலான சண்டைகளில் இப்பகுதி மூழ்கியிருந்தது. 1228இல் இவர் சிந்து சமவெளிப் பகுதி மீது படையெடுத்தார். கபாச்சாவைத் தோற்கடித்தார். பஞ்சாப் மற்றும் சிந்தின் பெரும் பகுதிகளை தன்னுடைய பேரரசுடன் இணைத்தார். இறுதியாக அப்பாசியக் கலீபா அல்-முசுதன்சீர் இந்தியாவில் இவரது அதிகாரத்தை அங்கீகரித்தார். அடுத்த சில ஆண்டுகளில் வங்காளத்தில் நடைபெற்ற ஒரு கிளர்ச்சியை இல்த்துத்மிசு ஒடுக்கினார். குவாலியரைக் கைப்பற்றினார். பரமாரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த நடு இந்தியாவின் விதிஷா மற்றும் உஜ்ஜைன் மீது ஊடுருவல்கள் நடத்தினார். வடமேற்கில் இருந்த குவாரசமிய உதவி ஆட்சியாளர்களை வெளியேற்றினார். சந்தேலர்களால் கட்டுப்படுத்தப்பட்ட கலிஞ்சர் பகுதியையும் கூட இவரது அதிகாரிகள் தாக்கிச் சூறையாடினர்.
இல்த்துத்மிசு சுல்தானகத்தின் நிர்வாகத்தை ஒருங்கிணைத்தார். முகலாயப் படையெடுப்பு வரை நீடித்திருந்த வட இந்தியா மீதான அதன் ஆதிக்கத்துக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். வெள்ளி தங்கா மற்றும் செப்பு சிதால் நாணயங்களை அறிமுகப்படுத்தினார். சுல்தானகக் காலத்தின் போது இரண்டு அடிப்படை நாணயங்களாக இவை இருந்தன. 175 தானியங்களின் தரப்படுத்தப்பட்ட எடையை இவை கொண்டிருந்தன. இக்ததாரி அமைப்பை இவர் உருவாக்கினார்: பேரரசை இக்தாக்களாகப் பிரித்தார், சம்பளம் பெற்ற உயர்குடியினர் மற்றும் அதிகாரிகளுக்கு இவை வழங்கப்பட்டன. பள்ளிவாசல்கள், கன்காக்கள் (மடாலயங்கள்), தர்காக்கள் (சன்னிதி அல்லது செல்வாக்குமிக்க மக்களின் சமாதிகள்) மற்றும் புனிதப் பயணிகளுக்கான ஒரு நீர்தேக்கம் (கௌசு) உள்ளிட்ட பல கட்டடங்களை இவர் எழுப்பினார்.
இளமைக் காலம்
தொகுசம்சுத்தீன் துருக்கிசுத்தானில் உள்ள இல்பாரி என்னும் பழங்குடியைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதில் மிகவும் அழகானவராகவும், மிகுந்த அறிவுத்திறன் கொண்டவராகவும் இருந்தார். இதனால் இவர்பால் பொறாமை கொண்ட இவரது உடன்பிறந்தோர் இவரை அடிமையாக விற்றுவிட்டனர். இவரது இயல்புகளின்பால் கவரப்பட்ட தில்லியின் சுல்தான் குதுப்புத்தீன் ஐபாக் இவரைக் கூடிய விலை கொடுத்து வாங்கினார். அரச சேவையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற சம்சுத்தீன், குதுப்புத்தீனின் மகளையும் மணம் செய்துகொண்டார். இவர் குவாலியரிலும், பாரானிலும் ஆளுனராக இருந்தார்[10] பின்னர் தில்லி சுல்தானகத்தின் ஆட்சிப்பொறுப்பு ஏற்கும்வரை, 1206 முதல் 1211 ஆம் ஆண்டுவரை பாதுவானின் ஆளுனராக இருந்தார்.
தில்லியின் சுல்தான்
தொகுஅதிகாரத்துக்கு வருதல்
தொகுகிபி 1210 ஆம் ஆண்டில் குதுப்புத்தீன் ஐபாக் இறந்தார். அவருக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அவரது மகன் அராம் சாவின் திறமையின்மையால் துருக்கப் பிரபுக்களின் வெறுப்புக்கு ஆளானார். இப் பிரபுக்கள் அராம் சாவைப் பதவியிலிருந்து அகற்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு சம்சுத்தீனைக் கேட்டுக்கொண்டனர். பதவியேற்றபோது இவருக்கு "அல்த்முசு" என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. இப்பெயர் இல்த்மாசு அல்லது இல்த்துத்மிசு எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. துருக்க மொழியில் இது "அறுபது"எனப் பொருள்படும். பதவியேற்கும்போது அவருக்கு 60 வயது ஆனபடியால் இப்பெயர் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தொடக்ககாலச் சவால்கள்
தொகுஇல்த்துத்மிசு பதவியேற்ற பின்னர், அவர் பல சவால்களை எதிர்நோக வேண்டி இருந்தது. உச், முல்த்தான் ஆகிய பகுதிகளுக்கு ஆளுனராக இருந்த நசிருத்தீன் கபாச்சா, லாகூரைப் பிடித்து வைத்துக்கொண்டு தனியரசு நடத்த முயன்றார்[11]. காசுனியின் சுல்தான், தாசுத்தீன் யல்தோசு தில்லியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தார். குதுப்புத்தீனால் வங்காளத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்ட கால்சியின் பிரபுவான அலி மர்தான், தன்னைச் சுல்தான் அலாவுத்தீன் என அறிவித்துக் கொண்டார். அவருக்குப் பின் வந்த கியாசுத்தீன், பீகாரைக் கைப்பற்றிக் கொண்டான். இந்து இளவரசர்களும், தலைவர்களும் தமது சுதந்திரம் பறிபோனதையிட்டுக் குமுறிக்கொண்டிருந்தனர். கானாவூச், வாரணாசி, குவாலியர், கலிஞ்சர் போன்ற அவர்களது பகுதிகள் குதுப்புத்தீனால் கைப்பற்றப்பட்டு இருந்தன. சௌகான்கள், அராம் சாவின் காலத்தில் இரந்தாம்பூரை மீளக் கைப்பற்றிக் கொண்டனர். இல்த்துத்மிசின் பிரச்சினைகளை மேலும் கூட்டும் வகையில், தில்லியின் அமீர்களில் சிலரும் அவரது ஆட்சிக்கு எதிராக இருந்தனர்.
மங்கோலியரின் பயமுறுத்தல்
தொகுஇல்த்துத்மிசின் ஆட்சிக்காலத்தில், வரலாற்றில் முதல் முறையாக செங்கிசுக் கானின் தலைமையிலான மங்கோலியப் படைகள், சிந்து நதிக் கரைக்கு வந்தன. இவர்கள் நடு ஆசியா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளை மிக விரைவாகக் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் பின்னர், குவாசராசம் அல்லது கீவா எனப்பட்ட நாட்டைத் தாக்கியபோது அதன் கடைசி அரசனான சலாலுத்தீன் மங்கபர்னி, பஞ்சாபுக்கு வந்து, தில்லி சுல்தானகத்தில் தஞ்சம் கோரினார். ஆனால் இல்த்துத்மிசு அதற்கு இணங்கவில்லை. பின்னர் மங்கபர்னி கோக்கர்களுடன் உடன்பாடு செய்துகொண்டு முல்த்தானின் கபாச்சாவைத் தோற்கடித்தபின்னர், சிந்துப் பகுதியையும், வடக்குக் குசராத்தையும் சூறையாடிக்கொண்டு பாரசீகம் நோக்கிச் சென்றனர். மங்கோலியர்களும் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது இந்தியா பெரிய இடரில் இருந்து தப்பித்துக் கொண்டது.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Columbia University press, Slavery & South Asian history Indrani Chatterjee,Richard M.Eaton[page needed]
- ↑ 2.0 2.1 Minhaj-i-Siraj, "Tabaqat-i-Nasiri" translated by Major HG Raverty (1873), p. 676.
- ↑ K. A. Nizami 1992, ப. 256.
- ↑ Jaswant Lal Mehta 1979, ப. 105.
- ↑ 5.0 5.1 Minhaj-i-Siraj, "Tabaqat-i-Nasiri" translated by Major HG Raverty (1873), p. 625, 633.
- ↑ Minhaj-i-Siraj, "Tabaqat-i-Nasiri" translated by Major HG Raverty (1873), p. 625, 661.
- ↑ Minhaj-i-Siraj, "Tabaqat-i-Nasiri" translated by Major HG Raverty (1873), p. 625.
- ↑ Minhaj-i-Siraj, "Tabaqat-i-Nasiri" translated by Major HG Raverty (1873), p. 650, 661.
- ↑ "Grave of Delhi's only woman Sultan lies forgotten". www.dnaindia.com. Retrieved 2022-11-06.
- ↑ Mehta 1986, ப. 90-91
- ↑ Mehta 1986, ப. 91–92
உசாத்துணை
தொகு- Ian Blanchard (2005). Mining, Metallurgy and Minting in the Middle Ages. Vol. 3. Franz Steiner Verlag. ISBN 9783515087049.
- A. K. Majumdar (1956). Chaulukyas of Gujarat. Bharatiya Vidya Bhavan.
- André Wink (1991). Al-Hind the Making of the Indo-Islamic World: The Slave Kings and the Islamic Conquest : 11Th-13th Centuries. BRILL. ISBN 90-04-10236-1.
- Blain H. Auer (2012). Symbols of Authority in Medieval Islam: History, Religion and Muslim Legitimacy in the Delhi Sultanate. I.B.Tauris. ISBN 978-1-84885-567-0.
- F. B. Flood (2009). Objects of Translation: Material Culture and Medieval "Hindu-Muslim" Encounter. Princeton University Press. ISBN 978-0-691-12594-7.
- Iqtidar Husain Siddiqi (2003). Medieval India: essays in intellectual thought and culture. Manohar. ISBN 978-81-7304-499-1.
- Jaswant Lal Mehta (1979). Advanced Study in the History of Medieval India. Vol. 2. ISBN 9788120706170.
- K. A. Nizami (1992). "The Early Turkish Sultans of Delhi". In Mohammad Habib; Khaliq Ahmad Nizami (eds.). A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526). Vol. 5 (Second ed.). The Indian History Congress / People's Publishing House. கணினி நூலகம் 31870180.
- Peter Jackson (2003). The Delhi Sultanate: A Political and Military History. Cambridge University Press. ISBN 978-0-521-54329-3.
- R. Balasubramaniam (2005). The World Heritage Complex of the Qutub. Aryan Books International. ISBN 978-81-7305-293-4.
- Riazul Islam (2002). Sufism in South Asia: Impact on Fourteenth Century Muslim Society. Oxford University Press. ISBN 9780195790054.
- Ronald Vivian Smith (2005). The Delhi that No-one Knows. Orient Blackswan. ISBN 978-81-8028-020-7.
- S. M. Ikram (1966). Muslim Rule in India & Pakistan, 711-1858 A.C. Star Book Depot.
- Salma Ahmed Farooqui (2011). A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid-Eighteenth Century. Pearson Education India. ISBN 978-81-317-3202-1.
- Satish Chandra (2004). Medieval India: From Sultanat to the Mughals-Delhi Sultanat (1206-1526). Vol. 1. Har-Anand Publications. ISBN 978-81-241-1064-5.
- Sean Oliver-Dee (2009). The Caliphate Question: The British Government and Islamic Governance. Lexington Books. ISBN 978-0-7391-3603-4.