வை. மு. கோதைநாயகி

தமிழக எழுத்தாளர்

வை. மு. கோதைநாயகி (திசம்பர் 1, 1901 - பெப்ரவரி 20, 1960), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரைச் சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.

வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி
பிறப்பு(1901-12-01)1 திசம்பர் 1901
செங்கல்பட்டு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு20 பெப்ரவரி 1960(1960-02-20) (அகவை 58)
தமிழ்நாடு
தொழில்புதின எழுத்தாளர், இதழாசிரியை
தேசியம்இந்தியர்
வகைபுதினம்
துணைவர்பார்த்தசாரதி

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

கோதைநாயகி, திசம்பர் 1, 1901 ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் வாழ்ந்த என்.எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவரைச் சிறு வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைத்தனர். பிறந்த ஒரு வயதிலேயே தன் தாயை இழந்தார். அதனால் அவரது பாட்டி வேதவல்லி அம்மாளும், அவரது சிற்றப்பா மனைவியான கனகம்மாளும் அவரை வளர்த்தனர். தன் சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலம் என்பதால் 1907-இல் கோதைநாயகிக்கு ஐந்தரை வயதான போது திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. சீனிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். கோதைநாயகியின் புகுந்த வீட்டினர் தீவிர வைணவ மரபின் வழிவந்தவர்கள். ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ என்ற பெயர் பெற்ற அக்குடும்பத்தினருக்கு அக்காலத்தில் திருவல்லிக்கேணியிலும், வைணவ சமூகத்திலும் தனிமதிப்பு இருந்தது. அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் வை.மு. என்ற எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டனர். வைத்த மாநிதி என்பது அக்குடும்பத்தினரின் குலதெய்வமான திருக்கோளூர் பெருமானின் பெயராகும். முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊராகும். கோதைநாயகிக்கும் திருமணத்துக்குப் பின்னர் ‘வை.மு.’ என்ற குடும்பப்பெயரை இணைத்து வை.மு. கோதைநாயகி என அழைத்தனர். கோதை நாயகியின் வெற்றிக்கு அவரது செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதி தான். திருமணத்தின்போது கோதைநாயகி பள்ளி சென்று படித்தவரில்லை. பார்த்தசாரதி, அவரைக் கல்வி கற்கச் செய்தார். கோதைநாயகி, தன் மாமியாரிடம் தெலுங்கு மொழியைக் கற்றார்.

எழுத்துப் பணி தொகு

கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. ஆனால், வீட்டில் எப்போதும், திருவாய்மொழி, பாசுரங்கள் பாடிக்கொண்டிருப்பார். இதனால் அவருக்குத் தமிழ்நடை சரளமாக வரத் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குப் பழங்கதைகளைச் சொல்லி வந்தார். சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்குக் கற்பனைக் கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. இதனைக் கண்ட அவரது கணவர் அவரிடம் காணப்பட்ட படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு அவரைப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். நாடகங்களைப் பார்த்து இரசித்த கோதைநாயகிக்குத் தானே நாடகங்களை எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத்தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் எழுத, இந்திர மோகனா என்ற நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924-ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந்நாடகத்தை இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின. இந்நாடகத்தைப் பலர் கேட்டு வாங்கி நடித்தனர். இவ்வாறு தனது முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி கோதைநாயகியை மேலும் எழுதத் தூண்டியது எனலாம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். அதன் பிறகு பட்டம்மாளிடம் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.

கோதைநாயகி, நாடகம் எழுதுவதிலும், இயக்குவதிலும் வல்லவர். அவருடைய சமூக நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் அருணோதயம், வத்சகுமார், தயாநிதி என்ற நாடகங்கள் பலரது பாராட்டைப் பெற்றவை. இவ்வாறு, கோதைநாயகி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவை அவரின் இதர படைப்புகளாகும்.

இதழியலாளர் தொகு

முதல் நூல் தந்த ஊக்கத்தால் கோதைநாயகி வைதேகி என்ற புதினத்தை எழுதினார். இதனை வடுவூர் துரைசாமி ஐயங்கார் திருத்தம் செய்து கொடுத்ததுடன் தமது மனோரஞ்சனி இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். அவரது அறிவுரையின் பேரில், 1925-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வெளிவராமல் நின்று போயிருந்த ஜகன்மோகினி மாத இதழை விலை கொடுத்து வாங்கி அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். அதில் வைதேகி புதினத்தைத் தொடர்கதையாக ஓர் ஆண்டு முழுக்க வெளியிட்டார் இதற்குப் பலர் பலத்த எதிர்ப்பு காட்டினர் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இதழ்கள் தாம் நல்ல வழி என்று இவ்விதழை நடத்துவதிலிருந்து பின்வாங்க மறுத்தார். பின்பு அவ்விதழ் கோதைநாயகி இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்பு வரை 35 ஆண்டுகளாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

ஜகன்மோகினி இதழின் வாசகர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதனால் வடுவூரார் நடத்தி வந்த மனேரஞ்சனி தேக்கநிலையை அடைந்தது. கோதைநாயகி எழுதிய வைதேகி என்ற கதையை வடுவூரார் பிழைதிருத்தித் தருவதாக வாங்கிச் சென்றார். பொறாமை காரணமாக "நான்தான் வை.மு. கோதை நாயகிக்காக 'வைதேகி' என்ற புதினத்தை எழுதிக் கொடுத்தேன். இனி வைதேகி ஜகன்மோகினியில் தொடராது" என்று வடுவூரார் அறிவித்தார். ஆனாலும், கோதைநாயகி தன்னுடைய நினைவுத்திறன் கொண்டே வைதேகியையை ஜகன்மோகினியில் தொடர்ந்து எழுதித் தான் எழுதியதாகக் கூறிய வடுவூராரின் கூற்றைப் பொய்யாக்கினார்.

கோதைநாயகியின் எழுத்தாற்றல் தமிழ் வாசகர்களிடையே பரவியது. அதனால், கோதைநாயகி ஜகன்மோகினியில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து மற்ற இதழ்கள் போல் வெளியிடலானார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டார். விற்பனை கூடியது. தமிழ்நாட்டில் ‘ஜகன்மோகினி’ முன்னணி இதழ்களுள் ஒன்றாக முன்னேறியது. கோதை நாயகி, தனது பல புதினங்களை ஜகன்மோகினியின் மூலம் தான் எழுதினார். இந்து - இசுலாமியர் ஒற்றுமை, பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றைப் புதினங்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார். மொத்தம் 115 புதினங்களை இவர் எழுதினார். 1937-ஆம் ஆண்டு சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி அச்சுத்தொழிலிலும் சிறந்து விளங்கினார்.

மேடைப் பேச்சாளராக தொகு

இவரது மேடைப் பேச்சுக்களைக் கேட்க ஏராளாமானோர் கூடுவார்கள். பேசும் போது இடையிடையே குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லுவார். காங்கிரஸ் இயக்கத்தில் செயல்திறன் மிக்க உறுப்பினராக வை.மு.கோ. அம்மையார் விளங்கினார். தீரர் சத்தியமூர்த்தி, காமராசர், மூதறிஞர் இராஜாஜி போன்றோர் அம்மையாருடன் நட்புடையவர்களாக இருந்தனர். தீரர் சத்தியமூர்த்தியின் கூட்டங்களில் அம்மையார் கலந்து கொண்டு கடவுள் வாழ்த்துப் பாடலையும், பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களையும் பாடியுள்ளார். ராஜாஜியின் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தில் இவர் பேசியதைக் கேட்டு, தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் இவரையும் பேசச் சொல்லி அன்பாக உத்தரவிட்டார் ராஜாஜி.

கருநாடக இசைப் பாடகராக தொகு

வை.மு.கோ. அம்மையார் இசையில் மிகுந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். கருநாடக இசைப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவராக இவர் இருந்தார். அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. காங்கிரஸ் மேடைகள் தோறும் நாட்டுப்பற்று உள்ள பாடல்களைஅம்மையார் பாடினார். அத்துடன் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் இசைஆற்றலை வெளிக் கொணரப் பாடுபட்டுள்ளார். அந்த வரிசையில் ஒருவர் புகழ் பெற்ற டி. கே. பட்டம்மாள் ஆவார். வை.மு.கோ. இனிய குரலில் பாடுவதை மெய்மறந்து பாரதியார் இரசித்ததாகக் கூறுவார்கள். மகாகவி பாரதியாரின் பாராட்டைப் பெற்றவர். அம்மையார் வானொலியிலும் இசைநிகழ்ச்சிகளை வழங்கி அதனை இசைத்தட்டுகளாகவும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வை.மு.கோ. மேடைகளில் பாடுவதன்றிப் பல பாட்டுகளையும் புனைந்துள்ளார். இவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் சமீபத்தில் 'இசை மார்க்கம்' என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. முப்பதுகளில் வை.மு.கோ வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார்.[1] அம்பா மனோஹரி, கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள இந்த கிருதிகள், கர்நாடக இசைப் பாடகர்களால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.

சுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோ.விற்காகவே தம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டைப் புனைந்ததாகவும், பின்னர் டி. கே. பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பது மற்றொரு செய்தியாகும்.[2]

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு தொகு

பத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமிருந்த வை.மு.கோ.வுக்கு அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாகத் தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு ஏற்பட்டது. தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு 1925-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்த போது வை.மு.கோதை நாயகி அம்மாள் காந்தியைச் சந்தித்தார். இந்நிகழ்வு வை.மு.கோவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காந்தியின் எளிமையான தோற்றமும், ஆராவாரமற்ற அவரது உறுதியான நாவன்மையும் அம்மையாரை மிகவும் கவர்ந்தது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட வை.மு.கோ. அது முதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார். மங்கல நாணைத் தவிர ஆடம்பரமான அணிகலன்களைத் தவிர்த்து, வேறு நகைகளை அணிவதில்லை என்று உறுதி பூண்டு அதையும் இறுதி வரையில் கடைப்பிடித்தார். பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

1931-இல் மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது அம்மையார் அதை ஏற்று திருவல்லிக்கேணியில் தற்போதைய பெசண்ட் ரோட்டில் திருமலாச்சாரி பள்ளி இருக்குமிடத்தின் அருகே இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை அம்மையாருக்கு விதிக்கபட்டது.

1932-இல் ‘லோதியன் கமிஷனுக்கு’ எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டும், அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகவும் கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள். ஓர் எழுத்தாளர் என்ற முறையில் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாகச் சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறைக்கைதிகளை வன்முறை பாதையிலிருந்து திசை திருப்பி காந்திய பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். சிறையில் இருந்தபோது "சோதனையின் கொடுமை", "உத்தமசீலன்" ஆகிய புதினங்களை எழுதினார். இவர் சிறையில் இருந்த போது ஜகன்மோகினி இதழை இவரது கணவர் வை.மு.பார்த்த சாரதி தொடர்ந்து நடத்தினார்.

இட மாற்றம் தொகு

இரண்டாவது உலகப்போரின் போது ஏற்பட்ட அச்சம் காரணமாக மக்கள் பலரும் சென்னையை விட்டு வெளியேறினர். வை.மு. கோ. அம்மையாரும் "ஜகன்மோகினி' அச்சகத்தோடு சென்னைக்கு அடுத்த செங்கல்பட்டு அருகேயிருந்த சிங்கபெருமாள் கோயில் எனப்படும் சிற்றூரில் குடியேறினார். ஜகன்மோகினி வெற்றிக்கு அதில் சித்திரம் வரைந்த சாமுவேல் என்ற ஓவியர் ஒரு காரணமாவார். இவர் இறுதிவரை ஜகன்மோகினி சிறப்பாக வெளிவர உறுதுணையாக இருந்தார். நாடு விடுதலை அடைந்தவுடன் மீண்டும் சென்னைக்கே "ஜகன்மோகினி' அலுவலகத்தையும் அச்சகத்தையும் அம்மையார் கொண்டுவந்தார்.

திரைப்படத்துறை தொகு

1930-களில் அம்மையார் 'டாக்கி' என்று அக்காலத்தில் சொல்லப்பட்ட திரைப்படத் துறையிலும் முத்திரை பதித்துள்ளார். வை.மு.கோ.அம்மையார் திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். அவர் தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்தபோது, தாம் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளனவா என்பதை அறிந்து கொள்ள அத்திரைப்பட அரங்கிற்குத் தன்னை யாரும் அறியாமல் இருக்கத் தலையில் முக்காடிட்டுக் கொண்டு சென்று படம் பார்ப்பது வழக்கம். 'அதிஷ்டம்' என்ற திரைப்படத்தில் தான் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் திரையிடப்பட்டிருப்பதை அறிந்து அப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய அனுப்பினார். இவ்வாறு தாம் செய்யும் பணிகளை மிகுந்த ஈடுபாட்டுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் செய்தார்.

கோதை நாயகியின் நாவல்கள் பல பிற்காலத்தில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. அவரது 'அனாதைப் பெண்' என்ற நாவலை ஜுபிடர் பிக்ஸர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அம்மையாரின் 'தயாநிதி' என்ற நாவல் சித்தி என்ற பெயரில் வெளிவந்து மிகுந்த புகழ் பெற்றது. மேலும் ராஜமோகன் (1937), தியாகக்கொடி, நளினசேகரன், (1966) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. ‘சித்தி’ படத்துக்கான சிறந்த 'கதையாசிரியர் விருது' கோதைநாயகிக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.

பொதுத் தொண்டுகள் தொகு

வை.மு.கோ அம்மையார் இலவசமாக குழந்தைப்பேறு மருத்துவம் பார்ப்பதும் உண்டு. தமது உறவினர்களுக்கு மட்டுமின்றித் தன்னை நாடிவந்து குழந்தைப்பேறு பார்க்க வேண்டும் என்று யார் அழைத்தாலும் சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் பார்ப்பார். இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று அம்மையார் அதனைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.

1948-ஆம் ஆண்டு சனவரி 30-ஆம் நாள் காந்தி மறைந்த பின்பு 13-ஆம் நாள் அவரது சாம்பல் நாடெங்கும் கடலில் கரைக்கப்பட்டது. சென்னையில் நடந்த சாம்பல் கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமமையார் காந்தியின் நினைவாக மார்ச்சு மாதம் 2-ஆம் நாளன்று மகாத்மாஜி சேவா சங்கம் என்ற சங்கத்தைத் திருவல்லிக்கேணியில் தொடங்கினார். அச்சங்கத்தின் வாயிலாக ஏழைகளுக்கும் ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்தார்.

வை.மு.கோ.அம்மையாரின் தேசிய சேவையைப் பாராட்டிக் காங்கிரஸ் அரசாங்கம் அவருக்குச் செங்கல்பட்டுக்கு அருகே 3 ஏக்கர் நிலமும் மற்றொரு இடத்தில் 7 ஏக்கர் நிலமும் வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் அவ்வாறு தனக்குக் கிடைத்த நிலத்தைப் பூமிதான இயக்கத்திற்காக வினோபாவேயிடம் அம்மையார் வழங்கிவிட்டார்.

இறுதிக் காலம் தொகு

1956-ஆம் ஆண்டில் அம்மையாரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் திடீரென்று இறந்தார். அவரது மறைவு அம்மையாரை நிலைகுலைய வைத்துவிட்டது. பெண்களின் வழிகாட்டியாக, சிறந்த விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, நாடக ஆசிரியராக, நாடக இயக்குநராக, இசை வல்லவராக, பத்திரிக்கை ஆசிரியராகப் பன்முக ஆற்றலுடன் விளங்கிய நாவல் ராணியாகிய வை.மு.கோதைநாயகி அம்மாள், தன் மகன் இறந்து தான் மட்டும் இருக்கிறோமே என்று வருந்தி சரியாக உணவு உண்ணாமல் உறக்கமின்றி உடம்பை வருத்திக் கொண்டார். அதனால் அம்மையார் கொடிய காச நோய்க்கு ஆளானார். தாம்பரம் காசநோய் மருத்துவ மனையில் உரிய சிகிச்சை பெற்றும் பலனின்றி 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் நாள் மருத்துவமனையிலேயே இறந்தார்.

வை.மு. கோதைநாயகி அம்மாளின் சில படைப்புகள் தொகு

ஜகன் மோகினி இதழில் வெளிவந்த வை.மு. கோதைநாயகி அம்மாளின் சில படைப்புகள்

  1. வைதேகி (1925 – 4 பதிப்புகள்)
  2. பத்மசுந்தரன் (1926 – 3 பதிப்புகள்)
  3. சண்பகவிஜயம் (1927 – 2 பதிப்புகள்)
  4. ராதாமணி (1927 – 4 பதிப்புகள்)
  5. கௌரிமுகுந்தன் (1928 – 2 பதிப்புகள்)
  6. நவநீதகிருஷ்ணன் (1928 – 2 பதிப்புகள்)
  7. கோபாலரத்னம் (1929)
  8. சியாமளநாதன் (1930 -2 பதிப்புகள்)
  9. சுகந்த புஷ்பம் (1930)
  10. ருக்மிணீகாந்தன் அல்லது ஆபத்தில் காக்கும் அன்பர்கள் (1930)
  11. வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930)
  12. நளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930)
  13. உத்தமசீலன் (1932 – 3 பதிப்புகள்)
  14. கதம்பமாலை (1932 – 2 பதிப்புகள்)
  15. பரிமள கேசவன் (1932 – 2 பதிப்புகள்)
  16. மூன்று வைரங்கள் (1932 -2 பதிப்புகள்)
  17. காதலின் கனி (1933 – 2 பதிப்புகள்)
  18. சோதனையின் கொடுமை (1933 – 2 பதிப்புகள்)
  19. படாடோபத்தின் பரிபவம் (1933 -2 பதிப்புகள் )
  20. சாருலோசனா (1933 – 3 பதிப்புகள்)
  21. தியாகக்கொடி (1934 – 2 பதிப்புகள்)
  22. புத்தியே புதையல் (1934 – 2 பதிப்புகள்)
  23. ஜயசஞ்சீவி (1934 – 4 பதிப்புகள்)
  24. அமிர்த தாரா (1935 – 4 பதிப்புகள்)
  25. ஆனந்தசாகர் (1935 -3 பதிப்புகள்)
  26. பட்டமோ பட்டம்(1935 – 2 பதிப்புகள்)
  27. பிச்சைக்காரக் குடும்பம் (1935 – 2 பதிப்புகள்)
  28. பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 – 2 பதிப்புகள்)
  29. அநாதைப் பெண் (1936 – 4 பதிப்புகள்)
  30. இன்பஜோதி (1936 – 2 பதிப்புகள்
  31. பிரேம பிரபா (1936 – 2 பதிப்புகள்)
  32. ராஜமோஹன் (1936 – 2 பதிப்புகள்)
  33. அன்பின் சிகரம் (1937 – 2 பதிப்புகள்)
  34. சந்திர மண்டலம் (1937 – 2 பதிப்புகள்)
  35. மாயப் பிரபஞ்சம் (1937 – 2 பதிப்புகள்)
  36. உளுத்த இதயம் (1938)
  37. மகிழ்ச்சி உதயம் (1938 – 4 பதிப்புகள்)
  38. மாலதி (1938 – 3 பதிப்புகள்)
  39. வத்ஸகுமார் (1938 )
  40. வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938 )
  41. ஜீவியச்சுழல் (1938 -2 பதிப்புகள் )
  42. கலா நிலையம் (1941 – 4 பதிப்புகள்)
  43. க்ருபா மந்திர் (1934 -4 பதிப்புகள்)
  44. மதுர கீதம் (1943 – 4 பதிப்புகள்)
  45. வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 – 3 பதிப்புகள்)
  46. அமுத மொழி (1944)
  47. பிரார்த்தனை (1945 )
  48. அபராதி (1946 – 2 பதிப்புகள்)
  49. தெய்வீக ஒளி (1947 -2 பதிப்புகள்)
  50. புதுமைக் கோலம் (1947)
  51. தபால் வினோதம் (1945 – 2 பதிப்புகள்)
  52. கானகலா (1950)
  53. தூய உள்ளம் (1950)
  54. நியாய மழை (1950)
  55. ப்ரபஞ்ச லீலை (1950)
  56. ப்ரேமாஸ்ரமம் (1950)
  57. மனசாட்சி (1950)
  58. ஜீவநாடி (1950)
  59. சௌபாக்கியவதி (1950)
  60. நம்பிக்கைப் பாலம் (1951 -2 பதிப்புகள்)
  61. பாதாஞ்சலி (1951)
  62. ரோஜாமலர் (1951)
  63. தைரியலக்ஷ்மி (1952)
  64. சுதந்திரப் பறவை (1953)
  65. நிர்மல நீரோடை(1953)
  66. கிழக்கு வெளுத்தது (1958)

மேற்கோள்கள் தொகு

  1. "A doyenne remembered" (in ஆங்கிலம்). தி இந்து. 2008 டிசம்பர் 12 இம் மூலத்தில் இருந்து 2018-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181121223303/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/A-doyenne-remembered/article15401109.ece. 
  2. சாருகேசி – ஹிந்து பத்திரிகையில் 13-2-2009

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._மு._கோதைநாயகி&oldid=3451168" இலிருந்து மீள்விக்கப்பட்டது