பதினாறு வயதினிலே
பதினாறு வயதினிலே 1977 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்றை உருவாக்கியது, முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது.
பதினாறு வயதினிலே | |
---|---|
![]() | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணு |
கதை | பாரதிராஜா |
வசனம் | கலைமணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி ரஜினிகாந்த் காந்திமதி |
ஒளிப்பதிவு | பி. எஸ். நிவாஷ் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
விநியோகம் | ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் |
வெளியீடு | 15 செப்டம்பர் 1977 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 5 இலட்சம் |
இத்திரைப்படம் தெலுங்கில் '16 வயசு' மற்றும் இந்தியில் 'சொல்வ சவன்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது, ஸ்ரீதேவி அனைத்து மொழியிலும் கதாநாயகியாக நடித்தார், ஸ்ரீதேவியின் முதல் இந்தி மொழி திரைப்பட கதாநாயகி அறிமுகமாகும்.
வகை
தொகுகதைச் சுருக்கம்
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்துச் சூழலில் அமைந்த இக்கதையில் கமலஹாசன் சப்பாணி என்னும் கால்விளங்காதவன் வேடமேற்று வெள்ளந்தியான குணசித்திரப் பாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமத்திலேயே மிக அதிகம் படித்தவளாக, 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி'யாகி விட்ட மயிலிடம் (ஸ்ரீதேவி) ஒரு தலைக் காதல் கொண்டிருக்கிறார். அவளோ கிராமத்திற்கு வரும் மருத்துவ இளைஞனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவன் காதலிப்பது தன்னையல்ல, தனது பதினாறு வயதையே என்று அவள் உணர்கையில், அவளது தாய் இறக்கிறாள். அனாதையாக நிற்கும் மயிலுக்கு தானே ஆதரவாக சப்பாணி துணை நிற்கிறான்.
ஒரு முறை மயிலிடம் அவமானப்படுகிற பரட்டை (ரஜனிகாந்த்) அவளது பெண்மையைச் சூறையாட முயல்கையில், ஓணானைக் கூட கொல்வதைப் பார்க்கச் சகிக்காத சப்பாணி, ஆத்திரமிகுதியில் பரட்டையைக் கொலை செய்ய, கைதாகிச் செல்லும் அவனுக்காக காத்திருக்கிறாள் மயில்.
நடிகர்கள்
தொகுதயாரிப்பு
தொகுதயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கண்ணு பாரதிராஜாவிடம் கதை கேட்டுள்ளார். பாரதிராஜா மூன்று விதமான கதைகளைக் கூறியுள்ளார். இசை சம்பந்தப்பட்ட கதை ஒன்று, சிகப்பு ரோஜாக்கள் கதை ஒன்று, அடுத்து 'மயில்' என தலைப்பிடப்பட்ட கதை ஒன்று. இதில் மயில் கதாபாத்திரம் உள்ள கதையை ராஜ்கண்ணு தேர்ந்தெடுத்தார். பாரதிராஜாவிடம் ஐந்து ரூபாய் முன்பணமாக கொடுத்து, இப்படத்தை வண்ணப்படமாக எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தார்.[3]
இத்திரைப்படம் மயில் எனும் தலைப்பில் கதை உருவாக்கப்பட்டு பின்னர் பதினாறு வயதினிலே எனும் பெயரில் படமாக்கப்பட்டது.[3]
இத்திரைப்படம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.[4] இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பாலு மகேந்திராவிடம் அணுகினார் பாரதிராஜா, ஆனால் அவர் வேறு படங்களில் பணியாற்றி கொண்டிருந்ததால் நிவாஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ரூபாய் 27,000, ஸ்ரீதேவி ரூபாய் 9,000 மற்றும் ரஜினிகாந்த் ரூபாய் 2,500 சம்பளமாக பெற்றனர்.[5][6]
வெளியீடு மற்றும் விமர்சனம்
தொகுபதினாறு வயதினிலே திரைப்படம் 15 செப்டெம்பர் 1977 இல் வெளியானது.[7] இத்திரைப்படத்தை அப்போதைய எந்த விநியோகத்தரும் வாங்க முன் வராததால் தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கன்னு இப்படத்தை நேரடியாக அவரே திரையரங்குகளில் வெளியிட்டார்.[7]
ஆனந்த விகடன் நாளிதழ் இத்திரைப்படத்திற்கு 100க்கு 62.5 மதிப்பெண் வழங்கி பாராட்டியது. வேறெந்த தமிழ்த் திரைப்படமும் இதன் அளவு மதிப்பெண் இதுவரை வாங்கியதில்லை.[4]
படத்தின் சிறப்பம்சங்கள்
தொகு- தமிழ்த் திரைப்பட துறையில் முதன் முறையாக வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட முழு திரைப்படம் இதுவாகும்.
- தமிழ் சினிமாவில் முதன் முறையாக தமிழ்நாடு முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்து புரட்சி செய்த படம் 16 வயதினிலே.[7]
- இப்படத்தில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி அவர்களின் பெயர்களை படத்தில் வரும் ஆரம்ப பெயர் பலகையில் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்று அவர்களின் கதாபாத்திர பெயரிலே காட்டப்பட்டது.[8]
- இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன் ஆகியோர் உதவி இயக்குநராகப் பணியாற்றினர். பாக்யராஜ் அங்கீகரிக்கப்படாத ஒரு சிறு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் திரைப்படம்.
- ரஜினிகாந்த் நடித்த முதல் வண்ணப்படம் இதுவாகும்.
- கவுண்டமணி இப்படத்தில் கூத்து எனும் கதாபாத்திரம் பெயரில் கவனிக்கத்தக்க நடித்துள்ளார்.[8][9]
- அன்றைய காலத்தில் 'ஸ்லோ மோஷன்' (காட்சியை மெதுவாக நகர்த்துவது) காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவுக்கு அந்தப் படத்தின் செலவு இடம் கொடுக்கவில்லை. எனவே, ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி படம் பிடித்திருப்பார்கள். இந்தத் தகவலை கமல் மேடை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.[9]
- பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.[9]
- மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.
விருதுகள்
தொகு25வது தேசிய திரைப்பட விருதுகள்
தமிழக அரசு திரைப்பட விருதுகள் (1977-78)
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
- சிறந்த இயக்குநர் – பாரதிராஜா
- சிறந்த நடிகர் – கமல்ஹாசன்
- சிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா
- சிறந்த பெண் பின்னணிப் பாடகி – எஸ். ஜானகி
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
- சிறப்பு விருது - ஸ்ரீதேவி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[10] கண்ணதாசன், ஆலங்குடி சோமு மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்வரிகளை எழுதியுள்ளனர்.[11] இ.எம்.ஐ நிறுவனம் ஒலிநாடாவை வெளியிட்டது.[12]
இளையராஜா மாலை மலர் பத்திரிக்கையில் அளித்த பேட்டியில் "கண்ணதாசன் அப்போது ஒரு பாட்டுக்கு ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ வாங்கிக் கொண்டிருப்பார். நான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம், இது சின்னக் கம்பெனி படம். பாட்டுக்கு 750 ரூபாய் வாங்கிக்கச் சொல்லுங்க என்றேன்," என்று தெரிவித்துள்ளார்.[13]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம்(நி:நொ) |
1 | ஆட்டுக்குட்டி | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | கண்ணதாசன் | 4:20 |
2 | சோளம் விதைக்கையில | இளையராஜா | கண்ணதாசன் | 4:34 |
3 | மஞ்சக்குளிச்சு | எஸ். ஜானகி | ஆலங்குடி சோமு | 4:26 |
4 | செந்தூரப் பூவே | எஸ். ஜானகி | கங்கை அமரன் | 3:33 |
5 | செந்தூரப் பூவே (சோகம்) | எஸ். ஜானகி | 0:40 | |
6 | செவ்வந்தி பூவெடுத்த | மலேசியா வாசுதேவன், பி. சுசீலா | கண்ணதாசன் | 4:34 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "என்னோட 'மயில்ல்ல்ல்' மாடுலேஷனுக்கு தீவிர ரசிகை ஸ்ரீதேவி..! - '16 வயதினிலே' டாக்டர் சத்யஜித்". ஆனந்த விகடன். 27 பெப்ரவரி 2018. Archived from the original on 12 ஏப்ரல் 2018. Retrieved 24 செப்டெம்பர் 2020.
- ↑ "பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்". தினகரன். 28 சூன் 2021. Archived from the original on 2021-07-02. Retrieved 28 சூன் 2021.
- ↑ 3.0 3.1 "'என்ன தேனிக்காரரே... உள்ளே பிலிம் இருக்கா?' என்று கேட்ட கமல்; 'செலவுக்கு காசு கொடுத்த காந்திமதி அம்மா!' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' அனுபவங்கள்". இந்து தமிழ். 23 செப்டெம்பர் 2020. Retrieved 24 செப்டெம்பர் 2020.
- ↑ 4.0 4.1 "'கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்! - பாரதிராஜாவின் '16 வயதினிலே' நினைவலைகள்". இந்து தமிழ். 23 செப்டெம்பர் 2020. Retrieved 24 செப்டெம்பர் 2020.
- ↑ 5.0 5.1 "ரஜினிக்கு மூவாயிரம் ரூபாதான் சம்பளம். 'பாக்கி 500 ரூபாயை எப்போ தரப்போறீங்க'ன்னு ரஜினி இப்பவும் கேட்டுக்கிட்டே இருக்கார்! ; கமலுக்கு 27 ஆயிரம், ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம், 5 லட்சத்துல படமே எடுத்து முடிச்சேன்! - பாரதிராஜாவின் '16 வயதினிலே' அனுபவங்கள்". இந்து தமிழ். 15 அக்டோபர் 2020. Retrieved 18 அக்டோபர் 2020.
- ↑ "ரஜினியைவிட கமலுக்கு அதிக சம்பளம்!". குங்குமம். 29 ஏப்ரல் 2013. Archived from the original on 15 பெப்ரவரி 2017. Retrieved 24 செப்டெம்பர் 2020.
- ↑ 7.0 7.1 7.2 "16 வயதினிலே (1977)". சினிமா எக்ஸ்பிரஸ். Archived from the original on 14 சூலை 2016. Retrieved 24 செப்டெம்பர் 2020.
- ↑ 8.0 8.1 "அடம்பிடிக்கும் மயிலு!". இந்து தமிழ். 26 திசம்பர் 2014. Archived from the original on 15 பெப்ரவரி 2017. Retrieved 24 செப்டெம்பர் 2020.
- ↑ 9.0 9.1 9.2 9.3 "16 வயதினிலே - 40 ஆண்டுகள்: என்றும் வாழும் 'மயில்!'". இந்து தமிழ். 15 செப்டெம்பர் 2017. Archived from the original on 22 செப்டெம்பர் 2017. Retrieved 24 செப்டெம்பர் 2020.
- ↑ "16 Vayathinile songs". ராகா. Archived from the original on 2013-12-05. Retrieved 25 நவம்பர் 2014.
- ↑ "16 வயதினிலே படத்தின் பாடல் பதிவு: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பதிலாக மலேசியா வாசுதேவன்". மாலை மலர். 20 ஏப்ரல் 2015. Archived from the original on 24 மே 2015. Retrieved 24 செப்டெம்பர் 2020.
- ↑ 16 வயதினிலே (ஒலிநாடா அட்டை குறிப்புகள்). இ.எம்.ஐ ரெக்கார்ட். 1977. Archived from the original on 24 May 2015. Retrieved 24 September 2020.
- ↑ "பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்திற்கு இசை அமைக்க இளையராஜா மறுப்பு!". மாலை மலர். 19 ஏப்ரல் 2015. Archived from the original on 24 மே 2015. Retrieved 24 செப்டெம்பர் 2020.