நெல்

நெல் வரலாறு
(அரிசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெல் அல்லது அரிசி (ஒலிப்பு) (rice) என்பது பொதுவாக ஒரைசா சட்டைவா (ஆசிய அரிசி) அல்லது சிலவேளைகளில் ஒரைசா கிளாபெரிமா (Oryza glaberrima, ஆப்பிரிக்க அரிசி) என்ற புல் இன வகைகளின் விதை ஆகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும்.

நன்கு வளர்ந்த நெற் பயிர்

வரலாறு தொகு

உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (ஒரைசா சட்டைவா), ஆப்பிரிக்க நெல் (ஒரைசா கிளாபெரிமா) என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.

ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் ஒரைசா உருஃபிபோகன் (Oryza rufipogan) ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப் பகுதியில் ஒரைசா சட்டைவா இந்திகா (Oryza sativa var. indica) வும், சீனப்பகுதியில் ஒரைசா சட்டைவா சப்போனிகா (Oryza sativa var. japonica) வும் தோன்றின.

 
நெல்மணிகள்

இந்தியாவில், ஔவையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமசுகிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில், விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும்.

ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 – 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 – 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன.

சப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், செப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு செப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை சுபெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி, பிரான்சு நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது. 1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாசுகரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்சுடன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் சுபெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 
பரிச்சல் நிலையில் உள்ள நெற்பயிர்கள்

முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, சார்சியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளைத் தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள் நாட்டுப் போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.

சங்கப்பாடல்களில் தொகு

சங்க இலக்கியங்களில் நெல் பற்றிய பின்வரும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன:

  • நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் [1] என்பர்.
  • புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் [2] எனப்படும். அண்மைக்காலம் வரையில் இதனைப் பச்சைமலைப் புனக்காட்டில் விளைவித்தனர்.
  • நெல் என்னும் சொல்லானது நேரடியாக 45 இடங்களில் சங்க இலக்கியப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.நெல்லின் உயரிய மதிப்பு (புனிதத்தன்மை) முதலான பொருண்மைகளிலும் பல பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.[3]

பண்டைய சேமிப்பு முறை மற்றும் நெற்களஞ்சியங்கள் தொகு

 
திருப்பாலைத்துறையிலுள்ள தஞ்சை நாயக்க மன்னர் கால நெற்களஞ்சியம்

அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.[4]

600 ஆண்டு பழைமையான நெற்களஞ்சியங்கள் பல இந்துத் திருக்கோயில்களில் அமைந்துள்ளன. திருவரங்கம், திருஆனைக்கா, திருவரங்கம் கோயில் (திருக்கோயிலூர் அருகில்), அழகர்கோயில், தஞ்சாவூர், பாபநாசம், திருப்பாலத்துறை திருக்கோயில்களில் இத்தகைய நெற்களஞ்சியங்கள் உள்ளன.[4]

பாரம்பரிய நெல் வகைகள் தொகு

இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.[5]

தமிழக பாரம்பரிய நெல் வகைகள் தொகு

  • வாடன் சம்பா
  • முடுவு முழுங்கி
  • களர் சம்பா
  • குள்ள்க்கார்
  • நவரை
  • குழிவெடிச்சான்
  • கார்
  • அன்னமழகி
  • இலுப்பைப்பூ சம்பா
  • மாப்பிள்ளைச் சம்பா
  • கருங்குறுவை
  • கல்லுண்டை
  • கருடன் சம்பா.
  • பனங்காட்டு குடவாழை
  • சீரக சம்பா
  • வாசனை சீரக சம்பா
  • விட்டுணுபோகம்
  • கைவரை சம்பா
  • அறுபதாம் குறுவை
  • பூங்கார்
  • காட்டு யானம்
  • தேங்காய்ப்பூ சம்பா
  • கிச்சடி சம்பா
  • நெய் கிச்சி
  • பச்சரிசி
  • புழுங்கல் அரிசி

பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சிகள் தொகு

  • நமது நெல்லைக் காப்போம் அமைப்பு பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டு தோறும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 27 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.[6]
  • உளுந்தூர்பேட்டை, சிரீசாரதா ஆசிரமம், ‘அட்சய கிருசி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, பெண்விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கி பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது.[7][8][9][10]
  • கருநாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி சிரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார்.[11]
  • நட்வர் சாரங்கி எனும் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் 360 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு, பாதுகாத்துள்ளார்.[12]

ஊட்டச்சத்து தொகு

Ch. = கோலின்; Ca = கல்சியம்; Fe = இரும்பு; Mg = மக்னீசியம்; P = பாசுபரசு; K = பொட்டாசியம்; Na = சோடியம்; Zn = துத்தநாகம்; Cu = செப்பு; Mn = மாங்கனீசு; Se = செலீனியம்; %DV = % நாளாந்தப் பெறுமானம் குறிப்பு: எல்லா ஊட்டச்சத்துப் பெறுமானமும் புரதத்தின் 100 கிராம் உணவின் %DV ஐக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க பெறுமானங்கள் இளம் சாம்பல் நிறத்திலும் தடித்த இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன..[13][14] சமையல் இழப்பு = ஊட்டச்சத்தில் % அதிகளவு இழப்பு ஓவா-லக்டோ காற்கறிகளை உலரச் கொதிக்க வைப்பதாலும் செய்யாது ஆகும்.[15][16] Q = புரதத்தின் தரம் செரிமானமூட்டுவதற்காக மாற்றமின்றிய முழுமையான நிலையைக் குறிக்கிறது.[16]


உற்பத்தி தொகு

உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டில் 20 கோடி டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004 இல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும். 2004இல் சீனா (31%), இந்தியா (20%) மற்றும் இந்தோனேசியா (9%) நாடுகள் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன.

உலக அளவில் மிக சிறிதளவே (உற்பத்தியில் 6%) நெல் ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியில், தாய்லாந்து (26%), வியட்நாம் (15%), அமெரிக்கா (11%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இந்தோனேசியா, வங்கதேசம், பிரேசில்,இந்தியா ஆகிய நாடுகள் அதிக அளவில நெல் இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாட்டில் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டிணம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆகியப் பகுதிகளில் நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

 
உலக அரிசி உற்பத்தி
ஆகக் கூடுதலாக அரிசி உற்பத்தி செய்யும் நாடுகள் — 2007
(million metric ton)[17]
  சீனா 197
  இந்தியா 131
  இந்தோனேசியா 64
  வங்காளதேசம் 45
  வியட்நாம் 39
  தாய்லாந்து 31
  மியான்மர் 31
  பிலிப்பீன்சு 16
  பிரேசில் 13
  சப்பான் 11
  பாக்கித்தான் 10
  ஐக்கிய அமெரிக்கா 10
Source:
Food and Agriculture Organization

நெல் சாகுபடி தொகு

 
நெல் வயலில் வேலை செய்யும் ஒரு விவசாயி

உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவான அரிசி நெற்பயிரிலிருந்தே கிடைக்கிறது. உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். உலகில், சோளத்திற்கும், கோதுமைக்கும் அடுத்ததாக, அதிகம் பயிரிடப்படுவது நெல்லே ஆகும்.

நெற்பயிர் மலிவாக வேலையாட்களும், அதிக மழையோ மற்ற நீராதாரங்களோ உள்ள பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. அதிக அளவில் மனித உழைப்பும், நீரும் நெல் பயிரிட தேவைப்படுகின்றன. இருப்பினும், மலைசாரல்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் தோன்றினாலும், தொன்றுதொட்டே செய்யப்பட்ட நெல் வணிகத்தின் மூலம், அது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.

நெற்பயிர் நீர் தேங்கிய பாத்திகளில் வளர்க்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில், சுமார் 15 செ.மீ நீர் தேக்கப்படுவதால், சில நாடுகளில் நெல்லுடன் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. நெற்பாத்திகள் நீர் தேக்கி வளர்க்கப்படுவதால், இயற்கையாகவே களைசெடிகள் குறைவாக இருக்கும்.

மண், தட்பவெப்பம் தொகு

விதைத்தல், நடுதல் தொகு

நிகழ்படமாக, பரம்படித்தலைப் பாரீர்.
 
நெல்மணி
 
நெல்மணி
 
நெற்பதர்கள்

நீராதாரத்தைப் பொருத்து நெல் 'உலர்நில முறை' அல்லது 'நீர்நில முறை' ஆகிய முறைகளில் பயிரிடப்படுகிறது. உலர்நில முறையில், விதைகள் நேரடியாக விளைநிலத்தில் விதைக்கப்பட்டு, பின் முளைத்தலுக்கேற்ப அதிகப்படியான நெல் நாற்றுக்கள் களையப்படுகின்றன. நீர்நில முறையில், நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறு நிலத்தில் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் பின்னர் விளை நிலத்தில் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இம்முறைகளின் பெயர் குறிப்பிடுவது போல, நீர்நில முறைக்கு அதிக நீர் தேவை. ந்நீர் நில முறையிலும் நேரடி விதைப்பு மூலம் நெல் விதைக்கப்பட்டு பின்னர் முளைத்தலுக்கேற்ப, அதிகமாக முளைத்த இடத்திலுள்ள நாற்றுகள் குறைவாக முளைத்த இடங்களில் நடப்படுகிறது.

நாற்றங்கால் அமைத்தல் தொகு

நீர் நில நெல் சாகுபடியில் நாற்றங்கால் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஒரு ஏக்கர் நிலத்திற்கு, ஒரு சென்ட் (அதாவது, நடவுவயல் பரப்பில் 10%) நாற்றங்கால் தேவை. நடவுக்கு ஒரு மாதம் முன்பாக நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. நாற்றங்கால் நில மண் கட்டிகளின்றி நன்றாக தூளாகும் வரை உழுது, நீர் பாய்ச்சப்படுகிறது. சில விவசாயிகள், உழுவதற்கு சில நாட்கள் முன், நிலத்தில் நீர் பாய்ச்சுகின்றனர். இது களை விதைகளை முளைக்கச்செய்கிறது. பின்னர் உழும்போது, களைச்செடிகள் நிலத்தில் புதைக்கப்படுவதால் களை நிர்வாகம் குறைகிறது. ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு சுமார் 200 கிலோ மாட்டுச்சாண உரமிட்டு மீன்டும் ஈரநிலம் உழப்படுகிறது. பின், ஓரங்களில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, நடுவில் சற்றே மேடாக ஆனால் சமமாக இருக்குமாறு நிலம் சமன் செய்யப்படுகிறது. அடியுரமாக, 5- 10 கிலோ தழைச்சத்து (நைட்ரஜன்), 2 கிலோ உயிர்ச்சத்து (பாஸ்பரஸ்), 5 கிலோ மணிச்சத்து (பொட்டாசியம்), 3- 4 கிலோ சிங்க் சல்ஃபேட் (Zinc sulphate) இடப்படுகிறது. பின், ஒரு சென்ட் நாற்றங்காலூகு, 10- 12 கிலோ விதை சீராக தூவப்படுகிறது. சில நாடுகளில், விதைத்தபின் நாற்றங்கால் வாழை இலைகள் கொண்டு மூடப்படுகிறது. விதைத்த 5 நாட்களில், தேவைப்பட்டால் கை களையெடுப்போ, களைக்கொல்லியோ தெளிக்கப்படுகின்றன. இரும்பு சத்தின்றி நாற்றுகள் மஞ்சளானால், 2% ஃபெரஸ் சல்ஃபேட் (Ferrous suphate) தெளிக்கப்படுகிறது. நாற்று பறிக்க 10 நாட்களுக்கு முன் (விதைத்து சுமார் 3 வாரங்களில்), மேலுரமாக 1- 2 கிலோ தழைச்சத்து இடப்படுகிறது.

விதை தேர்வு செய்தல் தொகு

பொதுவாக, விவசாயிகள் முந்தைய பருவத்திலிருந்தோ மற்ற விவசாயிகளிடமிருந்தோ விதைகளைப் பெறுகின்றனர். அறுவடைக்கு முன், நிலத்தின் நல்ல பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, பிற இரகங்களோ, களைகளோ நீக்கப்படுகின்றன. அறுவடைக்குப்பின், விதைக்கான நெல், கையால் போரடிக்கப்பட்டு (செடியிலிருந்து விதை உதிர்த்தல்), உலர்த்தி, காற்றில் தூற்றப்படுகிறது. பின்னர் விதைகள் பாதுகாப்பாக, பூச்சி தாக்குதலை தடுக்க நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகள் கலந்து வைக்கப்படுகின்றன. விதைக்குமுன், நீரில் இடப்பட்டு மூழ்கும் விதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

நடவு வயல் தயாரிப்பு தொகு

நாற்றங்காலில் 3 – 4 வாரங்கள் வளர்ந்தபின் நாற்றுகள் பறிக்கப்பட்டு கட்டப்படுகின்றன. நாற்று வளர்ச்சியை பொறுத்து நாற்றாங்காலில் இருபது நாட்களிலிருந்து அதிகபட்சமாக 35 நாட்கள் வரை நாற்று வளர்க்கப்படுகிறது. இவை பின் சுமார் 5 செ.மீ நீர் தேங்கிய நடவு வயலில் நடப்படுகின்றன. நாற்றுக்கள் குறுவையில் 15 X 10 செ.மீ இடைவெளியும், தாளடியில் 20 X 10 செ.மீ இடைவெளியும் விட்டு நடப்படுகின்றன. ஒவ்வொரு முறை நீர் அளவு குறைந்து நிலம் தெரியும்போதும், நீர் பாய்ச்சி 5 செ. மீ நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தேவையான தழைச்சத்து பிரித்து உரமாக இடப்படுகிறது. நட்ட ஐந்தாம் நாள் களைக்கொல்லி உபயோகித்தோ அல்லது 15 ஆம் நாள் கைகளாலோ களைகள் நீக்கப்படுகின்றன. தமிழக கிராமப்புறங்களில் நடவுப்பணி காலத்தில் அதற்கென உள்ள மக்களால் நடவு மேற்கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடவு இயந்திரங்கள் சில இடங்களில் நல்ல பயனை கொடுத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் நடவுப்பணிக்கு விவசயக்கூலிகளை வைத்தே நடவு மேற்கொள்கின்றனர். இயந்திரங்களின் பயன்பாடு தமிழகத்தில் இதுவரை பரவலாகவில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடவு சமயத்தில் குலவை இட்டு நடவுப்பணிகளை தொடங்குவது வழக்கத்தில் உள்ளது.

திருத்திய நெல் சாகுபடி தொகு

உலக நெல்லாராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute, IRRI) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவை 'திருத்திய நெல் சாகுபடி' முறையை அறிமுகம் செய்துள்ளன. இதன் நோக்கம், நெல்லுக்கான நீர் தேவை, விதையளவு, தழைச்சத்து உரப்பயன்பாடு மற்றும் களை வளர்ச்சி யை குறைப்பதும், இதன் மூலம் அதிக விளைச்சலும், இலாபமும் பெறச்செய்வதும் ஆகும்.

இம்முறைப்படி, பாய் நாற்றஙகால் நடவு வயலின் மிக அருகிலேயே அமைக்கப்படுகிறது.

விவசாயிகளைப் பொருத்த வரை நெல் இரகங்கள் பயிரிடும் காலம், முற்றும் காலம், கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம் ஆகிவற்றைப் பொருத்து வகைப்படுத்தப்படுகின்றன.இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரிசி நிறத்தைப் பொருத்து வெள்ளை, கருப்பு அல்லது சிகப்பு என நெல் இரகங்கள் உள்ளன.

ஆப்பிரிக்கா போன்ற வறண்ட நிலப்பகுதிகளுக்கான அதிக விளைச்சல் தரக்கூடிய நெல் இரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 'ஆப்பிரிக்காவுக்கான புதிய நெல்' (New Rice for Africa; XXX) என அழைக்கப்படுகின்றன. இவை மேற்கு ஆப்பிரிக்காவில் உணவுப் பஞ்சமில்லாதிருக்க உதவும் என நம்பப்படுகிறது.

அரிசிகள் தொகு

நுகர்வோரைப் பொருத்தவரை நெல் இரகங்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் நீளமான, மணமுடைய 'பாஸ்மதி' அரிசி, நீளமான, சன்னமான 'பாட்னா' அரிசி, குட்டையான 'மசூரி' அரிசி ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவில், நீளமான சன்ன இரக 'பொன்னி' அரிசி பிரபலமானது. ஈரான் நாட்டில், ஹஷேமியுடனும் மிகவும் பிரபலமான நெல் இரகங்களை ஒன்றாகும்.[18]

புழுங்கல் அரிசி தொகு

தென் மற்றும் கிழக்கிந்தியாவில் அறுவடைக்குப்பின் நெல் நீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. இவ்வகை அரிசி 'புழுங்கல்' அரிசி என்று அழைக்கப்படுகிறது. கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பல சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், வேக வைக்கப்பட்டதால், ஒரு வினோதமான வாசம் உடையதாய் இருக்கும். புழுங்கல் அரிசி தென்னிந்தியாவில் 'இட்லி' தயாரிக்கவும், உழைக்கும் வர்க்கத்தினரால் உணவுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

பச்சரிசி தொகு

அறுவடையான நெல்லை,வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைப்பதால் கிடைக்கும் அரிசியைப் பச்சரிசி என்பர்.இவ்வித அரிசியை விரும்பி உண்ணுவோரும் உண்டு. செறிமானத்திறனில் இடைஞ்சல் வருவதாகச் சொல்லி, பலர் உண்ணுவதில்லை.

மல்லிகை அரிசி தொகு

தாய்லாந்தின் 'மல்லிகை' அரிசி (Thai Jasmine rice) நீள அரிசி வகை ஆகும். இவ்வகை நீள அரிசியில் அமைலோபெக்டின் குறைவாக இருப்பதால், வேகவைக்கப்படும்போது, ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். சீனாவிலும், ஜப்பானிலும் பெரும்பாலும், குட்டையான ஒட்டும் தன்மை அதிகமுள்ள அரிசி இரகங்களே பயன்படுத்தப்படுகின்றன. சீன உணவகங்களில் நீளமான சற்றே ஒட்டும் தன்மையுள்ள அரிசி பயன்படுத்தப்படுகிறது.

மணமுடைய அரிசி தொகு

மணமுடைய அரிசி இரகங்கள் இயற்கையாகவே ஒரே மாதிரியான மாறாத மணம் கொண்டவை. இந்திய இரகங்களான 'பாஸ்மதி', 'பாட்னா' ஆகிய இரகங்கள் உலக அளவில் குறிப்பிடத்தக்கவை. அமெரிக்காவில் 'டெக்ஸ்மதி' என்ற பெயரில் விற்கப்பட்ட ஒரு மண அரிசி இரகம் 'காப்புரிமை' சமப்ந்தமான ஒரு பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது அமெரிக்க நீள அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய கலப்பின அரிசியாகும்.

நெல் மரபணு ஆராய்ச்சி தொகு

நெல் தாவரத்தின் மரபணு வரைபடம் (en:gene map - எந்த மரபணு எந்த நிறப்புரியில், எந்த மரபணு இருக்கையில் உள்ளது என்பதைக் காட்டும் வரைபடம்) அறியப்பட்டுள்ளது. இவ்வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லையே சாரும். மேலும், புல் வகைத் தாவரங்களின் மாதிரியாக இண்டிக்கா (indica), ஜப்போனிக்கா (japonica) என்னும் இரு பயிரிடும் நெல் வகைகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மொத்த மரபணுத்தொகையிலுள்ள மரபணு வரிசை (gene sequence) முற்றிலும் அறியப்பட்டு, 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.[19]

அரிசியில் உயிர்ச்சத்து ஏ சத்தை அதிகரிக்க, உயிர்ச்சத்து ஏ க்கு முன்னோடியான பீட்டா கரோட்டீன் அதிகம் கொண்ட 'தங்க அரிசி' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் இரகம் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது[20]. மனித உடலில் இந்த பீட்டா கரோட்டீன் உயிர்ச்சத்து ஏ யாக மாற்றப்படக் கூடியது.[21] இது தேவையான அளவு பீட்டா-கரோட்டினை தருமா என்பதும், மரபணு மாற்று உணவு பாதுகாப்பானவை தானா என்பதும் பற்றிய சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் தொகு

 
நெற்பயிர் தாக்குதல்

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்[22]

  • நெற்பேன்
  • நெல் குருத்துப் பூச்சி
  • நெல் இலைச் சுருட்டுப் புழு
  • நெல் ஆனைக் கொம்பன் ஈ
  • நெல் தத்துப் பூச்சிகள்
  • கதிர் நாவாய்ப் பூச்சி

நெற்பயிரைத் தாக்கும் பூச்சி வகைகள் தொகு

  1. இலைப்பேன்: ஸ்டென்கீட்டோதிரிப்ஸ் பைபார்மிஸ்
  2. பச்சை தத்துப்பூச்சி: நெப்போடெட்டிக்ஸ் வைரஸ்ஸன்ஸ்
  3. கூண்டுப் புழு: நிம்புலா டிபன்டாலிஸ்
  4. தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ்
  5. வெட்டுப்புழு: ஸ்போடப்டிரா மெளரிஸியா
  6. தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ்
  7. ஆனைக் கொம்பன் ஈ: ஆர்சியோலியா ஒரைசா
  8. வெட்டுப்புழு: ஸ்போடப்டிரா மெளரிஸியா
  9. நெல் ஸ்கிப்பர்: பெலோப்பிடாஸ் மேத்தியாஸ்
  10. இலை சுருட்டுப்புழு : நேப்ஃபாலோகுரோஸிஸ் மெடினாலிஸ்
  11. கொம்புப்புழு – மெலானிடிஸ் இஸ்மேனே
  12. கம்பளிப்புழு: ஸாலிஸ் பென்னாடுலா
  13. வெட்டுக்கிளி: கைரோகிளைப்பஸ் பானியான்
  14. முள் வண்டு / ஹிஸ்பா வண்டு : டைகிளாடிஸ்பா ஆர்மிஜெரா
  15. குருத்து ஈ: ஹைடிரல்லியா ஸஸக்கி
  16. பச்சைத் தத்துப்பூச்சி: நெபோடெட்டிக்ஸ் வைரஸ்ஸென்ஸ்
  17. புகையான்: நிலபர்வட்டா லூகன்ஸ்
  18. வெள்ளை தத்துப் பூச்சி: சோகடெல்லா ப்ரூசிஃபெரா
  19. மாவுப்பூச்சி: பிரவேனியா ரெகி
  20. கதிர் நாவாய்ப்பூச்சி: லெப்டோகெரரிசா அக்யூட்டா
  21. இலைப்பேன்: ஸ்டெஃங்கீட்டோத்ரிப்ஸ் பைபார்மிஸ் [23]

அடிக்குறிப்பு தொகு

  1. வெண்ணெல் அரிநர் தண்ணுமை மலைபடுகடாம் - அடி 471
  2. கொடிச்சி ஐவன வெண்ணெல் குறூஉம் - குறுந்தொகை - 373
  3. சங்க இலக்கியச் சொல்லடைவு
  4. 4.0 4.1 http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/01/12/திருக்கோயில்-நெற்களஞ்சியங/article1996452.ece
  5. பசுமைப் புரட்சியின் கதை, சங்கீதா ஸ்ரீராம், பக்:50
  6. பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்
  7. ஸ்ரீசாரதா யக்ஞ பிரசாதம்; ஆகஸ்டு 2013
  8. ஸ்ரீசாரதா யக்ஞ பிரசாதம்; ஆகஸ்டு 2014
  9. http://gttaagri.relier.in/இயற்கை-விவசாயம்/பாரம்பரிய-நெல்லைக்-காக்க/
  10. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97146
  11. இயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு
  12. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=33828
  13. "National Nutrient Database for Standard Reference Release 28". United States Department of Agriculture: Agricultural Research Service.
  14. "Nutrition facts, calories in food, labels, nutritional information and analysis". NutritionData.com.
  15. "USDA Table of Nutrient Retention Factors, Release 6" (PDF). USDA. USDA. Dec 2007.
  16. 16.0 16.1 "Nutritional Effects of Food Processing". NutritionData.com.
  17. fao.org. "Agriculture Statistics > Grains > Rice production (2009) by country". பார்க்கப்பட்ட நாள் May 6, 2010.
  18. Pazuki, Arman; Sohani, Mehdi (2013). "Phenotypic evaluation of scutellum-derived calluses in ‘Indica’ rice cultivars" (PDF). Acta Agriculturae Slovenica 101 (2): 239–247. doi:10.2478/acas-2013-0020. http://aas.bf.uni-lj.si/september2013/08Pazuki.pdf. பார்த்த நாள்: February 2, 2014. 
  19. Gillis, Justing (August 11, 2005). "Rice Genome Fully Mapped". Washington Post. https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/08/10/AR2005081001054.html?referrer=email. 
  20. International Rice Research Institute: Golden Rice
  21. "Researchers Determine That Golden Rice Is an Effective Source of Vitamin A" (PDF). American Society for Nutrition. 2009. பார்க்கப்பட்ட நாள் October 28, 2010.
  22. முனைவர் ச.மோகன் (2015). வேளாண் செயல்முறைகள். தமிழ்நாடு பாடநூல் கழகம். 
  23. http://agritech.tnau.ac.in/பயிர்[தொடர்பிழந்த இணைப்பு] பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இணைய இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்&oldid=3689635" இலிருந்து மீள்விக்கப்பட்டது