நீர்

H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும்.

நீர் (water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும், நெடியற்றும், ஓர் ஒளிபுகும் தன்மையுடனும் உள்ளது இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. தட்பவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமாக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவிபோக்கு, ஆவி ஒடுக்கம், வீழ்படிவு போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டே கடலைச் சென்றடைகிறது.

நீரின் மூன்று நிலைகள்: நீர்மம், திண்மம் (பனி), வளிமம் (வளியிலுள்ள கட்புலனாகாத நீராவி). நீராவியால் நிரம்பலாக்கப்பட்ட வளியிலுள்ள நீராவி ஒடுங்கியே முகில்கள் தோன்றுகின்றன.

புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது[1]. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. வளி மண்டல நீரின் 0.001% பகுதி வாயு வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் மேகங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் நீர்க்கோர்வைகளிலும் காணப்படுகிறது.[2] நில மேலோட்ட நீரின் 97% பகுதி உவர்நீர்ச் சமுத்திரங்களிலும், 2.4% பனி ஆறுகள் மற்றும் துருவ பனிக்கவிகைகளிலும், ௦0.6%பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக்கவிகைகளிலும், பனி ஆறுகளிலும், நீர் கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும் சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றன.

நீரானது ஆவியாதல், நீராவிப்போக்கு, ஆவிஊட்டளவு, குளிர்ந்து சுருங்கி நீர்க் கோர்வைகளாதல் மற்றும் தல ஓட்டம் எனும் நிலைகளின் தொடர் சுழற்சிக்குப் பின் பெரும்பாலும் கடலை அடைகிறது. நிலத்திற்கு நீராவியேந்திச் செல்லும் காற்றின் அளவு கடலினுட் செல்லும் நீரின் தள ஓட்டத்தை ஒத்ததாய் இருக்கிறது. நிலத்திற்கு மேலே நீராவியாதலும், நீராவிப்போக்கும், குளிர்ந்து சுருங்குவதால் நீர்க் கோர்வைகள் உருவாவதற்கு வழிவகுக்கின்றன.

மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது.[3] பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்கும்இடையே பரஸ்பர சம்பந்தம் காணப்படுகிறது.[4] 2025 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.[5] பல்வேறு வேதியற் பொருட்களின் கரைப்பானாகவும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், உலக வர்த்தகத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தோராயமாக 70 சதவீத நன்னீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.[6]

வேதியியல், இயற்பியல் பண்புகள்

 
வில்சன் பென்ட்லீயின் பனித்தூவல், 1902
 
நீர் மூலக்கூறுகளிக்கிடையே ஹைட்ரஜன் பிணைப்பு மாதிரிகள்
 
நீர்த்துளியிலிருந்து வெளிப்படும் தாக்கமானது மேல்நோக்கு மீளுந்து நீர்த்தாரைகளையும் அவற்றைச் சுற்றி வட்டவடிவ நுண்புழையலைகளையும் தோற்றுவிக்கிறது.
 
சிலந்தி வலையில் ஒட்டியுள்ள பனித்துளிகள்
 
பாதரசத்தோடு ஒப்பிடும் போது நீரின் நுண்புழை விளைவு

நீர் என்பது H2O எனும் வேதியியற் குறியீட்டைக் கொண்ட ஓர் இரசாயனப் பொருளாகும்: நீரின் ஒரு மூலக்கூற்றில் இரண்டு ஐதரசன் அணுக்கள் ஓர் ஆக்சிசன் அணுவோடு பிணைப்பில் உள்ளன.

நீர் இயற்கையில் திண்ம, திரவ, வாயு ஆகிய மூன்று சடப்பொருணிலைகளில் காணப்படுகிறது. பூமியில் பல்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறது: விண்ணில் நீராவி, மேகங்களாகவும், சமுத்திரங்களில் கடல்நீர், பனிப்பாறைகளாகவும், மலைகளில் பனியாறுகள், நதிகளாகவும், நிலத்தடியில் நீர்கொள் படுகைகளாகவும் நீர் காணப்படுகிறது.

நீரின் முக்கிய வேதியியற் மற்றும் பௌதிக பண்புகள் கீழ்வருமாறு:

  • இயல்பான தட்ப வெட்ப சூழ்நிலையில் நீரானது சுவையற்ற, மணமற்றதொரு திரவமாகும். குறைந்த அளவுகளில் நீர் நிறமற்று தோன்றினாலும், நீரும் பனிக்கட்டியும் உள்ளார்ந்த வெளிர் நீல நிறத்தை உடையவை. பனிக்கட்டி நிறமற்றதாகவும், நீராவி வாயு வடிவத்தில் இருக்கும் போது கண்ணுக்குத் தெரியாததாகவும் இருக்கிறது.[7]
  • நீர் தெள்ளத் தெளிந்த வண்ணம் இருப்பதால் நீர்த் தாவரங்கள் சூரிய ஒளியைப் பெற்று நீருக்குள்ளேயே வாழ முடிகிறது. நீர் புறஊதா (அல்ட்ரா வயலட்) கதிர் வீச்சை கிரகிக்கும் தன்மையுடையது.
  • ஐதரசனை விட ஆக்சிசனுக்கு மின்னெதிர்த்தன்மை அதிகமாக உள்ளதால், நீர் ஒரு முனைவு மூலக்கூறாகும். ஆக்சிசன் வாயு மெல்லிய எதிர் மின்னூட்டமும், ஐதரசன் வாயுவிற்கு மெல்லிய நேர் மின்னூட்டமும் உள்ளதால், நீரின் உட்கூறு வலிமையான இருமுனைவு திருப்புதிறன் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மூலக்கூற்றிலுமுள்ள மாறுபட்ட இருமுனைகளின் (டைபோல்) இடையீட்டால் உண்டாகும் ஈர்ப்பு சக்தியே, நீரின் சீரிய புறப்பரப்பு இழுவிசைக்குக் (சர்ஃபேஸ் டென்ஷன்) காரணமாகும். நீரின் பல தனித்தன்மையான பண்புகளுக்குக் காரணமான நீரின் மூலக்கூறுகள் ஒன்றாகப்பிணைவதற்கு இந்த இருமுனைப்பண்பு உதவுகிறது. இந்தப் பண்பு நீர் மற்ற பொருட்களுடன் பிணையவும் உதவுகிறது.
  • நீரின் இணக்கத்தன்மைக்கு காரணமான ஐதரசன் பிணைப்புக்கள் உருவாவதற்கு அதனுடைய மூலக்கூற்றின் இருமுனை பண்பு உதவுகிறது.[8]
  • முனைவு மூலக்கூறாக இருப்பதினிமித்தம், நீரின் மூலக்கூறுகளுக்கிடையேயான பலகீனமான இடையீடுகளான வேன் டர் வால்ஸ் விசைகளினால், நீரானது சீரிய புறப்பரப்பு விசையைப் பெற்றதாய் இருக்கிறது. இப்புறப்பரப்பு விசையால் ஏற்படக்கூடிய தோற்ற மீள்திறன் நுண்ணலைகளைத் தூண்டுகிறது.
  • நீரின் முனைவு பண்புகளால் அது ஒட்டும் தன்மையுள்ளதாய் இருக்கிறது.
  • புவியீர்ப்பு விசைக்கெதிராக குறுகிய குழாய் வழி மேல் செல்லும் பண்பே புழை இயக்கம் எனப்படுகிறது.இந்த பண்பு மரங்கள் உட்பட அனைத்து கலன்றாவரங்களாலும் சாரப்பட்டிருக்கிறது.
  • நீர் ஒரு வலிமையான கரைப்பானாதலால் அது உலகளாவிய கரைப்பான் என குறிப்பிடப்படுகிறது. நீரில் கரையும் பொருட்கள், எ.கா. உப்புக்கள்,சர்க்கரைகள்,அமிலங்கள்,காரங்கள்,சில வாயுக்கள்-குறிப்பாக ஆக்சிசன் வாயு,கரியமில வாயு (கார்பனேற்றம்) போன்றவை நீர்நாட்டமுள்ள பொருட்கள் எனவும், நீரில் சரிவரக் கரையாத பொருட்கள் (எ.கா.கொழுப்புக்கள் மற்றும் எண்ணெய்கள்) நீர் வெறுப்புள்ள பொருட்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • புரதங்கள், டிஎன்ஏ, கூட்டுச்சர்க்கரைகள்(பாலிசேக்கரைடுகள்) உட்பட செல்களின் அனைத்து கூறுகளும் நீரில் கரையக் கூடியவை.
  • தூய்மையான நீர் குறைந்த மின் கடத்துதிறனையே கொண்டிருந்தாலும், அத்திறன் சிறிய அளவு சோடியம் குளோரைடு போன்ற அயனிப்பொருட்களின் கரைதலால் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக் கூடியது.
  • நீரின் கொதிநிலை(அல்லது ஏனைய திரவங்களின் கொதிநிலை) பாரமானியமுக்கத்தைப் ( பேரோமெட்ரிக் பிரஷ்ஷர்) பொறுத்ததாகும். எடுத்துக்காட்டாக, நீரின் கொதிநிலை கடல் மட்டத்தில் 100 °C யாக இருப்பதற்கு 100 °C (212 °F)[20] மாறாக, எவெரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் 68 °C யாக உள்ளது 68 °C (154 °F)[19]. இதற்கு நேர்மாறாக புவிவெப்பசக்தித் துளைகளுக்கருகே காணப்படும் ஆழ்கடல் நீர் நூற்றுக்கணக்கான டிகிரி செலிசியஸ்களை (°C)எட்டும் போதிலும் திரவமாகவே காணப்படுகிறது.
  • மூலக்கூறுகளுக்கிடையேயான விரிவான ஐதரசன் பிணைப்புகளால், நீரானது அமோனியாவிற்கு அடுத்தபடியாக வேறெந்த பொருளையும் விட அதிகமான வெப்ப ஏற்புத் திறன் எண் மற்றும் ஆவியாதல் வெப்பத்தைக்(40.65 kJ·mol−1) கொண்டுள்ளது. இவ்விரு அசாதாராண பண்புகளும் புவி வெப்பத்தின் ஏற்றவிறக்கங்களைத் தாங்கி புவி வெப்பத்தை மட்டுப்படுத்துகிறது.
  • நீரின் உச்சவரம்பு அடர்த்தி 4 °C யில் காணப்படுகிறது3.98 °C (39.16 °F) [21] [9].மீளவும் உறைதலுக்குட்படும் போது 9% விரிதலினிமித்தம், நீரின் அடர்த்தி குறைகிறது. இது ஒரு அசாதாரண நிகழ்விற்கு வித்திடுகிறது. நீரின் திட வடிவமான உறைபனி நீரின் மேலே மிதந்து கொண்டிருந்தாலும், பகுதி-உறைந்த நிலையிலிருக்கும் உட்பகுதி நீரின் அடிமட்ட வெப்பம், நீரின் அடர்ந்த செறிவு காரணமாக 4 °C யாக நிலைநிறுத்தப்படுவதால் நீர்வாழ் பிராணிகள் உறைந்த நீர்நிலைகளிலும் வாழும் திறன் பெற்றிருக்கின்றன.4 °C (39 °F).
 
நீருடன் ஆபத்தான வினைபுரியும் பொருட்களின் கடத்துதலுக்களிக்கப்படும் ADR சீட்டு

சுவையும் மணமும்

நீர் பலவிதமான பொருட்களைக் கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது.உண்மையில் மனிதர்களும், விலங்குகளும், நீரின் அருந்துதரத்தைக் கணிக்கும் தங்களது புல விருத்தியால் உப்பு நீரையோ, அசுத்த நீரையோ தவிர்த்து விடுகின்றனர். மேலும் மனிதர்கள் வெதுவெதுப்பான நீரை விட குளிர்ந்த நீரையே பருக விளைகின்றனர்; குளிர்ந்த நீரானது சொற்ப கிருமிகளையே கொண்டிருக்கக் கூடும். ஊற்று நீர் மற்றும் கனிம நீரில் விளம்பரப்படுத்தப்படும் சுவையானது அதில் கரைந்திருக்கும் தாதுக்களிலிருந்து பெறப்படுவது. தனி H2O சுவையோ மணமோ அற்றது. ஊற்று நீர் மற்றும் கனிம நீரின் தூய்மையென குறிப்பிடப்படுவது அவற்றின் நச்சற்ற, மாசற்ற, கிருமிகளற்ற நிலையேயாகும்.

பிரபஞ்சத்தில் நீரின் பங்கீடு

உலகத்தில் நீர்

உலகத்தின் நீரில் பெருமளவு விண்மீன்கள் உருவாதலின் துணைப் பொருளாக விளைந்திருக்கலாம். விண்மீன்களின் தோற்றத்தின் போது, அவற்றின் பிறப்பு வலிமையான வெளிநோக்கு வளிக்காற்று மற்றும் புழுதிப் புயலால் சூழப்பட்டிருக்கிறது. இத்தகைய வெளியேற்றம் நாளடைவில் சூழ்ந்திருக்கும் வாயுக்களைத் தாக்குவதனால் உருவாகும் அதிர்வலைகள் வாயுக்களை அழுத்தி வெப்பமேறச் செய்கிறது. அவ்வமயம் தென்படுகிற நீரானது இந்த வெப்பச் செறிவான வாயுக்களால் அதிவேகமாக உற்பத்தி செய்யப்பட்டதாகும்.[11][12][13]

பால்வெளியெனும் நமது விண்மீன் மண்டலத்தினுள் காணப்படும் நட்சத்திரங்களுக்கிடையேயான மேகங்களில் தண்ணீர் கண்டறியப்பட்டுள்ளது. நீரின் கூறுகளான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை பிரபஞ்சத்தில் மிகுதியாகக் காணப்படும் தனிமங்களாதலால், ஏனைய விண்மீன்மண்டலங்களிலும் தண்ணீர் மலிந்திருக்கிறதென நம்பப்படுகிறது. நட்ச்த்திரங்களுக்கிடையேயான மேகங்கள் நாளடைவில் சூரிய ஒளிமுகிலாகவும், சூரிய மண்டலமாகவும் சுருங்குகின்றன.

நீராவியளவு கீழ்காணும் விகிதங்களில் அமைந்துள்ளது:

  • புதன் - வளிமண்டலத்தில் 3.4% நீரும், புறவழி மண்டலத்தில் பெருமளவு நீரும் [14]
  • வெள்ளி - வளிமண்டலத்தில் 0.002% நீர்
  • பூமி - வளிமண்டலத்தில் நீரின் சுவடுகளே உள (கால நிலையுடன் மாறக் கூடியது)
  • செவ்வாய் - வளிமண்டலத்தில் 0.03%
  • வியாழன் - வளிமண்டலத்தில்0.0004%
  • சனி - உறை பனி படலங்களில் மட்டும்
  • என்ஸெலேடஸ் (சனியின் சந்திரன்) - வளிமண்டலத்தில் 91% நீர்
  • வெளிக்கோள்கள் HD 189733 b[15] மற்றும் HD 209458 bஎன்பன.[16]

திரவ நீர் கீழ்காணும் விகிதங்களில் காணப்படுகிறது:

  • பூமி- மேற்பரப்பில் 71% நீர்
  • சந்திரன் - 1971 ஆம் ஆண்டு, அப்பல்லோ 15 விண்வெளி வீரர்களால் பூமிக்குக் கொணரப்பட்ட நிலவின் எரிமலைக் காயல் முத்துக்களில் 2008-ல் நீர் கண்டறியப்பட்டுள்ளது.[17]

சனிக் கிரகத்தின் சந்திரனான என்ஸெலேடஸின் மேற்பரப்புக்கு சிறிது கீழேயும், வியாழனின் சந்திரனான ஐரோப்பாவிலும் திரவ நீர் காணப்படுவதாக உறுதியான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

உறை பனிநீர் கீழ்க்கண்டவாறு காணப்படுகிறது:

உறைபனி நீர் சந்திரன், செரஸ், டேதிஸ் போன்றவைகளில் இருக்கலாம். நீரும் ஏனைய ஆவியாகும் பொருட்களும் யுரேனஸ் மற்றும் நெப்ட்யுனின் பெரும்பாலான உள்ளமைப்புகளின் பிரதான மூலங்களாகும்.

நீரும், வசிக்கத்தக்க மண்டலமும்

புவியின் உயிர்களது ஜீவாதாரமாக தண்ணீரும், ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்தனவாக நீரின் வாயு மற்றும் திட வடிவங்களும் திகழ்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பூமி சூரிய மண்டலத்தின் வசிக்கத்தக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. ஒருவேளை பூமியானது சூரியனுக்கு சிறிது அருகாமையிலோ (5 % அல்லது 8 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில்), அல்லது தொலைவிலோ இருக்கும் பட்சத்தில் நீரின் மூன்று வடிவங்களும் தற்போதிருப்பது போல் ஒருசேர காணப்படுவதற்கான வாய்ப்புகள் கடினம்.[18][19]

புவியின் ஈர்ப்பு சக்தி அதற்கொரு வளிமண்டலத்தை அளித்திருக்கிறது. வளிமண்டலத்தின் நீராவியும், கரியமில வாயுவும் வெப்பவிடைத்தாங்கு பொருளாகத் திகழ்ந்து, பைங்குடில் விளைவை( கிரீன் ஹவுஸ் இஃபெக்ட்) ஏற்படுத்தி இயல்பை விட நிதானமான மேற்பரப்பு வெப்பம் நிலவச் செய்கிறது. பூமி ஒருவேளை சிறியதாக இருக்குமானால், ஒரு மெல்லிய வளிமண்டலம் அமையப்பெற்று அதீத வெப்பத்திற்கு உள்ளாவதினிமித்தம், துருவ பனிக்கவிகைகளைத் தவிர ஏனைய இடங்களில் நீரின் தேக்கத்தைத் தவிர்த்திருக்கும்.(செவ்வாய் கிரகத்தைப் போல)

உயிரானது தனது நித்திய சஞ்சாரத்துக்குத் தேவையான நிர்ணயங்களை தானே வகுத்துக் கொள்கிறது என முன்மொழியப்பட்டுள்ளது. மாறுபட்ட அளவுகளில் உள்வரும் சூரியக் கதிர் வீச்சு (பெற்ற வெயில்-இன்சொலேஷன்)க்குப் பின்னும் புவியின் மேற்பரப்பு வெப்பம் நிலவரலாற்றுக் காலம் முழுவதும் ஒரே சீராக இருந்து வந்துள்ள விதம், பைங்குடில் விளைவு மற்றும் மேற்பரப்பு அல்லது வளிமண்டல ஒளி பிரதிபலிப்புகளின் கூட்டு விளைவுகளை உள்ளடக்கிய திறமையான புவி வெப்ப நிர்வாகச் செயல்பாட்டை உணர்த்துகிறது. இந்த முன்மொழிவு கையா கருதுகோள் எனக் குறிப்பிடப்படுகிறது.

கோள்களில் இருக்கும் நீரின் வடிவம் அதன் புவியீர்ப்பு சக்தியால் தீர்மானிக்கப்படும் வளிமண்டல அழுத்தத்தைப் பொறுத்தே அமைகிறது. கோளானது போதுமான அளவு பெரியதாயிருக்கும் பட்சத்தில் அதன் புவியீர்ப்பு சக்தியால் நிர்ணயிக்கப்படும் அழுத்தமானது அதிக வெப்பங்களில் கூட அதன் நீர் திட நிலையிலிருக்கும்படி செய்கிறது.

பூமியில் நீர் தோன்றிய விதத்தைப் பற்றி பல கோட்பாடுகள் நிலவுகின்றன.

புவியில் நீர்

 
பூமியின் 71% மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது; சமுத்திரங்கள் புவி நீரில் 97.2% ஐ கொண்டிருக்கின்றன. புவியின் நன்னீர் அளவில் 90% ஐ கொண்டுள்ள அண்டார்டிக் உறைபனிப் படலத்தின் கீழ்பகுதி தென்படும் விதமாக அமைந்துள்ளது. குளிர்விக்கப்பட்ட வளிமண்டல நீர் மேகங்களாக உருவெடுத்து புவியின் வெண்ணொளி பிரதிபலிப்புக்கு வழிகோலுகின்றன.

நீரியல் என்பது புவியனைத்திலும் உள்ள நீரின் போக்கு, பரவல், மற்றும் தரத்தைப் பற்றிய கல்வியாகும். ஹைட்ரோகிராஃபி என்பது நீரின் விநியோகத்தைக் குறித்த கல்வியாகும். நிலத்தடி நீரின் பரவலையும், போக்கையும் குறித்த கல்வி ஹைட்ரோஜியாலஜி எனவும் உறைபனி ஆறுகளைக் குறித்த கல்வி கிளேஸியாலஜி எனவும் உள்நாட்டு நீர் நிலைகளைக் குறித்த கல்வி லிம்னாலஜி எனவும் சமுத்திரங்களின் பரவலைக் குறித்த கல்வி ஒஷியனோகிராஃபி எனவும் அழைக்கப்படுகிறது. நீரியலின் அங்கமான சூழ்நிலை நிகழ்வுகள் ஈகோ ஹைட்ராலஜியின் கீழ் வருகிறது.

கிரகங்களின் பரப்பிலும், அவற்றின் மேற்பரப்புக்கு மேலும், கீழும் காணப்படும் மொத்த நீர்த்தொகுதி நீர்ம மண்டலம் என்றழைக்கப்படுகிறது. பூமியின் உத்தேச மொத்த நீர்க் கொள்ளளவு (உலக தண்ணீர் விநியோகம்) 1,360,000,000 கி.மீ 3 (326,000,000 மில்லியன் 3)கன அடிகள். இம் மொத்தக் கொள்ளளவில்:[சான்று தேவை]

 
புவியின் நீர் பரவலை விளக்கும் வரைபடம்
  • 1,320,000,000 கி.மீ3 (316,900,௦௦௦000 ௦௦௦ மில்லியன்3கன அடிகள் அல்லது 97.2%) சமுத்திரங்களில் உள்ளது .
  • 25,000,000 கி.மீ3 (6,000,000 மில்லியன்3 அல்லது 1.8%) உறை பனி ஆறுகளிலும், பனிக் கவிகைகளிலும் and பனிப் படலங்களிலும் உள்ளது.
  • 13,000,000 கி.மீ3 (3,000,000 மில்லியன்3 அல்லது 0.9%) நிலத்தடி நீராகும்.
  • 250,000 கி.மீ3 (60,000 மில்லியன்3 அல்லது 0.02%) ஏரிகள், உள்நாட்டு கடல்கள் மற்றும் நதிகளின் நன்னீராகக் காணப்படுகிறது.
  • 13,000 கி.மீ3 (3,100 மில்லியன்3 அல்லது 0.001%) குறித்த கால வளிமண்டல நீராவியாகக் காணப்படுகிறது.

நிலத்தடி நீரும், நன்னீரும், மனிதர்களுக்கு உபயோகமுள்ள அல்லது உபயோக சாத்தியமுள்ள நீராதாரங்களாகும்.

தண்ணீரானது சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், நதிகள், நீரோட்டங்கள், கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் காணப்படுகிறது.பூமியில் பெருமளவு காணப்படும் நீர் கடல்நீர் ஆகும். வளிமண்டலத்தில் திட, திரவ மற்றும் வாயு வடிவங்களிலும், நீர் காணப்படுகிறது. நிலத்தடி நீர்கொள் படுகைகளாகவும் நீர் காணப்படுகிறது.

நிலவியல் நிகழ்வுகள் பலவற்றில் நீர் முக்கியமானதாக இருக்கிறது. நிலத்தடி நீர் பாறைகளெங்கும் காணப்படுவதால், இந்நிலத்தடி நீரின் அழுத்தம் பிளவுப் பெயர்ச்சியடைதலின் மாதிரிகளை நிர்ணயிக்கிறது. பூமியின் மூடகத்தில் காணப்படும் நீரே எரிமலைகள் உருவாகக் காரணமான உருகுநிலையை ஏற்படுத்துகிறது. பூமியின் மேற்பரப்பில் நடக்கும் பௌதீக மற்றும் வேதியியற் பாறைச் சிதைவு நிகழ்வுகளில் நீர் முக்கிய பங்காற்றுகிறது.நீரும், அற்பமாயிருந்தாலும் முக்கியமான காரணியான பனிக்கட்டியும் பூமியின் மேற்பரப்பில் நடக்கும் மிகப் பெரிய அளவிலான படிவக் கடத்துமைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. கடத்தப்பட்ட வண்டலின் படிதல் பல்வேறு வகையான படிவுப்பாறைகளைத் தோற்றுவித்து புவிவரலாற்றின் நிலவியல் பதிவேடுகளாகத் திகழ்கின்றன.

நீரின் சுழற்சி

 
நீரின் சுழற்சி

நீரின் சுழற்சி என்பது (விஞ்ஞானப்பூர்வமாக நீரியற் சுழற்சி என்றழைக்கப்படுகிறது) நீர்க்கோளத்தினுள், வளிமண்டலம், நிலநீர், மேலோட்ட நீர், நிலத்தடி நீர், மற்றும் தாவரங்கள் ஆகியவற்றிற்கிடையேயான நீரின் தொடர் பரிமாற்றமாகும்.

இப்பகுதிகளினூடே நீர் இடைவிடாமல் ஓடி நீர் சுழற்சி யின் கீழ்க்கண்ட பரிமாற்ற நிகழ்வுகளை விளைவிக்கிறது.

சமுத்திரங்களின் மேலுள்ள நீராவியில் பெருமளவு கடலுக்கே திரும்பிச் செல்லுகிறதென்றாலும் நிலத்தின் மேற்பகுதிக்குக் காற்றினால் எடுத்துச் செல்லப்படும் நீராவியின் அளவு, நிலத்தினின்று கடலுக்குள் வழிந்தோடும் தள ஓட்டத்துக்கு, வருடத்திற்கு தலா 36 Tt(டெட்ரா டன்கள்) என்ற அளவில் சமமாயிருக்கிறது. நில மேற்பகுதியின் ஆவியாதலும், நீராவிப்போக்கும் வருடத்திற்கு 71 Tt (டெட்ரா டன்கள்) நீரை எடுத்துக்கொள்கின்றன.நில மேற்பகுதியின் மேல் நீராவி குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க்கோர்வை, வருடத்துக்கு 107 Tt என்ற அளவில் பல வடிவங்களில் வெளிப்படுகிறது: பொதுவாக மழை, உறைபனி, ஆலங்கட்டி மழை, போன்றவைகளாலும் சில நேரங்களில் மூடு பனி மற்றும் பனித்துளிகளாக இது தோன்றலாம். குளிர்விக்கப்பட்ட நீரானது சூரிய ஒளிக்கற்றைகளை ஒளி விலகலுக்குட்படுத்துவதன் மூலம் வானவில்லைத் தோற்றுவிக்கிறது.

தள ஓட்டம் பெரும்பாலும் நதிகளுக்குள் பாயும் நீர்ப் பிரி முகடுகளுக்குள் சேகரிக்கப்படுகிறது. நதியின் ஓட்டத்தையோ, ஓடைகளின் ஓட்டத்தையோ ஒத்து நீர்த் தர கூரளவுகளைக் கணிக்க உதவும் செயற்கை கணித மாதிரி, நீரியற் கடத்தல் மாதிரி (ஹைட்ராலஜிகல் டிரான்ஸ்போர்ட் மாடல்) என்று அழைக்கப்படுகிறது. சிறிதளவு நீர் விவசாய நீர்ப்பாசனத்துக்கு மாற்றி விடப்படுகிறது. நதிகளும், கடல்களும் பயணத்திற்கும், வாணிபத்திற்கும் வாய்ப்பளிக்கின்றன.அரிப்பின் வாயிலாகத் தள ஓட்டமானது சுற்றுப்புறத்தைச் சீர்படுத்தும் விதமாக, ஆற்றுப்பள்ளத்தாக்குகளையும், கழிமுகங்களையும் வடிவமைத்து மண்வளத்தையும், சம மட்ட தளத்தையும் உருவாக்கி, அவற்றை மக்கள் தொகை மையங்களாக அபிவிருத்தி செய்கிறது.ஒரு நிலப் பரப்பு தாழ்வானதாக இருப்பதினிமித்தம் தண்ணீரால் சூழப்படும் பொழுது வெள்ளம் ஏற்படுகிறது. நதி பெருக்கெடுத்து கரைகளைத் தாண்டி ஓடும் பொழுதோ சமுத்திர மார்க்கமாகவோ வெள்ளம் ஏற்படலாம். பல மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஒரு பகுதி அனுபவிக்கும் நீண்ட கால தண்ணீர் தட்டுப்பாடு வறட்சி எனப்படுகிறது. ஒரு பகுதியானது வாடிக்கையாக சராசரிக்குக் கீழேயான மழையளவைப் பெறும்பொழுது வறட்சி ஏற்படலாம்.

நன்னீர் சேமிப்பு

தள ஓட்டத்தில் சிறிதளவு காலங்காலமாக சிக்கிக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஏரிகளின் நீரைக் கூறலாம். குளிர் காலங்களில் உயரமான இடங்களிலும் மற்றும் பூமியின் வட மற்றும் தென் கோடியின், துருவ முகடுகள்,பனிப்பாதைகள் மற்றும் பனியாறுகளில் பனி மண்டுகிறது. நீரானது நிலத்தினுள் ஊடுருவி நிலத்தடி நீர்கொள் படுகைகளுக்குள் செல்லக் கூடியது.இந்நிலத்தடி நீர் பின்னர் நீரூற்றுக்கள், வெந்நீரூற்றுக்கள் மற்றும் உஷ்ண ஊற்றுக்கள் வாயிலாக மீண்டும் கிளர்ந்தெழுந்து, மேற்பரப்பிற்கு வரலாம். நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் செயற்கையாகவும் இறைத்துக் கொள்ளலாம். மனிதர்களுக்கும், நிலத்தில் வாழும் ஏனைய உயிர்களுக்கும் நன்னீர் இன்றியமையாததாதலால், இவ்விதமான நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று. ஆனால், உலகத்தின் பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது.

அலைகள்

High tide (left) and low tide (right).

புவிப்பெருங்கடல்களின் மேற்பரப்பில் சந்திர சூரிய ஆகர்ஷண சக்தியால் ஏற்படுத்தப்படும் சுழற்சியான ஏற்றவிறக்கக் கணிமுறையே அலைகள் உருவாகக் காரணம். அலைகள் கடல் மற்றும் நதி முகத் துவாரங்களின் ஆழங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி கடனீரோட்டங்களின் வற்றுப்பெருக்க வளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. குறிப்பிட்டதொரு இடத்தின் அலையானது பூமியுடன் ஒப்பிடும்பொழுதான சந்திர சூரியனின் இடமாற்றத்தாலும், புவிசுழற்சி விளைவுகளாலும், அப்பகுதியின் கடலாடி இயலாலும் நிர்ணயிக்கப்படுகிறது. உயர்மட்ட அலையில் மூழ்கியும், தாழ் அலையில் தெரிவதுமான அலையிடை மண்டலம், ஆழிப்பெருங்கடல் அலைகளின் முக்கிய சூழ்நிலை விளைவாகும்.

வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகள்

 
பாலைவனச் சோலை என்பது பாலைவனத்துள் தாவரங்களுடன் கூடிய தனி நீர் நிலை.

உயிரியற் நிலையிலிருந்து நோக்கும் பொழுது நீர் உயிர்களின் விருத்திக்குத் தேவையான இன்றியமையாத பல சிறப்புப் பண்புகளைப் பெற்றிருப்பதால் ஏனைய பொருட்களிலிருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது. கரிமச்சேர்மவினைகள் மூலம் பல்பிரிவாக்கத்திற்கான வழிகளைத தூண்டுவதால் நீர் இச்சிறப்பினைப் பெறுகிறது. உயிர்களனைத்தும் நீரைச் சார்ந்துள்ளன.உடலின் கரைபொருட்கள் பலவற்றைக் கரைக்கும் கரைப்பானாகவும், உடலின் வளர்சிதைமாற்ற நிகழ் முறைகள் பலவற்றின் முக்கிய அங்கமாகவும் திகழ்வதால் நீர் அதிமுக்கியமானதாகும். வளர்சிதைமாற்றம் என்பது வளர்மாற்றம் மற்றும் சிதைமாற்றத்தைக் கொண்டது. வளர்மாற்றத்தில் மூலக்கூறுகளிலிருந்து நீர் அகற்றப்பட்டு (ஆற்றலுடனான நொதி வேதிவினைகள் மூலம்) எரிபொருள் மற்றும் தகவற் சேமிப்பிற்குதவும் மாவுச்சத்துக்கள், டிரைக்ளிசரைடுகள், புரதங்கள் போன்ற பெரிய மூலக்கூறுகளை அளிக்கிறது. சிதை மாற்றத்தில், நீர் பிணைப்புகளை உடைத்து ஆற்றலுபயோகத்துக்கும் ஏனைய விளைவுகளுக்கும் தேவையான குளுகோஸ்,கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சிறிய மூலக்கூறுகளை ஏற்படுத்துகிறது.ஆகவே நீரானது இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகளுக்கு இன்றியமையாததாகவும், மையமாகவும் திகழ்கிறது. நீர் இல்லாதிருந்தால், இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகள் இல்லாமல் போய் அதற்கு பதிலாக வேறுபல நிகழ்வுகளான வாயு உட்கவர்தல், புழுதி சேகரிப்பு போன்றவை இருந்திருக்கக் கூடுமோவென்று நம்மை எண்ண வைக்கிறது.

 
Overview of photosynthesis and respiration. நீர் (வலதுபுறம்), கரியமில வாயுவுடன் சேர்ந்து (CO2), ஆக்சிஜன் மற்றும் கரிமச் சேர்மங்களை உருவாக்குகிறது (இடது புறம்), இவை நீராகவும் கரியமிலவாயுவாகவும்(CO2)சுவாசத்தில் வெளியேற்றப்படுகின்றன.
 
பவளப்பாறைகளின் உயிரியற் மாறுபாடு
 
க்ரிஸ்ஸி ஃபீல்ட்-ல் நீர் பிரதிபலிக்கும் ஒளி

நீர் ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசத்திற்கும் அடிப்படையான ஒன்றாகும்.ஒளிச்சேர்க்கை செய்யும் செல்கள் சூரியனின் ஆற்றலை பயன்படுத்தி நீரின் ஹைட்ரஜனை ஆக்சிஜனிலிருந்து பிரிக்கின்றன.ஹைட்ரஜன் காற்றிலிருந்தோ, நீரிலிருந்தோ உட்கவரப்பட்ட கரியமில வாயுவுடன் CO2 இணைந்து குளுகோஸை உருவாக்கி ஆக்சிஜனை வெளிவிடுகிறது.அனைத்து உயிரணுக்களும் இத்தகைய எரிபொருள் பிரயோகத்தின் மூலம் ஹைட்ரஜனையும், கார்பனையும் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்வதன் மூலம் சூரிய ஒளியைக் கவர்ந்து செல் சுவாசத்தில் நீரையும், கரியமில வாயுவையும் (CO2) மீட்டு சீரமைக்கின்றன.

அமில கார நடுவுநிலைமைக்கும், நொதி செயல்பாட்டுக்கும் நீர் முக்கியமானதாகும். ஹைட்ரஜன் அயனி(H+)அதாவது புரோத்தன் வழங்கியான ஒரு அமிலம், ஹைட்ராக்சைடு அயனி (OH) அதாவது புரோத்தன் வாங்கியான ஒரு காரத்துடன் நடுநிலையாக்கல் வினைக்குட்படும் பொழுது நீர் உருவாகிறது. ஹைட்ரஜன் அயனிச் செறிவின் எதிர்மறை மடக்கை(pH), 7 ஆக இருப்பதினால், நீர் நடுவுநிலைமையுள்ளதாகக் கருதப்படுகிறது. அமிலங்கள் pH மதிப்பு 7 ஐ விட குறைவாகப் பெற்றதாயும் காரங்கள் pH மதிப்பு 7 ஐ விட அதிகமாகப் பெற்றதாயும் திகழ்கின்றன. வயிற்றின் அமிலம் ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆயினும் செரிமான எதிர்க்களிப்பின் பொழுது வெளிக்காட்டப்படும் அதன் உணவுக்குழாய் அரிக்கும் தன்மையை, அலுமினியம் ஹைட்ராக்சைடு போன்ற காரங்களை உட்கொள்வதினால் உருவாகும் நீர் மற்றும் அம்மோனியம் குளோரைடு உப்பினால் தற்காலிகமாக சரிகட்டிவிடலாம். பொதுவாக நொதிகளை உள்ளடக்கிய மனித உயிர்வேதியியல் செயல்பாட்டுக்கு உயிரியற் நடுநிலை pH ஆன 7.4 உகந்ததாகும்.

எடுத்துக்காட்டாக, எஷ்ஷெறீஷியா கோலையின் ஒரு செல்லில் 70% நீரும், மனித உடலில் 60–70% நீரும், தாவரங்களில் 90% நீரும், முழு வளர்ச்சியடைந்த சொறி மீனில் (ஜெல்லி ஃபிஷ்)94–98% நீரும், உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

நீர் வாழ் உயிர்கள்

 
சில கடல் டயட்டம்கள் - முக்கிய கடல் தாவரங்களின் வகையைச் சார்ந்தது

பூமியின் தண்ணீர்கள் உயிர்களால் நிறைந்துள்ளன.கற்கால உயிர்கள் நீரிலிருந்தே தோன்றின; மீன்கள் அனைத்தும் நீரில் மட்டுமே உயிர்வாழ்கின்றன என்றால் டால்ஃபின்கள், திமிங்கலங்கள் ஆகியவைகளை உள்ளடக்கிய பல்வேறு வகையான கடல்வாழ் பாலூட்டிகளும் நீரில் வாழ்கின்றன. ஈரூடக வாழிகள் (ஆம்ஃபிபியன்ஸ்) தங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீரிலும் ஏனையவற்றை நிலத்திலும் களிப்பன. கடற்பாசிகள், ஆல்காக்கள் போன்றவை நீரில் வளர்ந்து நீரடி சூல்மண்டலங்களின் ஆதாரமாக இருக்கின்றனமிதவை நுண்ணுயிரிகள் ஆழி உணவுத் தொடரின் அஸ்திவாரமாகும்.

நீர்வாழ் விலங்குகள் உயிர்வாழத் தேவையான பிராணவாயுவை பல வழிகளில் பெற்றுக்கொள்கின்றன. மீன்களுக்கு நுரையீரலுக்குப் பதிலாகச் செவுள்கள் இருக்கின்றன. நுரையீரல் மீன்(லங்ஃபிஷ்), நுரையீரலையும் செவுளையும் கொண்டது. கடல் பாலூட்டிகளான, டால்ஃபின்கள், திமிங்கலங்கள், நீர் நாய்கள், கடல் சிங்கங்கள் போன்றவை அவ்வப்போது வெளிக்காற்றை சுவாசிக்க நீருக்கு வெளியே தலைகாட்டவேண்டும். சிற்றுயிர்கள் பிராணவாயுவைத் தங்கள் தோலின் வழியாக உட்கவரக் கூடியவை.

மனித நாகரீகத்தில் நீரின் பங்கு

 
நீர் ஊற்று

நாகரீகம் நதிகள் மற்றும் முக்கிய நீர்வழிகளை அடுத்து செழுமையாக இருந்ததாக வரலாற்றுவழி அறிகிறோம். நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் மெஸொப்படாமியா இரு முக்கிய நதிகளான டைக்ரிஸ் மற்றும் இயுஃப்ரட்டீஸ் இடையே அமையப் பெற்றிருந்தது; எகிப்தியர்களின் பண்டைய சமூகங்கள் நைல் நதியை முழுமையாக நம்பியிருந்தன. பெருநகரங்களான ராட்டர்டேம், லண்டன், மாண்ட்ரீல், பாரிஸ், நியுயார்க் நகரம், பியுனோஸ் அயர்ஸ், ஷாங்கய், டோக்கியோ, சிகாகோ, ஹாங்காங் போன்றவை தாங்கள் பெற்ற வெற்றியைத் தங்களது நீர்வழி அணுக இயலுந்தன்மைக்கும், அதனால் விளைந்த வியாபார விருத்திக்கும் உரித்தாக்குகின்றன. பாதுகாப்பான துறைமுகங்களையுடைய சிங்கப்பூர் போன்ற தீவுகளும் அதன் காரணமாகவே வளம் பெற்றன.தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளில், சுத்தமான குடிநீர் மனித வள மேம்பாட்டுக்கு தேவைப்படும் முக்கிய காரணியாய் இருக்கிறது.

உடல்நலமும், சுற்றுப்புறத் தூய்மைக் கேடும்

 
சுற்றுப்புற சூழல் மாணவர் நீர் மாதிரி சோதித்தல்

மனிதர்கள் உட்கொள்ளத் தகுந்த நீர் குடிநீர் அல்லது அருந்தத்தக்க நீர் என்றழைக்கப்படுகிறது. அருந்த்தத்தகாத நீர் வடிகட்டுதல் அல்லது காய்ச்சிவடித்தல்(நீர் ஆவியாகும் வரைச் சூடுபடுத்தியப்பின் வெளியாகும் நீராவியை மாசற சிறைப்படுத்தி குளிர்வித்துப் பெறுதல்)மூலமாகவும், வேதியியல் வினைகளுக்குட்படுத்துதல் அல்லது ஏனைய முறைகளாலும் (வெப்பத்திற்குள்ளாக்கிக் கிருமிகளைக் கொல்வது போன்றவை) அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. குறைந்த தர மாறுபாட்டைக் கொண்ட நீர் பாதுகாப்பான நீர் என்றழைக்கப்படுகிறது (நீர் சுத்திகரிப்பு நடைமுறைகளுக்கருகில் இல்லாத மனிதர்களுக்கு சிறப்பாக வழங்கப்படும் நீரான இது, கெடுதலை விட அதிகமாக நன்மையே விளைவிக்கிறது). அருந்தத் தகாததாயினும், நீந்தவும், நீராடவும் பயன்படுகிறதான மனிதருக்கு கெடுதல் விளைவிக்காத நீர் அருந்தத்தக்க நீர் அல்லது குடிநீர் எனப்படாமல் பாதுகாப்பான நீர் என்றோ "நீராடப் பாதுகாப்பான நீர்", என்றோ அழைக்கப்படுகிறது. நீரை நீராடுதற்கும், அருந்துவதற்கும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும் குளோரின் ஒரு தோல் மற்றும் படர்சவ்வு படல உறுத்தியாகும். அதன் உபயோகம் மிகுந்த தொழில்நுட்பம் வாய்ந்ததாகவும் அரசு நெறிமுறைகளால் கண்காணிக்கப்படுவதாகவும் இருக்கிறது.(குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன்(ppm) என்ற அளவிலும் நீராடுவதற்குரிய நீரில், மாசுகளோடூடாத 1–2 ppm குளோரின் என்ற அளவிலும் பொதுவாக பிரயோகிக்கப்படுகிறது).

இந்த இயற்கைவளம் சில இடங்களில் கிடைப்பதற்கரியதாய் இருப்பதால், இதன் இருப்பு சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.தற்பொழுது உலகம் முழுவதும் 1 பில்லியன் மக்கள் வாடிக்கையாக ஆரோக்கியமற்ற நீரை உட்கொள்கின்றனர். பாதுகாப்பான குடிநீரும் சுகாதாரமும் கிடைக்காத உலக மக்கள் தொகையை 2015 க்குள் பாதியாக்க வேண்டும் என்ற 2008 ஆம் ஆண்டைய G8 ஈவியன் உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழியை பல நாடுகள் ஏற்றுக்கொண்டன.[20] இந்த கடினமான சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றாலும் கூட பின்னும் நிர்ணயிக்கப்பட்ட பாதி பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காதவர்களாகவும் ஒரு பில்லியன் பேருக்கு மேலான மக்கள் போதுமான சுகாதார வசதியற்றவர்களாயும் இருக்கும் நிலையே உள்ளது. மோசமான நீரின் தரம் மற்றும் சுகாதாரமின்மை பயங்கரமானது. மாசுபட்ட குடிநீரால் வருடத்திற்கு 5 மில்லியன் இறப்புகள் நேரிடுகின்றன.பாதுகாப்பான நீர் வருடத்திற்கு 1.4 மில்லியன் வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தை மரணங்களைத் தடுக்க வல்லதென உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.[21] இருப்பினும் நீரானது முடிவுறும் ஆதாரமல்ல.குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க் கோர்வை களின் மூலம் அது மறுசுழற்சிக்குட்பட்டு, மனிதர்கள் உட்கொள்வதை விடப் பன்மடங்கு அதிகமான அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. எனவே பூமியினடியில் காணப்படும் சிறிதளவு நீர் மட்டுமே புதுப்பிக்க முடியாத ஆதாரமாக இருக்கிறது (நிலத்தடி நீர் கொள் படுகைகளிலிருந்து நமக்கென எடுக்கப்படும் குடிநீர் விநியோகத்தில் 1 சதவீதம் நிறைவு செய்யப்பட 1 முதல் 10 வருடங்கள் ஆகிறது). புவி நீரின் எதார்த்த அளவு அதிகமாய் தென்பட்டாலும், அதற்கு மாறாக அருந்ததக்க மற்றும் பாசன நீரின் விநியோகம் அரிதானதாகவே இருக்கிறது. நீர் வளமற்ற நாடுகள் நீரை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தயாரிப்பு முழுமை பெற்ற பொருட்களை இறக்குமதி செய்கின்றன. (இதனால் மனிதர்கள் உட்கொள்வதற்கு போதிய அளவு தண்ணீர் மிஞ்சுகிறது) ஏனெனில் பொருட்களின் உற்பத்திக்கு அப்பொருட்களின் எடையை விட 10 முதல் 100 மடங்கு அதிக எடையுள்ள நீர் தேவைப்படுகிறது.

வளரும் நாடுகளில், 90% கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளூர் நதிகளுக்கும் ஓடைகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறது.[22] உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள 50 நாடுகள் மிதமான அல்லது மிகுதியான நீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன.இவற்றில் 17 நாடுகள் நீர் சுழற்சியினால் வருடமுழுவதும் தங்களுக்குக் கிடைக்கும் நீராதாரத்திற்கும் மேலாக செயற்கையாக நீரைப் பிரித்தெடுப்பனவாய் இருக்கின்றன.[23] இத்தகைய இழுபறி நன்னீர் நிலைகளான நதிகளையும் ஏரிகளையும் பாதிப்பதோடல்லாமல், நிலத்தடி நீராதாரங்களையும் குறைக்கிறது.

மனித உபயோகம்

விவசாயம்

 
வயல் பயிர்களின் நீர்ப்பாசனம்

விவசாயத்தில் நீர்ப்பாசனத்துக்கே நீர் முக்கியமாகப் பயன்படுகிறது. போதுமான உணவு உற்பத்திக்கு பாசனமே முக்கிய காரணியாகும்.வளரும் நாடுகள் சிலவற்றில் பாசனத்துக்காக உபயோகப்படுத்தப்படும் நீர் 90 % ஆக உள்ளது.[24]

நீரின் விஞ்ஞான தர நிர்ணய பண்புகள்

ஏப்ரல் 7,1795 ல் பிரான்சு நாட்டில் ஒரு கிராம் என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டது."ஒரு மீட்டர் நீளத்தில் நூற்றில் ஒரு பங்கின் நான்கின் கனத்துக்கு சமமான, உருகு நிலையிலுள்ள பனிக்கட்டியின் தட்பவெப்பத்தைக் கொண்ட நீரின் சார்பிலாத பொருண்மை." [25] ஆனால் நடைமுறை வழக்கிற்கு ஆயிரம் மடங்கு பெரிய அளவிலான, கிலோகிராம் எடையிலான உலோக ஆதாரம் தேவைப்பட்டது. எனவே 1 லிட்டர் நீரின் நிறையை சரியாக நிர்ணயிக்குமாறு பணிக்கப்பட்டது.வரையறுக்கப்பட்ட கிராமில் நிர்ணயிக்கப்பட்ட நீரின் வெப்பமான 0 °C—பிரதிசெய்யப்படத்தக்கதொரு வெப்பநிலை யாகக் கருதப்பட்டதால் விஞ்ஞானிகள் தரத்தை மறுவரையறுத்தலுக்கு உட்படுத்த விழைந்து நீரானது அதிக அடர்த்தி யானதாயிருக்கும் வெப்பநிலையான 4 °C ல் தங்கள் அளவுகளை எடுக்க முற்பட்டனர். 4 °C (39 °F)[58][26]

எஸ்ஐ முறைமையின் கெல்வின் வெப்ப அளவுகோல் நீரின் மும்மைப்புள்ளியை அடிப்படையாகக் கொண்டு 273.16 K அல்லது 0.01 °C என்று வரையறுக்கப்பட்டது. இந்த அளவுகோல் ஏற்கனவே கொதிநிலை (100 °C), மற்றும் உருகுநிலை (0 °C) ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட செல்சியஸ் அளவுகோலை விட நுட்பமானதாகக் கருதப்படுகிறது.

இயற்கை நீர் பெருமளவு ஹைட்ரஜன்-1 மற்றும் ஆக்ஸிஜன்-16 எனும் ஐசோடோப்புகளைக் கொண்டிருந்தாலும்,சிறிதளவு ஹைட்ரஜன்-2 ஐசோடோப்புகளையும் கொண்டிருக்கக் கூடும்.(டியுடீரியம்)டியுடீரியம் ஆக்சைடுகள் அல்லது கன நீர் சிரிதளவேயிருந்தாலும் அது நீரின் இயல்பினை வெகுவாகப் பாதிக்கிறது. நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் கடல்நீரை விட டியுடீரியத்தை குறைவாகப் பெற்றிருக்கின்றன. எனவே தரமான நீர் என்பது வியென்னா சராசரி ஆழி நீர் நிர்ணயத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ளது.

பருகுவதற்காக

 
பாட்டில் நீரைக் குடிக்கும் இளம் பெண்
 
கிராம குடிநீர்த்தேக்கக் கலன்
 
மீன் பூடி வண்டி water carrier three-wheeler in Tamil Nadu

உடல் பருமனுக்கேற்றவாறு மனித உடம்பு 55% முதல் 78% நீராலானது.[27] வறட்சியை ஈடுசெய்து சரிவர செயல்பட உடலுக்கு நாள் ஒன்றிற்கு 1 முதல் 7 லிட்டர்கள் நீர் தேவைப்படுகிறது. உடல் இயக்கம், வெப்பநிலை, ஈரப்பதம், மற்றும் ஏனைய காரணிகளைப் பொறுத்து நீரின் தேவை மாறுபடுகிறது. இதில் பெருமளவு நேரடி நீர் உட்கொள்ளுதல் என்றில்லாமல் உணவின் வாயிலாகவோ, பானங்கள் வாயிலாகவோ உட்கொள்ளப்படுகிறது. ஆரோக்கியமான மக்களுக்காகும் நீரின் அளவு தெளிவாகக் கணிக்கப்படவில்லையென்றாலும், சரியான நீரேற்றத்தைத் தக்கவைக்க குறைந்தது 6 முதல் 7 டம்ளர் நீர் (சுமார் 2 லிட்டர்கள் நீர்)அவசியமென வல்லுனர்கள் கருதுகின்றனர்.[28] மருத்துவ இலக்கியங்கள் இதை விட குறைந்த அளவில், அதாவது உடற்பயிற்சியினாலோ, வெப்ப வானிலையாலோ நிகழும் நீரிழப்பை சரிகட்ட கூடுதலாகத் தேவைப்படும் அளவு நீங்கலாக, சராசரி ஆணுக்கு 1 லிட்டர் நீர் என்ற அளவில், என பரிந்துரைக்கின்றன.[29] ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடையவர்களுக்கு அதிக நீர் உட்கொள்ளுதல் கடினமாயிருந்தாலும், தேவையை விட (குறிப்பாக வெப்பமான ஈரபதமான வானிலையின் பொழுதும்,உடற்பயிற்சியின் பொழுதும்) குறைவாக நீர் உட்கொள்ளுதல் ஆபத்தானது.எனினும் உடற்பயிற்சியின் பொழுது தேவையை விட அதிகமான அளவு நீர் உட்கொள்ளுதல் நீர் நச்சுப்பொறுண்மையாக்கல் அல்லது உடல் நீர் மிகைப்பு போன்ற ஆபத்துக்களுக்கு உட்படுத்தி மரணத்தை விளைவிக்கலாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர்கள் நீர் அருந்த வேண்டும் என்பதற்கு விஞ்ஞானப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.[30] உடல் எடைக் குறைவு மற்றும் மலச்சிக்கலின் மீதான நீரின் விளைவுகள் உதாசீனப்படுத்தப்பட்டுவிட்டன என்பன போன்ற கட்டுக் கதைகளும் நிலவுகின்றன.[31]

நீர் உட்கொள்ளுதலுக்கான ஆரம்பகால பரிந்துரை தேசிய ஆய்வு மன்றத்தின், அங்கமான உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் கீழ்கண்டவாறு அமைக்கப்பெற்றிருந்தது: "பலதரப்பட்ட மனிதர்கள் சாதாரண அளவு உட்கொள்ளும் உணவின் 1 கலோரிக்கு தேவை 1 மில்லிலிட்டர் நீர் என்பதே.தயாரிக்கப்பட்ட உணவுகள் இவ்வளவின் பெரும்பகுதியை கொண்டுள்ளன."[32] அண்மைக்கால உணவாதார உட்கொள்தல் அறிக்கை ஐக்கிய நாடுகள் தேசிய ஆய்வு மன்றத்தால் கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு 2.7 லிட்டர்களும் ஆண்களுக்கு 3.7 லிட்டர்களும்.[33] குறிப்பாக கருத்தரித்துள்ள மற்றும் பாலூட்டும் பெண்களும் நீரேற்றத்தைத் தக்கவைக்க அதிக நீர் உட்கொள்தல் அவசியம். இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிசின் பரிந்துரைப்படி சராசரியாக பெண்கள் 2.2 லிட்டர்களும் ஆண்கள் 3லிட்டர்களும் குடிப்பதும், இது இழக்கப்படும் நீரினிமித்தம் , கருத்தரித்துள்ள பெண்களுக்கு 2.4 லிட்டர்களாகவும்,(10தம்ளர்கள்) பாலூட்டும் பெண்களுக்கு 3 லிட்டர்களாகவும் (12 தம்ளர்கள்) அதிகரிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.[34] மேலும் 20 % நீர் உணவிலிருந்து வருவதாகவும் மீதம் குடிநீர் மற்றும் பானங்களிலிருந்து வருவதாகவும் இது தெரிவிக்கிறது.(கஃபினையும் சேர்த்து) உடலிலிருந்து நீர் சிறுநீர் மற்றும் மலம் வழியாக, வியர்வை வழியாக, சுவாசித்தலின் பொழுது நீராவியை வெளிவிடுதல் வழியாக என பல வழிகளில் வெளியேற்றப்படுகிறது.உடல் உழைப்பின் போதும் வெப்பத்திற்காட்படும் போதும் நீரிழப்பு அதிரிப்பதினால், தினசரி திரவ தேவைகளும் அதிகரிக்கக் கூடும்.

 
குடிநீர் அல்ல என்பதற்கான அபாய குறியீடு

மனிதர்களுக்கு அதிக அசுத்தங்களில்லாத நீர் தேவைப்படுகிறது.உலோக உப்புக்களும், ஆக்சைடுகளும் (தாமிரம், இரும்பு, கால்சியம், காரீயம் உட்பட) இத்தகைய பொதுவான அசுத்தங்கள் சில.[35] இவற்றோடு சேர்ந்தோ அல்லது தனியாகவோ தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களான விப்ரியோ போன்றவை காணப்படலாம். சுவையை மேம்படுத்துவதுக்கும் தேவையான மின்பகுளிகளை பெறவும் சில கரைபொருட்கள் அனுமதிக்கப்படத்தக்கவை.[36]

தனிப்பெரும் நன்நீராதாரமாகத் திகழும் சைபீரியாவின் பய்கால் ஏரி குறைந்த உப்பையும், கால்சியத்தையும் கொண்டிருப்பதனால் மிகுந்த சுத்தமானதாகக் கருதப்படுகிறது.

கரைக்கும் பொருளாக அல்லது கரைப்பானாக

கரைப்பது (அல்லது மிதக்கச்செய்வது )ஆகிய இதன் பண்புகள் தினமும் மனித உடல், ஆடைகள், தரைகள், வாகனங்கள், உணவுபொருட்கள், மற்றும் செல்லப்பிராணிகள் போன்றவற்றை கழுவி சுத்தப்படுத்த பயன்படுகிறது. மேலும் மனித கழிவுகள் நீரால் கழிவு நீர் மண்டலத்தில் கடத்தப்படுகின்றன.சுத்தப்படுத்தும் கரைப்பானாக திகழும் அதன் இயல்பு தொழில் வளமிக்க நாடுகளில் அதன் நுகர்தலை பெருக்கியிருக்கிறது.

நீரானது கழிவுநீரின் வேதியியல் சுத்திகரிப்புக்குப் பயன்படுகிறது. நீரிருப்புச் சூழல் கழிவுடனான தனது ஓரின கரைசலாகும் தன்மையால்,கழிவினை எளிதில் ஏற்றி சுத்தப்படுத்தக் கூடியதாகத் திகழ்ந்து மாசுக்களை அழிப்பதற்கு வழிசெய்கிறது.வளி வழி சுத்திகரிப்பென்பது, கரைசலுக்குள் காற்று அல்லது ஆக்சிஜனை செலுத்தி அதனுள் இருக்கும் பொருட்களின் வினைபுரிதலைக் குறைக்கிறது.

நீரானது கழிவுநீரில் உள்ள கசடுகளை கரைப்பதின் மூலம் அதன் உயிரியற் பதப்படுத்துதலுக்கும் வழிகோலுகிறது.நீரினுள் வாழும் கிருமிகள் கரைக்கப்பட்ட கசடுகளை அடைந்து, அவற்றை உட்கொண்டு சிதைத்து குறைந்த மாசு அபாயமுள்ள பொருட்களாக மாற்றுகின்றன.நாணல் படுக்கைகளும் வளியற்ற செரிமானிகளும் கழிவு நீர் சுத்திகரிப்புக்குதவும் உயிரியற் முறைகளாகும்.

வேதியற் சுத்திகரிப்பிலும், உயிரியற் சுத்திகரிப்பிலும் பெரும்பாலான நேரங்களில் திண்ம படிவோ அல்லது கட்டியோ சுத்திகரிப்புக்குப் பின் மிஞ்ச நேர்கிறது.அதன் கூறுகளுக்கேற்ப இந்த கட்டியானது நன்மை பயப்பதாயின் உலர்த்தப்பட்டு நிலத்தின் மேல் உரமாகப் பரப்பப்படவோ, அல்லது தீயதாயின் குழியமைத்து புதைக்கப்படவோ அல்லது எரிக்கப்படவோ செய்யப்படக் கூடியதாக இருக்கிறது.

வெப்ப கடத்து திரவமாக

 
குளிர்விப்பதற்குப் பயன்படுத்தப்படும் பனிக்கட்டி

எளிதிற் கிடைப்பதாயும், அதிக வெப்ப ஏற்புத் திறன் பெற்றதாயும் இருப்பதால், நீரும் நீராவியும் பலதரப்பட்ட வெப்ப பரிமாற்ற முறைமைகளில் வெப்ப கடத்து திரவங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குளிர்ந்த நீர் ஏரிகள் அல்லது கடல்களில் இயற்கையாகவே பெறக் கூடியதாய் இருக்கிறது.அதிக ஆவியாதலின் வெப்பத்தைக் கொண்டிருப்பதால் குளிர்விக்கப்பட்ட நீராவி சிறந்த வெப்ப கடத்து திறனுள்ள திரவமாய் இருக்கிறது.இதன் எதிர் விளைவாகக் கருதப்படுவது நீர் மற்றும் நீராவியின் அரிக்கும் இயல்பே.அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் குளிர்ப்பியாகப் பயன்படுத்தப்படும் நீர் ஆவியாகி நீராவிச் சுழலியை இயக்கி மின்னாக்கியை ஒட்டுகிறது.

அணு மின் நிலையங்களில் நீர் நியுட்ரான் தணிப்பியாகப் பயன்படுகிறது. அழுத்த நீர் உலைகளில் , நீர் குளிர்ப்பியாகவும், தணிப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.உலையிலிருந்து நீரை அகற்றுவதன் மூலம் இது அணு வினை வேகத்தைக் குறைப்பதால் இது மறைமுக பாதுகாப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது.

தீயணை கருவியாகப் பயன்படுதல்

 
நீர் காட்டுத்தீயை அணைக்கப் பயன்படுகிறது

நீரானது அதிக ஆவியாதல் வெப்பத்தைக் கொண்டிருப்பதாலும் அதன் வினைபுரியா தன்மையாலும் சிறந்த தீயணை கருவியாகப் பயன்படுகிறது. நீராவியாதல் நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கிறது.எனினும் சுத்தமற்ற நீரின் மின் கடத்தும் பண்பால் மின்னுபகரணங்களில் பற்றிய நெருப்பை அணைக்க நீரை பயன்படுத்த இயலாது.அதை போல எண்ணெய் அல்லது கரிமக் கரைசல்களின் தீயையும் நீரினால் அணைக்க முற்படுவது அவற்றின் மிதக்கும் பண்பால் கட்டுங்கடங்காத கொதித்தலையும், அதன் வாயிலாக எரியும் திரவத்தின் பரவலையும் ஏற்படுத்தக் கூடும்.

குறுகலான இடங்களில் பற்றிய மிகுந்த வெப்பமுள்ள தீயை அணைக்க நீரைப் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் நீராவி வெடித்தலையும், நீரோடு வினைபுரியும் சில உலோகங்கள் அல்லது சூடான கிராஃபைட் போன்றவை நிறைந்த இடங்களில் பற்றிய தீயை அணைக்க முற்படும் பொழுது, நீரின் சிதைவால் சாத்தியப்படக் கூடிய ஹைட்ரஜனின் வெடித்தலையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

தீயணைக்கப் பயன்படுத்தப்பட்ட நீரினால் இல்லாமற் போனாலும் உலையின் சொந்த நீர் குளிர்விப்பு வசதியால் ஏற்பட்ட இத்தகைய வெடித்தலின் வேகம் செர்நோபில் பேரழிவின் பொழுது உணரப்பட்டது.உள்மையப் பகுதி அதீத வெப்பத்துக்குட்படுத்தப் பட்டபோது நீரானது நீராவியாகத் தெறித்ததினால் நீராவி வெடித்தல் ஏற்பட்டது.மேலும் நீராவியுடன் சூடான ஸிர்கோனியம் வினை புரிந்தததன் விளைவாக ஹைட்ரஜன் வெடித்தலும் ஏற்பட்டிருக்கலாம் என்றெண்ணப்பட்டது.

வேதியியற் பயன்கள்

கரிம வினைகள் நீரினாலோ அல்லது வேறு உகந்த அமில கார அல்லது நடுப்பி நீர்க்கரைசல்களினாலோ தணிக்கப்படுகின்றன.கனிம உப்புக்களை அகற்றுவதில் நீர் பெரும் பங்கு வகிக்கிறது. கனிம வினைகளில் சாதாரணமாக நீர் கரைப்பானாகப் பயன்படுகிறது.கரிம வினைகளில், நீர் வினைபொருட்களை சரிவர கரைக்காமலிருப்பதாலும்,அமில மற்றும் கார ஈரியல்புகளைப் பெற்றதாயிருப்பதாலும், அணுக்கரு கவர் பொருளாகவிருப்பதாலும், வினைக் கரைப்பானாக உபயோகப்படுத்தப்படுவதில்லை. இருந்தபோதும் இப்பண்புகள் சிலநேரங்களில் விரும்பத்தக்கவையாய்க் கருதப்படுகின்றன. மேலும் டீல்ஸ்-ஆல்டர் வினை உந்து பண்பு நீரில் கண்டறியப்பட்டுள்ளது. மேம்பட்ட பிறழ் நிலை நீர் அண்மைக் காலங்களில் ஆய்வுக்குரிய தலைப்பாயிருக்கிறது.ஆக்ஸிஜன்- நிரம்பிய மேம்பட்ட பிறழ் நிலை நீர் கரிம மாசுக்களைத் திறமையாக எரிக்கிறது.

பொழுதுபோக்கு

மனிதர்கள் பொழுதுபோக்கிற்காகவும் உடற் பயிற்சிகளுக்காகவும், விளையாட்டுகளுக்காகவும் நீரைப் பயன் படுத்துகின்றனர். இவற்றுள் சில நீச்சல், நீர்ச்சறுக்கு, படகோட்டம், அலையாடல், நீர் மூழ்குதல் போன்றவை. இத்துடன் உறைபனி ஹாக்கி, உறை பனிச்சருக்கு போன்றவை உறைபனியில் விளையாடப்படுபவை. ஏரிக்கரைகள், கடற்கரைகள், மற்றும் நீர்ப்பூங்காக்கள் ஆகியனவற்றிற்கு மக்கள் சென்று இளைப்பாறி, புத்துணர்ச்சியடைகின்றனர். பாய்ந்தோடும் நீரின் சத்தம் மனதுக்கு இதமாயிருப்பதாகப் பலர் கருதுகின்றனர். சிலர் மீன்காட்சியகங்களிலும், குளங்களிலும் மீன்களையும் ஏனைய நீர்வாழ் உயிர்களையும் பார்வைக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், தோழமைக்காகவும் வைத்துள்ளனர். மனிதர்கள் நீரை பனிச்சருக்கு, பனிவழுக்குதல் போன்ற உறைபனி விளையாட்டுகளில் ஈடுபட பயன்படுத்துகின்றனர். இவை நீரை உறையச் செய்து விளையாடப்படுபவை. மக்கள் பனி பந்துகள், நீர்த் துப்பாக்கிகள், நீர் பலூன்கள் ஆகியனவற்றை வைத்து பொழுதுபோக்கிற்காக விளையாட்டு சண்டைபோன்ற நிகழ்வுகளிலும் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் நீரூற்றுக்கள் மற்றும் ஏனைய நீராலான அலங்காரங்களைத் தங்களது பொது அல்லது தனியார் இடங்களில் அமைத்துக் கொள்கின்றனர்.

நீர்த் தொழில்

 
இந்தியாவின் நீர் சுமத்தல், 1882. நீரோட்டங்கள் இல்லாத பல இடங்களில் நீர் மக்களால் சுமக்கப்பட வேண்டும்.

நீர்த் தொழிலானது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குடிநீர் விநியோகத்துக்கும், [[கழிவுநீர் சுத்திகரிப்பு|கழிவு நீர் சுத்திகரிப்பிற்கும் ]]பயன்படுகிறது.

 
சீனாவின் அடி பம்பு.
 
நீர் சுத்தீகரிப்பு வசதி

நீர் விநியோக வசதிகள் கிணறுகள் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள், நீர் விநியோக வலைப்பின்னல்கள், நீர் சுத்திகரிப்பு வசதி, நீர்த் தொட்டிகள், நீர்க் கோபுரங்கள், நீர்க் குழாய்கள், பழைய நீர்க்கட்டுக் கால்வாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. வளிமண்டல நீர் மின்னாக்கி ஆராய்ச்சி நிலையிலுள்ளது.

நிலத்தையோ கிணறுகளையோ செயற்கையாகத் துளையிடுதல் மூலம் நீரூற்றுகள் உருவாக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.நிலத்தடி நீர் கொள் படுக்கைகள் போதுமான நீரைத் தர வல்லதாயிருப்பின் தேவைப்படுமளவிற்கு கிணறுகளை அமைத்தல் அதிக நீரைப் பெரும் வழியாகும். ஏனைய நீராதாரங்கள் மழை நீர் மற்றும் நதி அல்லது ஏரிநீராகும்.ஆனாலும் மேலோட்ட நீரை மனித உபயோகத்துக்குப் பயன்படுத்தும் பொழுது சுத்திகரிப்பு செய்தல் அவசியமானது. கரையாத மற்றும் கரையக்கூடிய பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் ஆகியனவற்றை அகற்றுவதாக இது அமையலாம்.இதற்கான வழியாகக் கருதப்படும் மணல் வடிகட்டு முறையில் கரையாத பொருட்கள் மட்டுமே அகற்றப்படுகின்றன.ஆனால் குளோரினேற்றம் மற்றும் கொதிக்க வைத்தல் ஆகியன தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அளிக்க வல்லதாய் இருக்கின்றன.நீரை காய்ச்சி வடிகட்டுதல் மேற்கூறிய மூன்று பணிகளையும் செய்கிறது.இன்னும் முன்னேறிய தொழில் நுட்பங்களான தலைகீழ் சவ்வூடுபரவல் போன்றவைகளும் நடைமுறை வழக்கில் உள்ளன.வறண்ட கடற்கரை காலநிலையுடைய பகுதிகளில் வற்றாத சமுத்திர அல்லது கடல் நீரை உப்புநீக்கம் செய்து பயன்படுத்துவது மிகுந்த செலவை உள்ளடக்கிய ஒரு முயற்சியாகும்.

குடிநீர் விநியோகம் நகராட்சி நீர் விநியோக முறைகளாலும் பாட்டிலிலிடப்பட்ட தண்ணீராகவும் நடக்கிறது. பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் தேவைப்படுவோருக்கு இலவசமாக நீரை விநியோகிக்க பல திட்டங்களை வகுத்துள்ளன.சந்தை முறைமைகளும் இலவச நிறுவனங்களுமே இவ்வரிய வளத்தின் சிறந்த நிர்வாகத்திற்கு ஏற்றதாயும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டத் தேவையான நிதியை அளிப்பதாயும் உள்ளன என ஏனையோர் வாதிடுகின்றனர்.

குடிநீரைக் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் சேதாரத்தைக் குறைப்பதும் மற்றொரு யுத்தியாகும். நன்னீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஹாங்காங் போன்ற நகரங்களில் கழிப்பிடங்களைத் தூய்மைப்படுத்த கடல்நீரே பெருமளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

நீரை மாசுபடுத்துதல் அதன் உபயோகத்தில் நடக்கும் தனிப்பெரும் தவறாகும்; மாசானது மாசுபடுத்துவோருக்கு நன்மை பயப்பதாயிருந்தாலும் கூட நீரின் அனைத்து உபயோகங்களையும் தடுத்து, நீர்வளத்தை அழிக்கிறது.ஏனைய சுற்றுப்புறத் தூய்மைக் கேடுகளைப் போலல்லாது இது நியம சந்தைவிலை கணக்கில் சேராமல் வெளிபிரச்சனைகளாகக் கருதப்பட்டு சந்தைநல பாதிப்பாக அஞ்சப்படுவதில்லை. ஏனைய மக்கள் இதனால் பாதிக்கப்படும்பொழுது, இத்தகைய மாசுபடுத்துதலுக்குக் காரணமான தனியார் நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் லாபத்தை நஷ்ட ஈடாக வழங்குவதில்லை.உயிரினக் கழிவு மாசுபடுத்திகளாக (பயோ டிக்ரேடபிள் பொல்யுடன்ட்ஸ்) இல்லாத பட்ச்த்தில் மனிதர்களால் உட்கொள்ளப்படும் மருந்துக ளின் உயிரியற் சேர்மானத்தால் நீர்நிலைகளின் நீர்வாழ் உயிர்களுக்கு பெரும் சேதங்கள் விளைகின்றன.

கழிவு நீர் வசதிகளாவன கழிவு நீரகற்றிகளும்(ஸ்டார்ம் சியுயர்ஸ்)மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுமே. மேற்பரப்பு தல ஓட்டத்தின் மாசை அகற்றும் மற்றொரு வழி பயோஸ்வேல்(சதுப்பு பாதை) என்பதாகும்

தொழிற்சாலை பயன்கள்

நீரானது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.நீர்விசை மின்சாரம் என்பது நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும் ,மாசுபடுத்தாததாயும்,புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது.சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது.

 
த்ரீ கோர்ஜஸ் அணையே உலகத்தின் மிகப்பெரிய நீர் விசை மின்சார மின் நிலையம்

அழுத்தத்திற்குள்ளான நீர்,நீர் வெடியாகவும் நீர்த் தாரை அறுப்பா னாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன. நீரின் இப்பணி சிறந்ததாயும்,பாதுகாப்பானதாகவும், சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது.இயந்திரங்கள் மற்றும் அறங்களின் சூட்டைத் தணிக்கும் குளிர்ப்பியாக நீர் பயன்படுகிறது.

நீரானது நீராவிச் சுழலி, வெப்ப பரிமாற்றி மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.தொழிற்சாலை உபயோகத்திற்குப் பின் மாசுநீக்கம் செய்யப்படாமல் வெளியேற்றப்படும் நீர், ஒருதூய்மைக்கேடாகும் சுற்றுப்புறத் தூய்மைக்கேடு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் (வேதியியற் மாசு), வெளியேற்றப்பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்கின்றன.

உணவு பதனிடுதல்

 
நீர் நூடில்ஸ் போன்றவற்றை சமைக்கப் பயன்படுகிறது.

உணவியலில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தங்களது தயாரிப்புகளின் வெற்றியை நிலைநிறுத்த உணவு பதனிடுதலில் நீரின் பங்கை உணவியல் விஞ்ஞானி நன்குணர்ந்தவராய் இருத்தல் வேண்டும்.

நீரில் காணப்படும் கரைபொருட்களான உப்புக்கள், சர்க்கரைகள் போன்றவை நீரின் பௌதீக பண்புகளை பாதிக்கலாம். இக்கரைபொருட்கள் நீரின் கொதிநிலை மற்றும் உறைநிலையில் மாற்றம் கொண்டு வரலாம். ஒரு கிலோ நீரில் கரைந்திருக்கும் 1 மோல் சுக்ரோஸ் நீரின் கொதிநிலையை 0.51 °C அதிகரிப்பதாயும் ஒரு கிலோ நீரில் கரைந்திருக்கும் 1 மோல் உப்பு நீரின் கொதிநிலையை 1.02 °C அதிகரிப்பதாயும் உள்ளது; அதே போல் கரை பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீரின் உறை நிலையைக் குறைப்பதாய் உள்ளது.[37] நீரின் கரை பொருட்கள் அதன் செயல்பாட்டை பாதித்து, அதன் மூலம் பல வேதியியற் வினைகளையும் நுண்ணுயிர் பலுகிபெருகுதலையும் ஏற்படுத்தவல்லதாய் இருக்கிறது.[38] கரைசலின் ஆவி அழுத்தத்திற்கும் தூய நீரின் ஆவி அழுத்தத்திற்கும் உள்ள விகிதமே நீரின் செயல்பாடு எனப்படுகிறது.[37] நீரின் கரைபொருட்கள் நீரின் செயல்பாட்டைக் குறைக்கின்றன. குறைந்த நீர் செயல்பாட்டின் பொழுது அநேக கிருமிகளின் வளர்ச்சி ரத்து செய்யப்பட்டு விடுமாதலால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.[38] நுண்ணுயிர் வளர்ச்சி உணவின் பாதுகாப்பை பாதிப்பதோடல்லாமல் அதன் பதப்படுத்துதலையும், அதன் வைப்புக் கால அளவையும் பாதிக்கிறது.

உணவு பதனிடுதலில் நீரின் கடினத்தன்மை முக்கிய காரணியாகும். அது தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளின் தரத்தை பாதிப்பதோடல்லாமல் சுகாதாரத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு காலன் நீரில் இருக்கும் அகற்றப்படக்கூடிய கால்சியம் கார்பனேட் அளவை வைத்து நீரின் கடினத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது.

நீரின் கடினத் தன்மை கிரேய்ன் அளவைகளால் அளக்கப்படுகிறது; 0.064 கி கால்சியம் கார்பனேட் ஒரு கிரேய்ன் கடினத்தன்மைக்கு ஒப்பானது.[37] நீரானது 1 முதல் 4 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது மென் நீராகவும், 5 முதல் 10 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது மிதமான கடின நீராகவும் 11 முதல் 20 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது கடினமான நீராகவும் வகைப்படுத்தப்படுகிறது.[vague][37] வேதியியற் அயனிப் பரிமாற்ற முறைமைகளால் நீரின் கடினத்தன்மையைக் குறைக்கவோ அகற்றவோ கூடும்.நீரின் கடினத்தன்மை அதன் pH நிலையை மாற்றுவதால் உணவுப் பதனிடுதலில் முக்கிய பங்காற்றுகிறது. எடுத்துக்காட்டாக கடின நீர் தெள்ளத் தெளிவான பானங்களின் தயாரிப்பைத் தடுக்கிறது.நீரின் கடினத்தன்மை சுத்தப்படுத்தும் திரவத்தின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் சுகாதாரத்தையும் பாதிக்கிறது.[37]

கொதிக்க வைத்தல், ஆவியில் வேக வைத்தல், மென்மையாகக் கொதிக்க வைத்தல் போன்றவை உணவை நீருடனோ அல்லது நீராவியுடனோ கலந்து வைத்து செய்யப்படும் பிரதான சமையல் நடைமுறைகளாகும். சமையலின் பொழுது பாத்திரங்களைக் கழுவவும் நீர் பயன்படுகிறது.

நீரின் மீதான அரசியலும் தண்ணீர் பிரச்சினைகளும்

 
1970–2000 காலகட்டத்தில் வளரும் நாடுகளின் மக்கள் பெற்ற குடிநீர் பங்கின் சிறந்த கணிப்பு.

நீரின் மீதான அரசியல் என்பது நீர் மற்றும் நீராதாரங்களால் பாதிக்கப்படும் அரசியல் ஆகும்.இதன் காரணமாக நீர் உலக முக்கியத்துவம் வாய்ந்த வளமாகவும் பல அரசியல் சண்டைகளின் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.அது உடல் நல பாதிப்பையும், பல்லுயிர் விருத்தியையும் பாதிக்கக்கூடியது.

1990 ல் இருந்து 1.6 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் பெற்றவர்களாய் இருக்கின்றனர். http://mdgs.un.org/unsd/mdg/Resources/Static/Products/Progress2008/MDG_Report_2008_En.pdf#page=44. வளரும் நாடுகளில் பாதுகாப்பான குடிநீர் பெற்றவர்களாய் இருக்கும் மக்கள் விகிதம் 1970 ல் 30 சதவீதமாயிருந்ததிலிருந்து [3] 1990 ல் 79 சதவீதமாகவும் 2004 ல் 84 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.இந்த நடைமுறையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. [89] 2015 க்குள், பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப்பெறாத மக்கள் தொகையை பாதியாக மாற்றுவதே ஓராயிரமாண்டு வளர்ச்சி குறிகோள்களுள் ஒன்று.இந்த குறிக்கோள் அடையப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது .

2006 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி "அனைவருக்கும் போதுமான அளவு நீருள்ளது.", ஆனால் அதனைக் கிடைக்காமல் செய்வது தவறான நிர்வாகமும், நேர்மையின்மையுமேயாகும்.[39]

யுனெஸ்கோ வின் உலக நீர் மேம்பாட்டுத் திட்டம் (WWDR, 2003) அதன் உலக நீர் மதிப்பீட்டு திட்டத்தின்படி அடுத்த 20 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்ககூடிய நீரின் அளவு 30 சதவீதம் வரைக் குறையலாமென தெரிவிக்கிறது. தற்சமயம் உலக மக்களில் 40 சதவீதம் பேர் குறைந்த பட்ச சுகாதாரத்திற்குத் தேவையான நீரை போதுமான அளவு பெறாதவர்களாவர் . 2000 ல் 2.2 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் நீரால் வரும் நோய்களாலோ (கிருமி பாதித்த நீரை அருந்துவதன் மூலம்) அல்லது வறட்சியாலோ மரணமடைந்துள்ளனர். 2004 ல் வாட்டரெய்ட் எனப்படும் இங்கிலாந்தின் தர்ம ஸ்தாபனம் எளிதில் தடுக்கக்கூடிய நீருடன் தொடர்புள்ள நோய்களால் ஒவ்வொரு 15 வினாடிகளிலும் ஒரு குழந்தை இறப்பதாகக் கூறியுள்ளது. இதன் காரணம் பொதுவாக கழிவு அகற்றப்படாமையே; பார்க்க கழிப்பிடங்கள் .

நீர் பாதுகாப்போடு தொடர்புடைய நிறுவனங்கள் இண்டெர்நேஷனல் வாட்டர் அசோஷியேஷன் (IWA), வாட்டரெய்ட், வாட்டர் 1st, [13] பரணிடப்பட்டது 2018-03-24 at the வந்தவழி இயந்திரம் போன்றவை. நீர் தொடர்பான கூட்டமைப்புகள் யுனைடட் நேஷன்ஸ் கன்வன்ஷன் டு காம்பேட் டெஸெர்டிபிகேஷன் (UNCCD), இண்டெர்நேஷனல் கன்வன்ஷன் ஃபார் தி ப்ரிவன்ஷன் ஆஃப் பொல்யுஷன் ஃபிரம் ஷிப்ஸ் , யுனைடட் நேஷன்ஸ் கன்வன்ஷன் ஆண் தி லா ஆஃப் தி ஸீ மற்றும் ரம்சார் கன்வன்ஷன் ஆகியன. 22 மார்ச் உலக நீர் நாள் எனவும் 8 ஜூன் உலக சமுத்திர நாள் எனவும் அழைக்கப்படுகிறது.

பொருட்களின் தயாரிப்பிலோ அல்லது சேவையிலோ உபயோகப்படுத்தப்படும் நீர், மாய நீர் வெர்சுவல் வாட்டர் என்றழைக்கப்படுகிறது.

மதம், தத்துவம் மற்றும் இலக்கியம்

 
தமிழ் நாட்டில் நிகழ்த்தப்படும் ஓர் இந்து கழுவும் சடங்கு(அபிஷேகம்)

பெரும்பாலான மதங்களில் நீர் தூய்மைப்படுத்து பொருளாகக் கருதப்படுகிறது.கிறிஸ்துவம், இந்துமதம், ராஸ்டஃபரியானிஸம், இஸ்லாம், ஷிண்டோ, டாயிஸம், ஜூடாயிஸம் போன்ற முக்கிய மதங்கள் பல அப்ல்யூஷன் எனப்படும் கழுவுதல் சடங்கைக் கொண்டுள்ளன. ஒரு நபருக்களிக்கப்படும் முழுக்கு (or அஸ்பெர்ஷன் அல்லதுஅஃப்யுஷன்) கிறிஸ்துவத்தின் முக்கியதிருவருட்சாதனமாகும் (அங்கு அது ஞானஸ்நானம்) என்று அழைக்கப்படுகிறது; ஜூடாயிஸம் (மிக்வா ), சீக்கியம்(அம்ரித் சன்ஸ்கார் ), போன்ற ஏனைய மதங்களிலும் இந்நடைமுறை காணப்படுகிறது. அதோடு, இறந்தோருக்கு செய்யப்படும் கழுவும் சடங்கும் ஜூடாயிஸம், இஸ்லாம் உட்பட பல மதங்களில் நடத்தப்படுகிறது. இஸ்லாமில் அநேக தருணங்களில் உடலின் சில பகுதிகளை சுத்தமான நீரினால் கழுவிய பின்னரே ஐந்து தினசரி பிரார்த்தனைகளைச் செய்வது வழக்கம்.(இது வுடு என்றழைக்கப்படுகிறது.). ஷிண்டோவில், மனித உடலையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ கழுவுவதற்காக அனைத்து சடங்குகளிலும் நீர் உபயோகப்படுத்தப்படுகிறது. (எ .கா., மிசொகி சடங்கின் போது). விவிலியத்தின் நியு இண்டெர்நேஷனல் வெர்ஷன் ல் 442 முறைகளும், கிங் ஜேம்ஸ் வெர்ஷன் ல் 363 முறைகளும் நீர் குறிப்பிடப்பட்டுள்ளது: 2 ம் இராயப்பர் 3:5(b) இவ்வாறு கூறுகிறது , "பூமியானது நீரிலிருந்து நீரினால் உருவாக்கப்பட்டுள்ளது"(NIV).

மத சடங்குகளை நிறைவேற்றவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட நீரை சில மதங்கள் உபயோகப்படுத்துகின்றன.(சில கிறிஸ்துவ பிரிவினரால் உபயோகப்படுத்தப்படும் புனித நீர், சீக்கியத்திலும், இந்து மதத்திலும் உபயோகிக்கப்படும் அமிர்த நீர் போன்றவை). பல மதங்கள் குறிப்பிட்ட சில ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட நீரை புனிதத்தன்மை வாய்ந்ததாகவும், ஐஸ்வர்யாமானதாகவும் கருதுகின்றன. எடுத்துக்காட்டாக ரோமன் கத்தோலிக்கத்தில் லூர்தும் சில கிறிஸ்த்துவ சபைகளில் யோர்தானும், இஸ்லாமில் சம்சம் கிணறும் இந்து மதத்தில் கங்கை நதியும் (ஏனையவைகளும்)கூறலாம்.

நீர் தெய்வ சக்தியுடையதாய் நம்பப்படுகிறது.செல்டிக் புராணத்தில் , ஸ்யுலிஸ் என்பவள் வெந்நீர் ஊற்றுக்களின் உள்ளூர் தேவதையாவாள் ; இந்து மதத்தில்,கங்கை தேவதையாகக் கருதப்படுவதோடு,சரஸ்வதி வேத புராணத்தில்தேவதையாகக் குறிப்பிடப்பட்டுள்ளாள். மேலும் நீர் பஞ்சபூதங்களுள் ஒன்றாகும். ( 5 இயற்கைக் காரணிகளுள் ஒன்று, நெருப்பு , பூமி , ஆகாயம் , காற்று)ஆகியன மற்றவை. மாறாக தேவர்கள் குறிப்பிட்ட ஊற்றுக்கள், நதிகள், அல்லது ஏரிகளின் காவல் தெய்வமாகக் கருதப்படலாம்:எடுத்துக்காட்டாக கிரேக்கமற்றும் ரோமானிய புராணத்தில் ,ஒசியனஸ் கடல் தேவதையின் சந்ததியரான மூவாயிரம் ஒசியானிடுகளுள் ஒருவராக நம்பப்பட்ட பெநியஸ் ஆறுகளின் கடவுளாகக் கருதப்பட்டார். இஸ்லாமில் நீரானது வாழ்கையை கொடுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு உயிரும் நீராலேயே ஆக்கப்பட்டிருக்கிரதென நம்பப்படுகிறது. "நாம் நீரிலிருந்தே அனைத்து உயிரையும் படைத்தோம்".[40]

பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானியான எம்பெடோகிள்ஸ் நீரானது, நெருப்பு, பூமி, காற்று, ஆகியவைகளை உள்ளடக்கிய நான்கு மரபார்ந்த காரணிகளுள் ஒன்றாகவும் ஐலம் எனப்படும் அகிலத்தின் அடிப்படை பொருளெனவும் குறிப்பிட்டுள்ளார். நீர் குளிர்ச்சியானதாகவும், ஈரமானதாகவும் கருதப்படுகிறது.நன்கு உடல் திரவங்கள் கருதுகோளில் நீர் சளியுடன் தொடர்புடையது.பாரம்பரிய சீன தத்துவத்தில் பூமி, நெருப்பு , மரம், உலோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து காரணிகளுள் ஒன்றாக நீர் கருதப்படுகின்றது.

இலக்கியத்திலும் நீர் தூய்மையின் அடையாளமாக முக்கிய பங்காற்றுகிறது.நதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வில்லியம் ஃபாக்னரின் ஏஸ் ஐ லே டையிங் மற்றும் ஹேம்லட் டில் ட்ரவ்னிங் ஆஃப் ஒஃபீலியா என்பவைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வாறு கூறுகிறார்."நீரின் ஒரு துளியிலிருந்து ஓர் அட்லாண்டிக் அல்லது ஒரு நயாகரா வின் சக்தியை அவற்றைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாம்." [41]

பாரம்பரிய மற்றும் புகழ் பெற்ற ஆசிய தத்துவத்தின் சில பகுதிகளிலும் நீர் முன்மாதிரியாகக் கருதப்பட்டுள்ளது.ஜேம்ஸ் லெக்கின் 1891 ம் ஆண்டைய டா டே ஜிங் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது. "மிகப் பெரும் சிறப்பு நீரைப் போன்றது.அனைத்து பொருட்களுக்கும் நன்மை விளைவிப்பதிலும், அனைத்தையும் ஆட்கொள்வதிலும், தொய்வில்லாது அனைவரும் வெறுப்பதையும் ஆதரிப்பதிலும், நீரின் சிறப்பு வெளிப்படுகிறது.எனவே அதன் வழி 'டா' வுக்கருகில் இருக்கிறது.நீரைவிட மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் உலகில் எதுவும் இல்லாத போதிலும், பலம் வாய்ந்த வலிமையான பொருட்களை அழிப்பதில் அதற்கு நிகர் வேறு யாருமில்லை;--அதன் போக்கை மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது வேறு எதுவுமிருக்கமுடியாது."[42] இன்று ப்ரூஸ் லீ யின் கீழ் காணும் கூற்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. "மனதை வெறுமையாக்கு, வடிவமற்று, உருவமற்று நீரைப்போல் இரு. நீரை கோப்பைக்குள் ஊற்றும் போது அது கோப்பையாகிறது. குடுவைக்குள் விடும் போது குடுவையாகிறது.தேநீர்க்கோப்பைக்குள் விடும் போது தேநீர்க் கோப்பையாகிறது. தற்பொழுது நீரால் வழிந்தோடவும் முடியும் அல்லது மோதவும் முடியும். நீர் எனது நண்பனாய் இருக்கட்டும்."[43]

குறிப்புகள்

  1. "CIA- The world fact book". Central Intelligence Agency. Archived from the original on 2010-01-05. பார்க்கப்பட்ட நாள் 2008-12-20.
  2. வாட்டர் வேப்பர் இன் தி க்ளைமேட் சிஸ்டம் பரணிடப்பட்டது 1998-02-06 at the வந்தவழி இயந்திரம், ஸ்பெஷல் ரிபோர்ட், [AGU], டிசம்பர் 1995 (லிங்க்ட் 4/2007). வைட்டல் வாட்டர் பரணிடப்பட்டது 2009-07-08 at the வந்தவழி இயந்திரம் UNEP.
  3. 3.0 3.1 Björn Lomborg (2001). The Skeptical Environmentalist. Cambridge University Press. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521010683 இம் மூலத்தில் இருந்து 2013-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130725173040/http://www.lomborg.com/dyn/files/basic_items/69-file/skeptenvironChap1.pdf. பார்த்த நாள்: 2009-10-06. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-07. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  5. Kulshreshtha, S.N (1998). "A Global Outlook for Water Resources to the Year 2025". Water Resources Management 12 (3): 167–184. doi:10.1023/A:1007957229865. 
  6. Baroni, L.; Cenci, L.; Tettamanti, M.; Berati, M. (2007). "Evaluating the environmental impact of various dietary patterns combined with different food production systems". European Journal of Clinical Nutrition 61: 279–286. doi:10.1038/sj.ejcn.1602522. https://archive.org/details/sim_european-journal-of-clinical-nutrition_2007-02_61_2/page/279. 
  7. Braun, Charles L.; Sergei N. Smirnov (1993). "Why is water blue?". J. Chem. Educ. 70 (8): 612. http://www.dartmouth.edu/~etrnsfer/water.htm. பார்த்த நாள்: 2009-10-06. 
  8. Campbell, Neil A.; Brad Williamson; Robin J. Heyden (2006). Biology: Exploring Life. Boston, Massachusetts: Pearson Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-250882-6. http://www.phschool.com/el_marketing.html. 
  9. Kotz, J. C., Treichel, P., & Weaver, G. C. (2005). Chemistry & Chemical Reactivity. Thomson Brooks/Cole. 
  10. Ball, Philip (14 September 2007). "Burning water and other myths". Nature News. பார்க்கப்பட்ட நாள் 2007-09-14.
  11. "Discover of Water Vapor Near Orion Nebula Suggests Possible Origin of H20 in Solar System (sic)". The Harvard University Gazette. April 23, 1998. http://www.news.harvard.edu/gazette/1998/04.23/DiscoverofWater.html. 
  12. "Space Cloud Holds Enough Water to Fill Earth's Oceans 1 Million Times". Headlines@Hopkins, JHU. April 9, 1998. http://www.jhu.edu/news_info/news/home98/apr98/clouds.html. 
  13. "Water, Water Everywhere: Radio telescope finds water is common in universe". The Harvard University Gazette. February 25, 1999. http://news.harvard.edu/gazette/1999/02.25/telescope.html. 
  14. "MESSENGER Scientists 'Astonished' to Find Water in Mercury's Thin Atmosphere". Planetary Society. 2008-07-03. Archived from the original on 2008-07-07. பார்க்கப்பட்ட நாள் 2008-07-05.
  15. [1] பரணிடப்பட்டது 2007-07-16 at the வந்தவழி இயந்திரம் ஜூலை 12, 2007
  16. [2]
  17. Versteckt in Glasperlen: Auf dem Mond gibt es Wasser - Wissenschaft - Der Spiegel - Nachrichten
  18. E. Ehlers, T. Krafft., தொகுப்பாசிரியர் (2001). "J. C. I. Dooge. "Integrated Management of Water Resources"". Understanding the Earth System: compartments, processes, and interactions. Springer. பக். 116. 
  19. "Habitable Zone". The Encyclopedia of Astrobiology, Astronomy and Spaceflight.
  20. "G8". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  21. [3]சேஃப் வாட்டர் அண்ட் குளோபல் ஹெல்த்.
  22. UNEP International Environment (2002). Environmentally Sound Technology for Wastewater and Stormwater Management: An International Source Book. IWA Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1843390086. இணையக் கணினி நூலக மையம்:49204666. 
  23. Ravindranath, Nijavalli H.; Jayant A. Sathaye (2002). Climate Change and Developing Countries. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1402001045. இணையக் கணினி நூலக மையம்:231965991. 
  24. "WBCSD வாட்டர் ஃபாக்ட்ஸ் & ட்ரேன்ட்ஸ்". Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  25. [4] பரணிடப்பட்டது 2013-02-25 at the வந்தவழி இயந்திரம்
  26. [5]
  27. [6]
  28. "Healthy Water Living". Archived from the original on 2012-05-24. பார்க்கப்பட்ட நாள் 2007-02-01. {{cite web}}: Unknown parameter |producer= ignored (help)
  29. Rhoades RA, Tanner GA (2003). Medical Physiology (2nd ). Baltimore: Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0781719364. இணையக் கணினி நூலக மையம்:50554808. https://archive.org/details/medicalphysiolog0000unse. 
  30. [7][8][9]
  31. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  32. Food and Nutrition Board, National Academy of Sciences. Recommended Dietary Allowances.. National Research Council, Reprint and Circular Series, No. 122. 1945. பக். 3–18. 
  33. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-12-18. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  34. [10]
  35. "கான்க்யுயேரிங் கெமிஸ்ட்ரி" 4வது எட். வெளியிடப்பட்டது 2008
  36. Maton, Anthea; Jean Hopkins, Charles William McLaughlin, Susan Johnson, Maryanna Quon Warner, David LaHart, Jill D. Wright (1993). Human Biology and Health. Englewood Cliffs, New Jersey, USA: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-981176-1. இணையக் கணினி நூலக மையம்:32308337. https://archive.org/details/humanbiologyheal00scho. 
  37. 37.0 37.1 37.2 37.3 37.4 வக்லேசிக் அண்ட் கிறிஸ்டியன், 2003
  38. 38.0 38.1 டி மான், 1999
  39. UNESCO. (2006 [11][12].
  40. சுறா ஆஃப் அல் -அன்பியா 21:30
  41. Arthur Conan Doyle. "2, "The Science of Deduction"". A Study in Scarlet. https://archive.org/details/Astudyinscarlet. 
  42. http://www.sacred-texts.com/tao/taote.htm
  43. ப்ரூஸ் லீ: எ வாரியர்'ஸ் ஜர்னி (2000)

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்&oldid=3849257" இலிருந்து மீள்விக்கப்பட்டது