கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும்.
கோயம்புத்தூர் கோவை கோயமுத்தூர் | |
---|---|
பெருநகர மாநகராட்சி[1] | |
அடைபெயர்(கள்): தென்னிந்திய மான்செஸ்டர் | |
ஆள்கூறுகள்: 11°01′00.5″N 76°57′20.9″E / 11.016806°N 76.955806°E | |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
பகுதி | கொங்கு நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கோயம்புத்தூர் மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | பி. ஆர். நடராஜன் |
• சட்டமன்ற உறுப்பினர் | அம்மன் கே. அர்ஜுனன் (கோயம்புத்தூர் வடக்கு) வானதி சீனிவாசன் (கோயம்புத்தூர் தெற்கு) |
• மாநகர முதல்வர் | கல்பனா |
பரப்பளவு | |
• பெருநகர மாநகராட்சி[1] | 257.04 km2 (99.24 sq mi) |
• Metro | 696.25 km2 (268.82 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 2 |
ஏற்றம் | 427 m (1,401 ft) |
மக்கள்தொகை (2011) | |
• பெருநகர மாநகராட்சி[1] | 1,601,438 |
• தரவரிசை | 24வது |
• பெருநகர் | 2,136,916 |
• பெருநகர தரம் | 16வது |
இனங்கள் | தமிழர் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 641 XXX |
தொலைபேசி குறியீடு | +91-422 |
வாகனப் பதிவு | TN 37 (தெற்கு), TN 38 (வடக்கு), TN 66 (மத்திய), TN 99 (மேற்கு) |
இணையதளம் | www |
மக்கள்தொகை குறிப்பு: நகர விரிவாக்கத்திற்கு முந்தைய நகரத்தின் பரப்பளவு 105.60 சதுர கி.மீ. ஆக இருந்த போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கணக்கிடப்பட்ட மக்கள்தொகை 1,050,721 ஆக இருந்தது.[2] நகர எல்லைகள் 257.04 சதுர கிலோமீட்டராக விரிவாக்கப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட தகவலின்படி புதிய நகர எல்லைகளுக்கு உட்பட மக்கள் தொகை 1,601,438 ஆக இருந்தது.[3][4] |
சங்க காலத்தில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதி சேரர்களால் ஆளப்பட்டது. இந்த நகரமானது மேற்குக் கடற்கரைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்தது. தென்னிந்தியாவில் முசிறி முதல் அரிக்கமேடு வரை நீண்டிருந்த பழங்கால வர்த்தகப் பாதையான ராசகேசரி பெருவழியில் இது அமைந்திருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர். இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசால் ஆளப்பட்டது. அதைத் தொடர்ந்து நாயக்கர்கள் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார், இதன் கீழ் கொங்கு நாடு 24 "பாளையங்களாக" பிரிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயம்புத்தூர் பகுதி மைசூர் இராச்சித்தின் கீழ் வந்தது. திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரித்தானியர்களால் 1799 இல் கோயம்புத்தூர் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கோயம்புத்தூர் பகுதியானது தீரன் சின்னமலை தலைமையிலான பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.
1804 ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக நிறுவப்பட்டது மற்றும் 1866 இல் நகராட்சி அந்தசுது வழங்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பம்பையில் பருத்தித் தொழிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்நகரத்தின் சவுளி வர்த்தகம் ஏற்றத்தை சந்தித்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்நகரம் விரைவான தொழில் வளர்ச்சியைக் கண்டது. "கோயம்புத்தூர் ஈர மாவு இயந்திரம்" மற்றும் "கோவை கோரா பருத்தி" ஆகியவை இந்திய அரசாங்கத்தால் புவியியல் குறியீடுகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தென் இந்தியாவில் சவுளித் தொழிலின் மையமாக இருப்பதால், இந்த நகரம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகின்றது.
கோயம்புத்தூர் 2014 ஆண்டு இந்தியா டுடே வார இதழ் நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த வளர்ந்து வரும் நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது. இந்நகரமானது இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் முதலீட்டு சூழலில் இந்திய நகரங்களில் நான்காவது இடத்தையும் மற்றும் தோலோசு வெளியிட்ட சிறந்த உலகளாவிய புறத்திறனீட்ட நகரங்களில் 17வது இடத்தையும் பிடித்தது. இந்திய அரசாங்கத்தால் சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் இந்திய நகரங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, இந்தியாவில் வாழ்வதற்கான பத்து சிறந்த நகரங்களில் இடம்பெற்றது.
பெயர்க்காரணம்
இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால், "கோசர்புத்தூர்" என்று வழங்கப்பட்டு பின்னர் கோயமுத்தூர் மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[5] இன்னொரு கூற்றின் படி , "கோவன்" எனும் தலைவன் இருந்ததாகவும், அதன் பெயரிலே உண்டான ஊரே "கோவன்புத்தூர்" என்று வழங்கப்பட்டு பின்னர் கோயமுத்தூர் மருவி இருக்கலாம்.[6][7] இப்பெயர் "கோவையம்மா" எனபதிலிருந்து வந்திருக்கலாம் என்று மற்றொரு கோட்பாடு கூறுகிறது. கோனான் வழிபட்ட தெய்வமான கோயம்மாவிடமிருந்து உருவான இந்த வார்த்தை கோனியம்மாவாகவும் பின்னர் கோவையம்மாவாகவும் மாறியது.[8]
வரலாறு
சங்க காலத்தில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதி சேரர்களால் ஆளப்பட்டது. இந்த நகரமானது மேற்குக் கடற்கரைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்தது.[9] இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் காவியமான சிலப்பதிகாரம் மற்றும் மற்ற சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள கோசர் மக்கள் கோயம்புத்தூர் மண்டலத்துடன் தொடர்புடையவர்களாவர்.[10] தென்னிந்தியாவில் முசிறி முதல் அரிக்கமேடு வரை நீண்டிருந்த பழங்கால வர்த்தகப் பாதையான ராசகேசரி பெருவழியில் இது அமைந்திருந்தது.[11][12] கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர்.[13][14] இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசால் ஆளப்பட்டது. அதைத் தொடர்ந்து நாயக்கர்கள் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார், இதன் கீழ் கொங்கு நாடு 24 "பாளையங்களாக" பிரிக்கப்பட்டது.[15]
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயம்புத்தூர் பகுதி மைசூர் இராச்சித்தின் கீழ் வந்தது. திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரித்தானியர்களால் 1799 இல் கோயம்புத்தூர் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கோயம்புத்தூர் பகுதியானது தீரன் சின்னமலை தலைமையிலான பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.[16] 1804 ஆம் ஆண்டில், கோயம்புத்தூர் புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக நிறுவப்பட்டது மற்றும் 1866 இல் நகராட்சி அந்தசுது வழங்கப்பட்டது.[17][18] ராபர்ட் ஸ்டேன்சு கோயம்புத்தூர் நகர அமைப்பின் முதல் தலைவராக ஆனார்.[19][20] 1876-78 ஆம் ஆண்டுகளில் இப்பகுதி பெரும் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் இறந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பிலேக் நோயால் ஏறக்குறைய இருபதாயிரம் இறப்புகள் ஏற்பட்டது.[21][22]
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பம்பையில் பருத்தித் தொழிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்நகரத்தின் சவுளி வர்த்தகம் ஏற்றத்தை சந்தித்தது.[20] இந்திய சுதந்திர போராட்டத்தில் இப்பகுதி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.[23][24] சுதந்திரத்திற்கு பிறகு இந்நகரம் விரைவான தொழில் வளர்ச்சியைக் கண்டது. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சியாக உயர்வு பெற்றது.[25] 14 பிப்ரவரி 1998 அன்று தீவிர இசுலாமிய தீவிரவாத குழுவான அல் உம்மா நகரம் முழுவதும் 11 இடங்களில் குண்டுவீசியதில் 58 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[26]
புவியியல்
கோயம்புத்தூர் தென் இந்தியாவில் வடமேற்கு தமிழ்நாட்டில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது 642.12 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது.[27] இது மேற்கு மற்றும் வடக்கே மேற்குத் தொடர்ச்சி மலை மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது, இதன் வடக்குப் பகுதியில் நீலகிரி பல்லுயிர் வலய காடுகள் உள்ளன.[28] நொய்யல் ஆறு நகரின் தெற்கு எல்லையை ஒட்டி பாய்கிறது.[29][30] கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில: சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி (குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி, முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.[31][32] பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு, நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து–அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.[33][28]
இந்த நகரம் இரண்டு தனித்துவமான புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நகரத்தின் பெரும்பான்மையான நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கிய வறண்ட கிழக்குப் பகுதி மற்றும் நீலகிரி, ஆனைமலை மற்றும் மூணாறு எல்லைகளை உள்ளடக்கிய மேற்குப் பகுதி. அண்டை மாநிலமான கேரளாவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் பாலக்காட்டு கணவாய், நகரின் மேற்கில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ளதால் இந்த நகரத்தில் பல்வேறு விதமான விலங்குகள் மற்றும் பறவைகள் காணப்படுகின்றன. சமவெளிகளில் பொதுவான விலங்கு இனங்கள் தவிர, இந்திய யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி போன்ற பல விலங்குகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.[34] நகரத்தின் வடக்குப் பகுதியில் தேக்கு, சந்தனம்,மற்றும் மூங்கில் போன்ற வணிக ரீதியாக குறிப்பிடத்தக்க மரங்களைக் கொண்ட வளமான வெப்பமண்டல பசுமைக் காடு உள்ளது. இங்கு பெரும்பாலும் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் மண் காணப்படுகின்றது. 1900 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 6.0 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நிலநடுக்க வகைப்படுத்தலில் III/IV வகுப்பில் உள்ளது.[35] [36]
வானிலை
கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ், இந்த நகரம் வெப்பமான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஈரமான பருவம் நீடிக்கின்றது. இந்த நகரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.9 °C (96.6 °F) இலிருந்து 29.2 °C (84.6 °F) ஆகவும், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24.5 °C (76.1 °F) முதல் 19.8 °C (67.6 °F) ஆகவும் உள்ளது.[37] 22 ஏப்ரல் 1976 அன்று நகரின் பதிவான அதிகபட்ச வெப்பநிலையான 42.6 °C (108.7 °F) பதிவானது. அதே சமயம் 12 சனவரி 1957 அன்று குறைந்தபட்ச வெப்பநிலையான 12.2 °C (54.0 °F) பதிவாகியது.[38]
கோயம்புத்தூர் ஈரமான மற்றும் வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது மார்ச் முதல் சூன் வரையிலான காலத்தில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான கோடைகாலத்தை அனுபவிக்கிறது. மழைக்காலம் சூலை மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும். இந்நகரம் தென்மேற்கு பருவமழையிலிருந்து மிதமான மழையையும், வடகிழக்கு பருவமழையிலிருந்து அவ்வப்போது கனமழையையும் பெறுகிறது. குளிர்காலம் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரியில் முடிவடைகிறது. பாலக்காட்டுக் கணவாயின் பயனாக மாவட்டத்தின் பெரும்பகுதி சூன் முதல் ஆகத்து வரை தென்மேற்குப் பருவ மழையைப் பெறுகிறது. சற்றே வெப்பமான செப்டம்பரை அடுத்து அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை துவங்குகிறது. இதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இம்மாவட்டம் மழை பெறுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 700 மி.மீ. மழை பெறுகிறது.[37] நகரின் ஆண்டுமுழுவதற்குமான நீர்த்தேவைகளை எதிர்கொள்ள இந்த மழையளவு போதுமானதாக இல்லாதிருப்பினும், சிறுவாணி, அத்திக்கடவு போன்ற குடிநீர்த் திட்டங்கள் நகரின் குடிநீத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
தட்பவெப்ப நிலைத் தகவல், கோயம்புத்தூர் (கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்) 1981-2010, உச்சம் 1948-2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35.9 (96.6) |
38.8 (101.8) |
40.8 (105.4) |
42.6 (108.7) |
41.2 (106.2) |
38.0 (100.4) |
36.2 (97.2) |
36.0 (96.8) |
37.8 (100) |
36.8 (98.2) |
34.2 (93.6) |
34.4 (93.9) |
42.6 (108.7) |
உயர் சராசரி °C (°F) | 30.8 (87.4) |
33.6 (92.5) |
36.0 (96.8) |
36.7 (98.1) |
35.4 (95.7) |
32.4 (90.3) |
31.6 (88.9) |
31.9 (89.4) |
32.7 (90.9) |
31.9 (89.4) |
30.1 (86.2) |
29.6 (85.3) |
32.7 (90.9) |
தாழ் சராசரி °C (°F) | 18.8 (65.8) |
19.8 (67.6) |
21.8 (71.2) |
23.7 (74.7) |
23.7 (74.7) |
22.6 (72.7) |
22.0 (71.6) |
22.0 (71.6) |
22.1 (71.8) |
22.0 (71.6) |
20.9 (69.6) |
19.0 (66.2) |
21.5 (70.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 12.2 (54) |
12.8 (55) |
15.8 (60.4) |
18.2 (64.8) |
15.6 (60.1) |
18.3 (64.9) |
16.1 (61) |
16.1 (61) |
16.7 (62.1) |
15.9 (60.6) |
14.1 (57.4) |
12.4 (54.3) |
12.2 (54) |
மழைப்பொழிவுmm (inches) | 7.5 (0.295) |
4.2 (0.165) |
25.7 (1.012) |
43.6 (1.717) |
55.2 (2.173) |
23.7 (0.933) |
25.3 (0.996) |
36.1 (1.421) |
52.8 (2.079) |
157.5 (6.201) |
134.6 (5.299) |
33.3 (1.311) |
599.5 (23.602) |
% ஈரப்பதம் | 41 | 33 | 31 | 42 | 56 | 66 | 68 | 68 | 66 | 67 | 64 | 53 | 54 |
சராசரி மழை நாட்கள் | 0.4 | 0.6 | 1.3 | 2.9 | 3.5 | 2.7 | 2.9 | 2.8 | 3.5 | 8.2 | 6.6 | 2.2 | 37.6 |
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை[39] |
மக்கள்தொகை பரம்பல்
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1871 | 35,310 | — |
1881 | 38,967 | +10.4% |
1891 | 46,383 | +19.0% |
1901 | 53,080 | +14.4% |
1911 | 47,000 | −11.5% |
1921 | 68,000 | +44.7% |
1931 | 95,000 | +39.7% |
1941 | 1,30,348 | +37.2% |
1951 | 1,98,000 | +51.9% |
1961 | 2,86,000 | +44.4% |
1971 | 3,56,000 | +24.5% |
1981 | 7,04,000 | +97.8% |
1991 | 8,16,321 | +16.0% |
2001 | 9,30,882 | +14.0% |
2011 | 10,50,721 | +12.9% |
ஆதாரங்கள்: |
கோயம்புத்தூரின் மக்கள்தொகை 1,601,438 ஆக உள்ளது.[4] 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விரிவாக்கத்திற்கு முந்தைய நகர எல்லைகளின் அடிப்படையில், கோயம்புத்தூர் நகரின் மக்கள் தொகை 1,050,721 ஆக இருந்தது. ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கு 997 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது, இது தேசிய சராசரியான 929 ஐ விட அதிகம்.[43] இது தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்பு ஆகும்.[44] 52,275 ஆண்கள் மற்றும் 49,794 பெண்கள் என மொத்தம் 102,069 பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 107,949 முறையே மற்றும் 683 ஆகவுள்ளனர். நகரில் 1,539 விவசாயிகள், 2,908 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 11,789 வீட்டுத் தொழிலாளர்கள், 385,802 இதரத் தொழிலாளர்கள், 23,077 குறு தொழிலாளர்கள், 531 குடும்பத் தொழிலாளர்கள், குறு விவசாயிகள், 531 குறு விவசாயிகள் மற்றும் 20,877 பிற குறு தொழிலாளர்கள் உள்ளனர்.[45][27][44]
நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 89.23% ஆகும், இது தேசிய சராசரியான 74.04% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 93.17% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 85.3% ஆகவும், ஆறு வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் 8.9% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள்.[47] 2005 ஆம் ஆண்டில், நகரத்தில் குற்ற விகிதம் 100,000 பேருக்கு 265.9 ஆக இருந்தது, இது இந்தியாவின் முக்கிய நகரங்களில் பதிவான குற்றங்களில் 1.2% ஆகும். இந்தியாவில் உள்ள 35 முக்கிய நகரங்களில் குற்றங்கள் நடப்பதில் 21வது இடத்தில் உள்ளது.[48] நகரத்தின் மக்கள் தொகையில் சுமார் 8% பேர் சேரிகளில் வாழ்கின்றனர்.[49]
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கோவையில் இந்துக்கள் 83.31%, முஸ்லிம்கள் 8.63%, கிறிஸ்தவர்கள் 7.53%, சீக்கியர்கள் 0.05%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.28%, 0.01% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.17% பேர்களும் உள்ளனர்.[50][46]
நிர்வாகம்
கோவை ஒரு மாநகராட்சியும், மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். மாநகராட்சிக்கு 'மேயர்' எனப்படும் மாநகரத்தந்தை தலைமை ஏற்கிறார். இவருக்குத் துணையாக மாநகர்மன்ற உறுப்பினர்களும், துணை மாநகரத்தந்தையும் உள்ளனர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர அரசுப்பணி சேவையைச் சேர்ந்த மாநகராட்சி ஆணையர் வழக்கமான ஆட்சிப்பணியை மாநகராட்சிமன்ற அவையின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறார். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கிறார். மாவட்ட நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிருவாகத்தை மேற்பார்வையிடுகிறது. மாநிலத்திலேயே மிகக் கூடுதலான வருவாயை ஈட்டிக் கொடுத்தாலும் நகரத்தின் கட்டுமானத் தேவைகளுக்கான நிதி மாநில அரசிடமிருந்து போதுமான அளவு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.
சட்டம் ஒழுங்கு
அமைதியான தொழில் வணிக நகரான கோவையில் 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலையை அடுத்து பெருமளவு கடையுடைப்புகளும் கொள்ளைகளும் நிகழ்ந்தன. ஒற்றுமையாக வாழ்ந்த இந்துக்களுக்கும், இசுலாமியருக்கும் இடையே 1980களில் புகையத் தொடங்கிய பகை 1990களில் கோயம்புத்தூரின் மேற்குப்பகுதியில் பெரும் கலவரமாக வெடித்தது. 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகள் இப்பகையை மேலும் வளர்த்தன.[51] ஆயினும் தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்பை அடுத்து, தற்போது குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.
அரசியல்
நகரத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன :
- கோயம்புத்தூர் கிழக்கு,
- கோயம்புத்தூர் மேற்கு,
- சிங்காநல்லூர்,
- பேரூர் (தொகுதி சீரமைப்பின்படி பேரூர் தொகுதி தற்போது நீக்கப்பட்டு தொண்டாமுத்தூர் தொகுதியாக மாறிவிட்டது),
- கவுண்டன்பாளையம்.
நகரத்தின் வடக்கே 20% பகுதி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. கோவை மேற்கு, கோவை கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கியது கோவை நாடாளுமன்றத் தொகுதி ஆகும். 10% நகரப்பகுதி பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ளது.[52]
ஊடகங்களில் கோவை
அச்சு ஊடகம்
கோயம்புத்தூர் பதிப்புகளைக் கொண்ட தமிழ் செய்தித்தாள்களில் தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன், தி இந்து (தமிழ்), (அனைத்து காலை செய்தித்தாள்களும்) மற்றும் தமிழ் முரசு மற்றும் மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவை அடங்கும்.
மலையாள மனோரமா மற்றும் மாத்ருபூமி ஆகிய இரண்டு மலையாள செய்தித்தாள்களும் நகரத்தில் கணிசமான புழக்கத்தில் உள்ளன. நான்கு முக்கிய ஆங்கில செய்தித்தாள்கள், தி இந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் க்ரோனிகல் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவை நகரத்திலிருந்து பதிப்புகளை வெளியிட்டன. வணிக செய்தித்தாள்கள் பிசினஸ் லைன், பிசினஸ் ஸ்டாண்டர்டு மற்றும் தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆகியவை கோயம்புத்தூர் பதிப்பை வெளியிட்டன. மேலும் தி பெல்லமெடு டைம்ஸ் மற்றும் தி ரெட்ஃபீல்ட்ஸ் டைம்ஸ் ஆகியவைகளும் குறிப்பிட்ட இடங்களைப் பூர்த்தி செய்கின்றன.
வானொலி தொடர்பு
ஒரு நடுத்தர அலை வானொலி நிலையம் அகில இந்திய வானொலியால் இயக்கப்படுகிறது, பெரும்பாலான நிகழ்ச்சிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ளன. கோயம்புத்தூரிலிருந்து ஐந்து எஃப்எம் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன - அகில இந்திய வானொலியில் இருந்து ரெயின்போ எஃப்எம், சன் நெட்வொர்க்கிலிருந்து சூர்யன் எஃப்எம், ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி மற்றும் ஹலோ எஃப்எம். இந்த தனியார் வானொலி நிலையங்கள் அனைத்தும் திரைப்பட இசை உட்பட தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்புகின்றன. இந்த நிலையங்களின் வரம்பு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களை உள்ளடக்கியது. தொலைக்காட்சி ரீல் 1985 இல் டெல்லி தூர்தர்ஷனிலிருந்து தொடங்கியது. 1986 ஆம் ஆண்டில், கொடைக்கானலில் ஒரு ரிப்பீட்டர் கோபுரம் தொடங்கப்பட்ட பின்னர், மெட்ராஸ் தூர்தர்ஷனிலிருந்து ஒளிபரப்பு தொடங்கியது. கோயம்புத்தூர் மக்கள் 1980 ஒலிம்பிக் மற்றும் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வ.ஊ.சி பூங்காவில் ஒரு மாபெரும் திரையில் கண்டனர், அப்போது நகரத்தைச் சேர்ந்த யுஎம்எஸ் செயற்கைக்கோள் சமிக்ஞை வரவேற்புக்காக ஒரு டிஷ் ஆண்டெனாவை உருவாக்கியது. தற்போது தொலைக்காட்சி வரவேற்பு டி.டி.எச் மூலமாகவோ அல்லது கேபிள் மூலமாகவோ உள்ளது, அதே நேரத்தில் தூர்தர்ஷன் வரவேற்பு வெளிப்புற ஆண்டெனாவைப் பயன்படுத்தி கிடைக்கிறது. 2005 ஆம் ஆண்டில், தூர்தர்ஷன் கோயம்புத்தூரில் தனது ஸ்டுடியோவைத் திறந்தது.
திரைத்துறை
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மிகப் பழமையான சில திரைப்பட ஸ்டுடியோக்களைக் கொண்டுள்ளது. திரைப்பட கண்காட்சியாளரான சுவாமிகண்ணு வின்சென்ட் நகரில் முதல் திரைப்பட ஸ்டுடியோக்களை அமைத்தார். ரங்கசாமி நாயுடு 1935 இல் சென்ட்ரல் ஸ்டுடியோவை நிறுவினார், எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு 1945 இல் பக்ஷிராஜா ஸ்டுடியோவை அமைத்தார்.
கலாச்சாரம்
"தென்னிந்தியாவின் மான்செசுட்டர்" என்று பிரபலமாக அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரத்தின் கலாச்சாரம் இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிடமிருந்து வேறுபடுகின்றது. ஒரு காசுமோபாலிட்டன் நகரமாக இருப்பதால், நகரத்தின் கலாச்சாரம் அதன் மாறுபட்ட மக்களை பிரதிபலிக்கிறது. பொதுவாக ஒரு பாரம்பரிய நகரமாக கருதப்பட்டாலுங்கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற நகரங்களைவிட வேறுபட்டிருக்கிறது. பாரம்பரிய இசை, நடனம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லா கலை வடிவங்களும் நகரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. பண்டைய கோவில் கட்டிடக்கலையிலிருந்து நவீன உயர் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய இசை, நடனம், பாரம்பரிய உணவிலிருந்து துரித உணவுகள், இரவில் தூங்கா நகரமாக உள்ளது பாேன்ற ஒரு தனித்துவமான கலவையை இந்நகரத்தில் காணலாம். கோயம்புத்தூரும் அதன் மக்களும் தொழில்முயற்சிக்காக புகழ் பெற்றுள்ளனர்.[53][54]
பொருளாதாரம்
நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும், நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும், கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர்.[சான்று தேவை] தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
துவக்க காலத் தொழில் வளர்ச்சி
பிரித்தானியர் கோயம்புத்தூரை ஆண்டபோது இதனை மலபார் கரையிலிருந்தத் துறைமுகங்களுடன் இணைத்தனர். பின்னர் பிரித்தானியர் 1862 ஆம் ஆண்டு தொடர்வண்டி இணைப்புகள் ஏற்படுத்தியபோது போத்தனூர் வழியாகக் கொச்சிக்கு இருப்புப் பாதைப் போடப்பட்டது. இது இங்கிலாந்திற்கு கச்சாப்பொருள்களைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு உதவியது.
1888 ஆம் ஆண்டு, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், இன்று 'ஸ்டேன்ஸ் மில்' என்று பரவலாக அறியப்படும் கோயம்புத்தூர் நூற்றல் மற்றும் நெய்தல் ஆலையை நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். கூடவே ஒரு குளம்பி சீராக்கப் பட்டறையையும் (coffee curing factory) திருச்சி சாலையில் நிறுவினார். இதுவே கோவையில் பெருமளவு நெசவாலைகள் வருவதற்கு அடிக்கோளிட்டது. மேலும் பலர் தங்கள் நிறுவனங்களை நிறுவிட சர் ராபர்ட் மிகவும் உதவி புரிந்தார்.[55] கோவைக்கு இவராற்றிய இந்தச் சேவைகளுக்காக கைசர்-இ-இந்த் தங்கப்பதக்கத்தையும், பின்னர் 1920ஆம் ஆண்டு 'சர்' பட்டத்தையும் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார். 1910 ஆம் ஆண்டு காளீசுவரா மில்லும், சோமசுந்தரா மில்லும் நிறுவப்பட்டன. பாப்பநாயக்கன்பாளையத்தில் 1911 ஆம் ஆண்டு இலட்சுமி மில் இயங்கத் தொடங்கியது. 1930களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சக்தி கிடைத்ததையொட்டி, மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன.
1900 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற இரயில்வே பொறியாளர் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (தற்போது டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கத்தைக் கட்டினார். அவரது மகன் பால் வின்சென்ட் பேசும் திரைப்படங்களைத் தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார். 1922 ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு கரும்பு நசுக்கும் மற்றும் பருத்தி சுத்தப்படுத்தும் பொறிகளை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டாயுதபாணி தொழிற்சாலையை நிறுவினார்.[56] அதே காலகட்டத்தில் ஜி.டி.நாயுடு அவரது தன்னிகரில்லா பேருந்து சேவையைத் துவக்கினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னோடிக்கான பெருமையும் அவருக்குடையது. 1931 ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் துவக்கிய பேருந்து சேவையும் பலதுறைகளில் விரிந்து இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள குழுமமாக வளர்ந்துள்ளது. 1940களில் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த டி. பாலசுந்தரம் நாயுடு செஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்து நெசவுத் தொழில்நுட்பக் கருவிகளைத் தாமே வடிவமைத்துத் தயாரிக்கும் விதமாக டெக்ஸ்டூல் நிறுவனத்தைத் துவக்கினார்.
கோவை 1930களிலும் 1940களிலும் திரைப்படத் தயாரிப்பிலும் முதன்மை பெற்றிருந்தது; இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்.
தொழில்துறை இன்று
கோவையின் தொழில்வளர்ச்சிக்கு கோவை மாவட்ட சிறுதொழிலதிபர்கள் சங்கம் (Coimbatore District Small Industries Association - CODISSIA) முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சங்கத்தின் தொழிற்கண்காட்சிக்கூடம் கொடிசியா வளாகம் பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்துக் கோவையின் சிறு தொழிலதிபர்களுக்குப் பன்னாட்டு வணிகம் நடத்த உதவி புரிந்து வருகிறது. இதனை நாட்டின் தூண்கள் இல்லாத மிகப்பெரும் காட்சிக்கூடமாக லிம்கா சாதனைகள் புத்தகம் குறிப்பிடுகிறது.[57]
துணித்துறை
கோவையில் சிறிதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது.
தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில் அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. [58]
கனரக தயாரிப்பு
பூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்.ஜி. எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.
தானி பாகங்கள்
'டெக்ஸ்டூல்', இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு, துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் உள்நாட்டிலேயே வடிவமைத்த, முதல் தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத் தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982 ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும், லேத்துகளையும் தாங்களே தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது.
மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ், கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனம் 'ஹான்சென் டிரான்ஸ்மிசன்' ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.[59]
ஈரமாவு அரவைப்பொறிகள்
கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து வருகின்றனர்.[60] 2006 ஆம் ஆண்டு கோவையிலும், அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது.[61] இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.[62]
நீரேற்றிகள் தயாரிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவீத நீரேற்றிகள், கோவை பகுதியிலேயே தயாரிக்கப்படுகின்றன.[63] நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும், பலரைக் கவர்கிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கோவையில் நான்கு இணைக்கப்பட்ட தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு உள்ளது. 1990 கள் வரை அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நகரத்தின் ஒரே தொலைதொடர்பு சேவை வழங்குநராக இருந்தது. 1990களில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை வழங்கத் தொடங்கின. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஆக்ட் ஆகியவை பிராட்பேண்ட் சேவை மற்றும் நிலையான வரி சேவைகளை வழங்குகின்றன. எம்.டி.எஸ் மொபைல் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குகிறது. செல்லுலார் தொலைபேசி முதன்முதலில் 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகள் கிடைக்கின்றன. செல்லுலார் சேவை வழங்குநர்களின் தமிழகத்தின் தலைமையகமே கோயம்புத்தூர் ஆகும்.
போக்குவரத்து
சாலை
நகரில் ஆறு பிரதான சாலைகளும், மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன:
- தேசிய நெடுஞ்சாலை - 47 (சேலம் – கன்னியாகுமரி),
- தேசிய நெடுஞ்சாலை - 67 (குண்டுலுபேட்டை – நாகப்பட்டிணம்) மற்றும்
- தேசிய நெடுஞ்சாலை - 209 (பெங்களூரு – திண்டுக்கல்) லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால், 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய புறவழிச்சாலை நகரில் போக்குவரத்தை சீர்செய்யப் பெரிதும் உதவியுள்ளது.
கோவை மாநகரில் ஒன்பது பேருந்து நிலையங்கள் உள்ளது. அவைகள் :-
- காந்திபுரம் பேருந்து நிலையம் : (மேட்டூர் அணை, ஈரோடு, கரூர், வெள்ளக்கோயில், பொங்கலூர், பல்லடம், சூலூர், அவிநாசி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, அன்னூர், சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, பெரியநாயக்கன்பாளையம், பெருந்துறை, ஈரோடு, ஊத்துக்குளி, கருமத்தம்பட்டி, சங்ககிரி, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர், நாமக்கல், காங்கேயம், தாராபுரம், மேட்டுப்பாளையம், ஊட்டி, சேலம், பெங்களூரு, சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பதி, வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருச்செங்கோடு, கொடுமுடி, முத்தூர் திருவண்ணாமலை, ஆரணி மற்றும் பிற தொலைதூர இடங்கள் செல்லும் பேருந்துகள்)
- சிங்காநல்லூர் பேருந்து நிலையம் : ( திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், சிவகங்கை, கம்பம், தேனி, நாகப்பட்டினம்,திருவாரூர், தஞ்சாவூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, காங்கேயம், வெள்ளக்கோயில், மாயனூர், குளித்தலை, கும்பகோணம், வத்தலக்குண்டு, போடி, குமுளி, விருதுநகர், இராஜபாளையம், கோவில்பட்டி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், கமுதி, புதுக்கோட்டை, ஆலங்குடி, திண்டுக்கல், செட்டிபாளையம் மன்னார்குடி, பல்லடம், திருப்பூர், சூலூர், பொங்கலூர் பிற அண்மைய ஊர்கள் செல்லும் பேருந்துகள்)
- காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையம் : (மாநகர் போக்குவரத்துக் கழகம் - கோவை)
- விரைவுப் போக்குவரத்து கழக பேருந்து நிலையம் : (மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (KARTC) , கேரள மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (KSRTC) மற்றும் பாண்டிச்சேரி மாநிலப் பேருந்துகள் (PRTC) , ஆந்திரப்பிரதேசம் மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் (APSRTC) ஆகிய மாநில பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது.
- உக்கடம் பேருந்து நிலையம்: (பாலக்காடு, பொள்ளாச்சி, - பனப்பட்டி, பெரிய நெகமம், செஞ்சேரிமலை, வேலப்பநாயக்கன் பாளையம், செட்டிபாளையம், கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, மடத்துக்குளம், மதுரை, சிவகங்கை, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பிற அண்மை இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள்)
- ஓம்னி பேருந்து நிலையம் : சத்தியமங்கலம் சாலை, காந்திபுரம் (பெங்களூரு, சென்னை, சேலம் தமிழகம் மற்றும் கேரளாவின் ஓரிரவில் பயணிக்கத்தக்க ஊர்களுக்குச் செல்லும் குளிர்வசதி/ஆடம்பர பேருந்துகள்)
- மேட்டுப்பாளையம் சாலை பேருந்துநிலையம் : மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான நிலையம் இதுவாகும். மேலும் கருநாட மாநிலத்தில் பல்வேறு நகரங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்து சேவை உள்ளது.
- வடவள்ளி பேருந்து நிலையம் : இந்த பேருந்து நிலையம் கோவையின் "மாநகர் போக்குவரத்து கழகம் - கோவை" மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மாநகரப் பகுதிகளில் செல்லும் பேருந்துகள் ஆகும்.
- வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் : இந்த பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட இரு மடங்கு பெரிதாகும். இங்கிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகர் என அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுல் முதன்மையானவை ஆகும்.
- மருதமலை பேருந்து நிலையம் : மருதமலை பேருந்து நிலையம் என்பது கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 17 - ல் அமைந்துள்ளது. இங்கிருந்து காந்திபுரம் செல்லவும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லவும் கோவை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை தவிர மேலும் கணபதி, போத்தனூரில் பேருந்து நிலையங்கள் கட்ட அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நகரில் மக்கள்தொகைக்கும் வாகனத்தொகைக்கும் உள்ள வீதம் மிகக் கூடுதலானது. 1921 ஆம் ஆண்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரின் பெரும்பான்மையான இடங்களுக்கும் புறநகரில் உள்ள கிராமங்களுக்கும் இச்சேவைகள் மிகுந்த பயனளிக்கின்றன. மாநிலப் போக்குவரத்தின் கோவை கோட்டத்தின் உள்ளூர்ப் பேருந்துகள் 500 பேருந்துகளைக் கொண்டு 119 வழித்தடங்களில் சேவை வழங்குகின்றன.[64] 800 நகரப்பேருந்துகள் 228 வழித்தடங்களில் சேவை புரிகின்றன.[65]
கோவை நகரில் மூன்று சக்கர தானிக்கள் சேவை புரிகின்றன. புதிதாக இயக்கப்படும் விளி வாடகையுந்துகள் இதனால் பரவலாக விரும்பப்படுகின்றன.
சத்தியமங்கலம், திருச்சிராப்பள்ளி, மேட்டுப்பாளையம் சாலைகளை இணைக்கும் அரைவட்ட சாலை அமைக்கப்படும் என்றும், வண்டிகளுக்காகப் பல்லடுக்கு நிறுத்தும் வசதியைக் காந்திபுரம், டவுன் ஹால் அடங்களான மூன்று இடங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றும், "ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்" வெள்ளளூரில் 125 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுமென, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் கோவை மாநகராட்சியில் மொத்தம் 12 பேருந்து நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.[66]
தொடர் வண்டி
கோயம்புத்தூருக்குத் தொடர்வண்டி சேவை 1872 ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது போத்தனூர் – சென்னை இருப்புப் பாதை போடப்பட்டது. அகலப்பாதை தொடர்வண்டிகள் கோவையைத் தமிழ்நாட்டின் பல நகரங்கள் மற்றும் இந்தியாவின் முதன்மை நகரங்களுடன் இணைக்கிறது. போத்தனூருக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருந்த மீட்டர்பாதை இருப்புப் பாதை, மே 2009 முதல் மூடப்பட்டு, பாட்டை மாற்றப்படுகிறது. தென்னக இரயில்வேயின் மிகக் கூடுதலான வருவாய் ஈட்டும் தொடர்வண்டி நிலையமாகக் கோயம்புத்தூர் சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்தின் வருவாயில் 42.17% இந்த நிலையம் பங்களிக்கிறது. கோவை வடக்கு சந்திப்பு மற்றும் இருகூர், பிற முக்கிய தொடர்வண்டிச் சந்திப்புகளாகும்.
வான்வழி
கோயம்புத்தூர் நகரத்திற்கு இரு வானூர்தி நிலையங்கள் உள்ளன: நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் பீளமேட்டில் உள்ள கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்திய வான்படையின் சூலூர் வான்தளம். கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இந்தியாவின் முதன்மையான நகரங்களுக்கு உள்நாட்டு சேவைகளும் சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு வெளிநாட்டுச் சேவைகளும் இயக்கப்படுகின்றன. கோவை வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் நீளம் 9,760 அடிகள் (2,970 m) 747 SP, A 330, 747-300B, 747-300 ER, 747-400 மற்றும் 747-200 போன்ற "வயிறு அகல" பெரிய ஜெட் இரக விமானங்களை இயக்க வசதி அளிக்கும்.[67]
கல்வி
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் கோவையின் பங்கு முக்கியமானது. 1867 ஆம் ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் (SSLC) கோவை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள அரசு கலைக்கல்லூரி மிகப் பழமையான (1875–76) கல்லூரிகளில் ஒன்றாகும். இன்று கோயம்புத்தூரில் 24க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள், இரு மருத்துவக் கல்லூரிகள், வான்படை நிர்வாகக் கல்லூரி, 75க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஆறு பல்கலைக்கழகங்கள் 41,000க்கும் கூடுதலான மாணவர்களைக் கொண்டியங்குகின்றன.
மிகப் பழமையான பள்ளிகளாகத் தென்னிந்தியத் திருச்சபை (C.S.I.) ஆண்கள் உயர்நிலைப்பள்ளி (1831), ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி (1862), புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி (1880), பீளமேடு சர்வஜன உயர்நிலைப்பள்ளி (1910), சபர்பன் உயர்நிலைப்பள்ளி (1917) ஆகியவை உள்ளன.
வேளாண் துறையில் நாட்டில் அமைந்த முதல் ஒருசில கல்விக்கூடங்களில் கோவை வேளாண் கல்லூரி ஒன்று. அதன் வளர்ச்சி இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமாகப் பரிணமித்துள்ளது. உடன் கரும்பு (Sugarcane Breeding Institute) மற்றும் பருத்தி (Central Institute of Cotton Research) ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
பொறியியல் கல்வியிலும் 1945 ஆம் ஆண்டு ஜி. டி. நாயுடு முதல் பொறியியல் கல்வி வழங்கும் ஹோப் கல்லூரியைத் துவக்கினார். இதுவே பின்னாளில் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியாக உருவெடுத்தது. 1950களில் நிறுவப்பட்ட பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரி (P.S.G) மற்றும் கோவை தொழிற்நுட்பக் கழகம் (C.I.T) முன்னோடிகளாக அமைந்து இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் தமிழக/இந்திய தொழில் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக உள்ளன. 1986 ஆம் ஆண்டு காருண்யா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
தி.சு.அவிநாசிலிங்கம் மற்றும் இராசம்மாள் தேவதாஸ் கூட்டணியில் மகளிர் மேற்கல்விக்கு கல்லூரி நிறுவப்பட்டு இன்று நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ளது. மனையியல் பாடம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகால வெகுசில கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
1978 ஆம் ஆண்டு அரசினர் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டு, சுற்றுவட்டாரத்தின் சட்டக்கல்வித் தேவைகளை நிறைவு செய்தது. மருத்துவக்கல்வி வழங்கக் கோவை மருத்துவக்கல்லூரி 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1987 ஆம் ஆண்டு தனியார் துறையில் பூ.சா.கோ. மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம் நிறுவப்பட்டது.
கோவையில் பல புகழ் பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சில பட்டியலிடப்பட்டுள்ளன:
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு
தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை "இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்" என்றும் "இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை" என்றும் விளிப்பர்.[68] கோவையின் தொழிலதிபர்கள் சிலர், கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் பார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு பந்தயம் ஆகியவற்றிற்கு தேசிய சாதனைப் பந்தயங்கள், இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன.[69] நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும், கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. பார்முலா ஒன்று பந்தயத்தில் 2005 ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.[சான்று தேவை]
நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது.[70] தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர்.[71] கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் [72] 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம்,[73] இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது.
முக்கிய இடங்கள்
- கோவைக் குற்றாலம்: கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி ஆற்றில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
- வ. உ. சி. பூங்கா: வ. உ. சிதம்பரனார் நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன. அருகில் உள்ள விளையாட்டரங்கில் நடக்கும் கால்பந்து போட்டிகளும் அரசியல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் கோவையின் உயிரோட்டமாக விளங்குகின்றன.
கோவில்கள்
- பேரூர் பட்டீசுவரர் கோயில்
- மருதமலை முருகன் கோயில்
- ஈச்சனாரி விநாயகர் கோவில்
- கோனியம்மன் கோயில்
- லோக நாயக சனீசுவரன் கோயில்
- ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்
- அனுபாவி முருகன் கோவில்
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
- ஊட்டி – (90 கி.மீ. வடமேற்கு): மிகப் புகழ்பெற்ற மலை வாழிடம் ஆகும்.
- குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.
- முதுமலை வனவிலங்கு காப்பகம்: ஊட்டி வழியாகத் தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம் இதுவாகும்.
- மலம்புழா அணை: பாலக்காடு அருகில் உள்ளது.
- ஆனைமலை: பொள்ளாச்சி சாலையில் 63 கி.மீ தொலைவில் உள்ளது.
- பழனி – (100 கி.மீ., தெற்கு): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
- அமராவதி அணை: முதலைப் பண்ணை
- திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி
- ஆழியாறு அணை: குரங்கு அருவி
- டாப் ஸ்லிப் (இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்)
- வால்பாறை நல்ல மலை வாழிடம்
- கோவைக் குற்றாலம் - கோவையிலிருந்து, சிறுவாணி செல்லும் வழியில் உள்ள ஓர் அருவி ஆகும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Chapter 3, Little Village of India (PDF) (Report). Central Pollution Control Board, Govt of India. Archived from the original (PDF) on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 9 December 2017.
- ↑ Cities having population 100,000 and above (PDF). censusindia (Report). The Registrar General & Census Commissioner, India. 2011. Archived (PDF) from the original on 7 May 2012. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
- ↑ Zone map (PDF) (Report). Coimbatore City Municipal Corporation. பார்க்கப்பட்ட நாள் 1 November 2023.
- ↑ 4.0 4.1 4.2 "Smart city challenge, Coimbatore". Government of India. Archived from the original on 20 December 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
- ↑ சி. ஆர். இளங்கோவன்; மயிலை சீனி.வேங்கடசாமி (2008). 'கோயமுத்தூர் ஒரு வரலாறு. ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ். பக். 7.
- ↑ "Coimbatore to be known by its old name-Koyampuththoor". BBC Tamil. 14 October 2019. https://www.bbc.com/tamil/india-53009388.
- ↑ "Coimbatore: turning modern, yet retaining its old charm". The Hindu. 11 June 2020 இம் மூலத்தில் இருந்து 17 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151017031054/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-propertyplus/coimbatore-turning-modern-yet-retaining-its-old-charm/article2114224.ece.
- ↑ Whitehead, Henry (1921). The Village Gods of South India. Read Books. பக். 121–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4067-3214-6.
- ↑ Subramanian, T. S (28 January 2007). "Roman connection in Tamil Nadu". The Hindu இம் மூலத்தில் இருந்து 19 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130919235748/http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2007012800201800.htm&date=2007%2F01%2F28%2F&prd=th.
- ↑ S. Krishnaswami Aiyangar (2009). Some Contributions of South India to Indian Culture. BiblioBazaar. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-113-17175-7.
- ↑ "Kovai's Roman connection". The Hindu. 8 January 2009 இம் மூலத்தில் இருந்து 1 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090601214044/http://hindu.com/mp/2009/01/08/stories/2009010850970100.htm.
- ↑ "On the Roman Trail". The Hindu. 21 January 2008 இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110160411/http://www.hindu.com/mp/2008/01/21/stories/2008012150370500.htm.
- ↑ Vanavarayar, Shankar (21 June 2010). "Scripting history". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110160431/http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm.
- ↑ M, Soundariya Preetha (30 June 2007). "Tale of an ancient road". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110161009/http://www.hindu.com/2007/06/30/stories/2007063054660500.htm.
- ↑ "The land called Kongunad". The Hindu. 19 November 2005 இம் மூலத்தில் இருந்து 28 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110528171005/http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm.
- ↑ "Remembering Dheeran Chinnamalai". The Hindu. 3 August 2007 இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110161023/http://www.hindu.com/2007/08/03/stories/2007080353100500.htm.
- ↑ "Namma Kovai". The Hindu. 31 December 2013 இம் மூலத்தில் இருந்து 17 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151017031054/http://www.thehindu.com/features/metroplus/namma-coimbatore/article5522897.ece.
- ↑ "The city that is Coimbatore". The Hindu. 30 April 2005 இம் மூலத்தில் இருந்து 26 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110726120742/http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2005043001980300.htm&date=2005%2F04%2F30%2F&prd=mp&.
- ↑ Muthiah, S (14 April 2003). "'Golden Tips' in the Nilgiris". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 August 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070807100133/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/04/14/stories/2003041400090300.htm.
- ↑ 20.0 20.1 "The cotton classic". Frontline. 30 January 2004 இம் மூலத்தில் இருந்து 29 June 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060629220434/http://www.hinduonnet.com/fline/fl2102/stories/20040130004511000.htm.
- ↑ "The perils of the past". The Hindu. 28 May 2005 இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110161035/http://www.hindu.com/mp/2005/05/28/stories/2005052802450300.htm.
- ↑ "Chronicling the spirit of Coimbatore". The Hindu. 3 January 2009 இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110161046/http://www.hindu.com/2009/01/03/stories/2009010358210200.htm.
- ↑ "The Mahatma's link with Coimbatore". The Hindu. 1 October 2005 இம் மூலத்தில் இருந்து 10 August 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070810092413/http://www.hinduonnet.com/thehindu/mp/2005/10/01/stories/2005100101800300.htm.
- ↑ "Namma Coimbatore". The Hindu. 31 December 2013 இம் மூலத்தில் இருந்து 17 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151017031054/http://www.thehindu.com/features/metroplus/namma-coimbatore/article5522897.ece.
- ↑ "Keep politics out of Corporation Council". The Hindu. 25 December 2006 இம் மூலத்தில் இருந்து 10 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110161127/http://www.hindu.com/2006/12/25/stories/2006122517080300.htm.
- ↑ "35 convicts sentenced in Coimbatore blast case". One India. 9 October 2007 இம் மூலத்தில் இருந்து 13 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131213174252/http://news.oneindia.in/2007/10/09/35-convicts-sentenced-1998-coimbatore-blasts.html.
- ↑ 27.0 27.1 "INDIA: Tamil Nādu". citypopulation.de. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
- ↑ 28.0 28.1 L. Joseph Reginald; C. Mahendran; S. Suresh Kumar; P. Pramod (December 2007). "Birds of Singanallur lake, Coimbatore, Tamil Nadu". Zoos' Print Journal 22 (12): 2944–2948. doi:10.11609/jott.zpj.1657.2944-8. http://www.zoosprint.org/ZooPrintJournal/2007/December/2944-2948.pdf.
- ↑ "Business Plan for Coimbatore Corporation" (PDF). Wilbur Smith Associates. Government of Tamil Nadu. Archived (PDF) from the original on 15 August 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.
- ↑ "A river runs through it". The Hindu. 28 January 2006 இம் மூலத்தில் இருந்து 27 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927234829/http://www.hindu.com/mp/2006/01/28/stories/2006012802630300.htm.
- ↑ "Maintenance of tanks not at cost of environment". The Hindu. 27 October 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/maintenance-of-tanks-not-at-cost-of-environment/article851556.ece.
- ↑ "Corporation begins storm water drain project in Coimbatore". The Hindu. 5 January 2011 இம் மூலத்தில் இருந்து 4 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130604054241/http://www.hindu.com/2011/01/05/stories/2011010551610300.htm.
- ↑ "Conservation of bird life". International Conference on CBEE, 2009. World Scientific Publishing Company. Archived from the original on 15 August 2011. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.
- ↑ "Coimbatore – a hot spot of bio-diversity". The Hindu. 17 February 2011 இம் மூலத்தில் இருந்து 14 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160114141453/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/article1463292.ece.
- ↑ Dams and earthquakes பரணிடப்பட்டது 2010-08-11 at the வந்தவழி இயந்திரம், Frontline, Volume 16 – Issue 27, December 25, 1999 – 7 January 2000
- ↑ "Dams and earthquakes". The Hindu. 25 December 1999 இம் மூலத்தில் இருந்து 11 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811214221/http://www.hinduonnet.com/fline/fl1627/16270870.htm.
- ↑ 37.0 37.1 "Coimbatore Corporation" (PDF). Coimbatore Corporation. Archived from the original (PDF) on 31 March 2010. பார்க்கப்பட்ட நாள் 23 September 2009.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M193. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 7 March 2020.
- ↑
"Station: Coimbatore (Peeamedu) Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. இந்திய வானிலை ஆய்வுத் துறை. சனவரி 2015. pp. 203–204. Archived from the original (PDF) on 5 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Hunter, William Wilson (2015). Imperial Gazetteer of India, Volume 10. BiblioBazaar. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-343-35262-9.
- ↑ Elangovan, K (2006). GIS: Fundamentals, Applications and Implementations. New India Publishing. பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89422-16-5. https://archive.org/details/gisfundamentalsa0000elan.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 16 June 2004. பார்க்கப்பட்ட நாள் 1 January 2008.
- ↑ "Census Info 2011 Final population totals". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original on 13 November 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ 44.0 44.1 "Major Agglomerations" (PDF). The Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. Archived (PDF) from the original on 17 October 2013. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
- ↑ "Census Info 2011 Final population totals – Coimbatore". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
- ↑ 46.0 46.1 "Population By Religious Community – Tamil Nadu" (XLS). Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. Archived from the original on 13 September 2015. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Censusindia. The Registrar General & Census Commissioner, India. 2011. Archived (PDF) from the original on 13 November 2011. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
- ↑ Incidence & Rate of Total Cognizable Crimes Under Indian Penal Code (IPC)and Special And Local Laws (SLL)(2002–2012) (PDF) (Report). National Crime Records Bureau. 2005. Archived from the original (PDF) on 8 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
- ↑ "City development plan" (PDF). Coimbatore Municipal Corporation. p. 82. Archived (PDF) from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
There are 195 slums in 23 major identified locations inside the corporation limits with a total population of around 352,219, which include BPL population as well. Around 8 percent of the total population reside in slums
- ↑ "Primary Census Abstract – Census 2011" (PDF). Directorate of Census Operations – Tamil Nadu. Government of Tamil Nadu. 2011. Archived (PDF) from the original on 9 May 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
- ↑ [1] 1998 serial bomb blasts
- ↑ "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-11.
- ↑ "Is Coimbatore the next BPO city?". CNBC-TV18. 5 July 2008. http://www.moneycontrol.com/news/business/is-coimbatorenext-bpo-city_345659.html. பார்த்த நாள்: 23 June 2010.
- ↑ "German state keen to share expertise with Coimbatore". Business Line. 22 June 2007. http://www.thehindubusinessline.com/2007/01/22/stories/2007012200821500.htm. பார்த்த நாள்: 23 June 2010.
- ↑ Remembering Coimbatore's pioneer பரணிடப்பட்டது 2010-04-05 at the வந்தவழி இயந்திரம், The Hindu
- ↑ Coimbatore's wealth creators பரணிடப்பட்டது 2008-12-29 at the வந்தவழி இயந்திரம், The Hindu
- ↑ http://www.hindu.com/2007/08/20/stories/2007082053110600.htm பரணிடப்பட்டது 2008-01-28 at the வந்தவழி இயந்திரம் First pillar free trade complex
- ↑ "Indian cities among global outsourcing cities – retrieved on 16 April 2009". Economictimes.indiatimes.com. http://economictimes.indiatimes.com/quickiearticleshow/3566253.cms. பார்த்த நாள்: 2009-09-23.
- ↑ Rs 940 cr investment in Coimbatore, The Hindu
- ↑ "http://www.thehindubusinessline.com/2005/03/24/stories/2005032401051700.htm". பிசினஸ் லைன். 2005-03-24. http://www.thehindubusinessline.com/2005/03/24/stories/2005032401051700.htm. பார்த்த நாள்: 2009-09-20.
- ↑ "Coimbatore wet grinder gets GI certification". தி இந்து. 2006-03-28 இம் மூலத்தில் இருந்து 2007-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070806023456/http://www.hindu.com/2006/03/28/stories/2006032801840200.htm. பார்த்த நாள்: 2009-09-20.
- ↑ "http://www.hindu.com/2007/08/05/stories/2007080559430300.htm". தி இந்து. 2007-08-05 இம் மூலத்தில் இருந்து 2007-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071027103719/http://www.hindu.com/2007/08/05/stories/2007080559430300.htm. பார்த்த நாள்: 2009-09-20.
- ↑ "Review of the irrigation equipment manufacture and supply sector in India, C.R.S. Sundaram". www.fao.org.
- ↑ Moffusil bus routes பரணிடப்பட்டது 2010-05-10 at the வந்தவழி இயந்திரம், TNSTC, CBE.
- ↑ Town bus routes, TNSTC, CBE.
- ↑ "Tamil Nadu Government Gives Big Infrastructure Push to Coimbatore".
- ↑ "Front Page : Extended runway ready at Coimbatore Airport". The Hindu. 2008-04-20 இம் மூலத்தில் இருந்து 2008-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080423214311/http://www.hindu.com/2008/04/20/stories/2008042057760100.htm. பார்த்த நாள்: 2009-09-23.
- ↑ "City of speed". The Hindu. 2006-04-24. Archived from the original on 2007-01-21. பார்க்கப்பட்ட நாள் 2007-01-03.
- ↑ "The Hindu : To Kari, WITH LOVE". Hinduonnet.com. 2003-12-01 இம் மூலத்தில் இருந்து 2009-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090910162639/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/12/01/stories/2003120102260100.htm. பார்த்த நாள்: 2009-09-23.
- ↑ [2] பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம் Synthetic track works over
- ↑ "Nirupama Vaidyanathan". Hinduonnet.com. 2001-01-13 இம் மூலத்தில் இருந்து 2009-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090917184357/http://www.hinduonnet.com/2001/01/13/stories/0713102h.htm. பார்த்த நாள்: 2009-09-23.
- ↑ Location of golf club பரணிடப்பட்டது 2015-06-30 at the வந்தவழி இயந்திரம், Coimbatore Golf Club,
- ↑ "100 year old club of Coimbatore". Hinduonnet.com. 2006-09-25 இம் மூலத்தில் இருந்து 2009-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090903152956/http://www.hinduonnet.com/thehindu/mp/2006/09/25/stories/2006092500760100.htm. பார்த்த நாள்: 2009-09-23.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணயத்தளம் பரணிடப்பட்டது 2005-08-30 at the வந்தவழி இயந்திரம்
- கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி பரணிடப்பட்டது 2012-11-13 at the வந்தவழி இயந்திரம்