விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008

டிசம்பர் 28, 2008

முக்கோணவியலில் ஈரோனின் வாய்பாடு (Heron's formula) என்பது ஒரு முக்கோணத்தின் பரப்பளவை அதன் பக்கங்களின் நீளங்களின் அளவுகளைக் கொண்டு கணிக்கப் பயன்படும் ஒரு பயன்மிகுந்த வாய்பாடு. ஈரோன் (Heron or Hero) அல்லது ஈரோவின் வாய்பாட்டின்படி, ஒரு முக்கோணத்தின் பக்க நீளங்கள் a, b, c ஆகவும், அம்முக்கோணத்தின் சுற்றளவின் பாதி s ஆகவும் இருந்தால், அதன் பரப்பளவு என்பது கீழ்க்காணும் சமன்பாட்டின்படி உறவு கொள்ளும்.


பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதி்கமாக விளையும் பயிராகும்.


உங்களுக்குத் தெரியுமா


டிசம்பர் 21, 2008

விண்டோஸ் எக்ஸ்பி என்பது கணினிகளை இயக்கும் ஒர் அடிப்படை இயக்கு தளம் ஆகும். இது மைக்ரோசோஃப்ட் விண்டோஸ் வழி வந்த ஒர் இயக்கு தளம். இது மேசைக் கணினி, மடிக் கணினிகளில் பயன்படுகின்றது. வீட்டு தொழிலக வணிக கணிமைக்கு இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000 வழிவந்த விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும் ஒருங்கிணைத்து சேர்க்கப்பட்ட முதலில் ஆக்கப்பட்ட விண்டோஸ் NT கருனியில் (கேர்ணலில், kernal) இருந்து உருவாக்கப்பட்ட இயக்குதளமாகும். இப்பதிப்பானது அக்டோபர் 25, 2001 வெளிவிடப்பட்டது. ஜனவரி 2006 IDC சேவையின் படி 400 மில்லியன் விண்டோஸ் XP இயக்குதளப் படிகள் கணினிகளை இயக்குகின்றது.


நல்ல சமாரியன் கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரு உவமையாகும். இது இயேசு கூறிய உவமையாகும். நான்கு நற்செய்திகளில் லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மட்டுமே இது காணப்படுகிறது. உண்மை அன்பே கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுவதாகும் அன்றி எழுத்திலுள்ளவற்றை நிறைவேற்றல் மட்டுமில்லை என்பது இதன் அடிப்படைக் கருத்தாகும்.


உங்களுக்குத் தெரியுமா


டிசம்பர் 14, 2008

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, 1820 - 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய ஆங்கிலேயத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சி பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். "விளக்கேந்திய சீமாட்டி" (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.


தமிழ், இதைப் போன்ற வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே வேறுபாடுகள் அதிகம் இன்றி இருந்தாலும், பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்திருப்பதைக் காண முடியும். இத்தகைய வேறுபாட்டுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன. இலங்கையின் வடபகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் எனப்படுகிறது.


டிசம்பர் 8, 2008

கணிதத்தில் அணி (matrix) என்பது m வரிசை (அல்லது நிரை) களும் n நிரல்களும் கொண்ட ஒரு செவ்வகப்பட்டியல். வரிசைகளின் எண்ணிக்கையும் நிரல்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருந்தால் அது சதுர அணி ( m = n) ஆகும். இப்பட்டியலில் உள்ள உறுப்புக்கள் எண்களாகத்தான் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் கணிதத்தில் எடுத்துக்கொள்ளப்படும் அணியின் உறுப்புக்கள் எண்களாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டல் என்று வரையறை செய்யப்படும் செயலுக்கும் பெருக்கல் என்று வரையறை செய்யப்படும் செயலுக்கும் பொருள் கொடுப்பதாக இருக்கவேண்டும். முக்கியமாக எங்கெங்கெல்லாம் நேரியல் சமன்பாடுகள் அல்லது நேரியல் உருமாற்றங்கள் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் அணிகள் பயன்படும்.


இருகண் நோக்கி என்பது சற்று தொலைவில் உள்ள காட்சியைச் சிலமடங்கு பெரிதாக்கி, இரண்டு கண்களாலும் நேரடியாக நாம் காண உதவும், ஒரு சிறுதொலைவு நோக்கிக் கருவி. இக்கருவியைக் கொண்டு பார்க்கும் பொழுது தொலைவில் உள்ள பறவைகளும் பிறவும் மிக அருகில் இருப்பது போல இருக்கும். இக்கருவியில், நாம் காணும் பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள், இரண்டு குழல்கள் வழியாக நுழைந்து, தனித்தனியாக நம் இரு கண்களையும் வந்து அடைகின்றன. இதனால் இப்படி இரு கண்பார்வை ஒருசேர நேர்வதால், காட்சி நேரில் பார்ப்பதுபோலவே முத்திரட்சி (முப்பரிமாணம்) உடையதாக உள்ளது.


நவம்பர் 30, 2008

மெம்ரிஸ்டர் (Memristor) அல்லது நினைவுகொள் மின்தடை என்பது ஒரு புது வகையான இரு-மின்முனையம் கொண்ட அடிப்படை மின்னுறுப்பாகும். இப்புதிய மின்னுறுப்பின் கண்டுபிடிப்பை ஏப்ரல் 30, 2008 இல் அமெரிக்காவில் உள்ள "ஹியூலிட் பாக்கார்டு" நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். ஸ்டான்லி வில்லியம்சு என்பவரும் அவருடைய உடன் ஆய்வாளர்களும் அறிவித்தார்கள். இதனைக் கண்டுபிடிக்கும் முன்பு, மின்னியல் வரலாற்றில், மின்தடையம், மின்தூண்டி, மின்தேக்கி ஆகிய மூன்றே அடிப்படை மின் உறுப்புகளாக இருந்தன. இந்த நினைவுகொள் மின்தடை என்னும் புதிய உறுப்பானது ஓர் அடிப்படையான நான்காவது உறுப்பாகும்.


மலையாளம் தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரபூர்வ மொழியாகும். சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா


நவம்பர் 23, 2008

கியார்கு கேன்ட்டர் (Georg Cantor) (1845-1918) வரலாற்றுப் புகழ்மிக்க கணிதவியல் கருத்துக்களை முன் வைத்த ஜெர்மன் கணிதவியலாளர். இவர் முன்வைத்த கணக் கோட்பாடுகள் கணிதவியலுக்கே அடித்தளம் தரும் அடிப்படைக் கொள்கை என்று போற்றப்படுகின்றன. இவருடைய முழுப்பெயர் கியார்கு ஃவெர்டினாண்டு லூடுவிக் ஃவிலிப் கான்ட்டர் (Georg Ferdinand Ludwig Philipp Cantor). இவர் கணங்களுக்கு இடையே தனித்தனியாய் ஒன்றுக்கு-ஒன்றாக தொடர்பு பார்ப்பது பற்றிய சிறப்பை நிலைநாட்டினார், முடிவிலி மற்றும் சீரடுக்குக் கணங்களை வரையறுத்தார், மெய் எண்கள், இயல் எண்களைக் காட்டிலும் அதிகமானவை என்று நிறுவினார். கேன்ட்டரின் தேற்றத்தின் நீட்சியின்படி "முடிவிலா (எண்ணற்ற) முடிவிலிகள்" உள்ளன.


வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.


உங்களுக்குத் தெரியுமா


நவம்பர் 16, 2008

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக்காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலிலிருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் என்பர். அலுப்பு, உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர். இது இடத்திற்கேற்றாற் போல் வெவ்வேறு பொருள் தரக்கூடிய சைகைக் குறிப்பாகவும் உள்ளது. கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட.


சிகாகோ (Chicago) ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர், வணிகம், தொழில், பண்பாடு போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரின் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிகாகோ மாநகரின் புறநகர்ப் பகுதியில் கிட்டத்தட்ட 9.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்நகர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா



நவம்பர் 9, 2008

உயிரியலில் படிவளர்ச்சிக் கொள்கை என்பது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. பொதுவாக இப் படிவளர்ச்சி மாற்றங்கள் இரு பெரும் வழிகளில் உந்தப்படுகின்றன. முதல் வகை உந்துதலுக்கு இயற்தேர்வு என்று பெயர். இரண்டாவது உந்துதலாக (ஏதுவாக) அமைவது தன்னேர்ச்சியாய் ஏற்படும் மாற்றங்கள், நிலைபெறும் வாய்ப்பைப் பொறுத்தது. இதற்குத் தகவமைவு அல்லது மரபணு பிறழ்வு நகர்ச்சி (Genetic drift) என்று பெயர்.


ஆப்கானிஸ்தான் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு ஆகும். இந்நாடு எல்லாப்புறமும் நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் நடு கிழக்கு நாடாகவும் தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்பட்டுவதுண்டு. மேற்கே ஈரானை எல்லையாகவும் தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானையும் வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்பனவற்றையும் கிழக்கில் சீனாவையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாக செல்கிறது.


உங்களுக்குத் தெரியுமா


நவம்பர் 2, 2008

பராக் உசேன் ஒபாமா (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1961), அமெரிக்காவின் 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மக்களாட்சிக் கட்சி வேட்பாளராவார். தற்போது இவர் மேலவையிலும் இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராக உள்ளார். அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.


ஜான் மெக்கெய்ன் (பிறப்பு: ஆகஸ்ட் 29, 1936) அரிசோனா மக்களின் சார்பான ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மூத்த உறுப்பினர். 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவிடம் தோற்றார். முன்னாள் படைத்துறை வீரர், போர் வானூர்தி ஓட்டுநர். மெக்கெயின் வியட்நாம் போரில் பங்கு கொண்டார். அக்டோபர் 1967 இல் வியட்நாம் தலைநகரம் ஹனோய் மேல் வான் தாக்குதல் மேற்கொண்ட போது தனது விமானம் சுட்டப்பட்டு மெக்கெய்ன் காயம் அடைந்து வடக்கு வியட்நாமியர்களால் போர் கைதியாக சிக்கினார். 1973 வரை வியட்நாமிய சிறையில் போர் கைதியாக இருந்து வதை செய்யப்பட்டு இதனால் இன்று வரை சில உடல் ஊனங்கள் கொண்டுள்ளார்.


உங்களுக்குத் தெரியுமா


அக்டோபர் 26, 2008

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.


கிப்பன் பண்டம் (Giffen good) என்பது விற்பனை விலை ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய இழிவுப்பண்டத்தைக் குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.


உங்களுக்குத் தெரியுமா


அக்டோபர் 19, 2008

மென்மி, அல்லது லெப்டான், அல்லது லெப்டோன் (Lepton) என்பது அணுக்கூறான அடிப்படைத் துகள்கள் சிலவற்றின் பொதுக் குடும்பப்பெயர். எதிர்மின்னி (எலக்ட்ரான்), மியூவான், டௌவான் (டௌ துகள்), மற்றும் இத் துகள்களின் நியூட்ரினோக்களும் (நுண்நொதுமிகளும்) மென்மிகள் அல்லது லெப்டான்கள் எனப்படும் அடிப்படைத் துகள் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த மென்மிகள் யாவும் தற்சுழற்சி எண் 12 கொண்டவை. இந்த மென்மிகள் அணுக்கருவின் உள்ளே இயங்கும் அணுக்கரு வன்விசையை போல் வலுவான விசையுடன் இயங்குபவை அல்ல.


ஹபிள் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope) டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும். அத்துடன் இது ஒரு ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது.


உங்களுக்குத் தெரியுமா

  • நீலகிரியில் வாழும் தோடர் இனமக்களின் வாழ்வில் எருமைகள் பெற்றுள்ள சிறப்பு காரணமாக இவர்களை மாந்தவியலாளர்கள் எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.
  • அமெரிக்க நாட்டில் உள்ள டென்வர் நகரம் கடல்மட்டத்தில் இருந்து ஒரு மைல் உயரத்தில் இருப்பதால் இதனை மைல் உயர நகரம் என்றும் அழைப்பர்.
  • வாழும் பறவைகளுள் மிகப்பெரியது தீக்கோழி (Struthio camelus) ஆகும்.
  • உலகிலே அதிக மக்கள் தாய் மொழியாகக் கொண்ட மொழி சீன மொழி.
  • இன்று கிடைக்கப்படும் மிகப் பழைய (2300 வருடங்கள்) தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.


அக்டோபர் 12, 2008

மாந்தர்களின் தனிப்பண்புகளைப் பிற உயிரினங்கள் அல்லது உயிரற்ற அஃறிணைப்பொருட்களின் மேல் சாற்றிக் கூறுவது மாந்தவுருபியம் (anthropomorphism) எனப்படும். பல வேளைகளில் சமயம், நாடு, பொருளியல் இயக்கம் போன்ற உருவமற்றவையும் கருத்தளவில் மட்டுமே உள்ளனவுமாகிய நுண் பொருட்களின் மீதும் மாந்தரின் பண்புகளை இவ்வாறு ஏற்றுவர். மாந்தவுருபியம் என்பது மனிதரின் சிந்தையில் ஆழமாக அமைந்துள்ள உருவகப் பகுப்பாய்வு (reasoning by analogy) உத்தியின் வெளிப்பாடு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். உருவமற்றவையும் உற்று அறியவியலாதவையுமாகிய [நுண்மமாக்கல்|நுண்]]பொருட்களைப் பற்றிய கருத்தாக்கத்தின்போது உருவகங்களின் துணையை நாடுவதால் பல சமயங்களில் இவ்விளைவு ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.


உபுண்டு லினக்ஸ் (ubuntu linux) என்பது, குனூ/லினக்ஸ் இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். டெபியனினை அடிப்படையாகக் கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களை தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. உபுண்டு என்ற ஆபிரிக்க வார்த்தைக்கான அர்த்தம், மானுட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்ஸ்" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.


உங்களுக்குத் தெரியுமா


அக்டோபர் 5, 2008

மிளகு (Piper nigrum) என்பது பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினை சார்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு தாளிப்புப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவை கூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில், அதன் பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என பலவகைகள் உண்டு. மிளகு கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். இங்கேயே பெருமளவு இத்தாவரம் பயிரிடப்படுகிறது. மிளகு கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதனால், இப்பகுதியின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாக கருதப்படுகிறது.


அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் துணையுடன் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் இடையே நிகழும் உருமாற்றத்துக்கு அலைக்கம்பம் உதவுகின்றது. அலைக்கம்பம் தொலைதொடர்பு சாதனங்கள் (சமிக்கை செலுத்திகள், சமிக்கை பெறுவிகள்), ராடர், வழிகாட்டிகள், வானலை வானியல் சாதனங்கள் போன்ற பல உபகரணங்களில் பயன்படுகின்றது.


உங்களுக்குத் தெரியுமா


செப்டம்பர் 28, 2008

பேராசிரியர் முகமது யூனுஸ் (Muhammad Yunus, வங்காள மொழி: মুহাম্মদ ইউনুস; பிறப்பு: ஜூன் 28 1940), வங்காளதேசத்தைச் சேர்ந்த வங்கி முதல்வர், பொருளியலாளர். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவரும் ஆவார். ஏழைத் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் Banker to the Poor எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.


பல்லவர்களும் பாண்டியர்களும் போற்றி வளர்த்த கலை மரபை, அவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் தொடர்ந்து ஆதரித்து மேன்மேலும் அது வளர்ச்சியடையச் செய்தார்கள். இவ்வாறு சோழர்காலத்தில் சிறப்பு பெற்ற கலைகளை சோழர் கலைகள் எனலாம். கட்டடக்கலையும் சிற்பக் கலையும் வண்ண ஓவியக்கலையும் பெரும்பாலும் பொதுக் கட்டடங்களிலும் குறிப்பாகக் கோயில்களிலுமே வளர்க்கப்பட்டன. கோயில்கள் அல்லாத ஏனையவைகளான அரண்மனைகளும் மாளிகைகளும் பெரும்பாலும் அடியோடு அழிந்துவிட்டன. விதிவிலக்காக உத்தரமேரூர் போன்ற இடங்களில் இவற்றை விரிவாக ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.


பகடிப்பட இயற்பியல் (Cartoon physics) என்பது பொதுவாக அறியப்பட்டுள்ள இயற்பியல் கோட்பாடுகளும் விதிகளும் இயக்கமூட்டப்பட்ட பகடிப்படங்களில் நகைச்சுவை பொருட்டு மீறப்படுவதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதில் வெகுவாக அறியப்படும் ஒரு விளைவு: ஒரு பகடிப்படப் பாத்திரம் விரைவாக ஓடிவருகையில் மலைமுகட்டைத் தாண்டியும் ஓடிவிடுதலும், அதை அப்பாத்திரம் உணரும் வரை புவியீர்ப்பு விசை செயல்படாதிருத்தலும் ஆகும். புதிய விஞ்ஞானி அமைப்பு நடத்திய புதுச் சொல்லாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற கொயாடசு இன்டெரப்டசு ("coyotus interruptus") என்ற சொற்றொடர் இவ்விளைவைக் குறிப்பதாக ஏற்படுத்தப்பட்டது.


செப்டம்பர் 21, 2008
வரவுகள் செலவுகள்
   
   
   
   
   

கணக்கியலில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை (Double-entry bookkeeping system) என்பது, வியாபார நிறுவனம் மற்றும் வியாபாரமல்லா நிறுவனங்கள் என்பவற்றில் இடம்பெறும் பலவிதமான நிதிக்கொடுக்கல் வாங்கல் ஊடுசெயல்களைப் பதிவு செய்வதற்கெனப் பின்பற்றப்படும் ஒர் அடிப்படை நியம முறையாகும். நிறுவனங்களின் நிதிநிலமை,நாணய மதிப்பு, பலவகையான வர்த்தக நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்பனவற்றை கணிப்பதற்கு இம் முறை பெரிதும் உதவுகின்றது. இக் கணக்குவைப்பு(bookkeeping) முறையில் ஒவ்வோர் ஊடுசெயலும் இரு வேறுபட்ட கணக்கேடுகளில் பதியப்படும். காரணம் நிறுவனத்தில் இடம்பெறும் ஒவ்வோர் ஊடுசெயலும் இருவிதமான தாக்கங்களை உண்டு பண்ணும் எனும் அடிப்படை அணுகுமுறையே ஆகும்.


பஞ்சமரபு என்பது வெண்பாக்களால் அமைந்த ஒரு நூல். இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார். இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.


பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் ஹரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டீகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு அதிகம் உள்ளனர். பஞ்சாபில் கோதுமை அதிகம் விளைகிறது. பஞ்சாபில் ஜீலம், செனாப், ராவி, பீஸ், சட்லஜ் ஆகிய ஐந்து ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது.


செப்டம்பர் 14, 2008

சலீம் அலி (நவம்பர் 12, 1896 - ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில்பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.


நாமக்கல் (ஆங்கிலம்: Namakkal) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது குப்பை இல்லா நகரம் என்னும் சிறப்பையும் பெற்றதாகும். "நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இந்தப் பாறையின் மீது இராம சந்திர நாயக்கர் கட்டிய கோட்டை உள்ளது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார். மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் 1933ல் இப்பாறை அருகே நடைபெற்றது.


அஞ்சற்தலை அல்லது தபால்தலை என்பது அஞ்சல் சேவைக்கு, முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார். முன் கட்டணம் செலுத்தப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க அதிகம் விரும்பப்படும் முறை இதுவாகும்.


செப்டம்பர் 7, 2008

மனித வாழ் நாளின் இறுதி வருடங்கள் முதுமை எனப்படுகிறது. ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர் என்பர். இளம்பருவத்தில் இருந்து படிபடியாக மனிதர் முதுமைப்படுவர். இன்றுவரை, முதுமை வாழ்வின் மாற்ற முடியா ஒரு பகுதியாகவே இருக்கின்றது. முதுமையும் சாவுமே மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா அதி மோசமான கொடுமையாக பலராலும் பாக்கப்படுகிறது. ஆகையால், இயன்றவரை வாழ்நாளை அதிகரிக்க பல்வேறு ஆய்வுகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இதுவரைக்கும் முதுமைப்படுதலை தடுக்க பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட எந்த வழிமுறையும் இல்லை.


ஷக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல் (Shakira Isabel Mebarak Ripoll) என்கிற ஷக்கீரா (Shakira) (பிறப்பு: பெப்ரவரி 2, 1977) ஒரு கொலம்பியப் பாடகர், லெபனீசு மற்றும் ஐரோப்பிய மரபுசார்ந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடல் தயாரிப்பாளர், ஆடல்விரும்பி, கொடையாளர். 1990களின் இடையிலிருந்து பாப் இசை மூலமாக இலத்தீன் அமெரிக்காவில் அறிமுகம் ஆனவர். எசுப்பானிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஷக்கீரா, சரளமாக ஆங்கிலம், போர்த்துகீசம், இத்தாலியன், அரபு மொழிகளும் தெரிந்தவர். லாண்டரி சர்வீஸ் (Laundry Service) என்கிற ஆங்கில இசைத்தொகுப்பின் மூலம் ஆங்கிலம் பேசும் இசைவிரும்பிகளின் இதயத்தில் நுழைந்தார்.


வாழை மரம் உண்மையில் தாவர வகைப்படுத்தலின் படி ஒரு சிறுசெடியாகும் (herb). வாழையின் அறிவியல் பெயர் Musa spp. வாழை தென் கிழக்கு ஆசியாவில் தோன்றியது. வாழைமரம் 8 மீ உயரம் வரை வளரக்கூடியது. அதன் பெரிய இலைகள் 3 மீ நீளம் வரை இருக்கும். வாழைப்பழம் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும். வழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துகொத்தாய் அமைந்திருக்கும். ஒவ்வொர்ரு கொத்தும் 'சீப்பு' (ஆங்கிலத்தில் hand) என்றும், பல சீப்புகளைக்கொண்ட முழு வாழைக்கொத்து 'குலை' அல்லது 'தார்' (ஆங்கிலத்தில் stem) என்று அழைக்கப்படுகிறது.


ஆகஸ்ட் 31, 2008

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால நடு-அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே. கிமு 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கிபி 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியது.


தொன்மா அல்லது டைனாசோர் (Dinosaur) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்கள் ஆகும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று.


அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது.


ஆகஸ்ட் 24, 2008

கம்போடிய முடியரசு (உச்சரிப்பு /kæmˈboʊdɪə/, முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்டது. (/kampuˈtɕiːə/), , Preăh Réachéanachâkr Kâmpŭchea) கம்போடியா ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் சுமார் 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்நாட்டின் தலைநகர் புனோம் பென் நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நாட்டு குடிமக்கள் "கம்போடியர்" எனவும், கிமர் எனவும் அழைக்கப்படுகின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப் படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தை பின்பற்றுகின்றனர்.


சிறீமா பண்டாரநாயக்கா
சிறீமா பண்டாரநாயக்கா

சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமா பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர்.


கணிதத்தில், குறிப்பாக இயற்கணிதத்தில், குலம் (Group) என்ற கணித அமைப்பு ஒரு அடிப்படைக்கருத்தாகும். அது கணிதத்தில் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், புள்ளியியல் முதலிய பல அறிவியல் துறைகளில் இன்றியமையாததாகப் பயன்படுத்தப்படும் ஒரு வேர்க்கருத்து. நுண்புல இயற்கணிதத்தில் ஒரு பிரிவாக அது பட்டியலிடப்பட்டாலும், கணிதத்தின் எல்லாப் பிரிவுகளிலும் அடி நீரோட்டமாகப் பாயும் அடித்தளத் தத்துவமாகும்.


ஆகஸ்ட் 17, 2008

அரியானா (இந்தி : हरियाणा, பஞ்சாபி: ਹਰਿਆਣਾ, IPA[hərɪjaːɳaː]) ஒரு வட இந்திய மாநிலம். அரியானா என்ற சொல் (ஹரி – இந்து கடவுள்) “கடவுளின் வசிப்பிடம்” என்று பொருள்படும். அரியானா 1966ம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. தனது எல்லைகளாக வடக்கில் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களையும், மேற்கிலும், தெற்கிலும், ராஜஸ்தான் மாநிலத்தையும், கிழக்கில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தையும் கொண்டுள்ளது. அரியானா மாநிலம், டெல்லி நகரை வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் சூழ்ந்துள்ளமையால், அரியானாவின் சில பகுதிகள், நாட்டுத் தலைநகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரியானாவின் தலைநகர் சண்டிகர் நகரம் ஆகும். அதுவே, பஞ்சாப் மாநில தலைநகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திருந்துகொண்டிருக்கும்.


வடிவவியலில் பிரெஞ்ச்சு அறிஞர் ரெனே டேக்கார்ட் அவர்களின் பெயரில் வழங்கும் டேக்கார்ட்டின் தேற்றம் என்பது ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு நான்கு வட்டங்களின் உறவைப் பற்றியது. இவற்றை முத்தமிடும் நான்கு வட்டங்கள் என்று கூறுவதுண்டு. ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்குமாறு மூன்று வட்டங்கள் இருந்தால், மூன்று வட்டங்களையும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு நான்காவது வட்டத்தை வரைய இத்தேற்றத்தைப் பயன்படுத்தலாம்.


ஆகஸ்ட் 11, 2008

கணிதத்தில் வரிசைமாற்றம் (Permutation), சேர்மானம் (Combination) என்ற இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரு கணத்தின் உறுப்புக்களை ஒரு வரிசையில் வைத்து அவ்வரிசையை மாற்றி அமைத்தால் இம்மாறுதல் ஒரு வரிசைமாற்றம் அல்லது வரிசை மாற்றல் எனப்படும். மாற்றிக்கிடைத்த வரிசைக்கும் வரிசைமாற்றம் என்றே பெயர். வரிசை என்ற கருத்தையே கொண்டு வராமல் கணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தால் இச்செயல் ஒரு சேர்வு எனப்படும். இச்செயலினால் கிடைக்கும் உட்கணத்திற்கும் சேர்வு என்றே பெயர்.


கபடி அல்லது சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.


விவிலியம் (புனித வேதாகமம்), யூதர் மற்றும் கிறிஸ்தவர்களது புனித நூல்களாகும். விவிலியம் உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும் (சில பொதுவான பகுதிகளும் உண்டு). இவ்விருபாலருமே விவிலியத்தை தங்கள் கடவுளது புனிதச் சொல்லாக நம்புகின்றனர். இக்கட்டுரை கிறிஸ்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.


ஆகஸ்ட் 3, 2008

கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.


மிளா (Cervus unicolor) தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். மான் இனத்திலேயே புவிப்பரவல் அதிகமுடையது மிளா ஆகும். இவை இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தீவுக்கூட்டங்கள் தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன. இம்மான்கள் பல்வேறு வகையான சூழியல் கூறுகளிலும் வாழும் தன்மையைக் கொண்டவை. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானின் முற்காடுகளிலும், இமயமலையின் கருவாலிக் காடுகளிலும், தீபகற்பத்தின் ஈரமான இலையுதிர், பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய இம்மானினம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா மாநிலங்களிலும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றது. இம்மான்களுக்கு "கடம்பை மான்" என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் இதன் இந்தி பெயரான "சாம்பார்" என்பதையே பின்பற்றி அழைக்கிறார்கள்.


யுனிக்ஸ் ஒரு கணினி இயக்கு தளம் ஆகும். இது 1960 மற்றும் 1970களில் ஏ. டி. & பெல் ஆய்வுக்கூடத்தில் கென் தாம்சன், டென்னிஸ் ரிட்சி ஆகியோர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டது. யுனிக்ஸ் இயக்கு தளத்தை யுனிக்ஸ் ஷெல் (shell), யுனிக்ஸ் கருனி (kernal) என இரண்டாகப் பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருட்களை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.


ஜூலை 27, 2008

கலைமான் (Blackbuck) இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். கலைமானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான், கருஞ்சிக் கிடாய் என்று பல்வேறு பெயர்கள் உள்ளன. இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன. மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணப்படுகின்றன. அத்துடன் அர்ஜெண்டினாவின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாச் செல்லும் விலங்கு கலைமான் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 40-60 மைல் வேகத்தில் பாய்ந்து செல்லும்.


தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டது. மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் என்ற இந்தக் கட்டுரை அந்த வரலாற்றுப் பின்னணியை விபரிக்கிறது. மனித உரிமைகள் எனும் கருத்தேற்பு கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகின்றது. முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் கொடூரங்களும் அனர்த்தங்களுமே மனித உரிமைகள் பற்றிய வினாக்கள் மீது அரசுகளின் கவனத்தைக் குவியச் செய்தன. குறிப்பாக அளவுக்கதிகமான நாசிசவாதத்தின் ஆட்சி மனித உரிமைகள் பற்றிய கொள்கையில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்துயது. இவ் யுத்தங்களின் பிற்பட்ட காலத்தில் சர்வதேச மட்ட உணர்வுப் பரிமாணத்தில் தனிமனித உரிமைகளின் மீதான மீறுகைகளை மிக உறுதிப்பாடான விதத்தில் கண்காணிப்பதற்கான ஓர் அவசரத் தேவைப்பாட்டினை அக்காலகட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டின.


மலையாள எழுத்துமுறை என்பது மலையாள மொழியினை எழுதப் பயன்படுதப்படும் அபுகிடா வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். மலையாள எழுத்து முறையினை கொங்கணி மொழியை எழுதவும் பயன்படுத்துகின்றனர். தற்கால மலையாள எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்களில் இருந்து தோன்றின. எனினும் பழங்காலத்தில் மலையாளம் வட்டெழுத்து முறையிலும் எழுதப்பட்டு வந்தது. வடமொழிக் கலப்பு அதிகமானதால் சமஸ்கிருத ஒலிகளை துல்லியமாக குறிப்பிடுவதற்கு கிரந்தம் சார்ந்த எழுத்து முறைக்கு மாறியது. ஏனெனில் வட்டெழுத்து வடிவங்களில் சமஸ்கிருத ஒலிகளை குறிப்பதற்கான குறியீடுகள் இல்லை.


ஜூலை 20, 2008

கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில் கோயில் என்னும் சொல் 'கோ' + 'இல்' எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே 'கோ' என்பது இறைவனையும், 'இல்' என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். எனவே 'கோயில்' இறைவன் வாழுமிடம் என்னும் பொருள் தருகிறது.


இயற்கை எரிவளி அல்லது இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு புதைபடிவ எரிபொருள் (fossil fuel). இதனை மண்வளி என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் (ஐதரோகார்பன்) கலவையாகக் கிடைக்கும் ஒரு வளி. பெரும்பான்மையாக மெத்தேன் வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான எத்தேன், புரொப்பேன், பியூட்டேன், மற்றும் பென்ட்டேன் ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையைப் பார்க்கவும்).



வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் ஆறுமுக நாவலரால் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் 1848 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் தொடங்கப்பட்ட மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பிப்பதற்கான பாடசாலைகளில், இந்துப் பிள்ளைகள் மேல் கிறிஸ்தவ மதம் வலிந்து திணிக்கப்படுவதையும், உள்ளூர்ப் பண்பாடுகள் சிதைக்கப் படுவதையும் எதிர்த்து, யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்கு அவர்களது பண்பாட்டுச் சூழலில், நவீன பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இப் பாடசாலை. இதனால் இது யாழ்ப்பாண மக்களின் தேசிய எழுச்சியின் சின்னமாகவும் திகழ்கிறது என்று கருதப்படுகிறது. இது ஆண், பெண் இரு பால் மாணவர்களும் பயிலும் ஒரு கலவன் பாடசாலையாகும்.


ஜூலை 13, 2008

வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.


பெட்ரோலியம் என்பது புவியில் சில பகுதிகளில் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை எண்ணெய். இவ் எண்ணெய் நீர்ம நிலையில் உள்ள பல ஐதரோகார்பன்களின் கலவை ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, ஆல்க்கேன்கள் ஆகும். இவற்றின் நீளம் C5H12 இல் இருந்து C18H38 வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை எரிவளி அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், திண்ம நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் நிலக்கரி ஆகும்.


றோய்யன் போர் (Trojan War) கோமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட் மற்றும் ஓடிஸிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட் பத்து ஆண்டுகள் நிகழந்த றோயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிஸி, றோயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடியஸ் நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது. கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் றோய்யன் போரை கெலன் என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, மனித தளத்தில் நோக்கலாம்.


ஜூலை 6, 2008

சோலைமந்தி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பது அறியப்படாமல், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கப்படுகிறது. இவ்விலங்கிற்கு "கருங்குரங்கு" என்றொரு பெயரும் உண்டு.


கணிதத்தில் சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண் மனித சமூகத்திற்கே பழங்கால இந்தியா அளித்த பரிசு எனக்கொள்ளலாம். மனிதனுடைய வரலாற்றில் பண்பாடு, நாகரிகம் இவைகளின் வளர்ச்சியில் அது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. அதனுடைய இன்னொரு பாகமான இடமதிப்புத் திட்டத்தின் (Positional notation) பிரம்மாண்டப் பயன்பாட்டிற்கும் சுழி என்ற அந்தக் கருத்தே முழுமுதற் காரணம் எனக் கூறலாம். எல்லா எண்களையும் பத்தே குறியீடுகளைக் கொண்டு குறிப்பிட முடியும் என்ற கருத்துதான் தசம இடமதிப்புத்திட்டம். நமக்கு இரண்டு ஆயிரமாண்டுகளாகத் தெரியும் அத்தனை கணிதமும், கணக்கீட்டு முறைகளும் இவ்விரண்டு கருத்துகளினால்தான் முன்னேற்றப் பாதையில் தொடங்கின.


வள்ளுவர் கோட்டம், புகழ் பெற்ற திருக்குறளைத் தமிழுக்குத் தந்த சங்ககாலத் தமிழ்ப் புலவரான திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது தமிழ் நாடு மாநிலத் தலைநகரமான சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு மற்றும் வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.


ஜூன் 29, 2008

இந்து சமயத்தில் மும்மூர்த்திகளாகக் கருதப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரில் விஷ்ணுவை முழு முதற் கடவுளாகக் கருதும் சமயம் வைணவம் அல்லது வைஷ்ணவம் என்று அழைக்கப்படும். விஷ்ணு உலகில் பத்து அவதாரங்களாக அவதரித்தார் என்பது வைணவ நம்பிக்கை. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும். பன்னிரு ஆழ்வார்கள் வைணவ சமயம் பற்றித் தமிழிற் பாடியுள்ளனர்.


கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கேழல்மூக்கன் மற்ற தவளைகளைப் போன்ற உடல் மற்றும் கால் அமைப்புகளை பெற்று இருந்தாலும் இதன் தலை மிகவும் சிறியதாகும். மேலும் இதன் வாய் மற்றும் மூக்குப் பகுதி மிகவும் கூர்மையானதாகும், (இது பன்றியின் மூக்குப் போல் தோன்றுவதால் "கேழல்மூக்கன்" என்ற பெயரை பெற்றுள்ளது. கேழல்=பன்றி). இத்தவளை பருவமுற்றதும் கருஞ்செவ்வூதா நிறத்தைப் பெறும். ஆணைவிடப் பெண் தவளை உருவளவில் பெரியதாகும்.


ஜூன் 6, 2008

நெற் பயிர், புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது. நெற் பயிர் ஈரநிலங்களில் வளரக்கூடியது. இது சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதை தோல் நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு தோல் நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியமாகும்.


சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் (ஆதாம் பாலம், Adam's Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் ஒரு திட்டம் ஆகும். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இந்தக் கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். 300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கிமீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


மே 12, 2008

சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, அக்டோபர் 10, 1822 - மே 28, 1884) என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார்.


இரட்டைத்திமில் ஒட்டகம் (Camelus bactrianus) என்பது இரட்டைத் திமில் கொண்ட, ஈடான சுமை தாங்கும் இரட்டைக் குளம்பு கொண்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒட்டகம். இவை சீனாவின் வடக்கேயும், மங்கோலியாவிலும் உள்ள கோபி பாலைநிலப்பகுதியில் வாழ்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, கிரேக்க மொழியில் பாக்ட்ரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் கி.மு 2500 ஆண்டளவில் இந்த இரட்டைத் திமில் ஒட்டகம் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டது (கொல்லைப்படுத்தப்பட்டது) என்று நினைப்பதால், இதனை பாக்ட்ரிய ஒட்டகம் என்றும் அழைப்பர். பெரும்பாலும் கானப்படும் ஒற்றைத்திமில் ஒட்டகம் கி.மு 4000 ஆண்டளவில் வளர்ப்பு விலங்காக ஆனது என்று கருதப்படுகின்றது.


மே 8, 2008

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி (1869-1948) என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.


கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail), இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. தற்போது, சுமார் 3 ஆண்டுகளாகச் சோதனையில் இருந்த இந்த மென்பொருள், சோதனைகள் முடிவைந்து வெளிவந்துள்ளது. இச்சேவை ஐக்கிய இராச்சியத்திலும், ஜெர்மனியிலும் கூகிள்மெயில் என அறியப்படுகின்றது. இது முன்னானியில் யாகூ! மெயில், வின்டோஸ் லைவ் மெயில் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது. ஜிமெயிலானது அழைப்புக்களின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துஇல் ஆகஸ்டு 9, 2006 இல் இருந்தும் ஜப்பானில் ஆகஸ்டு 23 , 2006 இலிருந்தும் எகிப்தில் டிசம்பர் 5, 2006 இருந்தும் ரஷ்யாவில் டிசம்பர் 16, 2006 முதல் இணையமுடியும்.


ஏப்ரல் 30, 2008

இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.


சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு. அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.


ஏப்ரல் 20, 2008

இயற்பியலில், முறுக்கு விசை (திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அஃதாவது ஒரு விசையின் திருப்புத்திறன்) என்பதை கோண விசை அல்லது வளைவு விசை என்றும் வருனிக்கலாம். அஃதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).

இஃது, நேர்விசை மற்றும் ஒரு ஆரத்தின் (நெறிமப்) பெருக்கல் என வரையறுக்கப்படும். முறுக்கு விசையின் S.I அலகு நியூட்டன்.மீட்டர் (N.m) ஆகும். முறுக்கு விசை τ(டவ்) என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது.


சுப்பிரமணிய பாரதியார் பிறந்த வீடு

எட்டயபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.


ஏப்ரல் 15, 2008
தமிழ்க்கணிமை

கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ். (MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.


மலையாள ழகரம்

மலையாளம் தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.


ஏப்ரல் 8, 2008

புவி வெப்பநிலை அதிகரிப்பு (Global warming) என்பது காலப்போக்கில் புவியின் காற்று மண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும்.

பெரும்பாலும் மனிதர்களின் செயற்பாடுகளினால் கடந்த 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தற்போது வரை புவியின் சராசரி வெப்பநிலை 0.6 ± 0.2 செல்சியஸ் அளவு வரை கூடுதலாகியிருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


புவியின் வெப்பநிலைக்கும் கரியமிலத்திற்கும் உள்ள தொடர்பு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானது பனிப்பாறைகள் மீதான ஆராய்ச்சி. பல இலட்சம் ஆண்டுகள் முன்னிலிருந்து இன்று வரை வளிமண்டலத்தில் கரியமிலத்தின் அளவையும், அதே சமயத்தில் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் பனிக்கட்டி படிவுகளை பயன்படுத்துகிறார்கள். அண்டார்டிகா, ஆர்க்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனிப்பாளங்கள் பல இலட்சம் ஆண்டுகளாக உருவாகி வருகின்றன. இப்பாளங்களின் ஓவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தை சார்ந்ததாக இருக்கும். இப்பனி அடுக்குகள் அந்த சமயத்தில் நிலவி வந்த கற்றுக்குமிழ்களையும் உள்ளடக்கியிருக்கும். இக்காற்றுக் குமிழ்களை ஆராய்வதன் மூலம் அக்கால கட்டத்தில் வளிமண்டலத்தில் எவ்வளவு கரியமிலம் இருந்தது என்பதை அறியலாம். அதேபோல ஹைட்ரஜன் / ஆக்சிஜன் சமதானி (isotope) களை தீர்மானித்து அதன் மூலம் அக்காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்கலாம்.


பௌத்தத்தில் புத்தத்தன்மை (சமஸ்கிருதம்:புத்தத்துவம், பாளி:புத்தத்த, அல்லது (இரண்டிலும்) புத்தபாவம்) என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையினை அடைந்த ஒருவரை புத்தர் என அழைப்பர்.

பாளி சூத்திரங்களிலும் மற்றும் தேரவாதத்திலும், புத்தர் என்ற சொல், எவருடைய உபதேசத்தினையும் பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் அருகன் என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏப்ரல் 2, 2008

கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.


யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. படத்தில் பனம் பணியாரம் காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன.


மார்ச் 24, 2008
A என்னும் கணம் B யின் உட்கணம்
A என்னும் கணம் B யின் உட்கணம்

கணிதத்தில், கணம் அல்லது தொடை என்பது பல்வேறு பொருள்களின் திரட்டு அல்லது தொகை ஆகும். இது மிகவும் எளிய கருத்தாகத் தோன்றினாலும், கணிதத்தின் ஓர் ஆழம் உடைய அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்றாக இது விளங்குகிறது. கணம் அல்லது தொடை என்பதில் உள்ள பொருட்களை உறுப்புகள் என்பர். எடுத்துக்காட்டாக 4, 7, 9 ஆகிய எண்களை ஒரு தொகுதியாகக் கொண்டு அதனை C என்னும் பெயர் கொண்ட ஒரு கணமாகக் கொண்டால், C யின் உறுப்புகள் 4, 7, 9 என்பன ஆகும். ஒரு கணத்தின் உறுப்புகளை நெளிந்த அடைப்புக் குறிகளுக்கு இடையே குறிப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக C என்னும் கணத்தை C = {4, 7, 9} என்று குறிப்பர். கணத்தில் அளவிடக்கூடிய எண்ணிக்கையுடைய உறுப்புகள் இருப்பவையும் உண்டு, அளவிட இயலா எண்ணிக்கை உடைய உறுப்புகள் கொண்ட கணங்களும் உண்டு. ஒல்லத்தக்க (இயலக்கூடிய) கணங்களின் அமைப்புகளையும் தொடர்புகளையும் பற்றிய கோட்பாடுகளுக்கு கணக் கோட்பாடு என்று பெயர். இத்துறை மிகவும் வளமையானது.


பறவைகள், இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். உலகில் அண்ணளவாக 9000 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.


மார்ச் 16, 2008

பொனொபோ எனப்படும் மனித குரங்குகள் அண்மை காலம் வரை குறள சிம்ப்பன்சி அல்லது குட்டிச் சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்டது. இவை சிம்ப்பன்சி இன குரங்குகளின் இரு பிரிவுகளில் ஒன்றாகும். "சிம்ப்பன்சி" என்ற பெயர் பொதுவான சிம்ப்பன்சி (Common Chimpanzee), மற்றும் பொனொபோ இரண்டையும் குறித்தாலும் வழக்கமாக அழைக்கப்படும் பொதுவான சிம்ப்பன்சியையே குறிக்கும். பொனொபோக்கள் தற்போது அழிவுநிலையில் உள்ளன. அவைகள் இயற்கையில் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள காடுகளிலேயே காணப்படுகின்றன்.


சுடோக்கு என்பது சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு சதுரத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறு, எண்களை அமைத்து விளையாடும் புதிர் கணக்கு வகையான விளையாட்டு ஆகும். சுடோக்கு என்றால் சப்பானிய மொழியில் எண்-இடம் என்றும் பொருள். மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது சிறு கட்டங்களை ஒரு சதுரமான அறையாக அமைத்து, பிறகு இப்படிப்பட்ட அறைகளை மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது அறைகளாக சதுரமாக அமைக்க வேண்டும். இப்படி ஒன்பது அறைகள் கொண்டது ஒரு சட்டகம். இந்த சட்டகத்திலே ஒவ்வொரு வரிசையிலும் 9 சிறு கட்டங்கள் இருக்கும் (3 வெவ்வேறு அறைகளைச்சேர்ந்த கட்டங்கள் இவை), இப்படியாக ஒன்றன் கீழ் ஒன்றாக 9 வரிசைகள் இருக்கும். கிடையாக கட்டங்கள் அமைக்கப்பட்ட வரிசையைக் கிடை என்றும், மேலிருந்து கீழாக ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்படுள்ள கட்டங்களை நெடை என்றும் பெயர். இந்த புதிர் கணக்கு வகையான சுடோக்குவில் ஒவ்வொரு சிறு கட்டத்திலும் 1 முதல் 9 வரையுள்ள ஒன்பது எண்களில் ஏதாவது ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். இந்த புதிர் கணக்கு சுடோக்கு விளையாட்டு தொடங்கும் முன் சில கட்டங்களில் மட்டும் ஏற்கனவே சில எண்கள் கொடுத்திருப்பார்கள். இவை கொடுக்கப்பட்ட எண்கள் எனப்படும். மீதம் உள்ள சிறு கட்டங்களில் குறிப்பிட்ட விதிகளின் படி எண்களை பதிக்க வேண்டும்.


மார்ச் 9, 2008

பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.

பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.


இடவியல் (Topology) கணிதத்தின் ஒரு பெரிய உட்துறை. அடிப்படைக் கணித அமைப்புகளுக்குக் குந்தகமில்லாமல் வடிவவியல் முறையிலோ அல்லது இயற்கணித முறையிலோ செய்யப்படும் உரு மாற்றங்களைப் பற்றி இத்துறை விபரிக்கின்றது.

முக்கியமாக 1736 இல் ஆய்லர், 1895 இல் புவான்காரே, 1906 இல் ஃபிரெஷெ, 1914 இல் ஹௌஸ்டார்ஃப், 1922 இல் குரடோவ்ஸ்கி ஆகியவர்களும் இன்னும் சிலரும் செய்த ஆய்வுகளும் தொகுப்புகளும் சேர்ந்து இத்துறை உருவாகியது. அதிலிருந்து ஓர் ஐந்தாறு பத்தாண்டுகளுக்கு இத்துறைதான் கணித உலகெங்கும் ஆய்வாளர்களால் வேண்டப்பட்ட துறையாக இருந்தது. காலப்போக்கில் அதனுள்ளேயே இரண்டு உட்துறைகளாகப் பிரிந்து விரிந்துள்ளது: அதாவது, கணக்கோட்பாட்டு இடவியல், இயற்கணித இடவியல். முந்தியது பொதுவாக இடவியல் வெளிகளைப் பற்றியும், பிந்தியது இடவியல் உரு மாற்றங்களினால் மாற்றமுறா சிறப்பியல்புகளைப் பற்றியும் பேசுகின்றன.


மார்ச் 2, 2008

பொறியியல்என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல் (materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொரியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். .

பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், படிம எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுப்பிளவு போன்றவை.


சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.


பெப்ரவரி 23, 2008

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. கொடும் விலங்குகளான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.


பிபனாச்சி எண்கள் (Fibonacci numbers) என்பவை கணிதத்தில் பரிச்சயமில்லாதவர்களையும் ஈர்க்கும் ஒரு சுவையான கணிதப்பொருள்.

வடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' (சீர் இயல்) என்று பிங்களர் கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் இந்த எண்கள் பற்றி முதன் முதல் பேசப்பட்டது. 6ஆம் நூற்றாண்டில் விரஹங்கர் எழுதிய யாப்பிலக்கண நூல்களில் மறுபடியும் பேசப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் ஹேமசந்திரர் என்பவருடைய நூலிலும் விரஹங்கர் நூலுக்கு கோபாலர் எழுதிய உரைநூலிலும் இது விபரமாகப் பேசப்படுகிறது.

மேற்கத்திய வரலாற்றில் லியனார்டோ டா வின்சி (அவருடைய இன்னொரு பெயர் ஃபிபனாச்சி) எழுதிய "லிபர் அபேஸி" (1202) என்ற இலத்தீன் நூலில் முதன் முதல் பேசப்பட்டு இன்றும் பல அறிவியல் துறைகளிலும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் பொருள் இது.


ஜனவர் 31, 2008

இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது.

நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வர்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.


ஓட்டன் சமவெளி இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசியப் வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டயார் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது. 1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாகக் காணப்பட்ட ஓட்டன் சமவெளி 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும். இச்சமவெளி அயனமண்டல மழைக்காடுகளாலும் ஈரப்பதனப் புல் நிலங்களாலும் ஆனது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.


ஜனவரி 5, 2008

பொங்கல் தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.


ஹாசன் (ஆங்கிலம்: Hassan, கன்னடம்: ಹಾಸನ) இந்திய மாநிலமான கர்நாடகாவின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஹாசன் சிட்டி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆட்சி செய்த ஹோய்சாலப் பேரரசின் முக்கிய மாகாணமாக விளங்கியது ஹாசன். ஹாசனிலுள்ள ஹோய்சாலர் கட்டிடக்கலை உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாசன் இன்று நவீன தொழில்நுட்பத்திலும் முன்னேறிவருகிறது. இந்திய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமைக் கட்டுப்பாட்டு மையம் (Master Control Facility) இங்கு அமைந்துள்ளது.


ஹாசன் மாவட்டத்தின் வரலாறு, கர்நாடகத்தை ஆண்ட இரண்டு பேரரசுகளான மேற்குக் கங்கப் பேரரசு (350 - 999 கி.பி) மற்றும் ஹொய்சால பேரரசுடனும் (1000 - 1334 கி.பி) தொடர்புடையது. பின்பு 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசை ஆண்ட விஜயநகர அரசர்கள் பேளூரிலுள்ள சென்னகேசவ பெருமாளைக் குலத்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக அந்நகரம் விஜயநகர அரசர்கள் ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் 17-18ஆம் நூற்றாண்டுகளில் ஹாசன் ஷிமொகாவின் கெலடி நாயகர்கள் மற்றும் மைசூர் பேரரசிற்கும் இடையே ஒரு சிக்கலுக்குரிய ஊராகவே இருந்தது. இவ்வூர் இறுதியில் மைசூர் பேரரசுடன் இணைந்தது.

முதற்பக்கக் கட்டுரைகள் காப்பகம்
  • விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்